எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

அசோகனின் அந்தப்புரக் கொலைகள்! மூக்கறுத்த சோழன்!! கர்ப்பிணியின் வயிறறுத்த வந்தி!!![பழையது]

முக்கிய குறிப்பு: புதிய பதிவுகளுக்கிடையே, பழைய வலைப்பதிவுகளி லிருந்து மறுவாசிப்புக்குத் தகுதியான பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட உள்ளேன். பழையதை விரும்பாதவர்களுக்காகத் தலைப்புடன் ‘பழையது’ என்னும் சொல் இணைக்கப்பட்டிருக்கும் என்பதை அறிக!


“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!


‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு' என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படியுங்கள். பிறகு சொல்லுங்கள்..........

“கவிமணி அவர்களின் கூற்று ஏற்கத்தக்கதா?”

                       *                       *                     *


நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.

                                *                      *                          *                                     
அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது!


                                *                      *                        *

அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

சினம் தணியாத ராசராசன்

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டித்தானாம்!! [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.

                                   *                       *                         *

இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரண நிகழ்வுகள்!.

                                 *                       *                        *

கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?

‘கதைகள் எட்டு வகை’.....இளம் எழுத்தாளர்களுக்கான பதிவு!

‘இச் என முத்தமிட்டான் என்பதை இச்சினான் என்கிறார்கள். ‘ஃபோன் ஒலித்தது’ என்பதை, ‘ஃபோன் ரிங்கியது’ என்றும், ‘சர்’ என்று இறங்கினான்’ என்பதை, ‘சர்ரினான்’ என்றும் எழுதுகிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள். வாசகனைக் கவர்வதற்கு இவர்கள் கையாளும் புதிய உத்தி இது எனலாம். இவ்வகை உத்திகளை இன்று எழுதப்படும் கதைகளில் பரவலாகக் காண முடிகிறது.

‘மாலா நம் கதையின் நாயகி. இவளைக் கொஞ்சம் வர்ணித்துவிட்டுக் கதைக்குச் செல்லலாமே” என்று சொல்லித் தன் கதையைத் தொடங்குகிறார் ஓர் எழுத்தாளர்.

‘இந்தக் கதையைப் படிக்குமுன் நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் கை குலுக்குவோம். ஹலோ...ஐ யாம் அர்ஜுன். வாட்டசாட்டமாக இருக்கிறேனே என்று பார்க்கிறீர்களா? நான் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆள் சார்.’ இப்படி எழுதி அசத்துகிறார் இன்னொருவர்.

‘சாருபாலா. என்ன அழகான பெயர்! அவளுடைய அண்ணாந்த கழுத்தில் இருக்கும் மிளகு மச்சம்! வியர்வையும் பவுடரும் கலந்த வியர்வை வாசனை! அவளது நாசியில் புகுந்து தொந்தரவு செய்யும் கேச இழைகள். உதடுகளில் ‘மெத்’தென்று சிக்கும் காது மடல்கள். விரல் நுனியில் பரபரப்பூட்டும் வயிற்றுக் குழைவு. அவனுடைய மார்பு முடிகளின் வேர்கள்வரை இறங்கும் அவளுடைய வெப்ப மூச்சு. சாருபாலாவை நினைக்கும்போதெல்லாம் இவை எல்லாமே ஊர்வலமாய் வந்து நினைவில் தங்கிவிடும்.’ இப்படி வாசகனின் உள் நெஞ்சுவரை ஊடுருவுகிறார் தேவிபாலா என்னும் பிரபல எழுத்தாளர்.

சிறுகதை மட்டுமன்றி நாவல்களிலும் இம்மாதிரி, மன உணர்வுகளை வருடிக் கொடுக்கும் நடையையும் உத்திகளையும் கையாளும் கதாசிரியர்கள் தமிழில் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்களால், சிறுகதையின் வடிவம் சீர்மை பெற்றுவருவது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

உள்ளடக்கத்தின் நிலை என்ன?

நவீன சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை, ‘நல்ல கதைகள்’ என்றும் ‘நச்சுக் கதைகள்’ என்றும்  ‘பொழுதுபோக்குக் கதைகள்’ என்றும் ஆய்வாளர்கள் தரம் பிரிப்பார்கள். 

கொஞ்சம் அழுத்தமாக ஆராயும்போது, இவற்றை மேலும் பல வகைகளாகப் பகுக்கத் தோன்றுகிறது.

ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.
வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை. அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை. 

ஓர் எடுத்துக்காட்டு மட்டும்.
ஓர் இந்து இளைஞன், பிரசவ வேளையில் உயிருக்குப் போராடும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கத் துடிக்கிறான். ஊரெங்கும் மதக் கலவரம். சாதிசனம் என்று எவருமே உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு முஸ்லீம் பெரியவர் தன் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார். மாதங்கள் கழிகின்றன. பிள்ளைக்குப் பெயர்சூட்டு விழா. சொந்தபந்தங்கள் பல பெயர்களைச் சிபாரிசு செய்கின்றன. அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி, கடவுளாக வந்து தன் மனைவியைக் காப்பாற்றிய முஸ்லீம் பெரியவரின் பெயரை - அவரிடமே முன்பு கேட்டறிந்தது - தன் பிள்ளைக்குச் சூட்டுகிறான் அந்த இந்து இளைஞன்.

அருமையான படைப்பு! குங்குமம் இதழில் வெளியானது இது. எழுதியவர் பெயர் மறந்துபோனது வருத்தத்தைத் தருகிறது.

ஜாதிமத வெறிகொண்டு அலையும் மிருகங்களுக்கெல்லாம் சரியான சாட்டையடி இந்தக் கதை.

முகவரி தெரியாத, பிரபலம் ஆகாத இளம் எழுத்தாளர்களின், இதுபோன்ற தரமான படைப்புகள் கணிசமாக வெளிவந்துகொண்டிருப்பதைக் காணுகிறபோது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது; அழுத்தமானதொரு நம்பிக்கை பிறக்கிறது.

வீரமாமுனிவர், மாதவய்யா, பாரதி போன்ற முன்னோடிகளால் அடித்தளம் அமைக்கப்பட்டு, வ.வே.சு.ஐயரால் முறையாக வடிவமைக்கப்பட்டு, எழுத்துலக மேதைகளால் வளர்க்கப்பட்டு, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறுகதை இலக்கியம் இனியும் வாழும்; வளரும்!
***************************************************************************************************************************************************
ஓய்வு பெறவிருந்தபோது, சென்னை வானொலியில், ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரையின்[30 நிமிட இலக்கியப் பேருரை] இறுதிப் பகுதி இது.