வெள்ளி, 13 மார்ச், 2026

பதவி ஏற்றதும் பக்திமானாக அறிமுகமான அதிப் புத்திசாலி ஆளுநர்!!!

//தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்//[செய்தி].

மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், மாநில ஆட்சியாளர்கள் தத்தம் மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆட்சி நடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இழைத்தால் அது குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பவதற்கும்தான்.


மக்களுக்காகவே ஆளுநர்கள்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றவுடன் மக்களையல்லவா சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருத்தல் வேண்டும்.

இந்த ஆளுநர் கோயிலுக்குச் சென்று கபாலீஸ்வரைத் தரிசித்தாராம்.

“பதிவிக்காலம் முடியும்வரை என் குடும்பத்திற்கான அதிகபட்ச வசதி[வெற்று ஆடம்பரம்]க்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பாய் கபாலீ” என்று வேண்டிக்கொள்ளவா?

கடவுள்களால் வேறு பயன்கள் இல்லையெனினும், ‘மோடி’க் கூட்டம் தங்களைப் பரம யோக்கியர்கள்[‘பக்தியுள்ளவன் உத்தமன்’ என்பது மக்களின் நம்பிக்கை] என்று காட்சிப்படுத்தி மக்களிடம் வாக்குப்பெற உதவுகிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!!!!

வியாழன், 12 மார்ச், 2026

கையறுநிலைப் பெண்களின் கடைசிப் புகலிடம்!!!

ந்துநின்ற ஆட்டோவிலிருந்து கிராமத்திலிருக்கும் அம்மாவும் அப்பாவும் இறங்குவதைப் பார்த்து மகிழ்ந்த மல்லிகா, அப்பா கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.

மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனை, வழக்கமாகத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.

மருமகனைத் திண்ணையில் கிடத்திவிட்டு, "பார்த்த வேலையையும் பறிகொடுத்துட்டான். குடிக்க இவனுக்குப் பணம் ஏது?" என்று கேட்ட மல்லிகாவின் அப்பா மாதவன் அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார். அம்மா அவரின் காலடியில் முடங்கினாள்.

"வீடு கல்யாணம்னு சமையல் வேலைக்குப் போய் நான் சம்பாதிக்கிறேன்ல." -மல்லிகா.


"இனிமே பணம் கொடுக்காதே."


"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."


"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவான்."


"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம அவர் கேட்கும்போதெல்லாம் குடிக்கப் பணம் கொடுத்துடுறேன்” -ஆற்றாமையுடன் குரலில் வேதனை பொங்கச் சொன்னாள் மல்லிகா.


தலையில் கை வைத்துக்கொண்ட மாதவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னார்: “இந்தக் குடிகாரனை நம்பி மூனு பொண்ணுகளைப் பெத்துட்டே. அதுகளைப் படிக்க வைத்துக் கல்யாணம் பண்ணனும்னா ஓரளவுக்காவது சேமிக்கணும். கொடுத்து உதவுற அளவுக்கு என்கிட்டேயும் பணம் இல்ல. உனக்குச் சம்மதம்னா சொல்லு, நானே இவனை விஷம் கொடுத்துக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடுறேன்.”


“ஐயோ அப்பா…” -பெற்றவனின் கால்களைக் கட்டிக்கொண்டு, சற்று நேரம் கதறி அழுதாள் மல்லிகா; உங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க உயிரோடு இருப்போமா அப்பா?” என்று தேம்பினாள்.


“இவனைத் திருத்த வேற வழி தெரியலையேம்மா?” -கட்டிலில் சரிந்தார் அவர்.


தன் பங்குக்குச் சிறிது நேரம் தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்த்த அம்மாக்காரி, சுவரில் தொங்கிய சாமி படத்தைப் பார்த்து, “பிள்ளையாரப்பா, நீதான் என் மருமகனைத் திருத்தணும். கைவிட்டுடாதே சாமி” என்றவாறு படத்தின் முன்னால் நெடுநேரம் குப்புற விழுந்துகிடந்தாள்.