அவ்வப்போது, எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி இது.
பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.
ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.
மனிதன், விலங்கு, பறவை என்று எந்தவொரு உயிரினமாக இருப்பினும் அந்த உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.
ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.
மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.
மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.
எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?
மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு நம்மால் வரம்பு கட்ட இயலாது] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?
அது உருவம் உள்ளதா, அருவமானதா?
மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?
அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!கடவுளின் ‘இருப்பு’ உறுதிப்படுத்தப்படவில்லை; இந்தக் கேள்விக்கு விடையில்லை; பயனேதும் இல்லை[?] என்பவை தெரிந்திருந்தும், கடவுள் குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!
நீங்கள் எப்படி?

