இன்றளவும் 'வெறிநாய்'க் கடிக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம்.
எனவே, வெறிநாயிடம் தென்படும் அற்குறிகளை அனைவரும் அறிந்துகொண்டிருப்பது மிக மிக அவசியம்.
அறிகுறிகள்:*ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணம் இல்லாமலே குரைக்கும். அது ஊளையிடுவதுபோல் இருக்கும்.
*ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
*காண்போரையெல்லாம் துரத்திக் கடிக்கவரும்.
*அதன் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும்.
*அதன் வாயிலிருந்து எந்நேரமும் எச்சில் ஒழுகியவாறிருக்கும்.
*சில வெறிநாய்கள் தெருமுனைகளில் தனியாகவும் அமைதியாகவும் இருப்பதுண்டு.
*உணவு உண்ணாது; இந்நாய் பெரும்பாலும் 10 நாட்களில் இறந்துவிடும்.
இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் சொல்லி எச்சரிக்கை செய்வது பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.
'வெறிநாய்'க் கடி குறித்த சில செய்திகள்:
*வெறிநாய் கடித்தால், ரேபீஸ் நோயின் அறிகுறிகள் 5 நாட்களுக்குப் பின்னர் தெரியவரும்; 90 நாட்களுக்குப் பிறகும்கூடத் தென்படலாம்.
*இதன் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி உண்டாகும்; காய்ச்சல் அடிக்கும்; வந்தி வரும்; உணவு உண்ண இயலாது.
*நோய் தாக்கியவர்களுக்கு ‘விழுங்கு தசை’கள்[தொண்டையில்] இறுக்கமடைவதால், சுவாசம் நிற்கிற உணர்வு ஏற்படும். உயிர்போகுமோ என்னும் அச்சத்தில் நோய் பாதித்தவர்கள் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்[இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்].
நோய் வரும் வழி:
வெறிநாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் இருக்கும். அது மனிதரைக் கடிக்கும்போது, காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும்.
சிகிச்சை:
முன்பெல்லாம் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். இப்போதெல்லாம் நவீனத் தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில்[தவணைகளில்] ரேபீஸ் நோய் தாக்காமல் தடுத்துவிடுகிறார்கள்.
* * * * *
***மேற்கண்ட குறிப்புகள் மருத்துவ இதழொன்றில் இடம்பெற்றவை.

