எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ரிலீஸ் படம், படு செக்ஸியா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்தப் பதிவு, சினிமா [செக்ஸ்] பைத்தியங்களுக்கு மட்டும்!!!

ஏறத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” என்று கேட்டேன்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் பிய்த்துக்கொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாவகமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யான்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

”இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

****************************************************************************************************************************************

மிக முக்கிய குறிப்பு:

கடந்த இரு பதிவுகளுக்கும் ‘ஹிட்ஸ்’ குறைந்து போனதால், இந்த ’அதிரடி ஆபாசப் பதிவு’!! பெருந்தன்மையுடன் மன்னித்திடுக!

****************************************************************************************************************************************





வெள்ளி, 16 நவம்பர், 2012

ஒரு கதாசிரியனின் கதை

இது, ’சிரிப்புக் கதை’ அல்ல; ஓர் எழுத்தாளனின் ’கண்ணீர்க் கதை’!

“சே, என்ன மனிதர்கள் இவர்கள்! எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டா, ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தில் விசாரிக்கச் சொல்கிறார்களே! எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமுதாயம் உருப்படுமா?”

மனித குலத்தைச் சபித்தவாறு, ‘அய்யாசாமி நகரில்’ தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்த அந்த மனிதருக்கு வயது எழுபதுக்குக் குறையாது.

பெரியவருக்கு ஒடிசலான உடம்பு. வேட்டி ஜிப்பாவில் மேலே தலை மட்டும் தெரிந்தது. அடி மண்டையில் கொஞ்சம் முடி அடிக்கோடிட்டிருந்தது. தோளில் தொங்கும் ஜோல்னா பையின் சுமையால் முதுகுத் தண்டு கொஞ்சம் வளைந்து காணப்பட்டது.

வீடு வீடாய்ப் படிகளை எண்ணினார். அழைப்பு மணியில்தான் எத்தனை வகை என்பதை அனுபவத்தில் கண்டு ஆச்சரியப்ப்ட்டார். கதவு திறந்து, ”என்ன?” என்று கேட்டவர்களிடமெல்லாம், “எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“சுவர் சுவரா விளம்பரம் எழுதுற ஒருத்தர் தெருக்கோடியில் இருக்கார். கேட்டுப் பாருங்க” என்றார் ஒரு வீட்டுக்காரர்.

“பருவ சுகம், பாமா நீ வாம்மா, இளமை ராகம்ங்கிற மாதிரி, ‘ஒரு மாதிரி’ புத்தகங்கள் எழுதிக் குவிச்சாரே, அவரா?” என்று பல்லிளித்தார் இன்னொருவர்.

“அம்மா...தாயி...சீதேவி...” என்று அவர் மிச்சமிருந்த வார்த்தைகளைக் கக்குவதற்குள்ளாகவே, “இன்னும் சமையல் ஆகல. போய்ட்டு அப்புறமா வாப்பா” என்றாள் ஒரு குடும்பத் தலைவி.

விரக்தியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பெரியவர், அய்யாசாமி நகர் வாசிகள் சிலரிடம், “சீதேவிதாசன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைத் தெரியலீன்னு சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“இந்த மாதிரி கேள்வி கேட்டுத் திரியற உம்மைப் பார்த்தாத்தான் ஆச்சரியமா இருக்கு. நீர் என்ன சீதேவிதாசனின் தம்பி மூதேவிதாசனா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்ட போது, பெரியவர் மனம் உடைந்து போனார்.

எழுத்தாளரின் பெயர் சொன்னவுடனே, அய்யாசாமி நகரமே திரண்டு வந்து தமக்கு வழி காட்டும் என்று எதிர்பார்த்தார். நடக்கவில்லை.

“என்ன ஐயா, சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டீங்களே, அவரைத் தெரியாதவங்க இருக்கீங்களான்னு கேட்டிருக்கணும்.”

“இயல்பான கதை; மனதைச் சுண்டியிழுக்கிற வர்ணனை: ஆளைக் கட்டிப் போடுற அட்டகாசமான நடை. சீதேவிதாசன் ஒரு பிறவி எழுத்தாளருங்க.”

“எங்க நகருக்கு அவர் குடி வந்தது நாங்க செஞ்ச புண்ணியம்.”

இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ நகர மக்கள், எழுத்தாளருக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர்.

அவர்களோ, எழுத்தாளருக்கு ஒரு எருக்கமாலைகூடப் போடவில்லை.

பெரியவர் துவண்டுவிடவில்லை. “அய்யாசாமி நகர், துப்புக்கெட்டான் தெரு, கழுத்தறுத்தான் சந்து, கதவு எண் 18. இதுதானே எழுச்சி எழுத்தாளர் சீதேவிதாசன் வீடு?” என்று வீடு வீடாகச் சந்தேகம் கேட்டார். கடைசிவரை அவர் சந்தேகம் தீர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு வீடுகூட அவர் மிச்சம் வைக்கவில்லை.

ஒரு வழியாக, மனதைத் தேற்றிக்கொண்டு, சீதேவிதாசனின் வீடு நோக்கி நடந்தார், பெரியவர்.

அவர் அங்கு செல்வது இது முதல் தடவையல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களில், எத்தனை தடவை அங்கு சென்றிருக்கிறார் என்பதை எண்ணிச் சொல்வது அவசியமில்லை.

“என்ன செய்ய, இந்த ஏழை எழுத்தாளனை எவனுமே கண்டுக்க மாட்டேங்குறான். வீடு தேடி வருகிற நண்பர்கள் வேறு, ‘என்னய்யா பெரிய எழுத்தாளன் நீ? நீ இங்கே குடி வந்து ஏழெட்டு மாசம் ஆச்சு. உன்னைப் பத்தி இந்த நகர்ல ஒருத்தருக்குமே தெரியல.’ என்று குத்திக் காட்டுகிறார்கள். அதனாலதான், இப்படியொரு ஓரங்க நாடகம் போட வேண்டியதாப் போச்சு” என்று தம் மனசாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே நடந்தார் எழுத்தாளர் சீதேவிதாசன்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ