எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

‘மோடிஜி’யின் முதுகு அத்தனை அசிங்கமானதா என்ன?!?!


புனேவில் உள்ள புகழ்பெற்ற ‘தக்துஷேத் ஹல்வாய்’ விநாயகர் கோவிலுக்குப் போனார் நம் பிரதமர் மோடி.

விநாயகப் பெருமானைக் கும்பிட்டுமுடித்து, அவர் இவர் முதுகைப் பார்க்கிற மாதிரி திரும்பி நின்றார்.

‘இப்படிச் சாமிக்கு முதுகு காட்டி நிற்பது அந்தச் சாமியை அவமதித்ததாக ஆகும்’ என்று எதிர்க் கட்சிக்காரர்களும் மோடிஜியைப் பிடிக்காதவர்களும் சரமாரியாகக் கண்டனக் கணைகளை வீசினார்களாம்.

சமூக ஊடகங்களில் வெகு பரபரப்பாகப் பகிரப்பட்டது... படுகிறது இந்தச் செய்தி.

‘பிரார்த்தனை செய்த பிறகு, பிரதமர் மோடி விநாயகப் பெருமானுக்கு பரிக்ரமா[???] செய்ய அந்த இடத்திலேயே சுழன்றார்’ என்பது அவரின் ஆதரவாளர்கள் சொல்லும் சமாதானம்.

கும்பிடுகிறவரோட முன்பக்கத்தைப் பார்ப்பதுதான் பிள்ளையாருக்குப் பிடிக்குமா?

மனிதர்களைப் படைத்துப் பாதுகாப்பவரே கடவுள்தான். விநாயகர் அந்த முழுமுதல் கடவுளின் ஒரு பிரதி.

முதுகு என்ன, முழு நிர்வாணமாக நின்றாலும் அவர் கோபிக்காமல் அருள்பாலிப்பார்..

அவ்வப்போது அர்ச்சகரின் முதுகைப் பார்க்கிற அந்தப் பிள்ளையார் ஒரு நாட்டின் பிரதமர் முதுகைப் பார்ப்பதில் என்ன தவறு?

அவர் முதுகு என்ன அத்தனை அசிங்கமாகவா இருக்கிறது?

                                  *   *   *   *   *

Fact-Check: PM Modi did NOT turn his back to Lord Ganesh at Pune's Dagdusheth Halwai Ganesh temple (msn.com)

சீமானின் சீறலும் கொதிக்கும் மதவாதிகளும் பிறரும்!!!


“இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் பேசிவிட்டாராம். இதைக் கண்டித்து இஸ்லாம், கிறிஸ்தவ அமைப்புகள் மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சித் தலைவர்களும் கொதியோ கொதி என்று கொதித்திருக்கிறார்கள்.

குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.


உண்மையில், சாத்தான், பேய், பிசாசு, ஆவி, பில்லி, சூனியம் எல்லாம் இருப்பதாகப் பொய் சொல்லி, அதைப் பரப்புரை செய்து மக்களை மூடத்தனங்களின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கும் இவர்களைத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்[அதற்கான காலம் இன்னும் கனியவில்லை].


இவர்களென்ன கடவுளின் பிள்ளைகளா?


“ஆம்” என்றால், இவர்களின் தந்தையான கடவுள், மக்களின் மனங்களில் கெட்ட எண்ணங்களைப் புகுத்திக்கொண்டிருக்கும் சாத்தானை அழித்து ஒழிக்காமல், காலங்காலமாய் அதைக் கொட்டமடிக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்?


சொல்லப்போனால், எந்தவொரு மதத்தவராயினும், மனிதராய்ப் பிறந்து வாழும் அத்தனை பேரிடமும் நல்ல குணங்களைக் காட்டிலும் கெட்ட குணங்களே அதிகம்.


மிகுதியும் கெட்ட குணங்களைக் கொண்டவர்களை, நல்ல குணங்களின் உற்பத்தி நிலையமான கடவுளா[அப்படியொருவர் இருந்தால்] படைத்திருப்பார்?


அல்ல! அல்லவே அல்ல!!


சாத்தான்தான் படைத்திருப்பார்[பெற்றெடுத்திருப்பார்] என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.


ஆக, மனிதராய்ப் பிறந்த எல்லோருமே[மதவாதிகள் உட்பட] சாத்தானின் பிள்ளைகளாக இருக்கும்போது, சீமான் பேசியதில் என்ன தவறு இருக்க முடியும்?


சீமானைக் கைது செய்திட வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பும் அத்தனை பேரும் இதைப் புரிந்துகொள்வது நல்லது!