அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 31 ஜனவரி, 2020

அமேசான் கிண்டிலில் என் 30ஆவது நூல்[‘சதையும் கதையும்’]!

#காம உணர்ச்சியை அடக்கி ஆண்டவர் அல்லது முற்றிலுமாய்த் துறந்தவர் எவருமில்லை. மனப்பக்குவமும், ஏற்ற சூழ்நிலையும் வாய்த்தால் கட்டுப்படுத்தி வாழ்தல் மட்டுமே சாத்தியம்.

விரும்பியவாறு விரும்பியபோதெல்லாம் எவ்விதத் தடையும் இன்றி அனுபவிக்க இயலுமென்றால் இதனால் பெறும் இன்பம் நினைவுகூரத்தக்கது. மனித இனம் உருவாக்கிய சமுதாயக் கட்டுப்பாடுகளும், ஆதிக்க உணர்வும், சுயநலப் போக்கும் இதற்குத் தடைகளாக உள்ளன.

உண்மையில் நாம் அனுபவிக்கும் கொடிய பல துன்பங்களுக்கெல்லாம் இது முதற்காரணமாய் உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை. இந்தப் பொல்லாத உணர்ச்சியை மையச் சரடாகக் கொண்டு எழுதப்பட்டவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள்.

இவை நடந்த கதைகள் அல்ல; இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் சிந்தத்ததில்லை. வேறெந்த உணர்ச்சியையும்விட இவ்வுணர்ச்சியால்  விளையும் கேடுகள் குறித்து அவ்வப்போது சிந்தித்ததன் பயனே இக்கதைகள். 

நான் கதைகள் எழுதிடப் பயின்ற முப்பதைக் கடவாத  வாலிப வயதில் படைத்தவை இவை. ‘சேலம் மாலைமுரசு’ நாளிதழில்[வாரம் ஒரு முறை வெளியான இணைப்பு மலரில்] வெளியானவை.

கதைகளில் இடம்பெற்றிருந்த தூக்கலான பாலுறவு வர்ணனைகள் நீக்கப்பட்டுள்ளன.

வாசியுங்கள். தொய்வில்லாத கதை சொல்லும் உத்தியும், முற்றிலும் மாறுபட்ட கதைகளின் உள்ளடக்கங்களும் உங்களை வெகுவாகக் கவரும் என்பது என் நம்பிக்கை.

நன்றி.

கதைகள்:
1.ஊமைச்சியின் எச்சில்
2.ஓவியனின் கண்ணீரில் காவியம்
3.என்னைத் தழுவிக்கொள்!#

மேற்கண்டது நூலின் ‘அறிமுக உரை’. 

சதையும் கதையும் (Tamil Edition)

by ‘பசி’பரமசிவம்



Free with Kindle Unlimited membership

Or ₹49 to buy

Or ₹49 to buy

================================================================================================


நூலின் ‘அறிமுக உரை’ .....

காம உணர்ச்சியை அடக்கி ஆண்டவர் அல்லது முற்றிலுமாய்த் துறந்தவர் எவருமில்லை. மனப்பக்குவமும், ஏற்ற சூழ்நிலையும் வாய்த்தால் கட்டுப்படுத்தி வாழ்தல் மட்டுமே சாத்தியம்.
விரும்பியவாறு விரும்பியபோதெல்லாம் எவ்விதத் தடையும் இன்றி அனுபவிக்க இயலுமென்றால் இதனால் பெறும் இன்பம் நினைவுகூரத்தக்கது. மனித இனம் உருவாக்கிய சமுதாயக் கட்டுப்பாடுகளும், ஆதிக்க உணர்வும், சுயநலப் போக்கும் இதற்குத் தடைகளாக உள்ளன.
உண்மையில் நாம் அனுபவிக்கும் கொடிய பல துன்பங்களுக்கெல்லாம் இது முதற்காரணமாய் உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை. இந்தப் பொல்லாத உணர்ச்சியை மையச் சரடாகக் கொண்டு எழுதப்பட்டவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள்.
இவை நடந்த கதைகள் அல்ல; இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நான் சிந்தத்ததில்லை. வேறெந்த உணர்ச்சியையும்விட இவ்வுணர்ச்சியால்  விளையும் கேடுகள் குறித்து அவ்வப்போது சிந்தித்ததன் பயனே இக்கதைகள். 
நான் கதைகள் எழுதிடப் பயின்ற முப்பதைக் கடவாத  வாலிப வயதில் படைத்தவை இவை. ‘சேலம் மாலைமுரசு’ நாளிதழில்[வாரம் ஒரு முறை வெளியான இணைப்பு மலரில்] வெளியானவை.
கதைகளில் இடம்பெற்றிருந்த தூக்கலான பாலுறவு வர்ணனைகள் நீக்கப்பட்டுள்ளன.
வாசியுங்கள். தொய்வில்லாத கதை சொல்லும் உத்தியும், முற்றிலும் மாறுபட்ட கதைகளின் உள்ளடக்கங்களும் உங்களை வெகுவாகக் கவரும் என்பது என் நம்பிக்கை.
நன்றி.
கதைகள்:
1.ஊமைச்சியின் எச்சில்
2.ஓவியனின் கண்ணீரில் காவியம்

3.என்னைத் தழுவிக்கொள்!

நூலின் ‘அறிமுக உரை’ கீழே.....


வியாழன், 30 ஜனவரி, 2020

கடவுள்களின் கடவுள் மொழி தமிழ்!!!

தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்னும் தமிழர்களில் கோரிக்கைக்கு எதிராக, சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்னும் நபர், சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பாக நீதிமன்றத்தில்  அவருடைய வழக்கறிஞர் வாதிடும்போது.....

“சமஸ்கிருதம் தேவமொழி என்பதால் அதில் மந்திரங்கள் ஓதித்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இம்மாதிரியான பேர்வழிகளிடம் நாம் கேட்கும் கேள்வி, “இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் கில்லாடி வேலையைச் செய்யப் போகிறீர்கள்?” என்பதுதான்.

உங்கள் கூற்றுப்படி, தேவன் என்று ஒருவர் இருப்பது உண்மையானால் அவர் சமஸ்கிருதத்தை எப்போது உருவாக்கினார்? [உலகிலுள்ள அத்தனை மனித இனத்தவரும் தமக்கான ஒரு மொழியைத் தாமே படைத்துக்கொண்டிருக்கும்போது, சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இனத்தவர்களுக்கு மட்டும் தமக்கான ஒரு மொழியை உருவாக்கிக்கொள்வதற்கான அறிவு வாய்க்காமல் போனது ஏன்?]

தொடர்ந்து நீங்கள் இவ்வாறான ஒரு பொய்யைப் பரப்புரை செய்துகொண்டிருப்பீர்களேயானால், “தமிழ் தேவாதி தேவ பாஷை” என்னும் பொய்யை மனம் கூசாமல் சொல்லுவோம் என்பதை அறிவீர்களாக.

“சமஸ்கிருதம் அதிர்வலைகளைக் கொண்டது” என்று வழக்கறிஞர் கூறியிருக்கிறார்..

இப்படியொரு அதிர்வலை இருப்பதை ஏதேனும் ஒரு கருவியின் மூலம் உலகறிய நிரூபித்திருக்கிறீர்களா?

பொய் சொல்வதற்கும் ஓர் எல்லை இல்லையா?

சமஸ்கிருதத்தை உச்சரிக்கும்போது ஒருவித சக்தி பரவுவதாகவும் கதை அளந்திருக்கிறார் வழக்கறிஞர். நாம் எழுப்பும் மிக முக்கியக் கேள்வி......

அந்தச் சக்தியைக் கொண்டு நீங்கள் சாதித்தது என்ன? எத்தனை பேருடைய குறைகளைக் களைந்திருக்கிறீர்கள்? எத்தனை கெட்டவர்களை நல்லவர்கள் ஆக்கியிருக்கிறீர்கள்?

இனியும் இப்படி, சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று பொய் சொல்லிக்கொண்டிருப்பீர்களேயானால், ஒட்டுமொத்த தமிழர்களாலும் புறக்கணிக்கப்பட்டு நீங்கள் தனிமைப்படுத்தப் படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
========================================================================
கிண்டிலில் ‘என் பக்கம்’[Author Page]:
amazon.com/author/haipasi


செவ்வாய், 28 ஜனவரி, 2020

‘அணுகுண்டைவிடவும் ஆபத்தானது மதவெறி!’...விஞ்ஞானிகள்.

‘மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோர் மத வெறியர்களால் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.’ 

மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று, சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்படப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகளால் கையெழுத்து இடப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - இது இன்றையப் பத்திரிகைச்[தி இந்து 29.10.2015] செய்தி.
‘பல்வேறு வகைப்பட்ட மக்களின் சமூக, கலாச்சார இழைகள் பின்னிப்பிணைந்து உருவாக்கியுள்ள ஒற்றுமை உணர்வுதான், நம் நாட்டின் நாகரிகச் சிறப்புக்குப் பெரும் வலிமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் மத வெறியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு சமூகம் என்பது அணுகுண்டைவிடவும் ஆபத்தானது’ என்று கோரிக்கை வைப்பதற்கான காரணங்களையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்; தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது மட்டுமே தம் கடமை என்றிருந்துவி்டாமல், மதவெறி பிடித்த மூடர்களின் அடாவடித்தனங்களைக் கண்டித்திருப்பது போற்றத்தக்க செயலாகும்.

மேற்கண்ட மனு குறித்துக் குடியரசுத் தலைவர் நடுவணரசுக்குப் பரிந்துரை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகச் செய்தி ஏதும் வெளியாகவில்லை.

இன்றளவும் மதவெறியர்களின் கட்டற்ற வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
*************************************************************************************************

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

‘ஊமைச்சியின் எச்சில்!’ -புத்தம்புதிய ‘காம இச்சை’க் கதை!!!


பார்வதிக்கு நாளை கல்யாணம். ஆமாம், இந்த ஊமைச்சியைக் கைபிடிக்க எங்கிருந்தோ ஒரு மாப்பிள்ளை வந்து குதித்திருக்கிறான். 

தாலி கட்டிய ஜோரோடு அவன் ஊருக்கே இவளை அழைத்துக்கொண்டு போய்விடப் போகிறானாம். இது தெரிந்ததும் பித்துப் பிடித்துப் புலம்பியது என் இதயம்.

பழம் நழுவிப் பாலில் விழும் என்று எந்தப் பைத்தியக்காரன் காத்திருப்பான்? நான் காத்திருந்தேன். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் பறித்துச் சுவைக்கத் தவறிய என் கையாலாகாத்தனத்தை எண்ணி மனம் புழுங்கினேன்.

எதிர் எதிர் குடியிருப்பு. கதைவைத் திறந்தால் நடமாடும் ஓவியமாக என் கண்குளிரக் காட்சி தருவாள். கொடுத்துவைத்தவை இந்தக் கண்கள் மட்டும்தான் போலும் என்ற அரைகுறைத் திருப்தியுடன் கடந்த கொஞ்சம் காலத்தை வீணடித்துவிட்டேன்.

போன வாரத்தில்கூட ஒரு பொன்னான வாய்ப்புக் கிட்டியது. நழுவ விட்டுவிட்டேன்.

கிணற்றடியில் துவைத்த துணிகளை உலரப் போட்டுவிட்டுக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்தவாறு, தனது செவ்விதழைப் போல் சிவந்த கொய்யாக் கனி ஒன்றைச் சுவைத்துக்கொண்டிருந்தாள், விபத்தொன்றில் பேசும் சக்தியை இழந்துவிட்டிருந்த பார்வதி. குளிக்கச் சென்ற என்னைக் கண்டதும் இறங்கி நின்று புன்னகைத்தாள்.

“என்ன? அது” என்று என்றேன்.

பழத்தைக் காட்டினாள்.

“எனக்கில்லையா?” என்று கேட்டுக் கை நீட்டினேன்.

“இல்லை” என்பதாகக் கை விரித்து ஆட்டினாள்.

“அதைத்தான் கொடேன்” என்று அவள் ருசித்துக்கொண்டிருந்த பழத்தைக் காட்டினேன்.

“இது என் எச்சில்” என்பது போல் தன் இதழ் தொட்டுச் சாடை காட்டினாள். அவள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில், எச்சில் பழத்தைப் பறித்து என் வாயில் போட்டுக்கொண்டேன்.

நாண மிகுதியால் ‘குப்’பென்று சிவந்துவிட்ட முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள் பார்வதி.

“பார்வதி.” -மெல்ல அழைத்தேன்.

“உம்” கூட்டினாள்.

“என்னோடு சினிமாவுக்கு வர்றியா?”

“ஊஹூம்” என்பது போல் தலையாட்டினாள்.

“ஏன், பாட்டி திட்டுவாளா?”

அதற்கும் இல்லை என்பது போல் தலையசைப்பு.

“பின்னே?”

என்னை நிமிர்ந்து பார்த்தாள் பார்வதி. ஒரு கையால் தன் கழுத்தைத் தொட்டுக் காட்டிப் பரிதாபமானதொரு பார்வையை என் மீது நிலைக்கச் செய்தாள். “என்னை மனைவி ஆக்கிக்கொள்ளுங்கள். உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்” என்று சொல்வது போலிருந்தது அந்தப் பேதையின் பார்வை.

பாவம் பார்வதி.

ஐந்தாறு மாதப் பழக்கத்தில் என்னை ஒரு யோக்கியன் என்று நம்பிவிட்டாள். குடும்பப் பந்தம் என்னும் கயிற்றால் எனக்கு நானே சுருக்கு வைத்துக்கொண்டு, ஒற்றை மலரையே சுற்றி வந்துகொண்டிருக்கும் ஆள் அல்ல நான் என்பது அவளுக்குப் புரிய வாய்ப்பில்லை.

“எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் கல்யாணத்துக்குப் பிறகு நம் கல்யாணம்” என்று புளுகி வைத்தேன்.

அவளின் முகம் ஏமாற்றத்தால் வாடியது. அவநம்பிக்கை செறிந்ததொரு பார்வையை என் மீது வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

இப்படி இலவு காத்த கிளியாவேன் என்பது அப்போதே தெரிந்திருந்தால், கல்யாணம் என்னும் சடங்கை ஒப்புக்கு நிறைவேற்றிவிட்டு, சலிக்கும்வரை அவளை அனுபவித்துவிட்டு அடுத்த மலரை நாடி ஓடியிருப்பேன். அவள் மனம் இளகட்டும் என்று காத்திருந்தது பெரும் தவறாகிவிட்டது.

என் சிந்தனை ஓட்டத்தைச் சட்டென்று தடுத்து நிறுத்தியது ஒரு பெண் குரல்.
காமுப் பாட்டியின் குரல் அது.

பார்வதியின் வளர்ப்புத் தாயும் அவளுக்குள்ள ஒரே ஆதரவும் அவள்தான்...அந்தக் கிழவிதான்.

வெப்பக் கனல் தெறிக்கக் கத்தினாள் கிழவி. “ஏண்டி சும்மா அழறே? அழுது அழுது பட்டினி கெடந்து சாவு. உன்னை வேண்டாம்னு தடுக்க யாரும் இல்ல. இந்த மாப்பிள்ளை கசக்குதா, ஏண்டி ஊமைக் கோட்டான். நீ கெட்ட கேட்டுக்கு எந்த மன்மதன்டி உனக்கு மாலை சூட்ட வருவான்? இந்தப் பிள்ளையாண்டானுக்கு என்ன குறச்சலுங்கறேன். கூடிக் கூடிப் போனா அறுபது வயசிருக்கும். ஆம்பிள்ளைக்கு அறுபதெல்லாம் ஒரு வயசா? எழுந்திருடி. போய்ச் சாப்புடு. நான் கடைவீதி வரைக்கும் போய்ட்டு வர்றேன்.”
-
‘தரக்...தரக்’ என்ற மிதியடி ஓசை, கிழவி புறப்பட்டுப் போய்விட்டாள் என்பதை அறிவிக்கவே, என் மூளை சுறுசுறுப்படைந்தது. உடம்பில் சூடு பரவியது.

சொர்க்கத்தின் கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. நழுவ விடாமல் எப்படியும் நுழைந்துவிட வேண்டும். மனம் விரும்பாத ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தம். வளர்த்த கிழவியின் கண்டிப்பு. இந்த இக்கட்டான நிலையில் பார்வதி என் இச்சைக்கு நிச்சயம் இணங்குவாள். மறுத்தால்.....

பலவந்தம்தான்.

இங்கு என்ன நடந்தாலும் இப்போது ஏனென்று கேட்க எவருமற்ற தனிமை. என் பசிக்கு இரையாகப் போகிறவளோ, தான் பலவந்தப்படுத்தப்பட்ட சோகக் கதையை எவரிடமும் எடுத்துச் சொல்ல இயலாத ஊமை.

என் அறிவு உணர்ச்சிக்கு அடிமையானது. பள்ளத்தில் பாயும் வெள்ளமாக, பார்வதி இருந்த அறையை நோக்கித் தாவினேன்.

கை பட்டதும் திறந்துகொண்டது கதவு. துணிந்து உள்ளே நுழைந்தேன். என் வரவால் முதலில் திடுக்கிட்டாலும் சில நொடிகளில் வழக்கம் போல குழந்தைத்தனமானதொரு புன்னகை அவளின் முகத்தில் படர்ந்தது. கையிலிருந்த ஏதோ ஒரு பொருளை முதுகுப்புறமாக மறைத்துக்கொண்டாள்.

“என்ன அது?” என்றவாறு அவளை நெருங்கினேன்.

ஒரு கையை மட்டும் விரித்துக் காட்டிச் சிரித்தாள்.

“எங்கே, அந்தக் கையைக் காட்டு” என்று கேட்டு இடைவெளியைக் குறைத்தேன்.

பொருள் கை மாறியது. வெறுமையாய் இருந்த இன்னொரு கையைக் காட்டினாள்.

“ஏய், என்னையா ஏமாத்துறே. ரெண்டு கையையும் ஒருசேரக் காட்டு” என்று கூறிக்கொண்டே அவளின் கைகளைப் பற்ற முயன்றேன்.

அவள் பின்வாங்கினாள். நான் முன்னேறினேன்.

கண்ணிமைப் பொழுதில் தன் கையிலிருந்த பொருளை வாயில் திணித்துக்கொண்டாள் பார்வதி.

அது, உரித்த வாழைப்பழம்.

“எச்சில் படுத்திவிட்டால் விட்டுவிடுவேனா? உன் எச்சிலைச் சுவைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்” என்றவாறு அவளைத் தாவி அணைத்தேன்.

அவளின் வாய்க்குள் அடங்காமல் வெளிப்பட்டிருந்த பழத்தின் ஒரு பகுதி இப்போது என் வாய்க்குள். அதை மிச்சமில்லாமல் விழுங்கினேன்.

என்னுள் பெருக்கெடுத்து அலைமோதிக்கொண்டிருந்த காமம் கரையை உடைத்துக்கொண்டது. வெறியனாகி அவளை இழுத்து அணைத்து இறுக்கினேன். அமுதம் சுரக்கும் அழகிய வழவழத்த இதழ்களில் என் உதடுகளை அழுந்தப் பதித்தேன். இதழ் நீரை அசுரத்தனமாக உறிஞ்சிச் சுவைத்தேன்.

திடீர் அரவணைப்பால் நிலைகுலைந்த பார்வதி, விடுபடப் போராடினாள். எப்படியோ வளைந்து நெளிந்து வழுக்கிக்கொண்டு விடுபட்டு நின்றாள்.

முந்தானை நெகிழ்ந்து சரிய, கட்டுவிடாத பருவ மொட்டுகள் என் உணர்ச்சிகளை மேலும் கட்டவிழ்த்து விட்டன. சிறிதும் தணியாத தாபத்துடன் மீண்டும் அவள் மீது தாவினேன்.

நழுவிப் போக்குக் காட்டினாள். சுழன்று சுழன்று ஓடினாள். விடுவேனா? சூழ்ந்து சூழ்ந்து அவளைத் துரத்தினேன் நான்.

பெண்ணல்லவா? சிறிது நேரத்தில் சோர்ந்து தரையில் சரிந்துவிட்டாள். துவண்டு கிடந்த அந்தத் தோகை மயிலின் மீது சரிந்து சாய்ந்து தழுவிச் சுகம் காண முயன்றபோது.....

நெஞ்சில் தீப்பற்றிக் கொண்டாற்போன்ற பயங்கர எரிச்சல்! கொடூரமான வலி!

என்ன இது? ஏன் இப்படி? பார்வதியிடம் பறித்துச் சுவைத்த பழத்தில் ஏதாவது.....

மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டு பலம் கொண்ட மட்டும் கத்தினேன்.  “ஏய், ஊமைச்சி, பழத்துக்குள்ளே விஷம் சேர்த்திருந்தியா?”

பதிலில்லை. அவளை உற்று நோக்கினேன்.

உடலோடு உயிர் கலந்திருந்த காலத்திலேயே பேசும் சக்தியை அவளுக்கு ஆண்டவன் அருளவில்லை. இப்போது எப்படி அவள் பேசுவாள்?
========================================================================

சனி, 25 ஜனவரி, 2020

தமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவர் மூவர், 2019ஆம் ஆண்டு நீட் தேர்வைத் தமிழ் வழியில் எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

571 மதிப்பெண் பெற்ற ஈ.சரவணனும், 544 மதிப்பெண் பெற்ற எம்.குபேந்திராவும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயில்கின்றனர்.

மாணவர் கார்த்திகேயன் திருச்சி கேஏபி விஸ்வநாதன் கல்லூரியில் பயில்கிறார்.

எஸ்ஆர்வி பள்ளியில் இந்த ஆண்டு தமிழ் வழியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழில் நீட் தேர்வு எழுதத் தயாராகி வருகிறார்கள். “அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது” என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழில் நீட் எழுதிச் சாதித்த மாணவர்களையும் இனி எழுத இருப்போரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.  

மாணவர்களை ஊக்குவித்துத் தமிழில் எழுதத் தூண்டிய எஸ்ஆர்வி நிர்வாகத்தினரையும், இம்மாதிரிச் செய்திகளைத் தேடி எடுத்து வெளியிடுகிற ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியிடுவோரையும் பாராட்டி மகிழ்கிறோம்.

நன்றி.
நன்றி: ‘இந்து தமிழ்’[25.01.2020] நாளிதழ்

வெள்ளி, 24 ஜனவரி, 2020

தமிழில் குரூப் -1 தேர்வு எழுதி D.S.P ஆகும் கிராமத்துப் பெண்!!!

sivakasi-woman-passes-group-1-exam
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இரு குழந்தைகளுக்குத் தாய். பிளஸ் 1 படிப்பைப் பாதியில் கைவிட்டவர்.

‘விட்ட படிப்பைத் தொடர வேண்டும்; தேர்வுகள் எழுதி உயர் பதவிக்குச் செல்ல வேண்டும்’ என்ற இலட்சியத்துடன், இரவு நேரங்களில் ஓய்வு கிடைக்குப்போது படித்து 2013இல் தனித் தேர்வு மூலம் +2 எழுதி 1070 மதிப்பெண்கள் பெற்றார்.

2014இல் குரூப் -4 எழுதித் தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளர் பதவி பெற்றார்.

2018இல் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர், தமிழில் குரூப் -1, குரூப்-2 தேர்வுகள் எழுதி இரண்டிலும் வெற்றி ஈட்டினார்.

தரமான நூல்களைத் தேடிப் படித்ததோடு பயிற்சி மையங்களின் வழிகாட்டுதலையும் பெற்றுத் தேர்வு எழுதிச் சாதனை நிகழ்த்தியுள்ளார் காமாட்சி.

அவர் சொல்கிறார்: “தமிழில் தேர்வு எழுதி வெல்ல முடியுமா என்னும் அச்சத்தைப் புறம் தள்ளி வெற்றி பெற்றுள்ளேன்.”

காமாட்சி போன்ற கொள்கைப் பிடிப்புள்ள பெண்களால் தமிழ் வாழும் என்பது 100% உறுதி.

காமாட்சிக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
========================================================================
நன்றி: 'இந்து தமிழ்' நாளிதழ் 24.01.2020

வியாழன், 23 ஜனவரி, 2020

நடிகர் ரஜினிக்கு நன்றி சொல்லுங்கப்பா!!!

‘துக்ளக்’ பத்திரிகை விழாவில், நடிகர் ரஜினிகாந்து, 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் நடத்திய கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில், கடவுள்களாகக் கருதப்படும் ராமன் சீதை முதலானவர்களின் பிறந்தமேனி உருவச்சிலைகள்[படங்களும்?] செருப்பால் அடிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
தி.க.வினர் முதலான கடவுள் மறுப்புக் கொள்கையுடைய அணியினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றங்களிலும் ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 

ரஜினிக்கு ஆதரவாகப் பா.ஜ.கட்சியினரும் ஆன்மிகவாதிகள் சிலரும் தத்தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குரல் எழுப்புவோரும் உள்ளனர்.

பெரியார் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை, மக்களிடையே ‘கடவுள் இல்லை’ என்னும் கருத்தைப் பரப்புவதற்காகச் செலவிட்டவர். “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் அயோக்கியன்...” என்றெல்லாம் அஞ்சாமல் ஆன்மிகவாதிகளையும் பக்தர்களையும் சாடியவர். ரஜினி நினைவுகூர்ந்தாற்போல கடவுள்களை அவமானப்படுத்தியும் இருக்கலாம்.

கடவுள்கள் குறித்த ஆபாசக் கதைகளைப் பரப்புரை செய்ததும் அவர்களின் சிலைகளைச் செருப்பால் அடித்ததும், ‘கடவுள் இல்லை’ என்பதையும், அவரை வழிபடுவதால் எந்தவிதப் பின்விளைவுகளும்  இல்லை என்பதையும் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே. 

அவர் மறைந்து மிகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் அன்று பரப்புரை செய்த கருத்துகளையும், சிலைகளை உடைத்தல் போன்ற அவரின் செயல்பாடுகளையும் மக்களில் பெரும்பாலோர் மறந்திருக்கக்கூடும்.

நடிகர் ரஜினியின் துக்ளக் விழாப் பேச்சு இப்போது நம் மக்களுக்கு அவற்றை நினைவுபடுத்தியிருக்கிறது. எனவே, ரஜினியின் பேச்சுக்குக் கடவுள் மறுப்பாளர்கள் என்றில்லை; மூடநம்பிக்கைகளை ஒழிக்க விரும்புகிற அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நன்றி ரஜினி!
========================================================================

புதன், 22 ஜனவரி, 2020

தெரியாதய்யா...தெரியாது, தெரியாது!!!

‘கடவுள் தோன்றவில்லை. அவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர்[ஆதியும்
அந்தமும் அற்றவர்]; என்றும் இருப்பவர்’ என்ற கருத்து நிலவுவதை நாம் அறிவோம். இப்போதைக்கு அவர் ‘தோன்றியவர்’ என்றே வைத்துக் கொள்வோம். [‘அது என்ன வைத்துக் கொள்வது?’ என்ற  கேள்வியெல்லாம் இங்கு வேண்டாம்]

சில உண்மைகளைக் கண்டறிய இம்மாதிரி, தற்காலிகமான ஒரு நிலையை ஏற்பது அவசியமாகிறது.

கடவுள் எப்போது தோன்றினார்?
எவ்வளவு ‘காலத்துக்கு’ முன்னால்?

[இப்போதைய ‘ஆண்டுமுறை’ என்பது ஒருவர் அல்லது ஒன்றின் தோற்றத்தைத் தொடக்கமாகக் கொண்டு, மனிதன் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்டது.   மணி, நாள், மாதம் போன்றவை, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை.]

‘காலம்’ என்னும் மகா...மகா...மகா...மகாப் பெரும் வெள்ளத்தோடு ஒப்பிட் டால், மனிதனின் இந்த ஆண்டுக் கணக்கு சிறு கடுகு! கடுகுக்குள் ஒரு துணுக்கு. துணுக்குக்குள் துணுக்கு. அதற்குள்ளும் சிறு துணுக்கு.

உண்மையில் ஆண்டு என்ற ஒன்று இல்லவே இல்லைபொருள்களின் இயக்கங்களை வைத்துத்தான் காலம் வரையறுக்கப் படுகிறது.

வெளியில் எதுவுமே இல்லை என்ற ஒரு நிலையை அனுமானம் செய்து பாருங்கள். [அப்படி ஒரு நிலை சாத்தியமா என்பது மிக ஆழமான, கால வரையற்ற ஆய்வுக்கு உட்பட்டது]. எதுவுமே இல்லை; அதாவது எங்கும் எப்பொருளும் இல்லை எந்தவித இயக்கமும் இல்லை என்னும் போது காலம் என்ற ஒன்றைக் கற்பனை செய்வதும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

திசையும் அப்படித்தான். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு.... எனப்படும் திசைகள் எல்லாம், சூரியனை மையமாகக் கொண்டு மனிதனே ஏற்படுத்திக் கொண்டவை.

சூரியன் இல்லையென்றால் இவையெல்லாம் இல்லை.

நம் ஆய்வுக்கு இந்தத் துக்கடா ஆண்டுக் கணக்கெல்லாம் உதவாது.

ஒரு பெரிய ‘கால அளவு’ தேவை. சூரியன் ஒரு முறை தோன்றி மறைவதற்கான கால இடைவெளியை, ஒரு ‘சூரிய ஆண்டு’ எனக் கொள்வோம்.

கடவுள் எத்தனை சூரிய ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினார்?

நூறு கோடி சூரிய ஆண்டுகளா?.....ஆயிரம் கோடியா?..... லட்சம் கோடி சூரிய ஆண்டுகளா?..... இன்னும் கோடானுகோடியோ கோடி சூரிய ஆண்டுகளா?......என்று மனிதன் தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக்கொண்டே இருந்தாலும் விடை கிட்டாதுதானே?!

அன்பு கொண்டு இந்தக் கால அளவீட்டு முறையைச் சிறுபிள்ளைத்தனம் என்று கருத வேண்டாம். ஆக, ‘காலம்’ என்பதும், ‘வெளி’யின் பரப்பைப் போலவே அளந்து அறிய முடியாத ஒன்று என்பது தெளிவாகிறது அல்லவா?

அதாவது, ‘காலம்’ என்பதன் ‘ஆரம்பம்’ அல்லது ‘முடிவு’ பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

இந்தத் ‘தெரியாது’ என்பதை ஒப்புக் கொள்வதற்குப் ’பெருந்தன்மை’ வேண்டும்.

இது நம் மதவாதிகளுக்கும் ஆன்மிகப் பெரியோர்களுக்கும் இருந்திருந்தால் கடவுள் என்ற ஒருவர் கற்பனையில் உதித்திருக்க மாட்டார். கணக்கற்றகலவரங்களுக்கும் உயிப்பலிகளுக்கும் காரணமான மதங்கள் தோன்றியிருக்கவே மாட்டா.
========================================================================
புதுப்பிக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுப் பதிவு.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அமேசானும் நானும்!

அமேசான் கிண்டிலில், ஏற்கனவே 19 நூல்கள் இணைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களில், ‘செல்லம்மா தேவி[நாவல்] முதலான 10 நூல்களை எழுதிச் சேர்த்திருக்கிறேன்.

நூல்களின் விற்பனை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லையென்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான கிண்டில் சந்தாதாரர்கள் இலவசமாக என் நூல்களை வாசிக்கிறார்கள்.

வாசிக்கப்படும் பக்கங்களுக்கும் விற்பனையான நூல்களுக்குமான தொகையைக் கணக்கிட்டு மாதம் தவறாமல் என் வங்கிக் கணக்கிற்கு அமேசான் அனுப்பிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த நூல்களுக்கான பட்டியல்:


1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)


2. கானல்நீர்க் கடவுள்கள்!!!: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் (Tamil Edition)

3. அமேசானில் 'மின் நூல்' பதிப்பித்தல்... ஓர் அனுபவப் பகிர்வு (Tamil Edition)

4. அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)

5. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Editio

6. பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)

7. உள்ளுறை காமம்: குறும்புதினம் (Tamil Edition)

8. மசுரு விதி (Tamil Edition)

9. ஜோதிடச் சனி!: ஜோதிடம் குறித்த அசத்தல் ஆராய்ச்சி (Tamil Edition)

10. 100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)

11. விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர்கள் குறித்த சாமானியனின் சிந்தனைகள் (Tamil Edition)

12. 'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள் (Tamil Edition)

13. ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)

14. சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: அறிவுஜீவிகளுக்கான ஓர் அறிவுஜீவியின் ஆய்வுரைகள் (Tamil Edition)

15. மூடர் யுகம்: மூடர் யுகம் மூடர் யுகம் மூடர் யுகம் (Tamil Edition)

16. பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும் (Tamil Edition)

17. நான் இன்னொரு ஹிரண்யன்!!!: சுய சிந்தனைத் தொகுப்பு (Tamil Edition)

18. வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)

19. மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: சிந்திக்கத் தூண்டும் ‘சுரீர்’ விமர்சனங்கள்! (Tamil Edition)

20. செல்லம்மா தேவி: [நாவல்] (Tamil Edition)

21. அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

22. கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)

23. நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)

24. கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதைகளின் தொகுப்பு (Tamil Edition)

25. சாத்தானே என் கடவுள்!!! (Tamil Edition)

26. ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!! (Tamil Edition)

27. நான் கேள்வியின் நாயகன்! (Tamil Edition)

28. சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்! (Tamil Edition)

29. தமிழா தூங்குடா! தூங்கு!! (Tamil Edition)

சனி, 18 ஜனவரி, 2020

ஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்!

ஆனந்த விகடன் தரத்திலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் வார இதழ் ஆகும். தமிழைப் போற்றுவதிலும் நம் போற்றுதலுக்குரிய இதழாகத் திகழ்கிறது.

‘ஜூனியர் விகடன்’, விகடன் குழுவினரால் வெளியிடப்பட்டு விற்பனையிலும் சாதனை நிகழ்த்துகிறது என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றுதான்.

21.01.2020 தேதியிட்ட இவ்விதழில், ‘கழுகார் கேள்வி பதில்’ பகுதியில் வெளியான, தஞ்சை மாவட்டம் கருத்தட்டாங்குடியைச் சேர்ந்த வி.வெற்றி என்ற வாசகரின் கேள்விக்குக் கழுகார் அளித்த பதில் விகடன் குழுவினரின் தமிழ்ப் பற்றுக்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

கேள்வி:
’தஞ்சாவூர்ப் பெரிய கோயில் குடமுழுக்கு வைபவத்தைத் தமிழ்முறைப்படி நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை நியாயமானதுதானே?

பதில்:
நியாயமானதுதான். கோயில் இருப்பதே தமிழகத்தில்தான் எனும்போது சிவனடியார்களின் கோரிக்கையைக் கட்டாயம் ஏற்க வேண்டும். ஆண்டவனுக்கு அத்தனை மொழிகளும் அத்துபடியா இருக்கலாம். ஆனால், அவனுக்கு முன்பாக நிற்பவர்களுக்குப் புரியும் மொழியில் நடத்துவதுதான் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விகடனுக்கு நன்றி. மீண்டும் நம் பாராட்டுகள்.
===========================================================================