வெள்ளி, 21 ஜூன், 2019

உலக மகா.....புருடா மன்னர்கள்![சுட்டது]

தற்செயலாக, நேற்று[14.02.2018] 'கலைமகள்'[பிப்ரவரி,2018]' மாத இதழை வாசிக்க நேர்ந்தது. 'தாமிரவருணி கேள்வி-பதில்' பகுதியில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. வாசியுங்கள்.....


நம் முன்னோர்கள் எழுதி வைத்தது நாடி ஜோதிடமாம். சரி.

பிற்கால மனிதர்கள் பற்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். 'பிற்காலம்' என்பதற்கு வரையறை என்ன? அத்தப் பிற்காலம் எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? அவை கோடானுகோடி ஆண்டுகளா? கோடானுகோடி யுகங்களா?

நிலவுலகம் உள்ளவரை பிறந்து வாழ்ந்து மடிகிற அத்தனை மனிதர்களைப் பற்றியும்[ஆயுள், மனைவி, வாரிசுகள், சாதனைகள், வேதனைகள் என்றிப்படி] எழுதி வைத்திருக்கிறார்களா?

பிற்கால மனிதர்களுக்கு என்று 'பொத்தாம் பொதுவா' அடித்துவிட்டு, வாழ்ந்துகொண்டிருகிற அத்தனை பேர்களையும் மூடர்கள் ஆக்குகிறார்கள்.

வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி பிறந்து வாழவிருக்கிற அவ்வளவு பேருக்கும் சுவடிகள் உள்ளனவென்றால், அவற்றின் எண்ணிக்கை என்ன? அவை யாரிடமெல்லாம் உள்ளன? எங்கெல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன?

இந்த விவரங்கள் எல்லாம், அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளுக்காவது தெரியுமா?

'பிரபஞ்சம் முழுமைக்கும்' என்கிறார்கள். எந்தவித அளவுகோல்களால் யாரெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் பரப்பைக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு பட்டியல் தருவார்களா?

இவர்கள் அள்ளி இறைக்கும் புளுகுகளுக்கு அளவே இல்லையே!!!

இவர்களின் இழி செயலைத் தட்டிக் கேட்பார் எவருமில்லையா?

ஆன்மிக வேடம் புனைந்து பொய் சொல்லி, மக்களை மூடர்கள் ஆக்கிப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க அரசியல் சட்டத்தில் இடமேதும் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக