செவ்வாய், 12 மே, 2026

‘விஜய்’யின் சிறப்பு அதிகாரியாக ஒரு ஜோதிடன்! தமிழ்நாடு இனி ‘குரங்கு கையில் பூமாலை’!!

//‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்’ என்பவன் த.நா. முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்[அரசியல் பிரிவு> அதிகாரங்கள் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்]// என்பது சற்று முன்னரான செய்தி[சன் தொ.க. >நண்பகல் 01.45].

மூடநம்பிக்கை வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் ஒரு ஜோதிடன் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த மாபாதகச் செயலை, பக்தியுள்ளம் கொண்டவர்கள்கூடக் கண்டிப்பார்கள் என்பது உறுதி.

தனக்குப் பெருமளவில் வாக்களித்ததிலிருந்தே பெரும்பான்மைத் தமிழர்கள் படு படு படு முட்டாள்கள் என்பதை, இந்தப் புது முதல்வர் அத்துபடியாய்ப் புரிந்துகொண்டிருப்பதன் விளைவுதான்[பெரியார் இவரின் வழிகாட்டிகளில் ஒருவராம்!] ஒரு ஜோதிடனுக்கு உயர் அரசுப் பதவி அளிக்கப்பட்டிருப்பது.

இவரின் ஆட்சி நீடித்தால், தமிழ்நாடு மூடத்தனங்களின் விளைநிலம் ஆகும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இத்தகையதொரு பேரவலம் நிகழ்ந்துள்ள நிலையில்.....

‘தவெக’ சட்டமன்ற உறுப்பினர்களில் கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக அக்கட்சியிலிருந்து விலகுவார்கள்.

சட்டமன்றத்திலுள்ள மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள்[பெரும்பாலோர்] நாளை[13.05.2026] நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தவெக’ ஆட்சிக்கு எதிராக வாக்களித்து அந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறறிவாளர்கள் அதிகமா, அடிமுட்டாள்களா?

அறிந்துகொள்ள நாளைவரை காத்திருப்போம்.

                                    *   *   *   *   *

//சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்//[https://tamil.oneindia.com/news/chennai/ricky-rathan-pandit-vetrivel-appointed-special-officer-in-cm-s-political-wing-798903.html].

தமிழ்நாடு கட்சிக்காரர்களின் கலக்கல் ‘கட்டிப்பிடி’ தந்திரம்!!!

ரசியல் நாகரிகம் என்னும் பெயரில், தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும், முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்துப் பெறுவதோ, பொன்னாடை போர்த்து மலர்க்கொத்து கொடுத்து, அவரை அவர்கள் வரவேற்பதோ விரும்பத்தகாத ஒன்றல்ல; அது வரவேற்கத்தக்க அரசியல் நாகரிகமாகக் கருதப்படுகிறது.

ஆனால்,

ஆரத்தழுவுதல் அல்லது இறுக அணைத்தல் என்பது, அளப்பரிய அன்பைக் காட்சிப்படுத்தும் இரு நபர்களுக்கிடையேயானதொரு அபூர்வ நிகழ்வாகும். 

முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட எதிரணித் தலைவர்கள், முதல்வரைக் கண்டவுடன் கட்டித்தழுவி வரவேற்பது தேவையா?

தேவைதான். அது உண்மையான அன்பின் வெளிப்பாடு என்றால்.....

இனி இம்மாதிரியான நிகழ்வுகளின்போது வரவேற்பவர்கள் வரவேற்கப்படுபவரை, கட்டியணைப்பதோடு ‘உச்சி முகர்ந்து கன்னங்களில் மாறி மாறி முத்தமும் கொடுத்தால், அதைக் காணும் மக்கள் மெய் சிலிர்த்துப் புளகாங்கிதப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துவார்கள்.

செய்வார்களா நம் அரசியல்வாதிகள்?