வியாழன், 9 நவம்பர், 2023

பெரியாரின் அருமை புரியாத உளறுவாயன்[ர்?] அண்ணாமலை!!!

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி. அதனால், கடவுளை யாரும் நம்பாதீர்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஒரு கம்பத்தை நட்டுக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்தக் கம்பத்தை அப்புறப்படுத்தி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும்.....[https://youturn.in/articles/srirangam-temple-periyar-statue-annamalai.html].

இப்படி அண்ணாமலை[பாஜக] ‘சூசகமாக’ப் பேசியிருப்பதால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்பது உறுதியாகிறது -https://tamil.news18.com.

Once BJP comes to power, we will remove Periyar statue in Srirangam: Annamalai sgb

சூசகமாகவோ வெளிப்படையாகவோ[ஊடகச் செய்தி] அண்ணாமலை வெளியிட்ட இந்தத் தகவல் மூலம், பெரியார் சிலை அகற்றப்படுதல் வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பது தெரிகிறது.


ஆனால், தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆட்சியைப் பிடிக்கும்வரை அவர் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் நமக்குள் எழும் இமாலயக் கேள்வி.


பெரியார் சிலையைப் பிடுங்கி எறிந்தால், தமிழ்நாடு அரசு தன்னைச் சிறையில் தள்ளுமோ என்று அவர் அஞ்சத் தேவையில்லை. 


சிறை செய்தால், ஆயிரக்கணக்கில் நூல்கள் படித்த இந்த அறிஞரேறு, ஆன்மிகக் களிறு அண்ணாமலையை அவமதித்த குற்றத்திற்காக ‘திமுக’ ஆட்சியை நடுவணரசு கலைத்துவிடும் என்பது உறுதி.


தமிழர்கள் கடும் போராட்டம் நடத்தித் தன் உயிருக்கே ஆபத்து விளைவிப்பார்களோ என்றெல்லாம் அவர் அஞ்சத் தேவையில்லை.


போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களை ஓட ஓட விரட்டியடித்து முதுகெலும்பை முறித்து, அடக்கி ஒடுக்குவதற்கு மோடியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது[தேவைப்பட்டால் விமான & கப்பல் படைகளையும் களத்தில் இறக்கலாம்].


எனவே, அண்ணாமலையார் அவர்கள் கிஞ்சித்தும் தன் நெஞ்சத்தில் அச்சத்திற்கு இடம் தராமல் ‘பெரியார் சிலையை அடியோடு பெயர்த்தெடுத்து உடைத்து நொறுக்கும்[பெரியார் விநாயகர் சிலையை உடைத்தது போல]  வேலையை உடனடியாகத் தொடங்குதல் வேண்டும்.


“பெரியார் இருந்திராவிட்டால், அவரின் முக்கியச் சீடர்களில் ஒருவரான கலைஞர் ஆட்சியில்  உன் சாதி பிற்பட்டோர் இனத்தில் சேர்க்கப்பட்டிராது. நீயும் படித்துப் பட்டதாரி ஆகி, காவல்துறை அதிகாரியாக ஆகியிருக்கமாட்டாய். மாறாக, கரூர் பக்கமுள்ள ஏதேனும் ஒரு வறண்ட மானாவாரி நிலத்தில் செம்மறியாடு[வெள்ளாடு மேய்க்கக் கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை] மேய்த்துக்கொண்டிருப்பாய்” என்றிப்படிச் சொல்லிச் சொல்லி அவரின் மன உறுதியைச் சிதைக்க நாத்திகவாதிகள் முற்படுவார்கள் என்பதால் அண்ணாமலையார் மிக எச்சரிக்கையாகச் செயல்படுதல் வேண்டும்.


ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கும் பெரியார் சிலையை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அவரின் அத்தனைச் சிலைகளையும் அவர் அடித்து உடைத்து நொறுக்குவாறாக! இதன் மூலம், தமிழ்நாட்டின் முதல்வர் ஆகவேண்டும் என்னும் அவர் கனவு விரைவில்  நனவாகும்!!


தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் அண்ணாமலையார் வாழ்க... வாழ்கவே!