எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

சிரிக்கச் சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!!!

'உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்' என்று மனம் கலங்கியிருக்கிறார் ஒரு தீட்சிதர். வயது முதிர்ந்த ஒரு மனிதருக்குள் இப்படியும் ஒரு குழந்தை மனமா? மாறாக, குழந்தை மனம் கொண்டவர் போல் நடிக்கிறாரா?
'திருப்பதி கோயில் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிக்கவில்லை. இதனால் மூலவருக்கு எந்தவித நைவேத்தியமும் படைக்கவில்லை. உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்'['காமதேனு' வார இதழ், 08.07.2018] என்று, அந்தக் கோயிலில் 24 ஆண்டுகள் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராகப் பணியாற்றிப் பணீநீக்கம் செய்யப்பட்ட 'ரமண தீட்சிதர்' வருந்தியிருக்கிறார்.

ஆம். ஏழுமலையான் 'உலகத்துக்கே படியளப்பவர்'தான். 

உயிர்களைப் படைத்தவர் ஏழுமலையான்[கடவுள்]. அவை வாழ்ந்து முடிக்கும்வரை உணவூட்டுபவரும் அவரே..... சரி. 

இங்கே ஞானசூன்யனான நான் மட்டுமல்ல, ஆறறிவு படைத்த அனைவருமே எழுப்புகிற ஒரு கேள்வி..... அனைத்தையும் படைத்துக் காத்து வாழவைக்கிற அந்த ஏழுமலையான் கடவுளுக்கும்கூடப் பசி எடுக்குமா? 

பசிக்குமாயின் அவர் கடவுள் அல்ல. அல்லவே அல்ல. 

கடவுள் பட்டினி கிடந்தார்[25 நாட்கள்... கொலைப்பட்டினி!] என்று சொன்ன தீட்சிதரின் வருத்தவுரையும், இவரைக் கண்டிக்காமல் வாய்மூடி மவுனம் காப்போரின் கோழைத்தனமும் என்னுள் கோபத்தைக் கிளறின.  

என்னளவில் நான் கோபப்படலாம்; குமைந்து குமுறலாம். பிறர் அறியக் கடின வார்த்தைகளால் திட்டவும் செய்யலாம். ஆனால், திட்டுவது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், அதை ஏழுமலையானின் பக்தர் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வம்பிழுப்பார்கள்; வழக்குப் போடுவார்கள்[''அப்போ, மூடிகிட்டுச் சும்மா கிட'' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!] ஆகையினால்.....

சீற்றத்தை வெளிப்படுத்தாமல், சிரித்துச் சிரித்துச் சிரித்து என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்வதென முடிவெடுத்தேன்; நேற்று ஒரு நாள் முழுக்கச் சிரித்தேன்; இப்போதும்கூடச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கோயிலின் அண்மைக்காலச் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஒரு கட்டத்தில், ''திருப்பதி கோயிலில், கருவறை, மடப்பள்ளி போன்ற இடங்களில் மன்னர்கள் காலத்து நகைகள் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. கருவறையிலிருந்து ரகசிய சுரங்கப் பாதையும் உள்ளது. இதற்கு, ஓலைச்சுவடி, கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. இதெல்லாம் தெரிந்துதான், மடப்பள்ளியை நவீனம் ஆக்குவதாகச் சொல்லி தோண்டினார்கள். நைவேத்தியம் தயாரிக்க இயலாமல் போனது. ஏழுமலையான் பட்டினி கிடக்க நேர்ந்தது'' என்று கோயில் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டினார் ரமண தீட்சிதர்.

கோயில் நிர்வாகமும், 'பெங்களூர் சென்று தனியார் நிகழ்ச்சியில் பூஜை செய்தது; முகப்புக் கோபுர வாசல் வழியாகத் தன் குடும்பத்தினரைக் கோவிலுக்குள் அனுமதித்தது; கோயிலுக்குக் களங்கம் கற்பித்தது' என்று தீட்சிதர் மீது பல குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

'கோயிலில், தீட்சிதர் சொல்வதுபோல் தவறு ஏதும் நடைபெறவில்லை. சுவாமியைப் பட்டினி போட்டதாக அவர் கூறியிருப்பது பொய். மராமத்துப் பணிகள் நடபெறுவதால், மாற்று இடத்தில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டது. அவர் பட்டினி கிடக்கவில்லை'[நைவேத்தியம் படைக்காவிட்டால் சுவாமி பட்டினி கிடக்கும் என்று நம்புகிறார்களோ?] என்றும் அறிக்கை தந்திருக்கிறது நிர்வாகம்.

உண்டியல் காணிக்கையைத் தனியார் வங்கியில் சேமித்தது; வேற்று மதத்தவரைப் பணியாற்ற அனுமதித்தது. பிற மதத்தவரை அறங்காவலர் குழுவில் சேர்த்தது; வடகலை, தென்கலை குறித்த ஜீயர்களுக்கிடையிலான வாக்குவாதங்கள் என்றிப்படிப் பல சர்ச்சைகளுக்கும் இடமாகியிருக்கிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

இம்மண்ணில் வாழும் மனிதர்களில் கணிசமான தொகையினர் பட்டினியால் வாடுபவர்கள். இவர்களைப் புறக்கணித்து, ஏழுமலையானைப் பல நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள் என்று தலைமைத் தீட்சிதராய் இருந்த ஒருவர் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சாட்டுகிறார்.  கோயில் நிர்வாகத்தினர் அவரையே குற்றவாளியாக்கியதோடு, ஏழுமலையான் ஒருநாளும் பட்டினி கிடந்ததில்லை என்று சொல்லிப் பதிலடி கொடுக்கிறார்கள்.

இவர் அவர்களுக்கு அடி கொடுக்கிறார். அவர்கள் இவருக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். இந்த இருதரப்பாரும் ஒருங்கிணைந்து பக்தகோடிகளுக்கு அடிமேல் அடி கொடுக்கிறார்கள்; மூளையை மழுங்கடிக்கிறார்கள். 

இந்த இவர்களின் திருவிளையாடலை..... இல்லையில்லை, ஏழுமலையானின் இந்தத் திருவிளையாடலை நினைந்துதான் நாளெல்லாம் சிரித்தேன்... இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்!
------------------------------------------------------------------------------------------------------------------