அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 28 ஜூலை, 2016

மாதவிடாய்க் குருதி தூய்மையற்றதா?

‘இப்படியொரு கேள்விக்கே இனி இடமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார் ம.சுசித்ரா, ‘எப்போது தீரும் மாதவிடாய்த் தீண்டாமை?’ என்னும் தலைப்பிலான தன் கட்டுரை[‘தி இந்து’, 24.07.2016]யில்.
‘மாதவிடாய் தூய்மையானது என்று நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி ரத்தமும் எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோய் தீர்க்கும் அருமருந்துகள். அவற்றைப் போலவே மாதவிடாய் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும்[stem cell] உயிர் காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், என்ன சொன்னாலும் மாதவிடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டா வெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்திற்குள்தான் இன்னும் சிக்கிக் கிடக்கிறார்கள்' என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் கட்டுரையாளர்.

 menstrual blood is impure? என்று கூகிளில் தட்டச்சு செய்ததில் ஏராள தகவல்கள் கிடைத்தன. அவை மேற்சொல்லப்பட்ட கருத்துகளுக்கு வலிமை சேர்க்கின்றன.  அவற்றில் மிகச் சில மட்டும் கீழே.

* menstrual blood is not dirty. its just like any other blood that you can find in your body, it is just darker because unlike the blood in your veins, it does not flow as easily. menstrual blood is also darker because it contains the lining of your uterus. ----www.epigee.org › Topics › Menstruation

* Now, news that stem cells found in menstrual blood — along with cells from babies’ umbilical cords — could potentially be incorporated into treatments for stroke, Alzheimer’s disease and Lou Gehrig’s disease, or amyotrophic lateral sclerosis, kind of puts a different spin on things. (More on Time.comUsing Stem Cells to Restore Sight)--healthland.time.com/.../stem-cells-from-menstrual-blood-stran.


Biologically menstrual fluid is a mixture of tissues and blood vessels and there is nothing impure about it, it
 does not contain a smell of its own, it gives foul smell only after it comes in contact with air outside the body.
----Menstrupedia


Tejinder BhatiaA Numismatist, An Artist , A Sapiosexual and Dream Chaser
1.7k View
Actually, you need to define , what do you
mean by impure blood? Because Menstruation is just
the periodic discharge of blood and mucosal tissue (the endometrium) from the uterus and vagina.
  Yea, Its full bacteria, if that's what you mean.

சனி, 23 ஜூலை, 2016

ஜென்மத்துக்கும் புரியாத சில ‘ஜென் கதை’கள்!

என்னை எச்சரித்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ரொம்பவே பயந்துட்டேன்!!!   இன்று, சுவையான  நான்கு ‘ஜென் கதை’கள்[சைவம்] மட்டும்.

=======================================================================

மிரட்டும் மின்னஞ்சல்....

#எச்சரிக்கை!

இன்பாக்ஸ்
x

பொறம்போக்கு !!!

முற்பகல் 9:14 (1 நிமிடத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
பகுத்தறிவுவாதின்னு சொல்லிட்டு ரொம்பத்தான் ஆட்டம் போடுறே. அடக்கி வாசி. இல்லேன்னா உதைபடுவே. அம்புட்டுதான்#
=================================================================
ஜென் கதைகள்:

கதை ஒன்று:

குரு: மரணப்படுக்கையில் உள்ள உனக்கு நான் உதவட்டுமா?
சீடன்: எனக்கு உங்களால் என்ன உதவி செய்துவிட முடியும்? நான் 
தனியாக வந்தேன். இப்போது தனியாகப் போகிறேன்.
குரு: வந்ததாகவும் போவதாகவும் நீ நினைத்தால் அது குழப்பம். அது 
மயக்கம். வருவதும் இல்லை; போவதும் இல்லை. இதுதான் உண்மை.

[எனக்கு மயக்கம் வந்தது. உங்களுக்கு?]

கதை இரண்டு:

“நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்; வெறுங்கையுடன் வந்திருக்கிறேன். என் மனம் அமைதியாக இருக்கிறது” என்று ஒருவர் குருவிடம் சொன்னார்.

“அப்படியா? சரி. அதை விட்டுவிடு” என்றார் குரு.

வந்தவருக்குத் திகைப்பு. 

“நான்தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டதாகச் சொன்னேனே சுவாமிஇனி எதை விட்டுவிடுவது?” என்றார் குருவைத் தேடி வந்தவர்.

“விட்டுவிட ஒன்றுமில்லையா? சரி. அப்படியானால் அதை வைத்துக்கொள்” என்றார் குரு.

[வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு?]

கதை மூன்று:

ஜென் ஞானம் பெற ஒருவர் குருவைத் தேடி வந்தார்.

குருவை வணங்கினார்; ஜென்னைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.

“ஜென்னைப் பற்றிச் சொல்வதானால்.....” என்று கூறி நிறுத்தினார் குரு.

வந்திருந்தவரிட்ம ஆர்வம் பெருகியது.

“எனக்கு ஒன்றுக்கு வருகிறது” என்று சொல்லி எழுந்து போய்விட்டார் குரு.

வந்தவருக்குத் திகைப்பு; காத்திருந்தார்.

குரு திரும்பி வந்தார். “ நான் யாராக இருந்தாலும் ஒன்றுக்குப் போய்த்தான் ஆகவேண்டும். அதுவும் நானேதான் செய்ய வேண்டும். எனக்காக நீ செய்ய முடியுமா என்ன?” என்றார் குரு.

வந்தவர் ஞானம் பெற்றார்.

[இது கொஞ்சம் தேவலாம். இருந்தாலும்,  எனக்கு ஞானம் பிறக்கவில்லை!]

கதை நான்கு:

குரு சீடர்களை அழைத்தார்.

“சென்ற வாரம் நான் சொன்னது நினைவிருக்கிறதா? இன்றுதான் நான் புறப்படும் நாள். சாகும்போது ஏதாவது நல்லது சொல்லிவிட்டுப் போக வேண்டும். நான் கவிஞன் அல்ல; எழுத்தாளனும் அல்ல. எனக்கு எழுதவே தெரியாது. யாராவது நான் சொல்வதை எழுதுகிறீர்களா?” என்றார்.

“எழுதுகிறேன் சுவாமி” என்றான் ஒரு சீடன்.

குரு சொன்னார்: “ஒளியிலிருந்து நான் வந்தேன்; இப்போது ஒளிக்கே திரும்புகிறேன்.”

“குருவே, ஒரு சொல் போதவில்லை” என்றான் சீடன்.

“ஆகா...”என்று சிங்கத்தைப் போல் கர்ஜித்தார் குரு.

அதுதான் அவரின் கடைசிச் சொல். அடுத்த கணம் சமாதி ஆகிவிட்டார்!
***************************************************************************************************************
கதைகள், புவியரசுவின் ‘மீண்டும் ஜென் கதைகள்’ தொகுப்பிலிருந்து சுட்டவை! அவரால் தரப்பட்ட தத்துவ விளக்கங்கள் நூலில் உள்ளன.





வெள்ளி, 22 ஜூலை, 2016

ரஜினியை வாழ்த்தி ஒரு கவிதை!!!!!


நன்றி: கூகிள்
இன்று[22.07.2016] காலையில், ‘கபாலி’ திரைப்படம் வெளியான பல்வேறு திரையரங்குகளின் முன்னால் ரஜினி ரசிகர்கள், கூட்டம் கூட்டமாய்ப் பட்டாசு வெடித்துக் கொட்டம் அடிப்பதையும், ‘கும்பம்’ ஏந்தி நிற்கும் பரவசக் கோ[அவ]லங்களையும் காட்சிப்படுத்திக் கலைச்சேவை செய்துகொண்டிருந்தன தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்கள்.

நடிகரின் வகை வகையான வண்ண விளம்பரப் படங்களுக்கி்டையே, ‘கபாலீஸ்வரரே வருக!’ என்று, அவரைக் கடவுளாக்கி வரவேற்கும் படங்களையும் காண முடிந்தது[‘பாலிமர்’ தொ.க. செய்தியில்]. [நாளைய தினசரிகளில் கலியுகக் கபாலீஸ்வரர் காட்சி தருவார் என்று நம்புகிறேன்].

கடவுள் நம்பிக்கை இல்லாத என் ஒட்டுமொத்த சதைப் பிண்டமும் சில கணங்கள் சிலிர்த்து அடங்கியது.

அடுத்த கணமே, என் நாவிலிருந்து அருவியெனப் பெருகி வழியலாயிற்று ஒரு ‘போற்றி’க் கவிதை! அது.....

போற்றி போற்றி ரஜினி போற்றி

கலியுகக் கபாலீஸ்வரக் கடவுள் போற்றி 

போற்றி அன்னார் திருநாமம் போற்றி

போற்றி அவர்தம் திருவடி போற்றி

போற்றாத கயவர் நரகம் எய்துவர்

போற்றி வாழ்வோர் புண்ணியம் சேர்ப்பர்

மாந்தர் வாழ்ந்திட பிறஉயிரினம் வாழ்ந்திட

மக்கள் கடவுளாம் ரஜினி போற்றி!
********************************************************************************************************************
‘நடிகர் ரஜினிகாந்த் கடவுளானார். கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்வது எப்போது?’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டு என் தளத்தில் வெளியானது இப்பதிவு. இதை இணைத்துக்கொண்டதாக அறிவித்த ‘தமிழ்மணம்’ என்ன காரணத்தாலோ இடுகைப் பட்டியலில்[முகப்புப் பக்கத்தில்] சேர்க்கவில்லை. சில மணி நேரங்கள் கழித்துப் அடுத்து வரும் பக்கங்களில் வெளியாவதால் ‘பார்வை’ எண்ணிக்கை மிக மிகக் குறையும் என்பது தமிழ்மணம் அறியாததல்ல.

ரஜினியின் விளம்பரப் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்கிறான் ரசிகன்; தேங்காய் பழம் உடைக்கிறான்; தீபாராதனை காட்டுகிறான்; சேலத்தில் திரையரங்கின் முன்னால் கிடா வெட்டி வெறிக்கூத்து நிகழ்த்தியிருக்கிறான். 


இம்மாதிரியான மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பது தவறாகுமா?


மேற்கண்டவாறு நான் தலைப்புக் கொடுத்தது குற்றமா?


தமிழ்மணத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.


இப்பதிவுகூட, தமிழ்மணம் இடுகைப் பட்டியலில் இடம்பெறுமா என்று உள்மனம் கேள்வி எழுப்புகிறது.



















நடிகர் ரஜினிகாந்த் கடவுளானார்!!! கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்வது எப்போது?

நேற்றைக்கு முந்தைய[20.07.2016] நாள் பதிவில்,  ‘ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தேன். 

என்ன ஆச்சரியம்! இப்போதே அவர் கடவுள் ஆக்கப்பட்டுவிட்டார்!
நன்றி: கூகிள்
இன்று[22.07.2016] காலையில், ‘கபாலி’ திரைப்படம் வெளியான பல்வேறு திரையரங்குகளின் முன்னால் ஸ்டைல் நடிகரின் ரசிகர்கள், கூட்டம் கூட்டமாய்ப் பட்டாசு வெடித்துக் கொட்டம் அடிப்பதையும், ‘கும்பம்’ ஏந்தி நிற்கும் பரவசக் கோ[அவ]லங்களையும் காட்சிப்படுத்திக் கலைச்சேவை செய்துகொண்டிருந்தன தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்கள்.

நடிகரின் வகை வகையான வண்ண விளம்பரப் படங்களுக்கி்டையே, ‘கபாலீஸ்வரரே வருக!’ என்று, அவரைக் கடவுளாக்கி வரவேற்கும் படங்களையும் காண முடிந்தது[‘பாலிமர்’ தொ.க. செய்தியில்]. [நாளைய தினசரிகளில் கலியுகக் கபாலீஸ்வரர் காட்சி தருவார் என்று நம்புகிறேன்].

கடவுள் நம்பிக்கை இல்லாத என் ஒட்டுமொத்த சதைப் பிண்டமும் சில கணங்கள் சிலிர்த்து அடங்கியது.

அடுத்த கணமே, என் நாவிலிருந்து அருவியெனப் பெருகி வழியலாயிற்று ஒரு ‘போற்றி’க் கவிதை! அது.....

போற்றி போற்றி ரஜினி போற்றி

கலியுகக் கபாலீஸ்வரக் கடவுள் போற்றி 

போற்றி அன்னார் திருநாமம் போற்றி

போற்றி அவர்தம் திருவடி போற்றி

போற்றாத கயவர் நரகம் எய்துவர்

போற்றி வாழ்வோர் புண்ணியம் சேர்ப்பர்

மாந்தர் வாழ்ந்திட பிறஉயிரினம் வாழ்ந்திட

மக்கள் கடவுளாம் ரஜினி போற்றி!
********************************************************************************************************************









புதன், 20 ஜூலை, 2016

விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்!

நடிகர் ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! இதைச் செய்ய இருப்பவன் தமிழன்...தமிழன் மட்டுமே!

மேற்கண்ட ‘சத்திய வாக்கு[!!!]’ என் நாவில் ஜனிக்கக் காரணமாக அமைந்தது பின்வரும் இன்றைய நாளிதழ்[தி இந்து, 20.07.2016]ச் செய்தி.
‘ஒரு படத்துக்காகச் சிறப்பு விமானம் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது ‘தி இந்து’.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து, விமானத்தில் பறந்து சென்று, படம் திரையிடப்படும் முதல் நாளிலேயே பார்த்திட வேண்டுமா? அந்த அளவுக்குச் சமுதாயத்தைச் சீர்திருத்தவல்ல, அல்லது மக்கள் மனங்களைப் பண்படுத்தக்கூடிய  ஒப்புயர்வற்ற அற்புதப் படைப்பா இது? என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை! 

படம் வெளியாவதற்கு முன்னரே அதன் தரத்தை மதிப்பிட்டது எப்படி? இதுதான் தமிழனின் தனித்தன்மையோ? ‘முன்னுணர்தல்’ திறனோ?

22ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் இப்படத்தைக் காண்பதற்காக, ரஜினி ரசிகர்களைச் சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அழைத்துவரும் அரும்பெரும் பணியைச் செய்வது ‘ஏர் ஏசியா’ நிறுவனமாம்.  

குறிப்பிட்ட ஒரு நடிகரின்  படத்தைப் பார்ப்பதற்காக, விமானம் இயக்கப்பட்டது  போல ரயில்களும் பேருந்துகளும் இதற்கு முன்னர் இயக்கப்பட்டிருக்கின்றனவா? பதில் எதுவாயினும், ‘கபாலி’ வெளியாகாத ஊர்களுக்கெல்லாம் அவற்றை இயக்குவது குறித்து நடுவணரசும் தமிழ்நாடு அரசும் யோசிக்கலாம்தானே?

ஏனெனில், ‘கபாலி வெறும் சினிமா மட்டுமல்ல; தமிழனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடவிருக்கும் ஒரு புரட்சிப் படைப்பு’ என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

‘தானுண்டு; தன் குடும்பம் உண்டு’ என்றிருப்பதோடு, சமூகப் பணியிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு தனி மனிதனை...நடிகனைத் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாக்கியே தீருவது என்று சபதம் மேற்கொண்டிருக்கிற தமிழனைப் போல் தன்மானம் அற்ற இனம் வேறு இல்லை இந்த மேதினியில்!

பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்ட இனம் இது. இன்னும் பற்பல நூற்றாண்டுகளுக்கு இவனின் அடிமை வாழ்வு தொடரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை!
===============================================================================







திங்கள், 11 ஜூலை, 2016

'விந்து’வில் சில விந்தைகள்!

டவன், ஒருமுறை வெளியேற்றும் விந்துவில்[சுமார் 2 முதல் 6 மில்லி] ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். இரண்டு கோடிக்குக் குறைதல் கூடாதாம்; குறைந்தால் பிரச்சினைதானாம்.

என்ன பிரச்சினை?

பெண்ணைக்  கருத்தரிக்கச் செய்ய அந்த ஆடவனால் இயலாது.

விதிவிலக்கும் உண்டென்கிறார்கள் மருத்துவர்கள்.

விந்தணுக்கள்  ‘வீரியம்’ மிக்கவையாக இருந்தால், முப்பது லட்சம் அணுக்கள் மட்டுமே இருந்தாலும் போதும் என்கிறார்கள். இவை பெரும்பாலோர் அறிந்த தகவல்களே.

ஒரு சந்தேகம்.

பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தப்படும் முப்பது லட்சம்[குறைந்தபட்சம்] உயிரணுக்களுமே வீரியம் மிக்கவைதான் என்றாலும், அவற்றில் ஏதேனும் ஒன்றுதான்[சில நேரங்களில் அந்த எண்ணிக்கை இரண்டாக இருந்தால் இரட்டைக் குழந்தைகள்!?] முன்னிலை பெற்றுக் கரு முட்டையைத் துளைத்து உள்ளே செல்கிறது!

விந்தணுக்களின் வீரியமும், அவற்றின் ஓட்ட வேகமும் ஆணுக்கு ஆண் வேறுபடலாம். ஆனால், ஒத்தை ஆடவனுக்குள் உற்பத்தியாகி வெளியேற்றப்பட்டு, கருப்பாதையில், கருமுட்டையை நோக்கி நான் முந்தி நீ முந்தி என்று பாய்ந்து செல்லும் அத்தனை விந்தணுக்களின் வேகமும் ஒன்று போலத்தானே இருத்தல் வேண்டும்? மாறுபடுகிறதே, ஏன்? 

காரணம்.....

எண்ணிக்கை எதுவாயினும், மொத்த அணுக்களும் ஒரே சமயத்தில் உற்பத்தியாவதில்லை; அவை,  மைக்க்க்க்க்க்ரோ நொடி வித்தியாசத்தில் ஒன்றன் பின் ஒன்றாக உற்பத்தியாகின்றன[சரிதானே?]. அவ்வாறு உற்பத்தியாகும்போது, அதே மைக்ரோ நொடி வித்தியாசத்தில் ஆடவனின் மனநிலையும் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றமே விந்தணுக்களின் மாறுபட்ட சக்திக்கும்[வீரியத்திற்கும்] குணங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது[கருவில் குழந்தையாக வளரும்போது அவையும் வளர்ச்சியும் மாற்றமும்  பெறுகின்றன] என்று சொல்லலாமா?

இரட்டைக் குழந்தைகள், இருவேறு வகையான  குணங்களைப் பெற்றிருப்பது இக்கருத்துக்கு வலுச் சேர்க்கிறதுதானே?

அறிவியல் பதிவு எழுதும் பேராசையில் இதை எழுதியிருக்கிறேன்; மிக நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் வெளியிட்டிருகிறேன். பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள்.

நன்றி.
===============================================================================
வெளியூர்ப் பயணம் மேற்கொள்கிறேன்; பின்னூட்டங்கள் இருப்பின், ஊர் திரும்பிய பின்னர் ‘நன்றி’ சொல்வேன். 







சனி, 9 ஜூலை, 2016

வாசிப்பீர்!! “இவனுக்கு வேறு வேலையே இல்லையா?” என்று ஏசாதீர்!!

என் பதிவுகளை என் மனைவி வாசித்தார்! “பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்தது சரியே” என்றார். “எப்படி?” என்றேன். புன்சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது!
புலன்களால் அறியப்படுகிற இந்தப் பிரபஞ்சம் எப்போது உருவானது? 

உருவாக்கப்படவில்லை;  எப்போதும் இருந்துகொண்டே இருப்பது என்றால், அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று? 

உருவானது அல்லது உருவாக்கப்பட்டது எதன் பொருட்டு? அதற்கு ஆதாரமாக இருந்தவை எவையெல்லாம்? எவரெல்லாம்?

பிரபஞ்சம் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்திருக்கலாமே. கணக்கிலடங்காத உயிர்களின் தோற்றங்களும் போராட்டங்களும் அழிவுகளும் ஏன்?

இப்படி எத்தனையோ ‘ஏன்’களுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது அறிஞர் உலகம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றே ஒன்றுக்கேனும் இன்றளவும் விடை கிடைத்திடவில்லை. 

ஆக, பருப்பொருள்கள் குறித்த ஆய்வுகளே முற்றுப் பெறாத நிலையில், உணர மட்டுமே முடியும் என்று சொல்லப்படும் நுண்பொருளாம்[???] கடவுளைக்...கடவுள்களைக் கற்பித்ததும், அவருக்காக...அவர்களுக்காக அளவிறந்த பொருளையும் பொழுதையும் வீணடிப்பதும் மனிதகுலம் செய்துவரும் மாபெரும் தவறுகளாகும்.
***********************************************************************************************************************.


வெள்ளி, 8 ஜூலை, 2016

இது என்ன மூடர்களின் தேசமா!?

“மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. -இப்படிப் பேசியிருப்பவர் கர்நாடக சட்ட மேலவை பாஜக தலைவர்[தலைவர்தான்!!!] ஈஸ்வரப்பா. 
காலங்காலமாக, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றின் தூண்டுதலால் அப்பாவிக் குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கும் பாமர மக்களுக்கும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்படுகிறது....

.....மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகளும் பொதுநல ஆர்வலர்களும் தாக்கப்படுகிறார்கள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்கள், மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசிபலனுக்கும், சனிப்பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. 

எனவே, மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வகையில்,  ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்’[கடந்தமுறை நிறுத்திவைக்கப்பட்டது] தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்[இன்றைய நாளிதழ்ச் செய்தி].

சித்தராமையாவின் இந்த அறிவிப்புத்தான் ஈஸ்வரப்பாவின் மேற்கண்ட கூற்றுக்குக் காரணமாக அமைந்தது.

பொது மக்களின் நம்பிக்கைகளில் தலையிட சித்தராமையாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மத நம்பிக்கைகளில் தலையிடுகிறார். அவர் நிறைவேற்ற நினைக்கும் இந்தச் சட்டத்தை பாஜக எதிர்க்கும்; சட்ட மேலவையில் அந்த மசோதாவைத் தோல்வியுறச் செய்வோம் என்றெல்லாம் குமுறியிருக்கிறார் ஈஸ்வரப்பா. இது, பாஜக அனுதாபிகளையே முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இவருடைய இந்த ஆவேசப்  பேச்சு பிரதமர் மோடியின் கவனத்திற்குச் செல்லும்தானே?

மோடி என்ன செய்யப்போகிறார்?

ஈஸ்வரப்பாவைக் கண்டிப்பாரா? 

கண்டித்தால்...அவரின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தால் அறிவுஜீவிகளும் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுவோரும்  அவரைப் போற்றுவார்கள்.

ஈஸ்வரப்பாவை அரவணைத்து, அவரின் மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவாரேயானால்.....

‘புண்ணிய பூமி’ என்று போற்றப்படும் இந்த இந்தியத் திருநாடு, ‘மூடர் தேசம்’ என்று எள்ளி நகையாடப்படும்.

நம் பிரதமர் யோசிப்பாரா?
===============================================================================
மன்னிப்பு வேண்டல்:
‘பாஜக’, தமிழ்மணம் இணைப்புப் பட்டியலில், ‘பஜக’ என்றுள்ளது. பிழை பொறுத்தருள்க.



வியாழன், 7 ஜூலை, 2016

ஒரு இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் பெண்!

இந்து மதத்தவரான ஒரு முதியவருக்கு, அவருடைய மகன்[மதம் மாறியவர்] செய்யத் தவறிய  கடமையை ஒரு முஸ்லிம்  பெண் செய்திருக்கிறார். இது மனிதாபிமானத்தின் உச்சம்!
‘யாகூ பீவி’ ஒரு முஸ்லிம் பெண். தெலங்கானா மாநிலத்தில் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். 

05.07.2016 அன்று, இல்லத்தில் தங்கியிருந்த ஒரு முதியவர்,  தான் சாகும் தறுவாயிலிருப்பதை உணர்ந்து,  இந்துக்களின் பழக்க வழக்கங்களின்படி தன் சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவர் இறந்துபட்ட நிலையில், முதியவரின் மகன்[மதம் மாறியவர்] இந்து முறைப்படி சடங்கு செய்ய இயலாது என்று மறுத்துவிடுகிறார்.

முஸ்லிம் பெண்ணான யாகூ பீவி, முதியோர் இல்லத்திலிருந்து இடுகாடுவரை முதியவரின் சடலத்தின் முன்னால் தீச்சட்டி சுமந்து சென்றார்; இந்துக்களின் வழக்கப்படியே ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தார். 

யாகூ பீவியின் மனித நேயத்தை நாம் போற்றப் புகுந்தால் அது வார்த்தைகளில் அடங்காது.

“முதியவர் இரண்டு ஆண்டுகளாக என் பராமரிப்பில் இருந்து வந்தார். என் தந்தையாகவே அவரைப் பாவித்து வந்தேன். இதன் காரணமாகவே மதத்தை மறந்து, அவருடைய மகளாக இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தேன். இது என் கடமை மட்டுமல்ல; மனிதாபிமானமும்கூட” என்று நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார் யாகூ பீவி.
===============================================================================
நன்றி: ‘தி இந்து[07.07.2016]



புதன், 6 ஜூலை, 2016

‘மாதொருபாகன்’[நாவல்] வழக்குகளுக்கான தீர்ப்பு...சில சந்தேகங்கள்!

இப்பதிவின் நோக்கம் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அல்ல ; அது தொடர்பான எம் ஐயப்பாடுகளைப் பொதுவில் வைப்பது மட்டுமே. 
2015 ஆம் ஆண்டில் கடும் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கு உள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின், ‘மாதொருபாகன்’ என்னும் நாவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் 05.07.2016 அன்று வழங்கியுள்ளார்கள்.

‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை இல்லை. பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன’ என்பவை தீர்ப்பின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

தீர்ப்பு குறித்து விமர்சிப்பதோ, நீதிமன்றத்தை அவமதிப்பதோ நம் நோக்கம் அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஆனாலும், அதில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் குறித்த ஐயங்களை  முன்வைப்பது தவறில்லை என்பது எம் நம்பிக்கை.

சந்தேகம் ஒன்று:
‘சமுதாயத்தில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர்[பெருமாள் முருகன்] தனது நாவலில் பிரதிபலித்துள்ளார்’ என்பது தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இங்கே கலாச்சாரம் என்பது, திருச்செங்கோடு வட்டாரத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு உரியதாகும். விளங்கச் சொன்னால்.....

குழந்தைப் பேறு இல்லாத ‘அந்த’ச் சாதிப் பெண்கள், தேர்த்திருவிழாவின்போது அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் சேர்க்கை செய்து அப்பேற்றைப் பெறுவதாகும்.

இந்தக் கலாச்சாரம் வழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரம் எதையும் ஆசிரியர் தன் நாவலில் தரவில்லை என்பது நாவலை வாசித்த அனைவரும் அறிந்த ஒன்றாகும். உண்மை இதுவாக இருக்கையில், ‘சமுதாயத்தில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர்[பெருமாள் முருகன்] தனது நாவலில் பிரதிபலித்துள்ளார்’ என்று நீதிபதிகள் சொல்லியுள்ளார்கள். ஆதாரம் இல்லாமலா சொல்வார்கள்?

வழக்கு விசாரணையின்போது, நாவலாசிரியர் அந்த ஆதாரங்களை நீதிபதிகளிடம் ஒப்படைத்திருப்பார்தானே?

சந்தேகம் இரண்டு:
‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனால், நீ சொல்வதுதான் சரியென வாதிட்டால் அதற்காக எதிர்த்துப் போராடிச் சாகவும் தயங்கமாட்டேன்’ என்ற தத்துவஞானி வால்ட்டரின் வார்த்தைகளை நீதியரசர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இது ஓர் உணர்ச்சி மயமான சொல்லாடல். நீதிபதிகள் கையாளலாமா என்ற கேள்வி நம் போன்றவர்களுக்கு எழுவது இயல்பு. அது தவறு என்பது முழுத் தீர்ப்பையும் படித்தால் புரியும்தானே?

சந்தேகம் மூன்று:
‘தற்போது காலங்கள் மாறுகின்றன. முன்பு எது ஏற்கப்படவில்லையோ அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அது நடைமுறையாக இருக்கலாம். நடைமுறை சட்டம் ஆகுமா என்பது சட்ட அறிவு இல்லாத எம் போன்றவர்களுக்குப் புரியாதுதானே?

சந்தேகம் நான்கு:
‘ஒரு நாவலைப் படிக்க வேண்டுமா வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதைத் தூக்கி எறியட்டும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெறுமனே பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிடலாம்தான். பிரச்சினை இல்லை. ஒரு நாவல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தவரின் மனங்களைக் குத்திக் குத்தி ரணமாக்கினாலும்.....

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று அந்த மக்கள் நினைக்க வேண்டும். இனியேனும் நினைப்பார்களா?

சந்தேகம் ஐந்து:
‘ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது’ - இதுவும் நீதியரசர்கள் சொன்னதுதான்.

பெரும்பான்மை மக்களின்  எண்ணங்கள்தான் பின்னர் சட்டங்களாக வடிவெடுக்கின்றன எனினும், ஒரு சட்டம்  இயற்றப்படும்வரை அவர்கள் அந்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களே என்று நீதிபதிகள் கருதியிருப்பார்கள். சரிதானே?
***********************************************************************************************************************
‘தி இந்து’[06.07.2016] நாளிதழில் வெளியான சம்பந்தப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இப்பதிவு.







ஞாயிறு, 3 ஜூலை, 2016

‘இப்தார் நோன்பு’ம் முதலமைச்சர் சொன்ன கடவுள் கதையும்!

“ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் அகமும் புறமும் தூய்மை அடைகிறது. அதன்மூலம் இறைப்பற்றும் அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதனால் இறைவனின் அருளைப் பெற முடிகிறது..... ”

சென்னையில் நடந்த, அ.தி.மு.க. சார்பான ‘இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி’[02.07.2016]யில் மேற்கண்டவாறு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மேலும் பல நற்கருத்துகளை வழங்கியதோடு நபிகள் நாயகம் குறித்த ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார்கள். கதை.....
‘நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பிடிக்காத எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். 

ஒரு நாள் இரவு, அவர்களின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து நண்பரின் இல்லத்துக்கு நபிகள் நாயகம் வந்தார். அவரைத் ‘தெளர்’ என்ற மலைக் குகைக்கு அழைத்துச் சென்றனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர்.

அப்போது நபிகள் நாயகத்தின் நண்பர் அவரிடம், “எதிரிகள் நம்மைக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி இறப்பது உறுதி” என்றார். அப்போது நபிகள் நாயகம், “தோழரே பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கு அவசியமில்லை” என்றார்.

அப்போது எதிரிகள் குகைக்கு அருகில் வந்தனர். ஆனால், எதிரிகள் உள்ளே நுழைவதற்குள்  நுழைவாயிலில் சிலந்தி வலை பின்னிவிட்டது. 2 புறாக்கள் படுத்திருந்தன.

அதைப் பார்த்த எதிரிகளில் ஒருவன், “நாம் தேடிவந்தவர்கள் இங்கே இருந்தால் சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். புறாக்களும் இருக்காது. எனவே, அவர்கள் இங்கே இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறினார். அதை ஏற்று அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்....’

கதையின்படி, சிலந்தியை வலை பின்னச் செய்து நபிகள் நாயகத்தைக் காப்பாற்றுகிறார் கடவுள். அவர் நினைத்திருந்தால், நபிகள் நாயகத்தையும் பிற நண்பர்களையும் எதிரிகளின் கண்ணுக்குப் புலப்படாமலே மறைத்திருக்க இயலும். வேறு வழிமுறைகளையும் கையாண்டிருக்க முடியும். நாம் கேட்க நினைப்பது, இறை நம்பிக்கையைத் தக்க வைக்க இம்மாதிரிக் கதைகள் இந்த அறிவியல் யுகத்தில் தேவையா என்பதே.

மக்களில் பலரும் இன்று ஆழ்ந்து சிந்திக்கக் கற்றிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் எல்லாம் இறை மறுப்பாளராக மாறிவிட்டார்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆயினும், இம்மாதிரியான கதைகள் குறித்துக் கணக்கிலடங்காமல் கேள்விகள் கேட்கத் தலைப்பட்டுவிட்டார்கள் என்று எண்ணுகிறோம். அதை முதலமைச்சரோ மதப் பிரச்சாரகர்களோ மறுக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

எனவே, கடவுளின் பெருமைகளைப் பரப்புரை செய்வோரிடம் நாம் அன்புடன் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள்......

கடவுள் நம்பிக்கையால் நன்மைகள் விளையும் என்று நம்புகிற நீங்கள், அந்த நன்மைகளைப் பட்டியலிடுங்கள்; தவறில்லை. அருள்கூர்ந்து நம்ப முடியாத கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.

நன்றி.
===============================================================================
நன்றி: தமிழ் நாளிதழ்கள்[03.07.2016].






வெள்ளி, 1 ஜூலை, 2016

இந்தக் கதையில்... வயாகரா 30%, சிரிப்பு 30%, சஸ்பென்ஸ் 40% !!!

“எழுபது வயதுக் கிழவன் நீ. எழுதுவதற்கு நல்ல விசயமே இல்லையா?” என்று என்னை ஏசாதீர். இது என் வாலிப வயதில்[21] எழுதிய கதை!


றத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” -நான்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் கழன்றுகொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாகவமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” -விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” -கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யா?"ன்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

"இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

[முன்னணி வார இதழான ‘ராணி’யில் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது]

****************************************************************************************************************************************************
முதல் முறை வாசித்தவர்களுக்கு...“நன்றி”

ஏற்கனவே ஒரு முறை வாசித்தவர்களுக்கு...“மன்னியுங்கள். சரக்கு தீர்ந்துடிச்சி”