எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 23 மே, 2014

‘விஞ்ஞானியும் மெய்ஞானியும்’ - ஒரு நடுநிலை ஒப்பீட்டாய்வு! [புதுப்பிக்கப்பட்ட பதிவு]

இந்தப் பதிவு ரொம்பப் பழசு. இதை எழுதியபோது நான் பதிவுலகுக்குப் புதுசு! என் அரைகுறை ‘அறிவியல்&தத்துவ’ ஞானம் இதில் வெளிப்படக்கூடும். எள்ளி நகையாட வேண்டாம்! விரும்பினால் மேலே படியுங்கள்.

ஆய்வு [???]....................... 

விஞ்ஞானி.....மெய்ஞானி.....

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருக்கக்கூடும்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை யானறியேன்.

இந்த  ஆய்வால் பயன் ஏதுமுண்டா? வெட்டி வேலையா?

முடிவு எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்போமே!.

விஞ்ஞானி:
அணு முதல் அண்டம் வரையிலான எந்த ஒன்றின் தோற்றம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.

மெய்ஞ்ஞானி:
‘ஆழ்ந்த சிந்தனையின் மூலமே பிரபஞ்சப் புதிர்களை விடுவித்துவிட முடியும் என்று நம்புபவர்.

விஞ்ஞானி: 
தான் அனுமானித்தது, ஆய்வின் மூலம், ‘உண்மை’ என உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே ஆதாரங்களுடன் அதை உலகுக்கு அறிவிப்பவர்.

மெய்ஞ்ஞானி: 
தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர். [படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி:
பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்தறியாதவர். “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுபவர்.

விஞ்ஞானி: 
மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.

மெய்ஞ்ஞானி
ஒன்றும் புரியாத நிலை வரும்போது,  “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிக் கடவுளைச் சரணடைபவர்.

விஞ்ஞானி:
இவர்களில் சிலர், ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பவர்கள்; சேர்த்து வைத்த பொருளை இழப்பவர்கள்; ஆய்வுக்குத் தம் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிபவர்கள்.

மெய்ஞ்ஞானி
இவர்களில் சிலர், மனப்பூர்வமாக உண்மைகளைக் கண்டறியவும், கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பவும் தம் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பாடுபடுபவர்கள்.

இந்த ஒப்பீடு - நோக்கம் எதுவாக இருப்பினும் - எவருடைய மனதையும் நோகடிக்க அல்ல.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கதையாம்! குமுதம் கதையாம்!! இறையன்புவின் சிறுகதையாம்!!! {குட்[டு]டி விமர்சனம்}

வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும் சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம வாசகரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@