எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 3 ஜூலை, 2024

போலிச் சாமியார்கள்! ஆண்டவனின் திருவடி தொழுது நாம் வேண்டுவது.....

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, 122 பேர் பலியானதற்கு, அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியது மட்டுமே காரணம் என்று ஊடகங்கள் வாயிலாக முன்பு அறியப்பட்ட செய்தி தவறானது.

போலி ஆன்மிகம் பேசியே பிரபலம் ஆன இந்த அயோக்கியன் ‘போலோ பாபா’, காரில் ஏறி அங்கிருந்து வெளியேறியபோது.....

‘இவனின் காலடி மண்ணையும், கார் சென்ற பாதையின் மண்ணையும் தொட்டு முகத்தில் ஒற்றிக்கொள்ள, பக்தர்கள்[3 லட்சம் பேர்] முண்டியடித்ததால்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அண்மைச் செய்தி.

கண்டதைத் தின்று, நாறும் மலம் கழித்து வாழும் இந்தக் கழிசடைகளின் கால் பட்ட மண்ணைத் தொட்டுப் புண்ணியம் சேர்க்கலாம் என்று இவர்களை நம்பவைத்தவர்கள் நச்சு மனம் படைத்த இவனும் இவனைப் போன்ற சாமியார்களும்தான்.

போலோ பாபா எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுள்ளான்.

மோடி என்ன செய்யப்போகிறார்?

இவன் எங்கு ஓடி ஒளிந்திருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துத் தண்டிப்பாரா?

அல்லது,

நாளை, கடவுளால் அனுப்பப்பட்ட தன்னுடைய காலடி மண்ணைத் தொடவும் பக்தர்கள் முண்டியடித்து மோதி விழுந்து செத்துத் தொலைத்தால், தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள இயலாது என்பதால், ’போலோ பாபா’ என்னும் இழிகுணச் சாமியாரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா?

என்ன செய்யவிருக்கிறார் மோடி என்பதை அவரைப் பூவுலகுக்கு அனுப்பி வைத்த அந்த ஆண்டவனே அறிவான்!

அப்படி ஒருவன் இருந்தால், அவனின் அடிபணிந்து நாம் வேண்டிக்கொள்வது.....

“ஒரே ஒரு முறை உலகத்தோர் காணும் வகையில் காட்சி தந்து ஒரு பேட்டி அளித்தருள்வாய் பகவானே. நீ இதைச் செய்தால், ‘நான் கடவுளின் அவதாரம்; நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பொய்யுரைத்து மக்களை மடையர்கள் ஆக்கும் போலி ஆன்மிகர்களின் கொட்டம் முற்றிலுமாய் அடங்கும்” என்பதுதான்!

கள்ளச்சாராயமும் காவிகளின் பிரச்சாரமும்!

//உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கரக் கூட்ட நெரிசல். பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு! Tuesday, July 2, 2024, 19:28 [IST]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உ.பி. சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.[https://tamil.oneindia.com/news/lucknow/40-people-died-in-stampede-at-religious-gathering-in-up-hathras-618675.html]//

போதையை அதிகரித்து, குடிகாரனின் உயிரைப் பலிவாங்கும் கள்ளச்சாராய வியாபாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது; தண்டனையும் வழங்கப்படுகிறது.

கள்ளச்சாராயம் தரும் போதையைக் காட்டிலும் மிகப் பல மடங்கு போதை ஊட்டுவது பக்தி.

பக்தி வளர்த்தால் துன்பங்கள் தீரும்; நினைத்த காரியம் கைகூடும்; செத்தால் சொர்க்கம் நிச்சயம்; மறுபிறவியில் நாயாகவோ, சாக்கடைப் பன்றியாகவோ, பொதி சுமக்கும் கழுதையாகவோ பிறக்காமல், மனிதனாகவே பிறந்து புண்ணியம் சேர்த்து இறைவனின் திருவடியில் நிரந்தரமாய்த் தங்கிப் பேரானந்தத்தில் மிதக்கலாம் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து மக்கள் மனங்களில் போதை ஏற்றிப் பகுத்தறிவைப் பாழடிக்கும் காவிகளுக்கு[+மதபோதகர்கள்]த் தண்டனையே இல்லை.

மாறாக, அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியில் இடம்பெற்றுள்ள காவிச் சாமியார் ஏற்றிய பக்திப் போதையால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்[மனக் கட்டுப்பாட்டை இழந்து நெரிசலில் சிக்கிச் செத்திருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது செய்தி].

சாராய வியாபாரிகளுக்குத் தரப்படும் தண்டனையைவிடவும் கடுமையான தண்டனை பெற வேண்டியவர்கள் இவர்கள். அவசியம் எனின், மக்களின் பகுத்தறிவை நாசமாக்குவதோடு நூற்றுக்கணக்கில் அவர்களின் உயிர்களைக் கற்பனைக் கடவுள்களுக்குக் காவு கொடுக்கிற இவர்களுக்கு மரண தண்டனையே வழங்கலாம்.

சாமி கும்பிடவும் தியானங்கள் செய்யவும் கற்றுக்கொடுப்பதைத் தவிர, தலைவனுக்குரிய வேறு தகுதி ஏதும் பெற்றிராதவர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கும்வரை இதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே!