எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 6 ஜூன், 2017

கலியுகக் கவிஞனும் ஒரு கள்வனும்!!!


விந்துப்பை சுமத்தல்
              -'பசி'பரமசிவம்

நான் வாழப் பிறந்தவன்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500.
ஆனால்.....
ஒரு முழு ‘ஒருநாள்’கூட
மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை.

மண்ணில் ஓடி ஆடியும்
விண்ணில் சிறகடித்துப் பறந்தும்
ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் வாழ்வது
என் பிறவி ஆசை
இருப்பினும்.....
இரண்டு கால்களுடன் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறேன்.

‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது
கிடக்காதபோது உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை
அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது
என் எதிர்பார்ப்பு.
என்னைப் படைத்தவனிடம் அப்படியொரு திட்டமே இல்லை.

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த
தோல் போர்த்த  பிண்டம் இது.
என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்
இப்படியான  ஒரு பிண்டம்தான்.
[கலவையில் வித்தியாசம் இல்லை;
கலக்கப்பட்ட மூலங்களின் சதவீதங்களில் மட்டுமே
சில மாற்றங்கள்].
அந்தப் பிண்டத்தைப் பார்க்கும்போதெல்லாம்
என்னுள் உணர்ச்சிப் பிரவாகம்; கடும் காமக் கிளர்ச்சி.

சதையோடு சதை உரசியும் புணர்ச்சி செய்தும்
உணர்ச்சி தணிக்கிறேன்.
அது தணிந்தபின்.....
“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?” என்று மனம் விசனிக்கிறது.
ஆனாலும்
அப்படி வாழத்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

‘இனவிருத்திதான் படைப்பின் அடிப்படைக் கருதுகோள்’
என்பர் இயற்கை ஆய்வாளர்.
அது என்ன கருதுகோளோ, கருமாந்தரமோ?
இந்த வேண்டாத  இனவிருத்திக்காக
நான் ஏன் காலமெல்லாம் ‘விந்துப்பை’ சுமக்க வேண்டும்?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அல்லல் படுபவன் நான்;
நாளும் அல்லலுற்று ஆற்றாது அரற்றுபவன்.

என்னைப் படைத்து மண்ணில்  உலவவிட்டு,
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்
அந்தக் 'கள்வன்’ யார்?

யாரந்தக் கள்வன்?!
=======================================================================
Dr.ப.பரமசிவம்['பசி'பரமசிவம்], 51, பழனிசாமி தெரு, நாமக்கல் - 637001.

இந்தக் கவிதையை எழுதியவன் நான். கவிதையில் வரும் ‘நான்’க்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!