பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 31 ஜூலை, 2021

கவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்!

வெகு அரிதாகத்தான் 'யூடியூப்' செல்வது என் வழக்கம். அதுவும், [அரைகுறை ஆடையுடன் கூத்தடிக்கும் 'குட்டி'கள் இல்லாமல்]நம்மைக் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு இட்டுச் சென்றோ, மலைக்க வைக்கும் மலைத் தொடர்களைக் காட்சிப்படுத்தியோ இயற்கை அழகைப்  பூமாரியெனப் பொழியும் 'காணொலி'களைக் கண்டு கேட்டு இன்புறுவதற்காக மட்டுமே.

அண்மையில் கண்டு களித்துப் புளகாங்கிதப்பட்ட, World's highest Waterfall - the most beautiful Angel Waterfalls of Venez...' கீழே.

[youtube  ஐச் சொடுக்கினால் முழுத்திரையில் ரசிக்கலாம்] 
                         
                                        *  *  *
மனதைக் களிப்பில் ஆழ்த்துவது மேலே இடம்பெற்ற காணொலி. கீழே உள்ள உண்மைக் கதை நேர் எதிர்விளைவைத் தரவல்லது. வாசியுங்கள்.

ந்துநின்ற ஆட்டோவிலிருந்து அப்பா இறங்குவதைப் பார்த்துச் சந்தோசப்பட்ட மல்லிகா, அவர் கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.

மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனைத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.
"பார்த்த வேலையும் பறிபோயிடிச்சி. குடிக்க இவருக்குக் காசு ஏது?" என்றார் மல்லிகாவின் அப்பா மாதவன்.

"நான் சம்பாதிக்கிறேன்ல."

"இனிமே கொடுக்காதே."

"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."

"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவாரு."

"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம நான் வாங்குற சம்பளத்தில் ஒரு தொகையை 'டாஸ்மாக்'குக்குன்னு ஒதுக்கிடுறேன்." -விரக்தியுடன் சிரிக்கவும் செய்தாள் மல்லிகா.

தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலிருந்த சோபாவில் சரிந்தார் மாதவன்.
                                             *  *  *
குறிப்பு:
நீங்கள் வாசித்தது கதையல்ல; கதையாயின், 'பிரச்சினை'க்கு ஒரு தீர்வு தந்து முடித்திருக்கலாம். இது உண்மை நிகழ்வு என்பதால் அது சாத்தியம் இல்லாமல்போனது.
====================================================================================


வெள்ளி, 30 ஜூலை, 2021

'பன்னீர்-எடப்பாடியார்' பார்வைக்கு ஒரு 'பகீர்' துயர வரலாறு!!!





கி.பி.14ஆம் நூற்றாண்டின் தொடக்கம். பாண்டிய நாட்டில் 'குலசேகரப் பாண்டியனின் ஆட்சி.

அவனுக்குச் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்று இரண்டு மகன்கள். தந்தைக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதில் இருவருக்குமிடையே மிகக் கடுமையான போட்டி.

ஒரு கட்டத்தில், தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஓர் இழிசெயலைக் கையாண்டான் சுந்தர பாண்டியன். 

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தாள் பணிந்து, தன் தம்பி மீது தான் தொடுக்கவுள்ள போரில் உதவிடப் படை அனுப்புமாறு கெஞ்சினான் என்பதே அது.

தென்னக அரசுகளைச் சூறையாடிக்கொண்டிருந்த, [கில்ஜியின் படைத் தலைவன்]மாலிக்காபூர் ஒரு படையுடன் தமிழகம் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான்; வீரபாண்டியன் தோற்றோடினான்.

மாலிக்காபூர் சுந்தரபாண்டியனுக்கு முடி சூட்டாமல், ஒரு பிரதிநிதியை நியமித்தான். பின்னர்,  தமிழின உடன்பிறப்புகளின் ஒற்றுமையின்மை காரணமாகப் பிற இனத்தவரின் ஆதிக்கம் இங்கு அதிகமானது; தமிழகமும் தமிழினமும் சீரழிந்தன.

இது, அந்த வரலாற்று அவல நிகழ்வின் மிகச் சுருங்கிய வடிவம் மட்டுமே

விரிவான செய்திகளுக்கு...  

http://www.kotravainews.com/history/history-of-tamil-nadu-tamilnadu-varalaru-tamilsamuthayam/chera-chola-pandya-pandyar-history-pallavargal/pandiyar-varalaru/

இந்த வரலாற்றுச் சோக நிகழ்வு, இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில் அடிக்கடி என் நினைவுக்கு வந்து அடிமனதை உறுத்திப் புண்படுத்துகிறது. அனைத்துத் தமிழர்களிடமும் இதைப் பகிர்ந்திடல் வேண்டும் என்ற உந்துதல் காரணமாகப் பதிவு செய்கிறேன்.

நடுவணரசுடன் 'அனுசரித்து'ப் போய், 'பயன்' பெறும் வகையில் தமிழ்நாட்டை ஆண்ட, இனியும் ஆள்வதற்கு ஆசைப்படும் 'எடப்பாடி'யார்[அவர்கள்], பன்னீர்ச்செல்வம்[அவர்கள்] ஆகிய இருவரும் தமிழர்களே என்பதால், அவர்களுடனும் இதைப் பகிர்வதோடு, இந்தத் துயர்மிகு வரலாற்று நிகழ்வு குறித்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.

நன்றி.

====================================================================================

வியாழன், 29 ஜூலை, 2021

ஓட்டு வீட்டுக்குள் ஒரு 'சொர்க்கம்'!!!

 

செல்வராசு புது மாப்பிள்ளை.

அன்று மாலை,  வழக்கமான நடைப்பயிற்சியின்போது, உடனிருந்த நண்பன் நல்லதம்பி, "கல்யாணம் ஆகியும் தினம் தினம் நடைப்பயிற்சி வந்துட்டிருக்கே. ஊட்டி, கொடைக்கானல்னு புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு போக வேண்டியதுதானே?" என்றான்.

"எல்லாருமா போறாங்க?"

"வசதி உள்ளவன் போறான். உனக்கு வசதி இல்லையா என்ன?"

"கல்யாணம் ஆனா தேனிலவு போறது கட்டாயமா?"

"கட்டாயம் இல்ல. கட்டிக்கிட்டவளோடு இயற்கையழகு நிறைஞ்ச இடங்களைச் சுத்திப் பார்க்குறதில் கூடுதல் சந்தோசம்."

"அது மட்டும்தானா?"

"என்னடா தெரியாத மாதிரி கேட்குறே? புதுப் பொண்ணு தர்ற சுகமும்தான். எப்போ கிளம்பப் போறே?"

"போன வாரமே கொடைக்கானல் போக இருந்தோம். மனசாட்சி சம்மதிக்கல."

"என்னடா உளறுறே?" -குரலில் சினம் துளிர்க்கக் கேட்டான் நல்லதம்பி.

"உளறுல. என் அப்பா அம்மா ரெண்டு பேருமே  படிக்காதவங்க. கூலிநாழி செஞ்சி வயிறு வளர்த்தாங்க. வேளா வேளைக்குச் சாப்பிடாம மிச்சம் பிடிச்ச காசுல என் அக்காவைக் கொஞ்சம் வசதியான இடத்தில் கட்டிக் கொடுத்ததோடு என்னையும் படிக்க வைச்சாங்க. அவங்க செய்த தியாகத்தில்தான், நான் படிச்சி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்குறேன்....."

கொஞ்சம் அவகாசத்திற்குப் பிறகு தொடர்ந்து பேசினான் செல்வராசு. "இதுவரைக்கும் என்னைப் பெத்தவங்க வேலை தேடி அண்டை அயல் ஊர்களுக்குப் போயிருக்காங்களே தவிர, குற்றாலம், கொடைக்கானல், ஊட்டின்னு எந்தவொரு சுற்றுலாத் தலத்துக்கும் போனதில்ல. அதுல கிடைக்கிற சுகம் பத்தி அவங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுக்காக அவங்க கவலைப்பட்டதும் இல்ல. புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு கொண்டாடச் சுற்றுலாப் போகத் திட்டமிட்டபோது, 'பெத்தவங்களுக்குக் கொடுத்து வைக்காத அந்தச் சுற்றுலா தரும் சுகத்தை நாம் அனுபவிக்கப் போறோம்'னு நினைச்சபோது மனசாட்சி உறுத்திச்சி....." 

இடைமறித்தான் நல்லதம்பி. "தேனிலவு போறதில்லேன்னு முடிவு பண்ணிட்டியா?" 

"ஆமா. அடுத்த வாரமே என் பெண்டாட்டியையும் என்னைப் பெத்தவங்களையும் அழைச்சிட்டுக் கொடைக்கானலுக்குச் சுற்றுலா போறேன். இது முடிஞ்சதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதலிரவும் தேனிலவும். அதைக் கொண்டாடுறதுக்கு ஊட்டி கொடைக்கானல் எல்லாம் அவசியமில்ல. கிராமத்தில் இருக்குற ஓட்டு வீடே சொர்க்கம்தான்" என்றான் செல்வராசு.

விழிகளில் வியப்பு நிறைந்திட நண்பனை ஆரத் தழுவி, ஆறுதலாய் அவன் முதுகு தடவி மகிழ்ந்தான் நல்லதம்பி. 

====================================================================================


செவ்வாய், 27 ஜூலை, 2021

அழிவுப்பாதையில் அனைத்து மதங்களும்!!!

[“மதம் மக்களின் அபின்” – கார்ல் மார்க்ஸ்]

2015இல் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம், வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் மதங்கள் குறித்த ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். 

அந்த ஆய்வு, விரைவில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்கிறது.

கலிஃபோர்னியாவின் க்ளேர்மோன்ட்டில் உள்ள பிட்சர் கல்லூரியில் சமூகவியல் மற்றும் மதம் சார்பற்ற கல்வித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் 'ஃபில் ஜாக்கர்மேன்',  "வாழ்க்கை என்பது மரணத்துடன் முடிந்துவிடக்கூடியது என நம்புபவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல நாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடவுள் மறுப்புக் கொள்கை பெருகியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடவுள் இல்லை; வாழ்க்கை என்பது நிச்சயம் ஒருமுறைதான் என இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்" என்கிறார்.

செக் குடியரசில்  நடந்த கணக்கெடுப்பு ஒன்றில், அறுபது சதவீதம் பேர் தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

மதங்களின் நிலை குறித்து 57 நாடுகளில் 50,000 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2005இல் 77% பேர், தங்களுக்கு மத நம்பிக்கை உள்ளது எனக் கூறிய நிலையில், 2011இல் இது 68% ஆகக் குறைந்துவிட்டது. அதே சமயம் கடவுள் மறுப்பாளர்கள் என அடையாளப்படுத்தியோர் எண்ணிக்கை 3% அதிகரித்துவிட்டது. கடவுள் இல்லை என நம்புபவர்கள் தொகை உலகளவில் 13% ஆக அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆக, மேற்கண்டவை போன்ற ஆய்வு முடிவுகளின்படி, மதங்கள் அழிந்துகொண்டிருப்பதற்கான காரணங்களாகக் கீழுள்ளனவற்றைச் சொல்லலாம். 

*மதங்களின் மீதான அவநம்பிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது.

*மதங்களின் போதனைகளைப் பின்பற்றாமலேயே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டிருப்பது.  

*மதங்களின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் நடக்கின்றன என்று பலரும் கருதுதல்.

*'இதைச் செய்; இதைச் செய்யாதே' என்று கட்டளையிட்டு, கடவுளின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் மதத் தலைவர்கள் மீதான வெறுப்பு. 

*'நல்லது செய்தால் நல்லது நடக்கும்; மதங்கள் தேவையில்லை' என்பதாக மக்களிடையே பரவிவரும் நம்பிக்கை.

*கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது என்னும் உண்மையைப் பெரும்பாலோர் அறிய முற்பட்டிருப்பது.

*மத நம்பிக்கை மனிதர்களுக்குள்ளேயே பிளவுகளைத் தோற்றுவிப்பதால் தோன்றும் வெறுப்பு. 

*'மனிதாபிமானம்' போற்றி வாழ்வதன் அருமையை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பது.

*பெரும்பாலான மதத் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையும், அவர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளும் ஊடகங்களால் பரப்புரை செய்யப்படுதல்.

*வரலாற்று அறிவு வாய்க்கப்பெற்றவர்கள், மதவாதிகள் நிகழ்த்திய கொடூரக் கொலைகளையும், மதக் கலவரங்களால் நேர்ந்த பேரழிவுகளையும் அறிந்து வருந்துவதோடு, தாம் அறிந்தவற்றைப் பிறரிடமும் பகிர்ந்துகொள்ளுதல்.

                                       *  *  *

***மேற்கண்ட ஆய்வுகள் தற்சார்பின்றி நிகழ்த்தப்பட்டவை என்பதால், கண்டறியப்பட்ட முடிவுகளின்படி, அடுத்த நூற்றாண்டு முற்றுப்பெறுவதற்கு முன்னதாகவே அனைத்து மதங்களும் முற்றிலுமாய் அழிந்தொழிய, மக்களனைவரும் சுயசிந்தனையாளர்களாக ஆகியிருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

=================================================================================

உதவி: https://www.bbc.com/tamil/science-44998188  & 'உண்மை'

திங்கள், 26 ஜூலை, 2021

ஊடகக் கில்லாடிகள்!!!


முன்னணி வார இதழான 'தாழம்பூ' அனுப்பியிருந்த அந்தக் கடித உறை கவிமலர் மனதில் ஏராள எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருந்தது.

அந்தப் பிரபல இதழில் தன் சிறுகதை வெளியாக வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு அப்போது நிறைவேற இருப்பதாக அவள் நம்பினாள்.

எடை மிகக் குறைவாக[கனமாக இருந்தால், அனுப்பிய படைப்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று அர்த்தம்] இருந்த அந்த உறையைக் கட்டுக்கடங்காத ஆவலுடன்  பிரிக்கலானாள்.

அந்தச் சில வினாடிகளுக்குள், 'தாழம்பூ'வில், தான் அனுப்பிய புகைப்படத்துடன் கதை வெளியாகியிருப்பதாகக் கற்பனை செய்து மகிழ்ந்தாள்.

ஆனால், உள்ளேயிருந்த கடிதத்தின் முதல் வரியே அந்த மகிழ்ச்சிக்குச் சமாதி கட்டியது.

'உங்கள் கதையைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற அந்த வரியை வாசித்தவுடன், மனம் வெறுத்து, கடிதத்தைக் கிழித்தெறிய நினைத்தாள் கவிமலர்; முடிவை மாற்றிக்கொண்டு மேலே படித்தாள்.

'கதையைப் பிரசுரிக்க இயலவில்லை எனினும், உங்களின் அழகிய புகைப்படம் அடுத்து வெளியாகவிருக்கும் 'தாழம்பூ' இதழின் அட்டையை அலங்கரிக்கவுள்ளது  என்பதைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். நன்றி' என்று எழுதப்பட்டிருந்தது.

"வேறு எதனைவிடவும் உலகம் பெண்ணின் அழகுக்கே முதலிடம் தருகிறது. இதற்குப் பத்திரிகையாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?" என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பி, மெலிதாகப் புன்முறுவல் பூத்தாள் கவிமலர். 

====================================================================================

***நான் கல்லூரி ஆசிரியரான சில ஆண்டுகளில், என் நண்பரின், எழுத்தார்வம் கொண்ட மகளுக்கு நேர்ந்த அனுபவம் இது. இருப்பில் 'சரக்கு' ஏதும் இல்லாத நிலையில் இதையே கதையாக்கியுள்ளேன்!

வருகைக்கு நன்றி.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

'ஆண் குறி' வளைதல் நோய்[Peyronie’s disease]!!!

எச்சரிக்கை!

இந்த நோய் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இத்துறை சார்ந்த மருத்துவரிடம் விசாரித்து அறிந்தவை அல்ல; முழுக்க முழுக்க இணையத்திலுள்ள கட்டுரைகளிலிருந்து [ஆங்கிலம்&தமிழ்] திரட்டப்பட்டவை ஆகும்[இந்தப் பதிவு, இந்த நோய்க்கான ஓர் அறிமுகம்[தமிழில்] மட்டுமே]. தேவை எனின், உரியவர்களை அணுகித் தெளிவு பெறுமாறு வேண்டுகிறேன். நன்றி.

                                              *  *  *

இது விசித்திரமானதொரு நோய். 6%-10% வரையிலான ஆடவர்களுக்கு[வயது:40-70] இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் மதிப்பிட்டிருக்கிறார்களாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச விரும்பாததாலும், இதை அலட்சியப்படுத்துவதாலும், நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திட வாய்ப்புள்ளது[Experts estimate that about 6% to 10% of men between ages 40 and 70 have Peyronie’s disease. t’s been observed in other ages, but it’s less common. There’s a theory that the actual number may be higher since some men choose not to talk about the disease with their healthcare provider, and others may not be bothered enough to seek medical care. If you have concerns about your sexual health, be sure to report your symptoms to a healthcare provider].

ஆண் குறி விறைப்புக்குள்ளாகும்போதுகணிசமானவர்களுக்கு[சரியான கணக்கெடுப்பு சாத்தியமில்லை] சற்றே வளைந்து காணப்படுவது இயல்புதான். Peyronie’s disease நோய் கண்டிருந்தால், உறவு கொள்ள இயலாத வகையில் அது மிகையாக வளைந்திருக்கும்[It's common for the penis to curve slightly to the left or right when it's erect. But if you have a more significant bend in your penis, which may cause you pain or difficulty having sex.....].

வளைந்திருப்பது மட்டுமல்லாமல், குறியின் நீளமும் சுற்றளவும்கூட[lose length or girth] குறைந்துவிட வாய்ப்புள்ளது.


உறவின்போது உறுப்பில் வலி தோன்றும்[உடம்பின் மற்ற பகுதிகளில் பாதிப்பு இராது].

சிறுநீரும் விந்துவும்[urination or ejaculation] வெளியேற இது தடையாக இருப்பதில்லை.

வயதானவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. நடுத்தர வயசுக்காரர்களையும் விட்டுவைப்பதில்லை.

நோய்க்கான காரணங்கள்[சிகிச்சை ஏதுமின்றி, தானாகவே குணமாதலும் உண்டு]:

1.பரம்பரை.

2.'பிராஸ்டேட்' புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்திருத்தல்.

3.அதீத நீரிழிவு நோய்.

4.ஆண்குறி அடிபடுதல், ஆண்குறியில் ஊசி போடுவது, 'ஆட்டோ இம்யூனி'[relating to disease caused by antibodies or lymphocytes produced against substances naturally present in the body] நோய்கள், ஆண்குறியில் நுண்ணிய காயங்கள்.

5.இடுப்பில் பாதிப்பு[Pelvic trauma].

6.உறவில் ஈடுபடும் போது காயங்கள் ஏற்படுதல். இதன் காரணமாகத் திசுக்கள் கிழிந்து தழும்பு உண்டாதல்; வீக்கம் ஏற்படுதலும் உண்டு.

7.plaque(கட்டி)..... பல் எயிறுகளைத் தாக்குவது போன்ற[Plaque can also develop under the gums on tooth roots and break down the bones that support teeth] ஒரு நோய்.

8.'சுய சுகம்' அனுபவிக்கையில் முரட்டுத்தனமாகச் செயல்படுதல். ஓர் எடுத்துக்காட்டு:



பெரோனி(பெய்ரோனி?) நோக்கான சிகிச்சை குறித்து.....

'There is no cure for A certified sex therapist is uniquely qualified to help you deal with these issues. You can also see a psychiatrist for medications and a general therapist for counseling (therapy)., but there are always ways that the changes in the penis can be improved. Many different treatments exist including stretch therapy (traction), medications and even surgeries..... A certified sex therapist is uniquely qualified to help you deal with these issues.' 

===================================================================================

குறிப்பு!

கூகுளில், 'பெரோனி நோய்'(பெய்ரோனி?) என்று தட்டச்சினால் வரும் பதிவுகளில் போதிய அளவு தெளிவு இல்லை. பெரும்பாலும் கூகுளின் மொழியாக்கத்தை உள்ளவாறே பதிவு செய்திருக்கிறார்கள்.

Peyronie’s disease என்று ஆங்கிலத்தில் தேடி வாசியுங்கள். மருத்துவக் கல்வியில் ஓரளவேனும் தேர்ச்சி பெற்றவர்கள், இது குறித்து விரிவாகத் தமிழில் எழுதுவது மக்களுக்கு நல்ல பயன் தருவதாக அமையும்.

சனி, 24 ஜூலை, 2021

கடவுள் சாட்சியாக.....


கடவுள் எதற்காக உயிர்களைப் படைத்தார்?

கீழ்க்காணும் காணொலியில் விடை இருக்கிறது.

காணொலி நிகழ்வைத் தொடக்கம் முதல் இறுதிவரை பார்த்துவிடுங்கள்.

அதீத இரக்க குணம் வாய்க்கப்பெற்றவர்கள் மனதைக் கல்லாக்கிக்கொள்ளுதல் மிக அவசியம்.

"நமக்கும் மேலான 'சக்தி'தான் நம்மை இயக்குகிறது; கட்டுப்படுத்துகிறது. அந்தச் சக்திதான் கடவுள்" என்று காலங்காலமாகச் சொல்லப்படுவதை நீங்கள் நம்புபவராக இருந்தால்.....

அந்தக் கடவுள் எத்தனைக் குரூரப் புத்தி உள்ளவர் என்பதை இந்தக் காணொலி மூலம் புரிந்துகொள்வீர்கள்.


2013ஆம் ஆண்டில், நான் எழுதிய இது தொடர்பான ஒரு பதிவு:

 தலைப்பு:         இந்தக் காட்டுமிராண்டியா கடவுள்?!

ரு காடு.

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்துகொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலையவிடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை அசுர வேகத்தில் சீறிப் பாய்கிறது. எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டுத் தப்பி ஓடுகிறது மான். 

மான் தப்பியது. குட்டி, சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

தப்பிச் செல்ல முயலும் மான் குட்டியைச் 'செல்லக்கடி' கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும்கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன.

உயிரைக் காத்துக்கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும்?

இந்தக் கொடூரக் காட்சியை நீங்கள் ‘டிஸ்கவரி’ சேனலில் பார்த்திருப்பீர்கள். இதற்கான உண்மை நிகழ்வைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக்கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?  அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனைக் கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே”என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில்[கடந்த பிறவிகளில்] உயிர்கள் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம் காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்?[உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?]

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, “கடவுள் ஒரு போதும் தூண்டமாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும். ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” -இப்படிப் புரியாத தத்துவங்களைச் சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவிகளில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போட முடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும். ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில்[அறிந்திட வாய்ப்பில்லை] அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் அரக்க குணம் கொண்டவரா? இல்லை, காட்டுமிராண்டியா?”

பதில் தருவார் யார்?

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப் பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்துகொண்டு உயிர்கள் திருந்தி வாழ வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?”
====================================================================================

வெள்ளி, 23 ஜூலை, 2021

தமிழ் வளர்த்து, தமிழனாக வாழ்ந்து மறைந்த ஒரு பிராமணர்!!!


“நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தம் இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தார் ஒரு பிராமணர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்,1895-ஆம் ஆண்டில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்த அவர் பெயர் வெ. சாமிநாத சர்மா; பன்மொழி வித்தகர்; 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
இவர் செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். "உண்மையில் பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டவர்[விக்கிப்பீடியா]. 
"தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழிச் சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தம் தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இந்த அறிஞர் பற்றி மறைந்த கவியரசு கண்ணதாசன்:

உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி, தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இவரைப்போல் எவரும் முயன்றதில்லை. கதைப் புத்தகங்கள்கூட இரண்டாயிரத்துக்கு மேல் விற்காத காலத்தில் அறிவியல் நூல்கள் எழுதி அவஸ்தைப்பட்டவர்.

நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு.சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.

பஞ்சாங்கம் எழுதியிருந்தால் நல்ல ராயல்டி வந்திருக்கும். இவரோ விஞ்ஞானம் எழுதினார்.

சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி வந்தபோது, ‘புதிய சீனா’ எழுதினார்; ‘பிரபஞ்சத் தத்துவம்’ எழுதினார். பொது மேடையில் தோன்றி, ஒரு மாலைகூட வாங்கிக்கொள்ளாமல் காலமாகிவிட்டார். அவர்தான் வெ.சாமிநாத சர்மா.
========================================================================


வியாழன், 22 ஜூலை, 2021

'மது சுமந்த மங்கை'... இராஜாஜி சிறுகதை!!!


திருமணம் ஆகாத அழகான ஒரு பிரமச்சாரி இளைஞன் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கிராமத்துப் பாதையில் தனியாகச் சென்றுகொண்டிருந்தான்.

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, உடல் உறுதியும் பேரழகும் வாய்ந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் எதிரே வந்துகொண்டிருப்பதை அவன் கவனித்தான். அவள் தன் தலையில் 'மதுக்குடம்' சுமந்திருந்தாள்; இடுப்பில் குழந்தை. 

அவனை அவள் மிக நெருங்கிவிட்ட நிலையில், அவளின் இடுப்பில் ஒரு கூர்மையான கத்தி செருகப்பட்டிருப்பதையும் அவன் கண்டான்.

அவள் இவனைக் கூர்ந்து நோக்கினாள்; இவனுடன் இணைந்து இன்புற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.

"அக்கம்பக்கம் யாரும் இல்லை. ரெண்டுபேரும் சந்தோசமாக இருக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் அவள் சொன்னாள்.

அவன் திடுக்கிட்டான்; "மன்னிக்கணும். நீ இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள். நானோ பிரமச்சாரி. நமக்குள் தகாத உறவு வேண்டாம்" என்று திடமான குரலில் சொன்னான்.

அடுத்த கணமே அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தன் இடுப்பிலிருந்த கத்தியைத் தொட்டுக்காட்டி, "என் இச்சைக்கு நீ இணங்கணும். இதுல விருப்பம் இல்லேன்னா, என் குழந்தையைக் கொல்லணும். அதுக்கும் நீ சம்மதிக்கலேன்னா, குடத்தில் இருக்கிற மதுவை உன் வயிறு முட்டக் குடிக்கணும். இந்த மூன்றில் எதையாவது ஒன்றை நீ செய்தே ஆகணும். மறுத்தால் என் இடுப்பில் இருக்கிற கத்தியால் குத்தி உன்னைக் கொலை செய்வேன். இது உறுதி" என்றாள்.

அவளின் முகபாவனை, எதற்கும் துணிந்தவள் அவள் என்பதை அடையாளப்படுத்தியது.   

இந்த மூன்றுமே பாவ காரியங்கள் என்பதை அவன் உணர்ந்திருந்தான்; மூன்றில், மது குடிப்பதுதான் தனக்குக் குறைவான பாவங்களைச் சேர்க்கக்கூடியது என்று நினைத்தான்; குடத்திலிருந்த மதுவை அருந்தினான்.

போதை தலைக்கேறியவுடன், மனம் மாறி அவளுடன் சேர்க்கை கொள்ள ஆசைப்பட்டான்.

செயல்படத் தலைப்பட்டபோது, குழந்தை வீறிட்டழுது, தாயைப் பிரிய மறுத்து அடம்பிடித்தது.

குழந்தையின் பிடிவாதம் அவனின் வெறியுணர்ச்சியை உச்சநிலைக்குக் கொண்டுசென்றது. மனதைக் கல்லாக்கிக்கொண்டு, அவளின் இடையிலிருந்த கத்தியால் குழந்தையைக் குத்திக் கொன்றான்.

அந்தப் பெண்ணோடு இணைந்து இன்புற்றான்.

ஆக, செய்யக்கூடாது என்று அவன் நினைத்த இரண்டு பெரிய குற்றங்களையும் அவன் செய்திடக் காரணமாக அமைந்தது கொடிய மது போதைதான்.

====================================================================================

***மதுவால் விளையும் கேடுகளை உணர்த்த இராஜாஜி அவர்கள் எழுதிய இந்தக் கதை எப்போதோ எங்கோ படித்தது. எனக்குப் பழக்கமான நடையில் பதிவு செய்திருக்கிறேன்; கதையின் 'தரம்' குன்றாத வகையில் கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன்.

பதிவின் தலைப்பு['மது சுமந்த மங்கை'] நான் தந்தது.


புதன், 21 ஜூலை, 2021

'நரக வாசல்'!!!


'மரணத்திற்குப் பிறகு, புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் செய்தவர்கள் நரகத்திற்கும் சென்று தத்தமக்குரிய வினைப்பயன்களை அனுபவிப்பார்கள்' என்று 'மகா ... பெரிய' மகான்களும் ஞானிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

போதுமான அளவிற்குப் புண்ணியம் செய்யாதவர்களுக்காக, ஒரு 'குறுக்கு வழி'யையும் காண்பித்து அவர்கள் அருள்பாலித்திருக்கிறார்கள். 

'வைகுண்ட ஏகாதசி தினத்தில் வைணவக் கோயில்களின் வடக்கு வாசல்(சொர்க்க வாசல்) வழியாகக் காட்சிதருவார் பகவான். அப்போது அவரைத் தரிசித்துப் புளகாங்கிதப்பட்டாலே சொர்க்கம் சேரலாம்' என்பதே அந்தக் குறுக்கு வழி.

மலையளவுக்குப் பாவங்கள் செய்திருந்தாலும், அவரைத் தரிசித்த அந்தக் கணப்பொழுதிலேயே அவை முற்றிலுமாய் நீங்கிவிடுமாம்!

சொர்க்கம் செல்வதற்கான குறுக்கு வழியாக, 'சொர்க்க வாசல்' அமையும் என்றால், 'நரகம்' செல்வதற்கும் ஒரு 'குறுக்கு வழி'[நரக வாசல்] இருந்துதானே தீரும். 

பெரும் பெரும் பாவங்களைச் சுமந்து திரிந்தாலும், சிலர்[பலராகவும் இருத்தல்கூடும்],  அரங்கனைப் பணிந்து போற்றிச் சொர்க்கம் செல்லுவதை வெறுக்கவும் செய்யலாம். நரகம் செல்வது 100% உறுதி என்பதால், இந்தப் பொல்லாத உலகில் மரணம் வரும்வரை காத்திருக்க விரும்பாமல், 'நரக வாசல்'இல் நுழைந்து பூத உடலுடன் விரைந்து நரகத்திற்குச் சென்றுவிட அவர்கள் ஆசைப்படலாம்.

எனவே, சொர்க்க வாசல்கள் கண்டறியப்பட்டது போல, எங்கெல்லாம் நரக வாசல்கள் இருக்கின்றன என்பதை, 'ஜக்கி வாசுதேவ்' போன்ற நடமாடும் கடவுள்கள் கண்டறிந்து சொல்வார்களேயானால், அது நம் மக்களில் ஒருசாராருக்குச் செய்த பெரும் சேவையாக அமையும்.

மனம் இரங்குவார்களா ஜக்கியும், அவரனைய பிற அவதாரங்களும்?!

====================================================================================

***சொர்க்கவாசல் பிறந்த கதை :

ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதுகளிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். 'இந்த அசுரச் சகோதரர்களை அடக்க வல்லவர் விஷ்ணுபகவான் ஒருவரே' என்ற முடிவில் தேவர்கள் அவரிடம் முறையிட, பெருமாள் அரக்கர்களுடன் போர் புரிந்தார்; அவர்களைச் சரணடையச் செய்தார்.

'பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். தங்களைப் போல் பலரும் இந்தப் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.

"எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களைத் தரிசிப்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி முக்தி அளிக்க வேண்டும்." 

அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது[https://www.facebook.com/542657935767949/posts/2291620617538330/]

                                          *  *  *

கீழ்க்காண்பது மனதைக் கலங்கடிக்கும் காணொலி!



செவ்வாய், 20 ஜூலை, 2021

'மாதர்'தம்மை இழிவு செய்யும் மா...'பாரதம்'!!!

'உலகில் பெண்களை நிரந்தர அடிமைகளாகக் கருதி, கொடுமைப் படுத்திப் பொல்லாங்கு செய்யும் ஆண்கள் நிறைந்த ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது' என்று தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய[3 ஆண்டுகளுக்கு முன்பு] ஆய்வின் மூலம்  தெரிய வந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகளின் பட்டியல்:

1.இந்தியா

2.ஆஃப்கானிஸ்தான்

3.சிரியா

4.சொமாலியா

5.சௌதி அரேபியா

6.பாகிஸ்தான்

7.காங்கோ குடியரசு

8.ஏமன்

9.நைஜீரியா

10.அமெரிக்கா

பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாம்.

***பெண் பிறப்புறுப்புச் சிதைவு, குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை போன்றவை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டு, கிடைத்த பதில்கள் மூலம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அறியப்பட்டுள்ளது.

***'பாலியல் ரீதியான வன்கொடுமை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளில் இந்தியாவில் உரிய நீதி கிடைப்பதில்லை' என்கிறது மேற்கண்ட ஆய்வு.

கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வதிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது கடும் அதிர்ச்சி தரும் தகவலாகும்.

***வீட்டில் கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம் செய்வித்தல், பாலியல் விசயத்தில் அடக்கி ஆளுவது என்றிவற்றிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு  அமெரிக்கா மட்டுமே என்கிறது 'தாம்ஸன் ராய்டர்ஸ்' நிறுவன ஆய்வு முடிவு.

ஆய்வு நிகழ்த்தி மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அதே நிறுவனம் இப்போது அதே வகையிலான ஆய்வை நிகழ்த்துமேயானால்.....

பெண்குலத்துக்கு அநீதி இழைப்பதில் இப்போதும்கூட இந்தியாவே முதலிடம் பெற்றுச் சாதனை புரியும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!

பெண்ணினம் போற்றும் புண்ணிய பாரதம் வாழ்க! வாழ்க வாழ்கவே!!

====================================================================================

https://www.bbc.com/tamil/india-44611857   

   

திங்கள், 19 ஜூலை, 2021

அமெரிக்காவில் 'குரங்கு அம்மை'! பிற நாடுகளுக்குத் தாவுமா?!


கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே உலகை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தொற்றுதான். உலகில் எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. 

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளால்கூட இதன் கோரப் பிடியிலிருந்து விடுபட இயலவில்லை. சொல்லப்போனால் உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காதான் அதிக மக்களை இழந்துள்ளது. 

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு, அரிய வகையான குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அம்மை நோய்க்கு உள்ளானவர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நைஜீரியா நாட்டில் இருந்து நாடு திரும்பினாராம். அவர் தற்போது டல்லாஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். 

அந்த நபர் வந்த விமானத்தில் பயணித்த நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணிகளில் அமெரிக்கத் 'தொற்று நோய்க் கட்டுப்பாடு அமைப்பு' ஈடுபட்டுள்ளது. 

அவர் இரண்டு விமானங்களில் பயணித்துள்ளார். முதலில் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து அட்லாண்டாவுக்குக் கடந்த ஜூலை 8ஆம் தேதி பயணித்துள்ளார். அதன்பிறகு அதே தேதியில் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸுக்குச் சென்றுள்ளார். உடன் பயணித்தவர்கள் குறித்தத் தரவுகளைத் தொற்று நோய்க் கட்டுப்பாடு அமைப்பு சேகரித்து வருகிறது. 

இதுவரை, இந்த ஒருவருக்கு மட்டுமே குரங்கு அம்மைப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2003ஆம் ஆண்டு 47 பேருக்குக் குரங்கு அம்மைப் பாதிப்பு ஏற்பட்டதாம். அப்போது அமெரிக்காவின் மேற்கு மாகாணத்தில் நாய்கள் மூலம் இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. 

குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான தொற்று நோய் என்பதோடு, தீவிரமாகப் பாதிக்கக்கூடிய 'தீநுண் கிருமி' [வைரஸ்] ஆகும். 

எலிகளுக்குள்ளேதான் இந்த வைரஸ் உயிர் வாழுமாம். ஆனால், சில சமயங்களில் இது மனிதர்களுக்கும்கூட பரவும் ஆபத்து உள்ளது. 

குரங்கு அம்மை வைரஸும் பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். பெரும்பாலான மற்ற வைரஸ்களைப் போலவே இந்த வைரசும் முக்கியமாகச் சுவாசத் துகள்கள் மூலமே பரவுகிறது. அந்தச் சுவாசத் துகள்கள் கண்கள், வாய், மூக்கின் வழியே உடலில் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதேபோல ஒரு நபரின் உடலில் காயங்கள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம்கூட குரங்கு அம்மை பரவும் அபாயம் உள்ளது. அதேபோல, துணிகள் மூலமும் ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடியது. 

'முகக் கவசம் அணிவதன் மூலம், இது பரவுவதைத் தடுத்திட முடியும் என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

====================================================================================

https://tamil.oneindia.com/news/washington/us-reports-monkeypox-case-in-texas-resident-in-nearly-20-years/articlecontent-pf572788-427332.html  [July 17, 2021, 19:24 [IST] ]


ஞாயிறு, 18 ஜூலை, 2021

'ஆனந்த அலை'யில் ஜக்கி வாசுதேவ்!!!

   'சிறப்புப் பகுதிகள்: சத்குருவின் ஆனந்த அலை' என்னும் பிரிவில் ஜக்கி வாசுதேவின் உபதேசங்களை வெளியிட்டுவருகிறது 'தினமலர்' நாளிதழ். 

பக்தர் ஒருவரின் கேள்வியும், அதற்கான ஜக்கி வாசுதேவ் பதிலுரையின் தொடக்கமும், அதற்கான 'கருத்துரை'களும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#தலைப்பு:
'ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?'
[செப் 03, 2020  09:48 |]  கருத்துகள் (11)

கேள்வி: சத்குரு, நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன். இப்பாதையில் இருந்துகொண்டே, உணவு, தூக்கம், உடலுறவு போன்ற என் உடற்தேவைகளை, ஆசைகளை நான் நிறைவேற்றிக் கொள்ளலாமா?

ஜக்கி[சத்குரு]: //நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு ஆசை, அதாவது உடலுறவைப் பற்றிப் பார்க்கலாம்.

உடலுறவு என்பதை உண்மை நிலையில் இருந்து அலசிப் பார்ப்போம். உங்கள் ஆசை உடலுறவு கொள்வது பற்றியதல்ல. இதில் முதல் விஷயம், உங்கள் ஹார்மோன்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை அடக்கியாள்வது. இரண்டாவது விஷயம், உடலுறவில் இருக்கும் இன்பம். மூன்றாவது விஷயம், உடலுறவின் மூலம், யாரோ ஒருவரோடு, ஒன்றிவிடும் உங்கள் முயற்சி. ஆனால் நீங்கள் எப்படி முயன்றாலும் உடலுறவு இவ்வகையில் வேலை செய்வதில்லை[?].....//

இவ்வாறான விளக்கம் தொடர்கிறது. விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் வாசிக்கலாம். வாசிக்காமலே,  தொடர்ந்துவரும் 'கருத்துரை'களின் மூலமே பதிலின் தரத்தை அறிந்துகொள்ளலாம்[பிழைகள் திருத்தப்படவில்லை].
                                            
                                                 *  *  *

வாசகர் கருத்து (11) [10 மட்டுமே இடம்பெற்றுள்ளது]
1. Ocean - Kadappa,இந்தியா
08-செப்-202016:11:43 IST Report Abuse
இவரது கட்டுரையின் கருத்துக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழ வழா கொழ கொழா.

2. திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா10-செப்-202009:52:48 IST Report Abuse
புரிவதற்கான பக்குவம் வரட்டும்...

3. Malick Raja - Jeddah,சவுதி அரேபியா
06-செப்-202013:59:12 IST Report Abuse
தினமலர் உண்மையான ..துணிச்சலான ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவாய்ப்பில்லை .. அப்படியே இவருடைய வாழ்க்கை வரலாறையும் வெளியிட்டால் தினமலருக்கு மேலும் சிறப்பாக இருக்கும்.

4. 07.Girija - Chennai,இந்தியா
06-செப்-202005:46:06 IST Report Abuse
மோடி மஸ்தான் கீறி பாம்பு சண்டை விடப்போறேன் என்று இழுப்பது போல் பொம்மை மொம்மை என்று இழுவை பதில். ஒன்றும் புரியவில்லை. கமல்ஹாசனின் பேச்சு போல் ஒரே குழப்பம். தெளிவான பதிலை நான் சொல்கிறேன் , பிறன் மனை நோக்காமல், அபகரிக்காமல், மனைவியுடன் இல்லறத்தில் இருந்து இறை பணியாற்றுவதே சிறப்பு . புராணங்களில் வரும் அடியார்கள் கதைகளில் அவர்கள் மனைவியுடன் இறை பணியாற்றும்போதே இறைவன் அவர்கள் முன் தோன்றி அருளினார். விரதம் புண்ணிய தினங்கள் போன்ற நாட்கள் ஆடி மாதம் போன்ற காலங்களை தவிர்த்து , இறைவழிபாடுகள் செய்து இல்லறத்தில் இருப்பதே உண்மையான ஆன்மிகம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்து தான் வளர்கின்றனர், பாசம் நேசம் பக்தி என்பதை நீங்கள் எவ்வளவு சொன்னாலும், கண்ணால் பார்ப்பதைத்தான் குழந்தைகள் பின்பற்றுவர். அதனால் மனதில் கள்ளம் இல்லை என்றால் இது போன்ற சந்தேகங்கள் வராது.

5. PR Makudeswaran - Madras,இந்தியா
05-செப்-202010:56:23 IST Report Abuse
எல்லாம் உண்மைதான். ஊருக்கு உபதேசம் தானே நம்மை , நாம் செய்தவற்றை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தால் இது எல்லாம் சொல்லத் தோன்றுமா என்பது புரியவில்லையே.

6. Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
04-செப்-202023:23:20 IST Report Abuse
சிறந்த விளக்கம்

7. Girija - Chennai,இந்தியா06-செப்-202005:22:11 IST Report Abuse
உங்களுக்கு புரிஞ்சுடுச்சா ? நீங்க ரெண்டுபேரும் தான் ஆன்மீகவாதிகள்....

8. Murthy - Bangalore,இந்தியா
04-செப்-202018:25:22 IST Report Abuse
எப்படி நிலத்தையம் மலையையும் ஆட்டையப்போடுவது என்று விளக்குங்கள்?

9. Lion Drsekar - Chennai ,இந்தியா
04-செப்-202017:20:33 IST Report Abuse
மன்னிக்கவும் புனித நாட்களில்கூட காலில் செருப்பு அணிந்து மருமகன் பாடலுக்கு நாட்டியம் நாம் ஆட முடியுமா? காலத்தின் கோலம், சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள், எந்த தவறு செய்தாலும் கூட்டம் சேர்ந்துவிட்டால் எல்லாமே புனிதமாகிறது, வந்தே மாதரம்.

10. Sampath Kumar - Chennai,இந்தியா
 தவிர்த்தால்தான் ஆன்மிகம் இல்லாட்டி லவுகீகம் இல்லையா சாமி

***இந்தப் போலி ஆன்மிகவாதியின், கொஞ்சமும் புரியாத ஆன்மிக உரைகள் குறித்து, 18 பதிவுகள் எழுதியுள்ளேன். இன்னும் நிறையவே எழுதலாம். வாசிப்போர் விரும்புவார்களா, மனம் சலிப்பார்களா என்பதைக் கணிக்க இயலாததால் அதைத் தவிர்த்தேன்.

மேற்காணும் கருத்துரைகளை இங்குப் பதிவு செய்ததன் நோக்கம், 'புரியாத வகையில் எதையெதையோ இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்' என்று நான் வலியுறுத்திவருவதை, வாசகரும் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே.

இப்படி, புரியாதனவற்றையே எழுதி எழுதி உலக அளவில் இவரால் எப்படிப் பிரபலம் ஆக முடிந்தது என்பது பற்றிச் சிந்தித்தால் சரியான விடை ஏதும் கிடைத்திடவில்லை.

மிஞ்சுபவை.....

"இவரென்ன மந்திரவாதியா? மாயாஜாலம் புரிபவரா?" என்னும் கேள்விகள் மட்டுமே!
============================================================================== 
 

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆண்களுக்குத் 'தாடி' அழகு மட்டுமல்ல.....

"தாடி வளர்ப்பது அறிவாற்றலையும் தன்னம்பிக்கையையும் மேம்படுத்துகிறது[நன்மை 01]."

"நன்றாக 'முகமழிப்பு'ச் செய்து அதை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களைவிடத் தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாகக் 'குயின்ஸ்லாந்து'ப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது[நன்மை 02]."

"முகத்தை(கன்னம், தாடை, கழு த்து) வெப்பம் மிகுந்த சூரியக் கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது[நன்மை 03].

"வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்குத் தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்கும்[நன்மை 04].

"'டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களைக் கவர்ச்சிகரமான நபர்களாக 60%  பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களைத் தங்களின் சிறந்த பார்ட்னராகத் தேர்வு செய்தார்கள்[நன்மை 05]."

"நம்மைத் தாக்கும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் முடி வேர்களில்கூட தங்கள் குடியிருப்பை உருவாக்குகின்றன. இது தோலில் கரும்புள்ளிகள் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது. முகத்தில் தாடி வளர்த்தால், பாக்டீரியாக்களை அது அழித்து விடுகிறது"[நன்மை 06].

***இப்படியெல்லாம், அந்த ஆய்வு சொல்லுது, இந்த ஆய்வு சொல்லுதுன்னு ஆளாளுக்கு அடிச்சிவிட்டுடறாங்க. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? 

நீங்களெல்லாம் எப்படியோ, நான் நம்பினதே இல்லைங்க. இத்தனை ஆண்டுகளாக இல்லாம இப்போ தாடி வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். 'பிரதமர் மோடிஜி' அளவுக்கு அது வளர்ந்த பிறகு  இதெல்லாம் உண்மையா, இல்லையான்னு[குறிப்பாக நன்மை: 02] ஒரு பதிவு போடுறேன். தவறாம படிங்க!

'குயின்ஸ்லாந்து' பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்விலும், ஆண்களின் கவர்ச்சியைப் பற்றி 8,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் கேட்டபோது, முழுத் தாடி வளர்க்கும் ஆண்களே அதிகக் கவர்ச்சியாக இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம். 

***நம் ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தினால் வெறும் 08 பெண்கள்கூடக் கருத்துச் சொல்ல மாட்டார்கள்; எல்லாம் பயந்தாங்கொள்ளிகள்!

***எது எப்படியோ, நான் 'தாடி' வளர்க்க ஆரம்பிச்சுட்டேன். இந்நாள்வரை தாடி வளர்க்காம இருந்தால் நீங்களும் ஆரம்பிக்கலாமே!

====================================================================================

உதவி:  https://zeenews.india.com/tamil,  - tamil.samayam.com


புதன், 14 ஜூலை, 2021

"தமிழர்கள் மீது கை வைத்தால்.!?['நாம் தமிழர்' களஞ்சியம் அவர்களின் 'கலக்கல்' பேட்டி!!!

இன்று[14.07.2021, பிற்பகல்] வெளியான 'காணொலி' இது. 'களஞ்சியம்' அவர்களின் இந்தப் பேட்டி, இன்றையத் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இதனைப் பதிவு செய்ததன் நோக்கம் தமிழர் நலமும், இந்திய நாட்டின் ஒருமைப்பாடும் பேணிக் காக்கப்பட வேண்டியவை என்பதை நம்மவர்கள் அறிந்துணர்தல் மிக அவசியம் என்பதுதான்.

                               நன்றி: 'ழகரம்'
                                               
                                                    *  *  *

காலியிடத்தை நிரப்ப.....



'தாய்ப் பாசம்'... தெரியும். 'தந்தைப் பாசம்'?

'பாசம்' என்றவுடன் 'தாய்ப் பாசம்'தான் நம் நினைவுக்கு வருகிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வதில் தந்தையின் பங்கு பெரிதென்றாலும், பாசத்தைப் பொழிவதில் 'தாய்க்கு நிகர் தாய்தான்' என்பதே உலகோரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

"இல்லையில்லை, தாயை மிஞ்சும் 'பாசக்காரத் தந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறது... நம்மையும் சொல்ல வைக்கிறது 'சீனா'வின் 'ஷாண்டோங்' மாகாணத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு.

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 'ஜின்ஷேன்' என்ற 2 வயதுச் சிறுவனைக் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றார்கள். காவல்துறையின் உதவியை நாடினார் அவனின் தந்தை  'குவோ கேங்டாங்'. பலனில்லை.

மகனை எங்கெங்கெல்லாமோ தேடி அலைந்தார் அவர்; அலைந்தார்; அலைந்துகொண்டே இருந்தார்.

ஒரு மாதம் அல்ல; ஓராண்டு அல்ல; 24 ஆண்டுகள் தேடினார்.

தன் வாழ்க்கை முடிவதற்குள் எப்படியாவது தன்னுடைய மகனைக் கண்டு பிடித்துவிடவேண்டும் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன், சிறுவனின் புகைப்படம் பொறித்த கொடியுடன் 24 ஆண்டுகள் 'பைக்'கில் கிட்டத்தட்ட 5 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்தார் குவோ. 

ஒன்றன்பின் ஒன்றாக அவர் பயன்படுத்திய ''பைக்'குகளின் எண்ணிக்கை10. பலமுறை ஏற்பட்ட விபத்துகளால் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. நம்பிக்கை இழக்காமல், சீனாவில் காணாமல் போனவர்களைத் தேடும் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு தேடினார். பலன் கிடைத்ததா?

கிடைத்தது.

சீனப் பாதுகாப்பு நலவாரியத்தின் உதவியுடன், டி.என்.ஏ சோதனை வாயிலாகத் தன் மகன் மத்தியச் சீனாவில் இருப்பதைக் கண்டுபிடித்தார். 

குவோ தன் மகன் ஜின்ஷேனைக் கட்டியணைத்து அழும் காணொலிகள் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. 


பலரும் அவரை வாழ்த்தியவாறு இருக்கிறார்களாம். 

நாமும் வாழ்த்துகிறோம்.

"பாசம் மிகு தந்தையே,

உங்களின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மனதாரப் பாராட்டுகிறோம். அளவிட முடியாத உங்களின் பிள்ளைப் பாசத்தைப் போற்றி மகிழ்கிறோம்."

===================================================================================

நன்றி: 'புதிய தலைமுறை'

https://www.puthiyathalaimurai.com/newsview/109457/Chinese-man-found-his-abducted-son-after-24-years   13,Jul 2021 09:28 PM


செவ்வாய், 13 ஜூலை, 2021

'பெஸ்ட்'ராமசாமியா, 'வொர்ஸ்ட்'[Worst] ஆசாமியா?!?!


இந்தியாவிலுள்ள[ஒன்றிய அரசு?] எந்தவொரு மாநில மக்களின் இன உணர்வும் உரிமைகளும் பாதிக்கப்படாத வகையில், இந்தியராக வாழ்வதே இந்நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பானதும் நன்மை பயப்பதும் ஆகும்[இது குறித்துப் பல அரசியல் அறிஞர்களும் விரிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்]. 

இதுவே இங்குள்ள மிகப் பெரும்பான்மையான கட்சித் தலைவர்களின் எண்ணமும் ஆகும். இவ்வகையான தலைவர்களில் மு.க. ஸ்டாலின் அவர்களும் ஒருவரே என்பது நம் நம்பிக்கை.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே சீரான வளர்ச்சியை/வசதிகளைப் பெற்றிடப் பாடுபடுவதே தம் இலட்சியம் என்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பதவியேற்ற பின்னரான மிகக் குறைந்த கால இடைவெளியில், அந்த இலட்சியத்தை நிறைவேற்றிடும் வகையில் முனைப்புடன் செயல்படுகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகையதொரு நல்ல வரவேற்கத்தக்க சூழ்நிலையில், தமிழ்நாடு பிரிக்கப்படுதல் வேண்டும் என்னும் கோரிக்கை எழுப்பப்பட்டது. பிரச்சினைகள் ஏதுமின்றிச் சிறப்பானதொரு நிர்வாகம் இங்கே அமைந்திருக்கும் நிலையில் 'கொங்கு நாடு மாநிலம்' தேவையில்லை என்பதும் உணரப்பட்டது. கொங்கு மாநிலப் பிரிவினை முழக்கம் படிப்படியாகத் தணியத் தொடங்கியது.

நாட்டை ஆளும் 'பாஜக' தலைமையும்கூட 'பிரிக்கும் திட்டம்' ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. 

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த 'பெஸ்ட்'ராமசாமி என்னும் ஒரு தொழிலதிபர் 'பிரிப்பு' முழக்கத்தைப் புதுப்பித்திருக்கிறார். 

'1976இல் இருந்து ஒரு அமைப்பை நடத்தி வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். கொங்குநாடு என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல. கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது. தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம்' என்பது அவர் வழங்கியுள்ள ஊடகச் செய்தி.

'கொங்குநாடு' என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல என்பது மற்ற சமுதாயத்தவருக்குத் தெரியும். அது பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்ட ஜாதி என்பதும் தெரியும். அப்புறம் எதற்கு ஜாதியைக் குறிப்பிட்டுப் பேசினார் என்பது புரியவில்லை.

'கொங்கு மாநிலக் கோரிக்கை ஏற்கப்பட்டு, அது உருவாக்கப்படுவதற்கான அறிவிப்பை நடுவணரசு வெளியிட்டால்தான் அதை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவரும்.

கோவையில் தொடங்கி, கிருஷ்ணகிரி & தர்மபுரி வரையிலான பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய மண்டலத்தை மாநிலமாக்கி, அதற்குக் 'கொங்கு மாநிலம்' என்று பெயரிட்டால் அதை முதலில் எதிர்ப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், 'வன்னியர் பெல்ட்' என்று சொல்லப்படும் கணிசமான பகுதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன[மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மைக் காலங்களில் எழுப்பிடவில்லை என்பது அறியத்தக்கது].

தெலுங்கர்கள் இத்தனை லட்சம் பேர்[வீட்டில் தெலுங்கு பேசும் அனைத்துச் சாதியாரையும் கணக்கிட்டு..., முன்பு ஒருவர் முயன்று தோல்வி கண்டார்] இருக்கிறோம் என்று சொல்லித் 'தெலுங்கு மாநிலம்' என்று பெயர் சூட்டச் சிலர் கோரிக்கை வைக்கக்கூடும். வீட்டில் தெலுங்கு பேசினாலும்[அதுவும் வெகுவாகக் குறைந்துவிட்டது] தாமும் தமிழர் என்றே எண்ணித் தமிழினத்துக்காகப் பாடுபடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர்['வைகோ' போதும்] என்பதை மறந்துவிட்டு மனம்போன போக்கில் பேசுதல் கூடாது.

'கொங்கு மாநிலம் அனைத்துச் சமுதாயத்தினருக்குமானது'[சமுதாயம் என்னும் மேல்பூச்சு தேவையில்லை; ஜாதி என்றே சொல்லலாம்] என்று பெஸ்ட் ராமசாமி அவர்கள் சொன்னாலும், பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்த அவரின் உள்நோக்கம்[கொங்கு மாநில முதல்வர் ஆவது] மற்ற ஜாதியாருக்குப் புரியாமல் போகாது.

"ஜாதிகள் எல்லாமே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. 'தமிழ்ச்சமுதாயம்' என்பது பேசும் மொழியின் அடிப்படையில் இயற்கையாக உருவானது. அந்த அமைப்பைத் தங்களின் சுயநலத்திற்காகச் சிதறடிக்க வேண்டாம்" என்பது 'பெஸ்ட்'ராமசாமி உட்படக் கொங்கு நாடு மாநிலக் கோரிக்கையை முன்னெடுக்கும் அனைவருக்கும் பணிவுடன் நாம் முன்வைக்கும் கோரிக்கை ஆகும். 

சிறுபான்மை ஜாதியார்கள் தமிழ்நாட்டின் முதல்வர்களாக ஆட்சிபுரிந்தது அனைவருக்கும் தெரியும். அவர்களின் பொதுநல நோக்கும் உழைப்பும்தான் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்தது.

பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு அந்த ஆசை இருந்தால், தன் தன்னலமற்றச் செயல்பாடுகளால் தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வராக ஆகலாம். அதற்குக் கொங்கு மாநிலம்தான் வழிவகுக்கும் என்ற தவறான கணிப்பு வேண்டாம்.

 நன்றி!