ஆன்மிகம் என்னும் பெயரில், நாளிதழ்கள் உட்பட இங்குள்ள அத்தனை ஊடகங்களும் மூட்டை மூட்டையாக மூடநம்பிக்கைகளைத் திணித்து, மக்களின் மனங்களைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றன.
தினம் தினம் சாமிகளுக்கு விதம் விதமாய் அபிஷேக ஆராதனைகள், திருவிழாக்கள், வீதி உலாக்கள், திருக்கல்யாணங்கள் என்று மக்களின் பொன்னான நேரத்தையும் பொருளையும் வீணடிப்பதோடு, சிந்திக்கும் அறிவை முடமாக்கும் கைங்கரியங்களும் தடையேதுமின்றித் தொடர்கின்றன.
தத்தமக்குரிய அரசுப்பணிகளை மேற்கொள்ளும்போது சாதி மதச் சார்பற்றவர்களாய்க் கடமையைச் செய்யவேண்டிய ஆட்சியாளர்களில் பலரும், வாய்ப்பு நேரும்போதெல்லாம் பக்திமான்களாய்த் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளத் தவறுவதே இல்லை.
காரணம்.....
'கடவுள் பக்தி உள்ளவனே யோக்கியன்' என்னும் நம்பிக்கையைப் பல்லாண்டுக் காலப் பரப்புரையின் மூலம், மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டார்கள் ஆன்மிகவாதிகள். இதன் காரணமாகத்தான் நம்மில் மிக மிக மிகப் பெரும்பாலோர் தம்மைப் கடவுள் பக்தராகக் காட்டிக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறார்கள்[அரசியல்வாதிகளில் பலர் இது விசயத்தில் முன்னணி வகிக்கிறார்கள்].
இவர்களெல்லாம் காரியவாதிகள்.
இது ஒருவகை மனநோயும்கூட.
இந்நோயால் பாதிக்கப்படும் பலரையும் குணப்படுத்த, பகுத்தறிவுச் சிந்தனையுள்ளவர்கள் ஒருங்கிணைந்து, வலுவான ஓர் அமைப்பை உருவாக்கிப் பயிற்சிகள் அளிப்பதும், பரப்புரைகள் நிகழ்த்துவதும் மிக அவசியம். இப்பணியைப் பகுத்தறிவாளர்கள் உடனடியாக மேற்கொள்ளுதல் வேண்டும்[திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் ஆற்றும் பணி போதுமானதல்ல].