எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 28 பிப்ரவரி, 2026

அடங்காத காமமும் அடக்கப்படாத காமுகர்களும்!!!

மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது நம்மில் பெரும்பாலோர், “இவனையெல்லாம் உலகறியப் பொதுவிடத்தில் அம்மணப்படுத்தி, ஒவ்வொரு உறுப்பாய்ச் சிதைத்துச் சித்திரவதை செய்து சாகடித்தால்தான், பச்சிளஞ் சிசுக்களைப் பலாத்காரம் செய்யும் கொடூரங்கள் நிகழ்வதைத் தடுக்க இயலும்” என்று சொல்ல நினைப்போம்.

மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லைதான்.

ஆனாலும், மனிதர்கள் இப்படி மிருகங்களாக ஆவது ஏன் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது.

கள்ளங்கபடம் இல்லாத குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துமே தவிர, விபரீத இச்சையைத் தூண்டுவது எப்படி?


இவன்களின் மரபணுவில் குறைபாடா?


பெற்றோரின் வளர்ப்பு முறையில் நிகழ்ந்த தவறுகளா?


பக்குவப்படாத/படுத்தப்படாத மனமா?


தனிமனித  ஒழுக்கத்தில் அக்கறை காட்டாத சமுதாயமா? அரசாங்கமா?


இவனைப் போன்றவர்களுக்கு விலைமாதரை நாடிப்போய் இச்சை தணிக்கக் குறைந்தபட்ச வசதிகூட இல்லையா?


அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பதால் இவன்களின் குருதியில் காமம் இரண்டறக் கலந்துகிடக்கிறதா?


அனைத்திற்கும் மேலாக,  மனிதர்களை இவ்வாறான நாசகாரச் செயல்களில் ஈடுபடுத்தி வேடிக்கை பார்ப்பது கடவுளின் விருப்பமா?


சிசுக்களை வன்புணர்வு செய்தல் என்றில்லை, மனித இனத்தவர் செய்யும் பெரும்பாலான படு பயங்கரக் குற்றச் செயல்களுக்கு அடங்காத காமமே காரணமாக உள்ளது. 


இதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவுமான நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதீதக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

மோடியைப் ‘பின்தொடர்வோர்’[followers] 10 கோடி! அடேஏஏஏஏஏங்கப்பா!!

 ளுந்து வடை, பருப்பு வடை, வாழைப்பூ வடை, கீரை வடை, மசால் வடை என்று விதம் விதமாய் வடைகள் சுடுவதில்[பொய் பேசுவது] இவருக்கு இணையான தலைவர்கள் எவரும் இல்லை.

இவர் வடை சுடுவதைக் கண்டு கண்டு ரசிப்பவர்களா இந்த 10 கோடிப் பேர்?

கைவசம் உள்ள எண்ணற்ற வண்ண வண்ண ஆடைகளால்[நேரத்துக்கு ஒன்று] தன்னை அலங்கரித்து, ஏறு போல் நடை பயில்வதைப் படம் எடுக்கச்செய்து வெளியிடுகிறாரே, அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுபவர்களா அவர்கள்?

ஆண்டின் பெரும்பாலான நாட்களில், அயல்நாட்டு உறவை மேம்படுத்துவதாகச் சொல்லி, இவர் உலக நாடுகளுக்குச் சுற்றுலாச் செல்லும் நிகழ்வுகளை, ஊடகங்களில் பார்வையிட்டுத் தாமும் உலகம் சுற்றும் அனுபவத்தைப் பெறுகிறவர்களா அவர்கள்?

இவர் கோயில் கோயிலாகச் சென்று விழுந்து கும்பிடுகையில், தாங்களும் விழுந்து கும்பிட்ட அனுபவத்தைப் பெற்று[ஊடகங்கள் வாயிலாக]ப் புண்ணியம் சேர்க்கிறார்களே அந்தப் பக்திமான்களா அவர்கள்?

அந்த அவர்களின் எண்ணிக்கைதான் 10 கோடி என்றால்.....

10 கோடியில், இன்ஸ்டாகிராமில்[மோடியின் தளத்தில்] தாமாக இணைந்தவர்கள் எத்தனைப் பேர்?

இணைக்கப்பட்டவர்களின்[போலி முகவரியில்] எண்ணிக்கை என்ன?[//வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் போலி இணைப்புகள் போன்ற சமூக ஊடக மோசடிகள் இடம்பெறுகின்றன// -https://www.quickheal.co.in/knowledge-centre/how-to-spot-social-media-scams/]

அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் மக்களில் ஏராளமானவர்களுக்கு உள்ளது!