'சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு மதம் பிடித்தது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்கிகொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கியது. 8 பேருக்குக் காயம். பாகன் கஜேந்திரன் கொல்லப்பட்டார். கோயில் நடை சாத்தப்பட்டது. யனைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முயற்சி.....' -இது இப்போது [நண்பகல் 12.00 மணி] 'தந்தி' தொலைக்காட்சி அறிவித்துக்கொண்டிருக்கும் செய்தி.
'ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, பாகனைக் கொன்ற மசினி என்னும் யானை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்பது புத்தம் புதிய செய்தி[12.45 மணி].
கடவுள் ஒருவரே என்று உங்களின் ஆன்மிக வழிகாட்டிகள் அறிவுறுத்தியும், ஈஸ்வரன், விக்னேஸ்வரன், பெருமாளு, அலமேலு, கந்தசாமி, கருப்புசாமி, காளியம்மா, மாரியம்மான்னு மானாவாரியா சாமிகளை உற்பத்தி பண்ணியிருக்கீங்க; கோயில் கட்டிக் கும்பிடுறீங்க.
''உண்டு தின்று உடம்பை வளர்த்து, உடலுறவில் இனவிருத்தி செய்து ஒரு நாளில் இல்லாமல் போகிறவன் மனுசன். இவன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது. கடவுளின் பிரதிநிதின்னு வேஷம் போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறவர்கள் அயோக்கியர்கள்''னு, உங்களுக்குள்ளேயும் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திக்கிறவங்க சொன்னால் கேட்க மறுக்கிறீங்க; குடும்பம் குடும்பமா, கூட்டம் கூட்டமாப் போயி விழுந்து கும்பிடுறீங்க; ஆசீர்வாதம் வாங்குறீங்க.
மனுஷ சாமிகள்கிட்ட ஆசி பெறுவதோடு நிக்கிறீங்களான்னா, ஊஹூம்.
ஒரு சாமிக்குப் பசுமாடு வாகனம். இன்னொரு சாமிக்குப் பெருச்சாளி வாகனம். இன்னும் ஒரு சாமிக்குப் பருந்து வாகனம்னு உங்க மூதாதையர்களில் சிலர் கட்டிவிட்ட கதைகளையெல்லாம் உண்மைன்னு நம்பி.....
பசுமாட்டுக்குப் பூஜை பண்ணி வழிபடுறீங்க. பெருச்சாளிக்குக் கோயில் கட்டிக் கும்பிடுறீங்க. இரை தேடி ஆகாயத்தில் அலையுற கழுகைக் கண்டா கன்னத்தில் போட்டுக்கிறீங்க.
யானை ஒரு மிருகம். காடுகளில் வாழ்ந்து இனவிருத்தி செஞ்சி வாழ்றது அதன் இயல்பு. அதையும் நீங்க விட்டுவைக்கல. கோயிலில் கட்டிவெச்சி, தும்பிக்கையைத் தூக்கி உங்க தலையைத் தொட்டுத் தடவுறதுக்குப் பாகனைக் கொண்டு பழக்குனீங்க.
பழக்க தோசத்துல அது தலையைத் தடவினா, நீங்க கும்பிடுற சாமியே உங்க தலையைத் தடவி ஆசீர்வாதம் பண்ணுறதா நம்புனீங்க. மத்தவங்களையும் நம்ப வைச்சீங்க. நீண்ட நெடுங்காலமா இந்த மூடநம்பிக்கையிலிருந்து உங்களால் விடுபட முடியல. விளைவு.....
இன்று ஒரு பாகன் பலி. ஆசீர்வாதம் வாங்கப்போன பலருக்குக் காயம். இதற்கு முன்பும் இது மாதிரி உயிர்ப்பலிகளும் காயம்படுதலும் நிகழ்ந்திருக்கு.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும் கொஞ்சம் சிந்தியுங்கள். மனிதர்களை வழிபடுவதையும் விலங்குகளிடம் ஆசீர்வாதம் பெறுவதையும் நிறுத்துங்கள்.
செய்வீர்களா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000

