வியாழன், 30 ஜூலை, 2026

ஒரு புத்திசாலிக் கதாசிரியனும் அதி புத்திசாலி இதழ் ஆசிரியனும்[அனுபவம் பழசு]!!

பிரபல வார இதழொன்று அனுப்பியிருந்த காக்கி நிற அகல உறையொன்றை ராதா மோகனின் வீட்டு வாசற்படியில் வீசிவிட்டுப் போனார் தபால்காரர். பிரித்துப் பார்த்த 'ராதா மோகன்' துன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் அனுப்பிய சிறுகதை, உறையிலிருந்த குமுதம் வார இதழில் பிரசுரிக்கப்படவில்லை.

'கதை போடாம பத்திரிகையை எதுக்கு அனுப்பினாங்க?' -யோசனையுடன் உறையை ஆராய்ந்தபோது அதன் உள்ளே மடிக்கப்பட்ட ஒரு கடிதம் இருந்தது.

'அன்புடைய ராதா அவர்களுக்கு, உங்கள் படைப்பைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். கதையுடன் நீங்கள் அனுப்பியிருந்த அழகான உங்களுடைய புகைப்படத்தை நம் வார இதழின் அட்டைப்படமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் ராதா மோகன் அனுப்பிய எந்தவொரு கதையும் அந்த முன்னணி வார இதழில் பிரசுரம் ஆனதில்லை. நண்பன் மூர்த்தியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டபோது, உன் பேரு ராதா மோகன். இனிமே 'ராதா'ங்கிற பேர்ல கதை அனுப்பு. கூடவே, ஏதாவதொரு அழகி படத்தைக் கூகுளில் சுட்டுக் கதையோடு இணைச்சிடு. அழகான பொண்ணு கதைன்னா கண்டிப்பா பிரசுரம் பண்ணுவாங்க'' என்றான் அவன். அவன் சொன்னபடியே செய்தான் ராதா மோகன். இருந்தும் அவனுடைய நீண்ட கால ஆசை நிறவேறவில்லை.

''இந்த எடிட்டர் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருப்பான் போல. தரமில்லேன்னு நினைச்சி என் கதையைக் குப்பைக் கூடையில் போட்டுட்டு, நான் அனுப்பிய அழகான பொண்ணு படத்தை அட்டையில் போட்டுட்டான். அந்த ஆளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடப்போறேன்'' என்று சபதம் ஏற்ற ராதா மோகன், கணினியைத் திறந்து வைத்து, கூகுள் தேடல் மூலம் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கு ஒரு பட்டியல் போட ஆரம்பித்தான்!

புதன், 29 ஜூலை, 2026

கதைக்கு ’நடை’ அழகு! அதென்ன ’நடை’?

'கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப் பொய் அழகு. அவரை(ஆவாரைச் செடி)க்குப் பூ அழகு' என்பார்கள். 

ஒரு கதையைப் பொருத்தவரை, அதன் கரு சொத்தையாக இருந்தாலும் சுவையான 'நடை'யில் எழுதப்பட்டிருந்தால் கவர்ச்சியான கதையாக அது ஆகிவிடுவது உண்டு. எனவே, 'கதைக்கு நடை அழகு' என்றால் அதில் தவறேதும் இல்லை. 

அதற்கான ஓர் எடுத்துக்காட்டு:

//ரு அன்றாடங் காய்ச்சிக்கு லாட்டரிக் குலுக்கலில் பத்து லட்சம் பரிசு விழுந்தது. அந்த யோகத்தை ஏழை வாலிபனான அவனால் நம்ப முடியவில்லை. பணம் கைக்கு வந்துசேரும்வரை என்னமாகத் தவித்துப்போவான்?

வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து நானும் அப்படியானதொரு தவிப்புக்கு ஆளானேன்.

வெண்ணிலா இந்த நிலவுலகத்து ரதி; பொன் வண்ண ரோஜா; பூரித்துக் குலுங்கும் இளமையின் புகலிடம்.

நானோ?

அழகு விசயத்தில் சராசரிக்கும் கீழே. எனக்கு ஆப்பிரிக்க நிறம்; சோமாலியா உடம்பு; அழகாகப் பிறந்துவிட்ட எவளும் "ஐயோ பாவம்" என்றுதான் என்னை மணக்கச் சம்மதிப்பாள்.

வெண்ணிலா பணக்காரப் பரம்பரையின் பலாக்கனி. நானோ கூலிப் பரம்பரையின் 'வெத்து' வாரிசு.

எனக்குச் சொந்த ஊர் கொக்கராயன்பேட்டை; தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமம். இதற்கு மேல் இந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அறுபது கிலோமீட்டருக்கு அப்பால் விசைத்தறிக்குப் பெயர்போன அதிவீரராமப்பட்டணம் போய் வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு வாரம் ஆகிறது. வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்.

திடீரென்று என் உள்மூளையில் ஒரு சந்தேகம். அது துக்கிளியூண்டு புள்ளி போல உதயமாகி இப்போது பூதாகரமாக உருவெடுத்து என்னைப் புரட்டியெடுக்கிறது; பதைபதைக்க வைக்கிறது.

அவளின் அப்பன் நாற்பது ஐம்பது விசைத்தறிக்குச் சொந்தக்காரன்; லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிற பெரிய புள்ளி. இந்தப் பண்ணாடைப் பயலை மாப்பிள்ளையாக ஏற்க முன்வருகிறான் என்றால் எங்கேயோ உதைக்கிறதே.

கிளி மாதிரியான தன் பெண்ணை இந்தக் கருங்குரங்கு கையில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறானே, இது எப்படி?

பண்டம் கெட்டுப்போனதோ?

சுழி பிசகில்லாமல் இருந்தால் மாடு உள்ளூரிலேயே விலை போயிருக்கணுமே? வெளியூர்ச் சந்தைக்கு ஏன் வரணும்?

நான் ஏமாளியா? பணமும் அழகும் காட்டி என்னை ஏமாற்றப் பார்க்கிறார்களா?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அங்கலாய்த்துப் புலம்பியது என் அல்பப் புத்தி.

"இல்லை. அப்படியெல்லாம் இருக்காது. வீணாகக் குழம்பாதே. வீடு தேடி வரும் அதிர்ஷ்டத் தேவதையை அடித்து விரட்டிவிடாதே" என்று என் ஆசை மனம் ஆறுதல் சொன்னது.

"வெண்ணிலா பரிசுத்தமானவள்; பத்தரைமாற்றுத் தங்கம்" என்று என்னைத் தேடி வந்து யாராவது தேறுதல் சொல்ல மாட்டார்களா?" என்று ஏங்கினேன்//

குறிப்பு:

ஒரு பிரபலமான கதாசிரியரின் கதையிலிருந்து எடுத்தாண்டது மேற்கண்ட கதைப் பகுதி. கதை சற்றே நீண்டது என்பதால் பதிவு செய்யவில்லை.

கதாசிரியர்? 

உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஹி... ஹி... ஹி!!!