சனி, 2 மே, 2015

ஊடலும் கூடலும்![குறுங்கதை] - இது ‘புதுசா கட்டிகிட்ட’ ஜோடிகளுக்கு மட்டும்!

ன்னைத் கட்டியணைக்க வந்த  வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையைத் தீண்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.
“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” என்றான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.”

வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

 அவன் மருண்டான்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரியை எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கி வீசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி நல்லவங்க...கோழைங்கன்னு வெச்சிக்கோ, ‘அந்தச் சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் ஏதோ ஒருவித சுகம்.....

.....நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு எழுதி வெச்சேன். நீ  படிக்கல.....இந்த டைரியை எரிச்சிருக்கணும்.  நான் ஒரு அடிமடையன். அதையும் செய்யல.....

.....என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே?”

சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா புரண்டு படுத்தாள்; அவனுடன் இணைந்தாள்; இழைந்தாள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக