எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 9 மார்ச், 2024

அயோக்கியர்கள் கட்டிவிட்ட அர்த்தமற்ற ‘சிவராத்திரி’க் கதை!!!

மிக முக்கிய அறிவிப்பு: சிவராத்திரி பற்றியும் அதைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தும் சுயநலமிகள் பற்றியும் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் இல்லைதான். ஆயினும், அந்த அதிசய ராத்திரி குறித்து அனைவரும் அறிந்திடல் மிக அவசியம் என்று நாம் எண்ணியதால் இந்தப் பதிவு.

//இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களின் இருப்பே அறியப்படவில்லை..

இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்[ஏற்கனவே இருந்த உயிர்களை படைத்தார்?]. 


மனம் மகிழ்ந்த உமையம்மை, நான் தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று மக்கள் யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


இறைவனும் “அவ்வாறே ஆகட்டும்” என்று அருள் புரிந்தார்//


***இது, விக்கிப்பீடியா தரும் ‘சிவராத்திரியில் கண் விழித்திருத்தல்’ தொடர்பான கதை.


இந்தக் கதையில் ஏகப்பட்ட குழறுபடிகள் உள்ளன.


‘ஊழிக்காலம்’ கேள்விப்பட்டிருக்கிறோம். பேரழிவுக்காலம் அது. அண்டவெளியிலுள்ள அனைத்தும் மிச்சம் மீதி இல்லாமல் அழிந்துபோவது.


அப்படியான ஓர் அழிவு எப்போது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? நிகழ்த்தியவர் சிவனா? ஏன் நிகழ்த்தினார்? அவர் மட்டும் பேரழிவில் சிக்காமல் இருந்தது எப்படி?


இந்தக் கேள்விகளுக்கான பதில் எவருக்கும் தெரியாது[எல்லாம் நம்பிக்கைதான் என்று சொல்லி இருக்கும் அறிவை நாசமாக்க வேண்டாம்].


அழிந்துபோன உயிர்களும் பொருள்களும் சிவனுக்குள் ஒடுங்கினவாம். அதாவது சிவபெருமான் என்னும் கடவுளுக்குள் இரண்டறக் கலந்துவிட்டன என்பது கதை.


இந்த நிகழ்வுகளைப் பார்த்தவன், அல்லது பார்த்தவர்கள் எவர், எவரெல்லாம்?


எவருமில்லை.


எனினும்.....


சிவனின் மனைவியான பார்வதி தேவி பார்த்தார் என்பது கதை.


கடவுள் இருப்பே மனிதனின் ஆறறிவால் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அந்தச் சிவனுக்குக் கல்யாணம் கட்டி வைத்தவர்கள், வேலை வெட்டி இல்லாமல் தங்களைக் கடவுளின் பிரதிநிதிகளாக்கி, உழைக்கும் மக்களை நம்ப வைத்து வயிறு வளர்த்த அயோக்கியர்கள்.


அம்மையார் இரவு முழுக்கத் தன் மணாளனை நினைத்துத் தியானம் செய்ததால் மனம் இரங்கி, தன்னுள் ஒடுங்கிக் கிடந்த உலகங்களையும் உயிர்களையும் வெளிப்படக் காட்சியளிக்க அருள்புரிந்தாராம் முழு முதல் கடவுள்(இந்த நிகழ்வுகளைக் கதை கட்டியவர்கள் அறிந்தது எப்படி?).


விடிய விடியக் கண்விழித்து[கடவுள்களும் உறங்குவார்களோ?]த் தியானம் செய்யாமல், “ஏனுங்க, உலகங்களையும் உயிர்களையும்  உங்களுக்குள் ஒடுங்கச் செய்தீங்க? பழையபடி வெளியே அனுப்பிடுங்க” என்று மனைவி சொல்லியிருந்தால் சிவனானவர் அதைச் செய்திருக்கமாட்டாரா?


செய்யாமாட்டார் என்றெண்ணித் தவம் இருந்தார் அம்மை; அதன் விளைவாக, உலகமும் உயிர்களும் விடுவிக்கப்பட்டன[கதை]. 


அப்புறமும் எதற்குப் பாவப்பட்ட உயிர்களெல்லாம் பட்டினி கிடந்து விடிவளவும் கண்விழித்துக்  கடவுளை வழிபட வேண்டும்?


மீண்டும் சொல்கிறோம், இதைக் கட்டிவிட்டவர்கள் அயோக்கியர்கள்; ஏமாற்றுக்காரர்கள்.


மிகப் பல ஆண்டுகளாக, இந்தக் கட்டுக்கதையை உண்மை என்று நம்பி மக்கள் முட்டாள்களாகவே வாழ்கிறார்கள். 


முட்டாள்களாகவே வாழவைத்திட முழுமூச்சுடன் தொடர்ந்து ஈடுபடும் போலி ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவன் போன்றவர்களையும் அயோக்கியர்கள் என்று சொல்லலாமா?


சொல்வது நம் விருப்பம் அல்ல. அவர்களையும் அவர்களை நம்புகிறவர்களையும் ‘அப்பாவிகள்’ என்போம்.


அப்பாவிகளை அறிவுடையவர்களாக ஆக்கப் பாடுபடுவோம்.


நல்லனவே நடக்கும் என்று நம்புவோம்.


மனிதர்கள் வாழ்க! மனிதம் வாழ்க... வளர்க!!

                                           *   *   *   *   *

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

தமிழச்சியின் தாள் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி! அவருக்கே நம் ஓட்டு!!

தில்லியில் நடபெற்ற  விழா ஒன்றில் விருது[கதை சொல்லல் பிரிவு] பெறவந்த இளம் பெண்ணின் காலை மும்முறை தொட்டு வணங்கிப்[“நாட்டில் பாதங்களைத் தொட்டு வணங்குவது பாரம்பரியமாக இருக்கிறது. கலைத் துறையில் ஒருவர் காலில் விழும்போது, அப்போதைய மனவுணர்வு வேறுபட்டதாக[மகிழ்ச்சி தருவதாக] இருக்கும்” என்று காரணமும் சொல்லியிருக்கிறார்] பெண்னினத்தின் பெருமை போற்றிய பிரதமர் மோடியின் செயல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் அவரின் அருங்குணத்தைப் பாராட்டுகிறார்கள்.

வரலாறு காணாத இந்த அதிசய நிகழ்வுக்குக் காரணமானவர் ஒரு தமிழ்ப் பெண்[காணொலி காண்க] என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் புளகாங்கிதம் கொள்ளச் செய்திருக்கிறது.

காந்தியடிகளைப் போல் பெண்ணினத்தைப் போற்றியவர் எவரும் இல்லை. அவர்கூட ஒரு வயசுப் பெண்ணின் கால்களைத் தொட்டு மகிழ்ந்ததாக வரலாறு இல்லை. பெண்ணைத் தெய்வம் என்று சொன்ன நம் ஊர் ‘திரு.வி.கல்யாண சுந்தரனார்’ உட்பட, உலகம் போற்றும் வேறு எந்தவொரு தலைவரும் இதைச் செய்ததாக அறியப்படவில்லை.

மோடி அவர்கள், ஒரு தமிழ்ப் பெண்ணின் கால் தொட்டு வணங்கியதை, அவர் தமிழ்நாட்டிலுள்ள அத்தனைத் தமிழச்சிகளின் பாதங்களையும் தொட்டு வணங்கியதாகக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தப் பெருந்தகைக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் தமிழ்ப் பெண்கள்.

தங்களினப் பெண்ணை வணங்கிப் போற்றியதற்காக இங்குள்ள ஆடவர்களும் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்தான்.

வாயளவில் மோடிக்கு நன்றி சொன்னால் போதாது என்பதால், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அவருக்குத் தமிழர்கள் தவறாமல்  வாக்களிப்பார்கள். பிற ‘பாஜக’வினருக்கு அல்ல.

‘பாஜக’ தமிழர் நலனுக்கு எதிரானது. எனினும், பிரதமர் மோடியைப் பொருத்தவரை அவரின் சில குணாதிசயங்கள் நம் போற்றுதலுக்குரியவை!