ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ஈரோடு இடைத்தேர்தல்... கவுண்டர் ஓட்டு கவுண்டிச்சிக்கே!?!?!

கொங்குக் கவுண்டர்களே, கவுண்டிச்சிகளே,

உங்கள் சாதிக்காரர்கள் அத்தனைப் பேருமே உங்களின் சாதி மீது குறையாத பற்றுக்கொண்டவர்களே என்று நான் சொன்னால், நீங்கள் மறுப்புத் தெரிவிக்கமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஈரோட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழகத்திலுள்ள அத்தனைச் சாதிக்காரர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

சாதிப் பாகுபாடு கூடாது என்று மனப்பூர்வமாக நம்புவர்கள் பலர் இருந்தாலும்  அந்த உணர்விலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது அத்தனை எளிதல்ல.

பிற சாதிக்காரகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்போது தன் சாதிக்காரர்கள்[வாரிசுகள், சொந்தங்கள் உட்பட] பின்தங்கிவிடக் கூடாது என்று அஞ்சுவதே அதற்கான காரணம் ஆகும்.

இதன் விளைவு, கட்சி எதுவாயினும் அது தேர்தல் நடைபெறும்போது[இடைத் தேர்தலோ முழுத் தேர்தலோ] தன் சாதியாருக்கு அதிக அளவில் போட்டியிடும் வாய்ப்பை நல்கிட வேண்டும் என்றே ஒவ்வொரு சாதியாரும் எதிர்பார்க்கிறார்கள்; தத்தம் கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோளும் வைக்கிறார்கள்; வாய்ப்புத் தரும் கட்சியை ஆதரித்து வாக்களிக்கிறார்கள்.

இங்கே சாதிப் பற்று அரசியல் பற்றைப் பின்னுக்குத் தள்ளுகிறது.

அரசியல் பற்றை மட்டுமல்ல இனப்பற்றையும்கூட[தமிழன்] புறமுதுகிடச் செய்கிறது.

இங்கேதான் நம்மவர்கள் மிகப் பெரும் தவற்றைச் செய்கிறார்கள்.

சாதிப்பற்று மேலோங்கி இனப்பற்றுக் குறையுமேயானால்.....

ஆதிக்க வெறி கொண்ட இனத்தவரால், இந்த இனம் அடிமைப்படுத்தப்படும்; கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் படுகுழிக்குள் தள்ளிவிடப்படும்.

இனம் அழியுமேயானால், இனச் சார்புள்ள அனைத்துச் சாதிக்காரர்களுமே எதிரிகளின் அடிமைகள் ஆவார்கள்; அழிவை எதிர்கொள்வது சர்வ நிச்சயம்.

எனவே, அனைத்துத் தமிழ்ச் சாதியாரும் தம் இனத்துக்குப் பங்கம் நேரும் நிலை உருவாகும்போது, தங்களின் சாதிப் பற்றைக் கொஞ்சமே கொஞ்சம் தியாகம் செய்து, அனைவரும் இணைந்து ஆதிக்க வெறியரை எதிர்த்துப் போரிடுவது தவிர்க்கக்கூடாதது.

ஈரோடு இடைத்தேர்தலில், சங்கிகளின் முழு நேர அடிமை ஆகிவிட்ட சீமான் என்னும் தமிழினத் துரோகி, தானே தமிழினக் காப்பாளன் என்பதாக நாடகம் ஆடுகிறான்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிட.....

கொங்குக் கவுண்டர்களே, கவுண்டிச்சிகளே,

உங்கள் சாதிப் பெண்ணை வேட்பாளர் ஆக்கியிருக்கிறான்; ஈரோட்டில் நீங்களும் பெரும்பான்மையிரான சாதிக்காரர்கள் என்பதால் வெற்றி வெற்றுவிட முடியும் என்று நம்புகிறான்.

அந்த வெற்றியின் மூலம் பெரியாரைத் தொடர்ந்து இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், தமிழர்களின் இனப்பற்றைச் சிதைக்கவும்[சங்கிகளின் நீண்ட நாள் கனவு] முற்படுவான்[தன்னிகரற்ற ஒரு தலைவனாக ஆவதும் அவன் லட்சியம்].

ஆகவே,

உங்களின் சாதிக்காரியான சீதாலட்சுமிக்கு ஓட்டுப் போடுவதைத் தவிருங்கள்[அடுத்துவரும் தேர்தலில் நல்லதொரு கட்சியில் இணைந்து போட்டியிட்டால் வாக்களியுங்கள்]; சீமான் என்னும் வேடதாரிக்குப் பாடம் புகட்டுங்கள்.

உங்கள் ஊர் இடைத்தேர்தலில் வேறு எவருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். அது உங்களின் விருப்பம் சார்ந்தது.

                                    *   *   *   *   *