எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

‘வெறுமை’யில் உறைதல்!!!

பிரபஞ்ச வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், மனித இனம் கண்டிராத ஏனைய பொருட்கள், அனைத்துக்கும் ஆதாரமாக விளங்கும் கணக்கிலடங்காத அணுக்கூட்டங்கள், இருள், ஒளி, ஒலி என்று எவை எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் நீங்கிய அல்லது நீக்கப்பட்ட ஒரு நிலையை ‘வெறுமை நிலை’ என்கிறோம்.

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சவெளியில் இத்தகைய ஒரு ‘வெறுமை நிலை’ சாத்தியமா? [இது குறித்து 2011 ஆம் ஆண்டிலும் பின்னரும் எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்]

‘சாத்தியமே இல்லை’ என்பதுதான் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கக்கூடும். ஒருவேளை அது சாத்தியம்தான் எனின்.....

அது  எப்படியிருக்கும் என்பதை ஆழ்ந்து...மிக ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் [அந்த ‘வெறுமை’யை] உணர இயலுமா?

’இயலாது’ என்பதே இன்றளவும் ஏற்புடைய கருத்தாக இருக்கக்கூடும்.

‘பிரபஞ்ச வெளி’யில் வெறுமை உருவாவதும் அதை உணருவதும் சாத்தியமே இல்லை என்றாலும்.....

ஆழ்ந்த[கனவுகளற்ற] உறக்கத்தின்போதும், முழு மயக்கதின்போதும் மரணத்தைத் தழுவிவிட்ட நிலையிலும்  நம் எண்ணங்களையும், ஆசாபாசங்களையும், உணர்ச்சிகளையும் சிந்திக்கும் திறனையும், ‘நான்’ என்னும் உணர்வையும் முற்றிலுமாய் இழந்துவிடுவதும்கூட ஒரு ‘வெறுமை நிலை’தானே? ஆக.....

புறத்தே ஒரு வெறுமையை உணர்வது சாத்தியம் இல்லையென்றாலும் அகத்தளவில் அந்த ‘வெறுமை நிலை’யை எய்துகிறோம்; அதில் உறைகிறோம் என்று தயக்கமின்றிச் சொல்லத் தோன்றுகிறது.