சனி, 8 ஜனவரி, 2022

கடவுளின் கனவு!!!

கடவுளின் அப்போதைய நிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதை அவரும் உணர்ந்தே இருந்தார்.

தன்னின் 'இருப்பு' "எப்படி நிகழ்ந்தது? எப்போது நிகழ்ந்தது? யாரால் நிகழ்த்தப்பட்டது?" என்றெல்லாம் தனக்குத்தானே அவர் கேட்டுக்கொள்வது உண்டு. விடைகளைக் கண்டறிவது சாத்தியப்பட்டதே இல்லை.

தானொருவன் இருப்பதாக உணர்ந்தாரே தவிர, உணர்வதற்கான உறுப்பேதும் இல்லாமலே உணர்வது எப்படிச் சாத்தியமாகிறது என்பதும் புரியவில்லை.

சொல்லப்போனால், 'உணர்வது' என்பதான அந்த நிகழ்வே உண்மைதானா என்னும் சந்தேகம்கூட அவ்வப்போது அவரை ஆட்டிப்படைப்பதுண்டு. அதனால், அவர் மனம் வருந்தியது உண்மை.

இவற்றோடு தனிமைத் துன்பமும் அவரை வாட்டி வதைத்தது.

எதையாவது செய்துகொண்டிருந்தால் இந்தத் துன்பத்திலிருந்து விடுபட முடியுமா என்றுகூட அவர் யோசித்திருக்கிறார்.

அந்த யோசனையைச் செயல்படுத்த இயலாமல்போவதால் மிக மிக மிகச் சோர்ந்துபோய் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிடுதல் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே இருந்தது.

அவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தபோதுதான் ஒரு முறை அந்த அதிசயம் நிகழ்ந்தது.

'குப்' என்று அடர்த்தியானதொரு கருமை நிறம் தன்னேதிரே படர்வதை அவர் அப்போது உணர்ந்தார். அதை வியந்து உற்றுநோக்கிவாறு இருந்தபோது, ''பளீர்' என்று ஒளிரும் வெள்ளை நிறமாக அது மாறுவதையும் அறிந்தார். "இனி என்ன நடக்கும்?" என்று நினைத்துக் காத்திருந்தார்.

அவர் முன் அண்டவெளி விரிவடைந்துகொண்டிருந்தது. அதில், ஒளி மிகுந்ததும் குறைந்ததுமான எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிந்தன.

உருண்டை உருண்டையாகவும் நீள் உருண்டை வடிவிலும் கணக்குவழக்கற்ற கோள்கள்[எந்த ஒன்றுக்கும் அவர்  பெயர் சூட்டவில்லை] சுழன்றுகொண்டிருப்பதைக் கட்பொறி இல்லாமலே அவரால் காண முடிந்தது.

பிரமிப்புடன் நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோள் மட்டும் சுழன்றுகொண்டே அவருக்கு மிக அருகில் வந்தது. அதில் தென்பட்ட காட்சிகள் அவரைப் பிரமிப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றன. அந்தக் கோள்..........

மலையடுக்குகளும், நிலப்பரப்புகளும், ஆறுகளும், மரங்களும், செடிகொடிகளும் நிறைந்து காணப்படும் இந்தப் பூமிதான். அங்கே, பல்வேறு உயிரினங்களுடன் மனிதர்கள் நடமாடிக்கொண்டிருப்பதையும் கண்டார் கடவுள். பிற  உயிர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவைப் பெற்றவர்களாக அவர்கள் அடிக்கும் கொட்டங்களையும் வெகுவாக ரசித்தார். 

"இப்படியானதொரு பூமியையும், இதனை உள்ளடக்கிய அண்டவெளி உலகங்களையும் படைத்தால், இவற்றைக் கண்டு ரசிப்பதில் நம் பொழுது கழியும்; தனிமைத் துன்பம் நீங்கும்" என்றும் நம்பினார்.

அதைச் செயல்படுத்த நினைத்தபோது, அவரின் உறக்கம் கலைந்தது. எதிரே விரிந்து கிடந்த காட்சிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன.

"இதுவரை நாம் கண்டது வெறும் கனவுதானா" என்று எண்ணினார் கடவுள்.

கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவே இல்லை என்பது பரிதாபம்.

வெகுவாகச் சோர்ந்துபோன கடவுள், "உறக்கத்தில் மூழ்கினால் மீண்டும் அந்த அற்புதக் காட்சிகளைக் காண்பது இயலக்கூடும்" என்று முணுமுணுத்தவாறே இயல்பு நிலையிலிருந்து விடுபட்டு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கத் தலைப்பட்டார். 

அண்டவெளிக் காட்சிகள் முன்புபோல அவர் எதிரே விரிவடையலாயின.

தன்னால் நனவில்  அண்டவெளிக் காட்சிகளைப் படைத்து ரசிக்க இயலாத நிலையில், அவ்வப்போது கனவுகளில் மூழ்குவதன் மூலம் அக்காட்சிகளைக் கண்டு கண்டு பரவசப்பட்டார் கடவுள்!

==========================================================================

முக்கியக் குறிப்பு:

அண்டவெளியில் தென்படும் காட்சிகளும்[கோள்களும் நட்சத்திரங்களும் பிறவும்] பூமியில் மனிதர் உட்படப் பல்வகை உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளும் நாம் நினைப்பது போல உண்மையானவை அல்ல. இவை கடவுள் காணும் கனவுகளின் பிரதிபலிப்பே என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்.

மிக முக்கியக் குறிப்பு:

படைப்புத் தத்துவம் குறித்து யார்யாரெல்லாமோ, எப்படியெப்படியெல்லாமோ  கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்தம் வரிசையில் இடம்பெறுதல் வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

அந்தக் கதை சொல்லும்(கயிறு திரிக்கும்) ஆசை இப்போதுதான் நிறைவேறியது!

வருகை புரிந்து பொறுமையுடன் வாசித்து மகிழ்ந்தமைக்கு என் நன்றி.