எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 6 ஜனவரி, 2025

தமிழரின் தன்மானம் சிதைக்கக் ‘கங்கணம்’ கட்டிவந்த ‘ஆர்.என்.ரவி’!!!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ந்தவொரு அரசு நிகழ்வாயினும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகே நிகழ்வு தொடங்கும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதுதான் மரபு.

//நடப்பு ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆர்.என்.ரவி, “கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும்[தமிழ்த்தாய் வாழ்த்து?] என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்// -இது ஊடகங்களில் வெளியான செய்தி[https://tamil.oneindia.com & https://www.dinasuvadu.com].

தாய்மொழியாம் தமிழைத் தம் உயிரினும் மேலாக மதிப்பவர்கள் தமிழர்கள் என்பதால்தான், அதைத் தாயாக உருவகித்து வாழ்த்திய பிறகே நிகழ்ச்சி தொடங்குவதை வழக்கமாக்கியுள்ளார்கள்.

தாங்களும் இந்தியா என்னும் இந்தத் தேசத்தின் குடிமக்களே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைப்பதையும் வழக்கமாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்தே, தமிழரின் மொழிப்பற்று இனப்பற்று ஆகியவற்றை இழிவுபடுத்துவதே ‘மேலிடம்’ தனக்கு அறிவுறுத்திய கடமை என்பது போல் செயல்பட்டுவந்த[தமிழ்நாட்டைத் தமிழகம் ஆக்கியது, வள்ளுவருக்குக் காவி ஆடை அணிவித்தது, திராவிடம் காலாவதி ஆனதாகப் பொய் பரப்பியது போன்ற இழிசெயல்கள்] இவர் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வில் தமிழரின் தன்மான உணர்வைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்[தமிழரின் பண்பாடு கருதி அநாகரிகமான மொழிநடை கையாளப்படவில்லை].

தமிழருக்கு அவர்தம் மொழியும் இனவுணர்வும் இரு கண்கள் என்பதை.....

தமிழரின் தன்மான உணர்வைச் சிதைப்பதற்கென்றே இவருக்குக் ‘கங்கணம்’ கட்டி அனுப்பிய மேலிடத்தார் ஏனோ மறந்துவிட்டார்கள்.

மறந்துவிட்டார்கள் என்பதைவிடவும், தமிழராகப் பிறந்து தமிழருக்கு எதிராகச் செயல்படுவதற்கென்றே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தமிழினத் துரோகிகள் தரும் தன்னம்பிக்கைதான் காரணம் என்று சொல்லலாம்.

ஆளுநரின் செயல்பாடுகள் அவருக்கும் மேலிடத்தாருக்கும் நன்மை பயக்குமோ அல்லவோ, இந்தியா என்னும் நம் நாட்டுக்கு நல்லதல்ல!

                                  *   *   *   *   *     

https://tamil.oneindia.com/news/chennai/governors-speech-of-dmk-government-has-series-of-lies-says-bjp-annamalai-582401.html


https://www.dinasuvadu.com/news/tamilnadu/nayanar-nagendran-said-that-governor-rn-ravi-has-acted-according-to-tradition-891441


ஆளுநர் கோபம் தணிய... இனி த.நா. சட்டமன்றம் ‘இந்தி மாதா’ வாழ்த்துடன் தொடங்குமா?!

TN Assembly : 2025 -ன் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதைக் கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார்[https://www.vikatan.com]

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியதால்[பிறகு, 'தேசிய கீதம் பாடாததால்...’ என்று அவரின் x.com தளத்தில் திருத்தம் செய்யப்பட்டது] கோபமடைந்த மேதகு த.நா. ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினாராம்.

இந்தக் கோபம் ‘பாரத்’இன் பிரதமர் மோடிஜியைக் கடுங்கோபத்திற்கு உள்ளாக்கும். இதன் விளைவு, இனி எப்போது வேண்டுமானாலும் த.நா.சட்டமன்றம் கலைக்கப்படலாம்.

ஆகவே.....

மேதகு ஆளுநர் கோபத்துக்குள்ளாக்கப்பட்டார் என்னும் செய்தி மேலிடத்தைச் சென்றடைவதற்குள் அவரின் கோபத்தைத் தணிப்பது த.நா. முதல்வர் ஸ்டாலின் கடமையாகும்.

ஓர் உடனடி அறிவிப்பின் வாயிலாக அதை நிறைவேற்றலாம். அது.....

“இனி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ‘இந்தி மாதா’ வாழ்த்துடன்[வாழ்த்துப்பா இல்லையென்றால் இந்தியில் புலமை பெற்ற அறிஞர்களின் உதவியுடன் நாமே எழுதிக்கொள்ளலாம்] தொடங்கும்.”

இந்தப் பரிந்துரையை ஸ்டாலின் ஏற்பார் என்று மனப்பூர்வமாய் நம்புகிறோம்.

வாழ்க இந்தி மாதா! வளம்பெறுக ‘இந்தி’யர் வாழ்வு!!

***இந்திய நாட்டின் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் முதலில் ‘இந்தி மாதா’ வாழ்த்து பாடப்படுதல் வேண்டும் என்பது அவர்களின் கனவு?

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/national-anthem-disrespected-in-tamil-nadu-assembly-governor-rn-ravi