செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

காசு கொடுத்துக் 'கண்ணீர் அஞ்சலி' செலுத்துவோர் கவனத்திற்கு.....

‘வருந்துகிறோம்’ என்று தலைப்பிட்டு, புகைப்படம் இணைத்து, உயிர் நீத்தவருக்காக நாளிதழ்களில் ‘இரங்கல்’ தெரிவிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், ‘நினைவஞ்சலி’ செலுத்துவோர் எண்ணிக்கை இதனினும் அதிகம்.
பாடையில் பிணம் க்கான பட முடிவு
கடந்த வாரம் ஒரு முன்னணி நாளிதழில் வெளியான, செத்துப்போனவர்களுக்கு 'அஞ்சலி' செலுத்துதல் தொடர்பான விளம்பரங்கள்:

இறைவனடி சேர்ந்தவர்கள்[எண்ணிக்கை சற்றே முன்பின் இருக்கலாம்]-40

இயற்கை எய்தியவர்கள்----------------------------------------------------------------------25

காலமானவர்கள்----------------------------------------------------------------------------------14

வைகுண்ட பதவி எய்தியவர்கள்----------------------------------------------------------10

மறைந்தவர்கள்------------------------------------------------------------------------------------09

சிவலோக பதவி கிட்டியவர்கள்------------------------------------------------------------07

விண்ணுலகம் சென்றவர்கள்---------------------------------------------------------------03

கர்த்தருள் நித்திரை அடைந்தவர்கள்--------------------------------------------------03

மரணமடைந்தவர்கள்-------------------------------------------------------------------------01

sad passing away-------------------------------------------------------------------------------------02

நினைவஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்-----------------------------------------------  97
நினைவஞ்சலி செலுத்துகிறவர்கள், பெரும்பாலும், “மீளாத் துயரில் எங்களை ஆழ்த்திவிட்டுச் சென்ற தெய்வமே” என்று நெக்குருகுவது நம்மையும் துன்பத்துள் ஆழ்த்துகிறது என்பது உண்மை.

பெரிதும் நேசிக்கப்பட்டவர்களைப் பிரிய நேரும்போது, சொந்த பந்தங்கள் துயரப்படுவதும், காலமெல்லாம் அவரை நினைந்து உருகுவதும் மனித இயற்கை. ஆனால்...........
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் ‘கைபேசி’ இருக்கிறது. சாவு நிகழ்ந்த சிறிது நேரத்தில் உரியவர்களுக்குத் தகவல் அனுப்பிவிட முடிகிறது. அவ்வாறிருக்கையில், ஆயிரக் கணக்கில் செலவு செய்து பத்திரிகைகள் வாயிலாகப் துக்கச் செய்தியைப் பகிரங்கப்படுத்துவது தேவையா?

பணம் படைத்தவர்கள், அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரம் தருகிறார்கள். நடுத்தரங்கள் கால் பக்கம், அரைக்கால் பக்கங்களில் திருப்தி அடைகிறார்கள். பற்றாக்குறை பட்ஜெட் போடுபவர்கள்கூடக் கடன்பட்டாவது ‘பத்தி’ விளம்பரங்கள் தருகிறார்கள்.

இதனால் பத்திரிகைக்காரனுக்குப் பணம் சேர்கிறது. இவர்களுக்கு.....?

எதுவுமில்லை.

செலவிடும் சில ஆயிரங்களை இறந்தவரின் நினைவாக ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ பிற தொண்டு நிறுவனங்களுக்கோ வழங்கலாம். புண்ணியம் சேர்கிறதோ இல்லையோ நல்லது செய்வதால் மனதில் மகிழ்ச்சி நிரம்பும். 
இவர்களின் வீண் பகட்டும் போலி கௌரவமும் இதைச் செய்ய விடாது.

ஏ...ஏ...ஏ...ஆடம்பரப் பிரியர்களே..................

செத்துப்போன உங்களவர், சாவதற்கு முன்பே, “நான் செத்தவுடன் தவறாம பத்திரிகையில் விளம்பரம் கொடு”ன்னு சொல்லிவிட்டுப் போனாரா?

விளம்பரம் கொடுக்காவிட்டால், கோபித்துக்கொண்டு, “நான் இறைவனடி சேர மாட்டேன்; சிவலோக பதவியை ஏற்க மாட்டேன்; வைகுண்டம் புக மாட்டேன்; கடவுளுடன் ஐக்கியமாகி அவருடன் நித்திரை கொள்ள மாட்டேன்” என்று சொல்லி, தனியொரு ஆன்மாவாகப் பிரபஞ்ச வெளியில் ஒரு பித்தனைப் போல் எப்போதும் அலைந்து திரிந்துகொண்டிருப்பாரா?
திரியட்டுமே.

இறைவனுடன் ஐக்கியமாகி இவர் சாதிக்கப் போவது என்ன?

அவனுடன் சேர்ந்து, அவன் படைத்த அனைத்து உலகங்களிலும் உள்ள உயிர்களையும் பிறவற்றையும் பரிபாலனம் செய்யப் போகிறாரா?

அனைத்து உயிர்களும் துன்பங்கள் நீங்கி எப்போதும் இன்பமாக வாழும் வகையில் புதிய உலகம் சமைக்கப் போகிறாரா?

இனி எதிர்வரும் யுக யுக யுக யுக யுக யுகாந்தரம் முழுக்க அவன் திருவடிகளைத் தழுவிக் கிடந்து பரமானந்தத்தில் மூழ்கிவிடப் போகிறாரா?
இந்த உலகிலேயே இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் முடிந்தவரை பிறருக்கு உதவியிருக்க முடியும். இறைவனடி சேர்ந்து என்ன சாதிக்கப் போகிறார்?

செத்துப் போகிறவரை, ‘காலமானார்’ என்று சொல்வதோடு நிறுத்தாமல், சிவலோகத்திலும் வைகுண்டத்திலும் சுவர்க்கத்திலும் அவரைத் திணிக்க ஆசைப்படுகிறீர்கள்; உங்கள் ஆசையைப் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்திப் பெருமிதப்பட நினைக்கிறீர்கள்.

இது நியாயமா? சிந்தியுங்கள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx