எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 11 ஏப்ரல், 2022

இந்தித் திணிப்பை மட்டுமல்ல இந்தியையே எதிர்ப்போம்!!!

"இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தித் திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்" -இது இன்று 'உதயநிதி ஸ்டாலின்' அவர்கள் ஆற்றிய உரையின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். 

இதன் எதிரொலியே இந்தப் பதிவு என்பது அவசியம் அறியத்தக்கது 

சென்னை தென்மேற்கு மாவட்டத் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.

இதில்  தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, "இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தித் திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்" என்று பேசியிருக்கிறார்https://www.maalaimalar.com/amp/news/topnews/2022/04/10130111/3661064/Tamil-News-Udhayanidhi-Stalin-says-We-are-not-against.vpf   -11.04.2022பிற்பகல்.

அவ்வப்போது இப்படிப் பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாக உள்ளது.

"ஒரே நாடு; ஒரே மொழி..." என்று பேசிக்கொண்டு, படிப்படியாக அனைத்து மாநில மொழிகளையும் அழித்துவிட்டு[வடமாநில மொழிகள் கணிசமான அளவில் அழிக்கப்பட்டுள்ளன], இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, கல்வி மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் ஆக்கும் திட்டத்துடன்தான் அமித்ஷா உட்பட வடநாட்டு அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். தனிப் பெரும்பான்மை பலத்துடன் அவர்கள் ஆட்சி நடத்துவதும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும்கூட இந்நிலை மாறப்போவதில்லை என்பதும் முக்கியக் காரணங்கள் ஆகும்.

"நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்" என்றிப்படி 'வழவழா கொழகொழா' என்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் பாட்டுக்குத் திணிப்பு வேலையைச் செவ்வனே செய்து முடிப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்குக் கொஞ்சமும் இடமில்லை.

இது விரும்பத்தக்கதல்ல.

'இந்தியால் நம் தமிழ் மொழி காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிடும்' என்பது உறுதியாகத் தெரியும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.....

"இந்தியை எதிர்க்கிறோம்" என்று முழங்குவதில் தவறே இல்லை என்பதை உணருங்கள்.

இந்தி குறித்து இனி பேசினால், "இந்தித் திணிப்பை மட்டுமல்ல, இந்தியையும் எதிர்க்கிறோம்" என்று பேசுங்கள். அது இயலாது என்றால், இது குறித்து எந்தவொரு சூழ்நிலையிலும் பேசாமல் இருப்பதே நல்லது.

நன்றி.

==========================================================================


பாரதியின் 'இந்த'க் கனவு நனவாவது எப்போது?!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் தமிழ்க் கவிஞன் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமையாகுமா?

அறிவுடைமை அல்ல என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும். 

உலகை அழிப்பதல்ல அவனுடைய நோக்கம், எந்தவொரு மனிதனும் பட்டினி கிடந்து சாகக் கூடாது என்பதே.

ஒரு தனிமனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்த் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதைப் பிறரால் தடுக்க இயலாது; ஆனால், பட்டினியால் சாவதைத் தடுக்க இயலும்.

அந்த உதவியை மனித குலம் செய்யத் தவறுமேயானால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் முடிவு. எனவேதான்.....

"ஜகத்தினை அழித்திடுவோம்" என்று கொந்தளித்துக் குமுறினான்..

அந்தப் பாரதி இன்று இல்லை. 

ஆனாலும், அவன் விட்டுச் சென்ற அந்த அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருப்பதால், புதிய புதிய பாரதிகள் தோன்றுவார்கள்; பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்" என்று முழங்குவார்கள்.

அந்த முழக்கம் உலகிலுள்ள அத்தனை மனித மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இனவெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறி உணர்வுகள் அழிந்தொழிய மனித நேயம் மட்டுமே செழித்து வளரும். அதன் விளைவாக.....

இன்னும் சில நூறு ஆண்டுகளில் என்றில்லாவிட்டாலும், ஓர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தேனும், உண்ண உணவில்லை என்று சொல்லி எவரும் வருந்தும் நிலை முற்றிலுமாய் இல்லாமல் போகும் என்று உறுதிபடச் சொல்லலாம்!

https://kadavulinkadavul.blogspot.com/2022/04/blog-post_11.html

==========================================================================