எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அமித்ஷா... அமைச்சனா அடாவடிச் சங்கிக் கும்பலின் தலைவனா?!

"நீதிபதி தீர்ப்புக் கொடுத்தார் என்பதற்காகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை”[https://x.com/ThanthiTV/status/1998758732935893216].

மேற்கண்டவாறு கொந்தளிந்திருப்பவன் ஒரு தனி மனிதன் அல்ல; பொறுப்புணர்வும், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக மதிக்கும் மனப்பக்குவமும், நிதானப் புத்தியும் இல்லாத, இந்த பரந்த பெரிய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

போகிறபோக்கில், “இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை” என்று பேசியிருக்கிற இவருக்குக் கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும் அறிவு இருந்திருந்தால்.....

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட அனைத்து மரபுகளையும் அலட்சியப்படுத்தி, அரசுத் தரப்பையும், கோயில் நிர்வாகத்தையும் விசாரிக்காமல், சங்கிகளுக்குச் சாதகமானதும் மனசாட்சிக்குப் புறம்பானதுமான ஒரு தீர்ப்பை இதற்கு முன்பு எந்தவொரு நீதிபதியும்[அநீதிபதி?]  வழங்கியதில்லை என்பதை இந்த நபர் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார்; மேற்கண்டவாறு பேசியிருக்கமாட்டார்.

நீதிபதி சாமிநாதன் மட்டுமல்ல, அமித்ஷாவைப் போல் தான்தோன்றித்தனமாய், ஒரு நடுவணரசின் அமைச்சர் இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக்குக் கேடு விளைவிக்கும் அடாத செயலை, இந்தச் சங்கிகளின் தலைவன் அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம்.

இனியொரு சுதந்திரத்தைப் பெற்றிட, சங்கிகள் அல்லாத தன்மானத் தலைவர்கள், உடனடியாக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம் இதுவோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சனி, 13 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... இன்று ‘ஒரு நாள்’ உண்ணாவிரதம்! அடுத்து? அடுத்து? அடுத்து?

//திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர்[50 பேர்] சார்பாக உண்ணாவிரதம்//*[செய்தி] 

உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது; ஆதரவாகவும் இருக்கிறது.

த.நா.அரசு அனுமதிக்காவிட்டால், அடுத்தடுத்தடுத்து, ஐயாயிரம் பேர், ஐம்பதாயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். பயந்தும் பணிந்தும் தர்க்காவுக்கு அருகே உள்ள தூணில்[தீபத் தூணோ அல்லவோ] தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கும்.

அடுத்து.....

தீபத் தூணுக்கு அருகே உயரமான இடத்தில் இஸ்லாமியர்களின் தர்கா இருக்கக் கூடாது. அதை அகற்ற வேண்டும் என்று, இந்தியா எங்கும் உள்ள பக்திமான்கள் திரண்டுவந்து, நீதிமன்ற அனுமதியுடன் ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பார்கள்.

தர்கா அகற்றப்பட்டு அங்கு ராமச்சந்திர மூர்த்திக்கு மாளிகை எழுப்பப்படும்; திருப்பரங்குன்றத்திற்குப் பாலராமர் குன்றம் என்று புதிய நாமகரணம் சூட்டப்படும்[இதற்கும் உண்ணாவிரதம் இருப்பார்கள்].

அடுத்து.....

அவ்வப்போது இந்த நாட்டில் ஏற்படும் மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியரின் தர்காக்களோ மசூதிகளோ[+கிறித்தவர்களின் தேவாலயங்கள்?] இருத்தல் கூடாது என்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். விளைவு.....

அனைத்துப் பிற மதத்தவர் வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஒரு ‘இந்து’ நாடாக இந்தியா காட்சியளிக்கும்; ஜொலிக்கும்.

அடுத்து.....

வேறென்ன, இந்தப் புண்ணிய ராமஜென்மப் பூமி மதக் கலவரங்களே இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழும். கலவரங்களுக்கே இடம் தராமல் இந்து மக்கள்[அனைத்து இனத்தவரும் இந்துக்களாக மாறியிருப்பார்கள், அல்லது மாற்றப்பட்டிருப்பார்கள்] ஒற்றுமையுடன் சுபிட்சமாக வாழ்வார்கள்.
போற்றி போற்றி ராமச்சந்திர மூர்த்தி போற்றி!

வாழ்க... வளர்க... ராமஜென்மப் பூமி[‘இந்தியா’]! வெல்க ராமப்பிரானின் பக்தர்கள்!!
                                           
                                       *   *   *   *   *