ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெங்காயக் கிரகங்கள்!!!

ஜோதிடப் புரட்டுகள் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாயினும் கருத்தமைவில் மிகமிகப் பெரியது. தவறாமல் வாசியுங்கள்.

வானியல் குறித்த அறிவியல் வெகுவாக வளர்ந்துள்ள நிலையில்.....

ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்கிவிடுவதால் சந்திரன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், அதுவே சந்திர கிரகணம் என்று இன்றளவும் புளுகிக்கொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, சந்திரன் மீது சூரிய ஒளி  படுவதில்லை. சந்திரன் மீது இருள் படிவதால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.  இவ்வுண்மை, குறைந்தபட்ச அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும்.

மற்றபடி, சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றுக்குமான இடைவெளிகளிலோ, வேறு இடங்களிலோ பாம்பு பூரான் என்று எந்தவொரு ஜந்துவும் சுற்றிக்கொண்டிருக்கவில்லை.

ராகு கேது என்ற பெயரில் கோள்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர் அறிவித்த பின்னரும், அவை மற்ற கிரஹங்களைப்[கோள்கள்] போல் கண்களால் கண்டறியத் தக்கன அல்ல; அவை நிழல் உருவம் கொண்டவை என்று ஜோதிடர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல், வானவெளியில் நிழல் வடிவக் கோள்கள் ஏதும் இல்லை என்கிறது இன்றைய அறிவியல்[ஆதார நூல்: 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், மேற்கு மாம்பலம், சென்னை].

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து 'ராகுகேது'க்களை இணைத்தே பலன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்[பெரியார் அடிக்கடி பயன்படுத்திய 'வெங்காயம்'தான் நினைவுக்கு வருகிறது].

ஜோதிடர்கள் பொய் சொல்கிறார்கள்; சொல்லிவிட்டுப் போகட்டும். அலையலையாய் இன்றளவும் அவர்களைத் தேடிச் செல்கிற கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?!
------------------------------------------------------------------------------------------------------------------