எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

இவர் தேசியவாதியா, தேசத் துரோகியா?!?!

வர் பெயர் மகேந்திர பட்; உத்தரகாண்ட் மாநில 'பாஜக' தலைவராம்.


"வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்களைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள்[நான் பார்த்துக்கொள்கிறேன்]" என்று 'பாஜக' தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கைவிட்டு, கொடி ஏற்றத் தவறுபவர்களை இவர் மிரட்டியிருக்கிறார். இது  https://tamil.oneindia.com செய்தி[13.08.2022].

இவர் வெளிப்படையாகப் பேசியது பாராட்டுக்குரியது. சூழ்நிலை காரணமாகக் கொடி ஏற்ற இயலாதவர்கள் கொஞ்சம் நாட்களுக்கு எங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாம்.

இவரைப் போல் அப்பட்டமாகப் பேசி மக்களை அலறவிடாமல், கமுக்கமாக இருந்துகொண்டு கொடி ஏற்றாதவர்களைக் குறிவைத்துத் தண்டிக்கக் காத்திருக்கும் 'பாஜக' தலைவர்கள் மற்ற மாநிலங்களிலும் இருப்பார்கள்தானே?

தேசப் பற்று உடம்பு முழுக்க ஊறிக் கிடந்தாலும், கொடியேற்றுவதை ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள் நாடெங்கும் இருக்கவே செய்வார்கள். மூன்று நாளென்ன, மாதத்தில் முப்பது நாட்களும் தன் வீட்டில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளும் இந்த மண்ணில் இருக்கவும்கூடும்.

இந்த மிக எளிய உண்மையைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவில்லாத ஆசாமிகளெல்லாம் ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராக[தலைவர்களாக] இருப்பது இந்த நாட்டுக்கு நன்மை பயக்குமா, பெரும் தீங்கு விளைவிக்குமா"

உரிய ஆதாரம் ஏதும் இல்லாமலே, பேட்டை ரவுடியைப் போல், மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய இந்த 'மகேந்திர பட்'டை எதிர்க்கட்சியினர் கண்டித்திருக்கிறார்கள்.

பலதரப்பட்டவர்களிடமிருந்து வந்த கண்டனங்கள் காரணமாக, 'பாஜக'  தொண்டர்களைத்தான் தான் கொடியேற்றும்படிக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லிச் சமாளித்திருக்கிறார் இந்த மகேந்திர பட்.

இவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்ததாகச் செய்தி வெளியாகியிருக்கிறதே தவிர, 'பாஜக' தலைவரும் இந்த நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி அவர்களிடமிருந்து எந்தவொரு கண்டனமோ, கண்டித்துத் திருத்தும் அறிக்கையோ வெளியானதாகத் தெரியவில்லை.

"இவர் மாதிரி அடாவடித்தனமாகப் பேசும் மிரட்டல் உருட்டல் ஆசாமிகளும் தன் கட்சிக்குத் தேவைதான் என்று மோடிஜி நினைக்கிறாரோ?!" என்றொரு சந்தேகம் நம்முள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

===========================================================================

https://tamil.oneindia.com/news/india/country-won-t-trust-those-who-don-t-hoist-tricolour-in-their-homes-says-uttarakhand-bjp-chief-470644.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read

வீடுதோறும் "ஜன கண மன....."!!!

ங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த இனிய நாளைக் கொடி ஏற்றிக் கொண்டாடுகிறோம்.

கொடி ஏற்றும்போது நாட்டுப்பண்["ஜன கண மன..."] இசைப்பதும் மரபாக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே இந்நிகழ்வு கொண்டாடப்பட்ட நிலையில், இவ்வாண்டு வீடுதோறும் கொடி ஏற்றுதல் வேண்டும் என்று நடுவணரசு அறிவுறுத்தியுள்ளது.


வீடுதோறும் கொடி ஏற்றுவதால் நாட்டுப்பற்று வளருமா?

வளரலாம். ஆனால், எதிர்பார்க்கும் அளவுக்கு அது இராது என்பது உறுதி.

'எதற்காகக் கொடி ஏற்றுகிறோம்' என்று எண்ணிச் செயல்படுபவர்கள் எண்ணிக்கை இங்கு மிக அரிது.

நாட்டுப் பற்றை அனைவருக்கும் ஊட்டும் பணியைச் செய்யத்தான் நாட்டுப்பண்['தேசியக் கீதம்'] இயற்றப்பட்டது.

இந்திய நாட்டை நம் தாயாக உருவகித்து, நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மக்கள் பேசும் மொழிகள், இயற்கைச் செல்வங்கள், இங்கு வாழ்ந்து சென்ற மாமனிதர்கள் என்று பல்வகைச் சிறப்புகளையும் அவள் பெற்றிருப்பதாகச் சொல்லி வாழ்த்துவதன் மூலம் இந்திய மக்களை ஒன்றுபடுத்துகிற பணியைச் செய்கிறது நம் 'ஜன கண மன...' நாட்டுபண்[விளக்கம் அரைகுறையானது. பாடலில் உள்ள குறைபாடுகளும் களையப்படுதல் வேண்டும்].

எனவே.....

வீடுதோறும் கொடி ஏற்றியவுடன், குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் இணைந்து தேசியக் கீதம் இசைப்பது மிகவும் அவசியமான[அரசு கவனத்தில் கொள்ளுமா?] ஒன்று.

இசைத்தல் சாத்தியம். அதன் பொருளைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

இந்தப் பாடலை அத்தனை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்தால்[தேர்ந்த கவிஞர்களைக் கொண்டு இனிய சந்தத்துடன் மொழியாக்கம் செய்யலாம்] மட்டுமே அது சாத்தியப்படும்.

இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் நாட்டுப்பண்ணின் பொருள் புரிந்து அதனை இசைக்கும் நிலை உருவாகும். 

பொருள் புரியாதவரை, நகராட்சி, மாநகராட்சி போன்ற அரசு அமைப்புகள் வீடுதோறும் கொடி கொடுத்து 20 ரூபாய் வசூல் செய்கிறார்கள்[கடைகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு தேசியக் கொடி வாங்குகிறார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்ச் செய்தி] கொடிகளைக் கட்டி வைப்பதால் எதிர்பார்க்கும் அளவுக்குப் பயன் கிட்டாது என்பதை அரசு உணர வேண்டும்.

"இந்தியா ஒரே நாடு. பாடலை ஒரே மொழியில்['ஜன கண மன...' வங்காள மொழி]  இசைப்பதே சரியானது" என்று சொல்வது 'ஒரே நாடு, ஒரே மொழி' என்று சொல்லித் திரிவது போன்றதொரு ஏமாற்று வேலை ஆகும்[வங்காள தேசம் உருவான பிறகு, உருது மொழியில் பாடப்பட்ட அந்நாட்டு நாட்டுப்பண் வங்காள மொழியில் பாடப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது].

வங்காள மொழியில் பாடப்படும் கீதத்தை மாநில மொழிகளில் பாடுவதால் வங்காள மொழிக்கு இழிவு ஏதும் நேர்ந்துவிடாது. அதைப் போற்றிக் காப்பது அந்த மாநில மக்களின் கடமை.

எனவே,

அடுத்துவரும் குடியரசு நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாகவே, தேசியக் கீதம் எனப்படும் நாட்டுப்பண்ணை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் பணியை நடுவணரசு செய்து முடித்தல் வேண்டும் என்பது தாய்மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டோரின் மேலான விருப்பம் ஆகும்.

வாழ்க இந்தியத் திருநாடு! வளர்க அனைத்து மாநில மொழிகளும் மக்களும்!!
===========================================================================