அத்தனை அதிகாரங்களும்[குறிப்பாக ராணுவம்] இந்த நாட்டை ஆளும் மோடி வகையறா கைகளில்.
தமிழ் மாணவர்களுக்குப் ’பட்டம்’ வழங்கவுள்ள மனோன்மணீயம் பல்கலைக் கழக விழாவில், நாம் நம் தாய்க்குச் சமமாக மதிக்கும் நம் தமிழ் மொழிக்கு மூன்றாம் இடம்தான் என்கிறது, தமிழல்லாத பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆளுநரின் ஆணை.
இதற்கான துணிவை அவருக்கு வழங்கியவர்கள், நம்மை அடக்கி ஆளுவதற்கான அத்தனை அதிகாரங்களையும் பெற்றுள்ள ’அவர்கள்’.
அந்த அதிகார வெறிதான் நம் தாய்மொழியை அவமானப்படுத்துவதன் மூலம் தமிழர்களாகிய நம்மையும் அவமானப்படுத்துகிறார்கள்; நாம்[தமிழர்கள்] அவர்களின் அடிமைகள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
உண்மையில் நாம் அவர்களின் அடிமைகள்தான். இதற்கு முன்பு ஆளுநர் தலைமையில் நடந்த நிகழ்வுகளில் தமிழ் இழிவுபடுத்தப்பட்டதை வாய் பொத்தி, வேறு எதையெல்லாமோ பொத்தி நம்மவர்கள் மௌனம் சுமந்து வேடிக்கை பார்த்ததே இதை உறுதிப்படுத்துகிறது.
நடக்கவுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக விழாவிலும், நம் தாய்மொழி[தமிழ்த்தாய் வாழ்த்து] 3ஆம் இடத்துக்குத் தள்ளப்படுவதும் நிகழவுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் அந்த 3ஆம் இடமும் பறிக்கப்படும். தேசப் பற்றை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் வந்தே மாதரமும் ஜனகணமனவும் போதும்; தேசப் பற்றுக்கு எதிரான மாநிலப் பற்றும் மாநில மொழிப் பற்றும் தேவையில்லை என்பார்கள்.
தன்மானம், இனமானம் பேசுபவர்களிடமிருந்து கொஞ்சமே கொஞ்சம் எதிர்ப்பும் கிளம்பாது, நம்மை அடக்கி ஒடுக்கி முடக்குவதற்கான அத்தனை அதிகாரங்களும் படைத்தவர்கள் ’அவர்கள்’ என்பதால்!
ஆகவே, அனைத்துத் தமிழர்களும், அல்ல, அல்ல தமிழ்நாட்டை[விரைவில் பெயர் மாற்றப்படலாம்> முன்னாள் ஆளுநன் எதிர்ப்புத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது] வாழ்விடமாகக் கொண்ட இந்தியர்கள் அனைவரும் அறியத்தக்கதாவது.....
இது புண்ணியப் பாரதம்[இந்தியா]. இங்கே கட்டாயம் பாடப்படுபவை வந்தே மாதரமும் ஜனகணமனவும் மட்டுமே[எதிர்காலத்தில் இன்னும் பல ’மாதரம்’ பாடல்களும் சேர்க்கப்படலாம்].
வாழ்க பாரதம்! வளர்க தேசப் பற்று!!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
