
23.4.2026இல் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் என்பது பிரபல நடிகர் ‘விஜய்’ அவர்களின் கனவாக உள்ளது.மக்கள் பெருமளவில் வாக்களித்துத் தமிழ்நாட்டின் முதல்வராகத் தன்னை ஆக்குவார்கள் என்னும் நம்பிக்கை இல்லாததால், தன் பூர்வீகக் கடவுளான கர்த்தர் மட்டுமல்லாமல், இஸ்லாம் மசூதி, இந்துக் கோயில்கள், மனித அவதாரக் கடவுள் சாயி பாபா குடியிருக்கும் சீரடிக் கோயில் என்று அலைந்ததும் அலைவதும்[ஆதாரம்: மேற்காணும் செய்தி] விஜய் செய்த மாபெரும் தவறு.
காரணம், தன்னை மட்டுமே நம்பாமல் கண்ட கண்ட சாமிகளைத் தேடிப் போவதால், ஒவ்வொரு சாமியும் கடும் கோபத்திற்கு ஆட்பட்டு நடிகரைக் கண்டுகொள்ளாமல் இருந்திட வாய்ப்புள்ளது.
ஆகவே, 100% நம்பத்தக்க எங்கள் ஊர்க் கடவுளான[உலக அளவில் கோடானுகோடி மனிதர்களால் போற்றி வழிபடப்படுபவர்] ஆஞ்நேயர் எனப்படும் அனுமார் சாமியை வடை மாலை சாத்தி வழிபட்டால், விஜய் தமிழ்நாடு முதல்வர் ஆவது உறுதி.
குறைந்தபட்சம் ஒரு லட்சத்து எட்டு[1,00,008] வடைகளோ[மெதுவடை] அதற்கும் மேலேயோ கோத்த வடைமாலை சாத்தி வழிபடுகிறவர், கண்ட கண்ட சாமிகளைத் தேடிப்போகிற தவற்றைச் செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், அவரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறவர் வடைமாலைப் பிரியரான[வெறியர் என்றும் சொல்லலாம்] நாமக்கல் ஆஞ்சநேயர்.
இது உலகறிந்த உண்மை.
ஆகவே, நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருப்பதால், தலைவர் விஜய் அவர்களை, இன்றே நாமக்கல்லுக்கு வாடைமாலையுடன் வருகை புரிந்து[எவரும் அறியாமலிருக்க நடுநிசி வருகை மிகச் சிறந்தது] ஆஞ்சநேயரை வழிபடுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
வாழ்க விஜய்! பல்லாண்டு பல்லாண்டு அவர் ஆட்சி நீடிக்க அகிலம் புகழ் ஆஞ்சநேயர் அருள்புரிவாராக!!
