எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

அத்தி வரதர் தரிசனம் நிரந்தரமாகத் தடை செய்யப்படுமா?!

கருவுற்ற பெண்ணின் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிய முயற்சி செய்வதும், மருத்துவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பதும் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.

கருவிலேயே பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதே இதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தியதற்கான காரணம் ஆகும்.

இது, இங்கு பெரும்பான்மையாக உள்ள பக்தகோடிகள் உட்பட யாவரும் அறிந்ததே.

கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று அறிய முற்படுவது குற்றம் எனில், ஆண்டவர்களிடம்[கடவுள்கள்] ஆண் குழந்தைக்காக நேர்ந்துகொள்வதும், ஆண் மகவு பிறந்தால், “கடவுளின் அருளால் ஆண் பிள்ளை பிறந்தது” என்று சொல்லித் திரிவதும்கூட தண்டனைக்குரிய குற்றமே.

இம்மாதிரிக் குற்றச் செயல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. நேற்றைய [14.08.2019] ஊடகங்களிலும் இன்றைய[15.08.2019] நாளிதழ்களிலும் வெளியான ஒரு செய்தி.....

‘காஞ்சிபுரம் அத்திவரதரைத் தரிசிக்கச் சென்ற ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.’

’குழந்தை பிறந்தது’ என்று செய்தி வெளியிட்டால் போதும். ஆண் குழந்தை என்று குறிப்பிட்டு, வரதரின் அருளால் அது நிகழ்ந்தது என்பதாகப் பொருள்கொள்வதற்கு வழி வகுத்திருக்கின்றன ஊடகங்கள்.

நேஎற்றைய ‘மாலை மலர்’[14.08.2019] நாளிதழில் இதை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது.....

அத்தி வரதரிடமோ இவரையொத்த பிற கடவுளரிடமோ ஆண் குழந்தைக்காக நேர்ந்துகொள்வதைத் தண்டனைக்குரிய குற்றம் என்று அரசு அறிவிக்குமா?!
=======================================================================