செவ்வாய், 30 நவம்பர், 2021

'அது' விசயத்தில் அட்டகாசச் சலுகைகள் வழங்கும் நாடுகள்!!!


*'கருத்தரித்த பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான குழந்தைப் பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படும்'[கன்னியரின் 'கட்டழகு'ப் பராமரிப்புக்கான பொருள்களும் வழங்கப்படுதல் வேண்டும்].

*"உங்களுக்காக அல்ல, நாட்டுக்காகக் குழந்தை பெறுங்கள்(பெறுபவர்களுக்குத் 'தியாகிகள்' பட்டம் வழங்கலாம்)"

*'ஆண்கள் இளம் வயதிலேயே இறக்கிறார்கள். எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவை நாட்டை முடக்குகின்றன. இவை காரணமாகப் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் குறைந்துவிட்டது. அதை அதிகரிப்பதற்காக, 'செப்டம்பர் 12' கருத்தரிக்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது, 

*'இது விசயத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும்'[இதுவல்லவோ நாடு! இதுவல்லவோ அரசு!!]

*'குழந்தை பெறுவது மிகவும் குறைந்துவிட்டதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு 20% வருமான வரி விதிக்கப்படும்; விவாகரத்துக்கு இனி அனுமதியில்லை'['சின்ன வீடு' வைத்துக்கொள்ள அனுமதி உண்டா!]  

*'சிறிய' படுக்கை அறைகள் மட்டுமே குடியிருப்புகளில் கட்டப்பட வேண்டும்' ['சிங்கிள்' கட்டில்தான் போட முடியும். தம்பதியர் ஒன்றாகப் படுத்தாக வேண்டும் என்பது புரிகிறது. கட்டிலுக்கு அடியில் படுக்கை விரிக்கும் ஆண்களை என்ன செய்வது?!]

*'ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்'[பாராட்டுக் கூட்டங்களும் நடத்தலாம்].  

*மாதந்தோறும், மூன்றாவது புதன்கிழமையன்று அனைத்துப் பெரிய நிறுவனங்களும் இரவு 07.00 மணிக்கு மேல் மூடப்பட்டு அலுவலர்கள் தத்தம் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் வேண்டும்["எதுக்குன்னு கேட்குறீங்களா? என்னங்க, இதுகூடவா புரியல!]

*ஒவ்வொரு ஆண்டும், தம்பதியர் அதிக அளவில் உடலுறவு கொள்வதற்கான திட்டங்களுக்கு[அவை என்னவெல்லாம் திட்டங்கள்னும் சொல்லியிருக்கலாம்] அரசாங்கம் சுமார் $1.6 பில்லியன் செலவழித்தல்.

மேற்கண்டவாறு, ஆணைகளையும் ஆலோசனைகளையும், திட்டங்களையும்  வெளியிட்டுத் தங்களின் நாட்டுத் தம்பதியரை அதிக அளவில் உடலுறவு கொள்ளத் தூண்டும் நாடுகள் வரிசையில் டென்மார்க், ரஷ்யா, ஜப்பான், ருமேனியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, சாம, பேத, தான, தண்டங்களை இந்நாடுகள் கையாளக் காரணம், இங்கெல்லாம குழந்தை பெறுவது வெகுவாகக் குறைந்துவிட்டதாம்.

இந்நாடுகள், இது குறித்து இந்தியாவிடம், குறிப்பாக இந்தி பேசும் வடமாநிலத்தவரிடம்[ஹி... ஹி... ஹி!!!] ஆலோசனைகள் பெறலாம் என்பது நம் பரிந்துரையாகும்!

                                     *  *  *

குறிப்பு:

அடைப்புக்குறி[   ] விமர்சனங்கள் அடியேனுடையவை!

'independent' தளத்தில் உள்ள மிகப் பல தகவல்களிலிருந்து மிகவும் சுவையானவற்றை மட்டும் எனக்கான எளிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளேன்.

வருகைக்கு நன்றி!

==========================================================================

https://www.independent.co.uk/life-style/10-countries-that-desperately-want-people-to-have-more-sex-a7612246.html     


திங்கள், 29 நவம்பர், 2021

நீதியரசர் 'ரமணா'வின் உரையும் மருத்துவர் ராமதாஸின் உரிமைக் குரலும்!

அதில் பங்கேற்றுப் பேசிய தலைமை நீதியரசர் என்.வி. இரமணா, “உயர்நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வழக்காடும் மொழி, அதிக வழக்குச் செலவு ஆகியவைதான் நீதிமன்ற அமைப்பிலிருந்து சாதாரண மக்களை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையை மாற்ற, நடைமுறை முட்டுக்கட்டைகளை நீக்கியும், உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதை வரவேற்ற 'பாமக' நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,

'சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த  2006ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  மு.கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க இயலாது என்றும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்தது. ஆனால், அதிகாரப்பூர்வமான வகையில் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பதில் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக ஹிந்தி[நடுவணரசின் செல்லப்பிள்ளை] அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழை நீதிமன்ற மொழியாக்க முட்டுக்கட்டை போட வேண்டும் என்று நினைத்த அப்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு தமிழுக்குத் தடை போட்டது' என்று கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்திய மருத்துவர் ராமதாஸ் அவர்கள், 

'இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உயர் நீதிமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கிறார். அதனால், தமிழை, சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்குவதற்கு எந்தத் தடையுமில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையைப் பெற்று, குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.' 

                                                *  *  *

இந்த அறிவுறுத்தல் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் முதல் மனிதராகத் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் இவருக்குத் தமிழுலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இவர்தம் பரிந்துரையை ஏற்று, தமிழை நீதிமன்ற மொழியாக்கும்  கடமையைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

==========================================================================

நன்றி:

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chief-justice-supreme-court-gives-confidence-action-needed-declare-tamil     - 27/11/2021  

ஞாயிறு, 28 நவம்பர், 2021

என் சாதி! உன் சாதி!! நம் சாதி!!!

கீழே இடம்பெற்றுள்ள 'காணொலி'[2020இல் வெளியானது. இதற்கும் 'ஜெய் பீம்' திரைப்படப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை] தமிழ்த் திரையுலகில் உள்ள வன்னிய ஜாதியினரைப் பட்டியலிடுகிறது. இதைப் போல, பிற ஜாதிப் பிரபலங்களைப் பட்டியலிடும் காணொலிகளும் இருத்தல்கூடும். என் கண்ணில் பட்டது இது மட்டுமே.

காணொலியைத் தயாரித்தவர், 'இதற்கான உள்நோக்கம் எதுவுமில்லை; தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்' என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.

'உள்நோக்கம்' பற்றி அவர் குறிப்பிடவில்லையென்றாலும், காணொலிக் காட்சி மூலம் வன்னிய ஜாதி நடிக நடிகையரை ஒருங்கிணைப்பதும், தம் ஜாதி மக்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதும்தான் அவரின் நோக்கம் என்பதை மிக எளிதாக அறிய முடிகிறது.

இதைக் காணும்போது, வன்னிய சங்கத்தவருக்கும் பிறிதொரு சாதிச் சங்கத்தவருக்கும் இடையே, ஏதேனும் பிரச்சினை மூண்டால், வன்னிய ஜாதியரிலுள்ள 'ரவுடி'களுக்கான[அனுமானம்தான்] ஒரு காணொலியையும் இவர் வெளியிடுவாரோ என்னும்  சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.

இவர்களுக்கும் பிறிதொரு சாதியாருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் எழக்கூடாது என்பதே நம் மனப்பூர்வமான விருப்பமாகும்.

இந்தக் காணொலிக்காரருக்கு நாம் வைக்கும் கோரிக்கை ஒன்று உண்டு. அனைத்துச் சாதிச் சங்கத்தினருக்கும் இது பொருந்தும்.

உங்கள் இளைஞர்களுக்கு முன்னோடிகளாக இருக்கும் தகுதி, பட்டியலில் உள்ள நடிகர்களுக்கு இல்லை என்பதை உணருங்கள்.

உங்கள் சாதியிலுள்ள பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிடுவதில் பெரும் பித்துடையவர் நீங்கள் எனின், கீழ்க்காண்போர் குறித்த காணொலிகளை வெளியிட்டு மனநிறைவு பெறலாம்.

*சாதி வேறுபாடுகளைக் கடந்து சமுதாயப் பணி செய்யும் உங்களின் சாதிக்காரர்கள்.

*சாதி பற்றிய சிந்தனைக்கு இடம் தருதற்கு நேரமே இல்லாமல் பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் தீவிரம் காட்டும் உங்களின் சாதியைச் சார்ந்த விஞ்ஞானிகள் அல்லது, விஞ்ஞானி ஆவதற்குக் கடுமையாக உழைப்பவர்கள்.

*சாதியை மறந்து ஏதேனும் ஒரு துறையில் சாதனை நிகழ்த்தியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் உங்கள் சாதி இளைஞர்கள்.

சிந்தித்தால், இவை தவிர வேறு துறைகளில் சிகரம் தொட்டவர்களின் பட்டியலடங்கிய காணொலிகளையும் உங்களால் தயாரித்திட முடியும்.

இம்மாதிரிக் காணொலிகள் உங்களின் சாதி இளைஞர்களை இலட்சியவாதிகளாக ஆக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்பது நம் நம்பிக்கை.

இதற்கான முயற்சியில் நீங்கள் உடனடியாக இறங்குவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

நன்றி.


பின்வருவது, அனைத்து ஜாதியைச் சார்ந்த நடிகர் பட்டியல். 


'நடிகை'யருக்கான தனிப் பட்டியலையும், 'அதிக எண்ணிக்கையிலான 10 சாதி'க்காரர்களுக்கான பட்டியலையும் உள்ளடக்கிய காணொலிகளும்கூட 'யூடியூப்'இல் இடம்பெற்றுள்ளன.
==========================================================================

வெள்ளி, 26 நவம்பர், 2021

'இந்த' நம்பிக்கையைத் திணித்தவர்கள் அயோக்கியர்களா, அறவாணர்களா?!

இந்தவொரு அசிங்க நிகழ்ச்சி நடந்தது, அறிவியல் வளர்ச்சி பெறாத இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்ல; 2015ஆம் ஆண்டில்.

நிகழ்ச்சி இடம்பெற்றது உலகின் எங்கோ ஒரு நாட்டில் அல்ல; தமிழ்நாட்டின் 'கரூர்' மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில்.

எச்சிலைகளில் உருண்டு எழும் திருவிழா ஆண்டுதோறும் இங்கு நடைபெறுவது வழக்கமான ஒன்று. அது, 2015ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

வழக்கம்போல, அக்கிரகாரத்தில் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ், பிராமணர்களும், அவர்தம் குடும்பத்தாரும், சிறப்பு அழைப்பாளர்களும் பந்தியில் அமர்ந்து பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு முடித்துவிட்டு, எச்சிலைகளை எடுக்காமல் எழுந்து சென்றார்கள்.

அந்த ஆண்டு[2015], 38 ஆண்கள், 20 பெண்கள் என 58 பேர் அந்த எச்சிலைகள் மீது முட்டி மோதி விழுந்து உருண்டு புரண்டு எழுந்தார்கள். 

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் வாழ்ந்து 'ஜீவ சமாதி' அடைந்த  'சதாசிவ பிரமேந்திராள்' என்று ஒரு மகான் நினைவாகத்தான் அங்கே 'எச்சிலையில் உருளும்' விழா நடைபெற்று வந்ததாம்.

எச்சிலையில் உருளும் திருவிழா நாட்டில் ஆங்காங்கே உள்ள பல கோயில்களில் நடைபெற்றதும், அண்மைக்காலம்வரை அரிதாகச் சில இடங்களில் நடைபெறுவதும் தெரிந்ததே. அவற்றில் இதுவும் ஒன்றுதானே தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதில் என்ன இருக்கிறது என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம். பதில்.....

எச்சிலைகளுக்குச் சண்டை போடும் அந்த ஜீவன்கள் போல, எச்சிலைகள் மேல் உருளுவதற்கு முட்டி மோதிக்கொள்வார்களாம் பக்தர்கள்.

எதற்காக இந்தப் போராட்டம்?

அன்னதானத்தின்போது, ஏதாவது ஒரு எச்சிலையில்[உண்பவருக்கு எதிரே அமர்ந்து] சதாசிவ பிரம்மேந்திராள்' என்னும், ஜீவசமாதியடைந்த அந்த மகானும் உணவு உண்பாராம். அந்த இலையின் மீது[அது எது என்பது தெரியாவிட்டாலும், உருளும் இலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை] உருண்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப்பெற்று, உருளுபவர் வாழ்க்கையில் சுபிட்சம் நிலவுமாம்.

இவை போன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்திருப்பதை நினைத்தால் உண்டாகும் மன வேதனையைக் காட்டிலும், இந்த அறிவியல் யுகத்திலும் நடபெறுகிறதே என்று எண்ணும்போது நாம் பெறும் வருத்தத்திற்கு வரம்பே இல்லை.

இம்மாதிரியான நிகழ்வுகளைக் கண்டித்தால், கண்டிப்பவனை..... 

மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள் மட்டுமல்ல, இவற்றைச் சுமந்து திரிபவர்களும் நிந்திக்கிறார்கள் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது!

==========================================================================http://pathivuthokupukal.blogspot.com/2015/09/blog-post_50.html


வியாழன், 25 நவம்பர், 2021

'வல்வில் ஓரி'க்குச் சாதிச் சாயம் பூசும் சங்கங்கள்!!!

 [இன்றிரவு[08.00] இத்தளத்தில் வெளியானதொரு பதிவின் திருத்தியமைக்கப்பட்ட பிரதி இது என்பது அறியத்தக்கது]

மிழ் மண்ணைப் பொருத்தவரை, கடந்தகால வரலாறு என்பது, கணிசமான அளவுக்குப் புனைந்துரையும் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட பழம் பாடல்களையும், அதே மாதிரியான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றையும், செவிவழிச் செய்திகளையும் சார்ந்து எழுதப்பட்டதாகும். இந்த வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்தில் சாதியமைப்பு இருந்தது என்று நிறுவுவது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.

இந்த உண்மையை மறந்து சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு மன்னனான 'வல்வில் ஓரி'யை, 'அவர் எங்கள் சாதியைச் சார்ந்தவர்' என்று தமிழ்நாட்டுச் சாதிச் சங்கத்தவர்கள் சிலர் தற்பெருமை பேசிவருவது ஏற்கத்தக்கதல்ல.

அச்சாதியாருள் குறிப்பிடத்தக்கவர்கள்: 

கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், வேளாளர்கள், முத்தரையர்கள், வன்னியர்கள் முதலானவர்கள். 

'வேட்டையாடுவதைக் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததால், வேட்டுவக் குலத்தவர் என்று சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படுகிற 'வல்வில் ஓரி'யின் பரம்பரையை/சாதியைச் சார்ந்தவர்கள் இன்றைய வேட்டுவக் கவுண்டர்களாகிய நாங்கள்' என்று இன்றைய வேட்டுவக் கவுண்டர்கள் சொல்கிறார்கள். 


அக்காலச் சொல்வழக்கான 'வேளிர்' என்பது இன்றைய 'வேளாளர்'களைச் சுட்டுகிறது என்பது 'வேளாளர்' & கொங்கு வேளாளர் சாதிக்காரர்களின் வாதமாக உள்ளது[இவை பற்றி இன்னும் விரிவாக, உரிய ஆதாரங்களுடன் எழுதலாம். தேவையின்மை கருதி இங்குத் தவிர்க்கப்படுகிறது]. 

இன்றிருக்கும் இந்தச் சாதிப் பாகுபாடு சங்க காலத்தில் இல்லவே இல்லை என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உரிய ஆதாரங்களுடன் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மை இதுவாக இருக்கையில், 'வல்வில் ஓரி'யைத் தத்தம் ஜாதிக்காரராக இவர்கள் நிறுவிட முயல்வது எள்ளி நகையாடுதற்குரிய செயலாகும்.

வல்வில் ஓரியை, 'வல்வில் ஓரிக் கவுண்டர்',  'வேட்டுவக் கவுண்டர் வல்வில் ஓரி', 'வல்வில் ஓரி வன்னியர்' என்றிவ்வாறெல்லாம் பேசியும் எழுதியும் பரப்புரை செயவது அந்த மன்னனை இழிவுபடுத்தும் செயல்.

இவர்கள் இவ்வாறு தொடர்ந்து பேசுவதையும் எழுதுவதையும் அனுமதித்தால், ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிற்க மாட்டார்கள்; "ஓரி எங்களவர். நாங்கள் மட்டுமே அவருக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்து விழா எடுப்போம்" என்று ஆளாளுக்கு முழங்கலாம்; போராட்டங்களும் நடத்தக்கூடும்.

'இவர்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் பெரும் கலவரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே,  எழுதியும் பேசியும் சாதிச் சங்கங்கள் 'வல்வில் ஓரி' மன்னருக்கு உரிமை கொண்டாடுவதைத் தடுத்திடத் தமிழ்நாடு அரசு ஆலோசிப்பது மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும் என்பது நம் எண்ணம்.

அரசு இது குறித்து உடனடியாக ஆராய்தல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள் ஆகும்.

==========================================================================

புதன், 24 நவம்பர், 2021

பெண்கள் பற்றிய 'படு படு படு' சுவாரசியத் தகவல்கள்!

*பெண்கள் தங்களுக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஓர் ஆண்டுக் காலத்தைச் செலவழிக்கின்றனர்.

*ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.

*ஆண்களைவிட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தாங்கள் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவாறு, உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாகக் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு.

*நுகரும் ஆற்றல் பெண்களுக்கு, ஆண்களைவிடவும் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றலும் பெண்களுக்கு ஆண்களைவிட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, ஆண்களைவிடவும் பெண்களால் அதிக நிறங்களைப் பார்க்க முடியும்.

*ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் அளவுக்குப் பேசுவார்கள். பெண்களுக்கு, தாங்கள் பேசுவதைப் பிறர் உன்னிப்பாகக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

*பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியைத் தாங்கும் சக்தி ஆண்களை விடவும், பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

*உதட்டுச் சாயம் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் அதை விழுங்க நேரிடும். அந்த வகையில் நாள்தோறும் உதட்டுச் சாயம் பயன்படுத்துவதன் மூலம், தங்கள் வாழ்நாளில் பெண்கள் உட்கொள்ளும் உதட்டுச் சாயத்தின் அளவு மட்டுமே 5 கிலோவுக்கும் அதிகமாம்.

*சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவார்கள். அதேசமயம், அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டுவர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைகளுக்கான தீர்வையும் எளிதாகக் கண்டுபிடிப்பார்கள்.

*பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்டுக்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.

*சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தங்களைச் சரிப்படுத்திக்கொள்ளவும் பெண்கள் தயங்குவதில்லை. முக்கியமாக, ஆடை அலங்கார விசயத்தில் மற்றவர்களின் கருத்தைக் கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்கள்.

*தங்களின் கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். ஆண்கள் கோபத்தைச் செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.

*பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்தக் காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தாலே அழுது விடுவார்கள்.

*ஆண்களைவிடப் பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே,

இனியேனும், ஆண்கள் பெண்களிடம் மிக மிக மிக மரியாதையுடனும், பணிவுடனும் நடந்துகொள்வார்களாக!

==========================================================================

நன்றி:

https://www.maalaimalar.com/health/womenmedicine/2021/11/15131133/3197207/Interesting-psychological-facts-about-women.vpf   -நவம்பர் 15, 2021 13:11 IST

செவ்வாய், 23 நவம்பர், 2021

"சூர்யாவிடம் 5 கோடியென்ன, 5 ரூபாய்கூட வாங்க முடியாது"... பசும்பொன் பாண்டியன்!

#'ஜெய் பீம்' திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் சமூகத்தை இந்தப் படம் காயப்படுத்தி விட்டதாகக் கூறி பாமகவினர் சூர்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சூர்யாவைத் தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டும் என்று அறிவித்துள்ளதுடன்,  'அவர்  5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என்றும் பாமக வழக்குத் தொடுத்துள்ளது. 

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சூர்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அமைப்புகள் பலவும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில்,.....

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான 'பசும்பொன் பாண்டியன்' 'பாமக'வை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில்.....

"டாக்டர் ராமதாஸின் தவறான அரசியல் முடிவுகளால் பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. ராமதாஸ் எந்த மக்களுக்காகக் கட்சி ஆரம்பித்தாரோ அந்த மக்களையே அவர் ஏமாற்றி வருகிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி  அவர் வன்னியர்களுக்குத் துரோகம் செய்துள்ளார். 

அந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அந்த மக்களுக்குக் கிடைக்காது என்று அவருக்கு நன்கு தெரியும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பைச் செய்யவைத்தார். அதேபாணியில் தொடர்ந்து அனைத்தையும் மிரட்டிச் சாதித்துவிடலாம் என அவர் தப்புக்கணக்குப் போடுகிறார்" என்று கூறியிருக்கிறார்.# -https://tamil.asianetnews.com/politics/entire-south-district-stands-behind-the-surya-if-u-cane-touch-suriya-pasumpon-pandian-warning-to-ramadas--r2re3m
==========================================================================

நன்றி: பசும்பொன் பாண்டியன் அவர்கள்.

பேட்டி:

திங்கள், 22 நவம்பர், 2021

காடுவெட்டி குரு[எ]குருநாதன் 'குருமூர்த்தி' ஆனது எப்படி?!?!

'காடுவெட்டி குரு என்றழைக்கப்படும் செ. குரு என்கிற செ. குருநாதன் (ஆங்கில மொழி: J. Gurunathan) தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.'

காடுவெட்டி குரு (எ) செ. குருநாதன்
Kaduvetti J. Guru.jpg
மாநில வன்னியர் சங்க தலைவர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001-2006
முன்னவர்ராஜேந்திரன்
பின்வந்தவர்எஸ். எஸ். சிவசங்கர்
தொகுதிஆண்டிமடம்
பதவியில்
2011-2016
முன்னவர்கே. இராசேந்திரன்
பின்வந்தவர்இராமஜெயலிங்கம்
தொகுதிஜெயங்கொண்டம்

ஆதாரம்:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81

                                             *  *  *

காடுவெட்டி குரு அவர்களின் இயற்பெயர், 'குருநாதன்' என்பதை மேற்கண்ட ஆதாரத்தின் மூலம் அறிந்திட முடிகிறது.

'ஜெய் பீம்' திரைப்படத்தில் இடம்பெறும் 'வில்லன்' பெயர் 'குருமூர்த்தி ஆகும்[ஆதாரங்கள் கீழே].

யாரோ ஒரு குருமூர்த்தியை வில்லன் ஆக்கினால் வன்னியர் சங்கத்தவருக்கு ஏன் வலிக்கிறது?

வில்லன் குருமூர்த்தி, 'குருநாதன்' அல்ல.

அப்புறம் எப்படி மறைந்த வன்னியர் இனத் தலைவரான காடுவெட்டி குரு[நாதன்]வைத்தான் 'எஸ்.ஐ' 'குருமூர்த்தி'யாக உருவகப்படுத்தி இழிவுபடுத்தியிருக்கிறார் சூர்யா என்று அவர்கள் சொல்கிறார்கள்? போராடுகிறார்கள்?!

'குருநாதன்' என்னும் முழுப்பெயரை மறைத்து, 'காடுவெட்டி குரு'வைக் 'குருமூர்த்தி' ஆக்கி[ஆக்கியவர்கள் வன்னியர் சங்கத்தவரே],  வில்லனாகச் சித்திரித்திருக்கிறார்கள் 'ஜெய் பீம்' படக் குழுவினர் என்று ஆளாளுக்குச் சாடுவதும், சூர்யாவை மிக மிகக் கீழ்த்தரமாகத் திட்டித் தீர்ப்பதும், தலையை வெட்டுவோம், கைகால்களை உடைப்போம் என்று வெறித்தனமாகப் பேசித் திரிவதும் மிகக் கடுமையான தண்டனைக்குரியவை.

இந்தத் தவறான போக்கு, பிற சமுதாயத்தவரிடம் மட்டுமல்லாமல், வன்னியச் சமுதாய மக்களிடமும் சங்கத்தினர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கும் என்பதை அவர்கள் உணர்தல் மிகவும் அவசியம்.

                                                  *  *  *

'ஜெய் பீம்' வில்லன் பெயர் 'குருமூர்த்தி' என்பதற்கான ஆதாரங்கள்:

'ஜெய் பீம் படத்தில் வில்லன் எஸ் ஐ குருமூர்த்தி தனது மிரட்டலான முக பாவனைகளாலேயே பார்வையார்களை அதிர வைத்து விடுகிறார்'[https://tamil.asianetnews.com/cinema/director-tamil-interview-about-jai-bheem-movie-police-character-r23dhe].

'...அதேபோல் இந்த படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டது, காடுவெட்டி குருவை குறிப்பது போல இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அது சர்ச்சையாகி உள்ளது'[https://tamil.oneindia.com/news/chennai/jai-bhim-director-gnanavel-explains-why-he-used-agni-kalasam-in-the-calendar/articlecontent-pf620195-439813.html].

==========================================================================

ஞாயிறு, 21 நவம்பர், 2021

'ஜெய் பீம்'... வன்னியர் சங்கப் போராட்டமும் பின்னி எடுக்கும் Dr.ஷர்மிளாவும்!!

*'இந்த வருடத்தின் மிக சிறந்த  நேர் காணல் இது.'

*'மிகத் தெளிவான நடு நிலையான ஒரு சமூகப் பிரதிநிதியாக இருந்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த சகோதரி Dr. ஷர்மி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்👏👏👏🙏💐🙏

*'இதைவிடத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.'

*'Doctor,  you are great.  You are aware of base level problems not addressed by politicians.'

*'100% உண்மை சகோதரி🙏. வாழ்த்துக்கள்.'

*'மரு.சர்மிளா... உங்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்...🙏🙏🙏🙏

*'ஷர்மிளா மேடம், இவ்வளவு தெளிவான உங்கள் கருத்துக்களுக்குத் தலைவணங்குகிறேன்.'

*'Dr.சர்மிளா போல, தெளிவான பேச்சை இதுவரை யாரும் பேசியதில்லை. கிளிட்சின் 28-04 மணிநேரலை நேரம் போனதே தெரியல. திரும்பத் திரும்பக் கேட்கும் அளவுக்கு இருந்தன சகோதரி சர்மிளாவின் எகிறி அடித்த பதில்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.'

*'டாக்டர் சர்மிளா! 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த சர்மிளாவா இவர்?. எத்தனை மெச்சுரிட்டி, எத்தனை சிந்தனை, எத்தனை  அறிவு! வாழ்க. வளர்க!'

*'Excellent excellent speech exactly 💯 percent true 👏👏👏👏👏👏👍

*'Greatly appreciate your bold clear knowledgeable and thoughtful talk.'

*'Great, bold and beautiful interview. Hats off doctor.'

*'No word's just Iron Lady'🔥

*'தமிழர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. காலண்டரைப் பார்த்தாலும் தெரிந்திருக்காது.'

*'அருமையான கருத்து. நான் என்ன நினைக்கிறேனோ  அதையே  mdm  ￰சொல்றாங்க .சூப்பர் மேடம்.'

*'வீரமங்கை! இதோடு ஓயாமல் நியாயமான விஷயங்களுக்கு உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!'

மேற்கண்ட ஆகச் சிறந்த பல பாராட்டுகளைப் பெற்றவர் டாக்டர் ஷர்மிளா அவர்கள். 

'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எதிரான வன்னியர் சங்கங்களின் போராட்டம் பற்றி இவர் தந்த பேட்டியின் 'காணொலி' வடிவம்:

==========================================================================

இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!


'ஜெய் பீம்' திரைப்படம் உண்மையில் வன்னியர் இனத்தை இழிவுபடுத்தியிருந்தால், அறவழிப் போராட்டங்கள் மூலம் அதைத் தடை செய்துவிட முடியும்.

அக்கினிக் கலசக் காலண்டர் இடம்பெற்றது தவறு என்றார்கள். அது படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. 'குருமூர்த்தி என்னும் வில்லன் பாத்திரம், தங்களின் ஜாதியைச் சேர்ந்த 'காடுவெட்டி' குருவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது; மன்னிப்புக் கேட்பதோடு அவர் தொடர்பான காட்சிகளையும் நீக்க வேண்டும்' என்கிறார்கள்.

காடுவெட்டி குரு மிகவும் நல்லவராம்; மாவீரனாம். இருக்கட்டும். மகிழ்ச்சி!

அந்த நல்லவருக்குரிய இயல்பான உருவ அமைப்பு, வாழ்விடம் போன்றவற்றின் பின்னணியில் அவரைப் படத்தில் நடமாடவிட்டு, பின்னர் அவரை வில்லனாக உருவகப்படுத்தியிருந்தால் வன்னியர் சங்கங்களின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக நம்பலாம்.

காடுவெட்டி குரு முழுக்க முழுக்க நல்லவர். 'ஜெய் பீம்' குரு முழுக்க முழுக்கக் கெட்டவர்[வில்லன்].

எந்த அடிப்படையில், இறந்துவிட்ட அந்தக் குருவும் படத்தில் வருகிற வில்லன் குருவும் ஒருவர்தான் என்று சாதிக்கிறார்கள்? 'குரு' என்னும் பெயருக்குக் 'காப்பிரைட்' உரிமையை இவர்கள் பெற்றிருக்கிறார்களா என்ன? 

காடுவெட்டி குரு நல்லவர் என்பதில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?!

இவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் மட்டுமல்லாமல், மிகச் சிறுபான்மையராக வாழும் ஊர்களில்கூட, சாலைச் சந்திப்புகளிலும் தெருக்களிலும் ஜாதிக்கொடி நட்டும், தலைவர்களின் படத்துடன் பெயர் பொறித்தும் தங்களைப் பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்வது இவர்களின் வழக்கம்.

இது தொடர் நிகழ்வாக இருக்கும்போது, இவர்களின் கொடியோ தலைவர்களின் படங்களோ இடம்பெறாமல் திரைப்படப் படப்பிடிப்பை நடத்துவது எப்படிச் சாத்தியமாகும்? சிந்தித்தார்களா?

இம்மாதிரியான நடவடிக்கைகளைக்கூட அலட்சியப்படுத்திவிடலாம். ஆனால்.....

ஏற்கனவே ஒரு நபர் 'சூர்யாவை எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசளிப்பேன்' என்று அடாவடித்தனமாகப் பேசிய நிலையில், காடுவெட்டி குருமூர்த்தியின் மகன், 'துப்பாக்கிப் போலீஸ் காவலுக்கிருந்தாலும் சூர்யாவைக் காப்பாற்ற முடியாது" என்று பேசியிருக்கிறார்.

'பொதுவெளியில் நடமாட அனுமதிக்க மாட்டோம்' என்று வன்னிய சங்கத்தவர் சிலர் எச்சரித்த நிலையில், யாரோ ஒரு படையாச்சியாம், 'சூர்யா வீட்டில் காவலுக்கிருக்கும் போலீசில் ஒருவர் வன்னியராக இருந்தால்.....' என்று கேள்வி எழுப்பி, 'இருந்தால் சூர்யாவை அவர் சுட்டுத்தள்ளுவார்' என்று கொலை வெறியைத் தூண்டும் விதமாகப் பேசியிருக்கிறார்.

ஊடகங்களில் சூர்யாவை ஆபாசமாகத் திட்டி அவர் மீதான தங்களின் தாக்குதல் வெறியைத் தணித்துக்கொண்டிருக்கிறார்கள் வன்னிய சங்கத்தவர்கள்.

'லட்சம் பரிசு' என்று அறிவித்தவர் மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. மேற்கொண்டு நடவடிக்கை ஏதுமில்லை.

சூர்யாவைத் தாக்கத் தூண்டும் இவர்களின் அப்பட்டமானதும் மிகவும் ஆபத்தானதுமான பேச்சுகளைக் கேட்டும் கேட்காதது போல மௌனம் சுமந்து நிற்கிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், நம் மனதில் தோன்றும் ஒரு கேள்வி.....

"இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!" 

                                               *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================


சனி, 20 நவம்பர், 2021

வன்னியர் சமுதாயத் தலைவர்களின் கனிவான கவனத்திற்கு.....


தமிழ்ப் பற்றும் தமிழின உணர்வும் கொண்ட வன்னியர் குலத் தலைவர்களே, வணக்கம்.

'ஜெய் பீம்' திரைப்படம் உங்கள் இனத்தவரை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நீங்கள் மனப்பூர்வமாக நம்பினால், அந்த இழிவைப் போக்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களுக்குள்ள உரிமை.

'இந்தப் படத்திற்கு எந்தவிதமான விருதுகளையோ, பாராட்டுச் சான்றுகளையோ வழங்குதல் கூடாது' என்று நடுவணரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இது சரியான நடவடிக்கையே.

உங்களின் இனத்தைச் சார்ந்த, சேலம் மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டத்திலுள்ள திரையரங்க உரிமையாளர்களிடம், 'சூர்யா& குடும்பத்தினரின் திரைப்படங்களை வெளியிட வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்[எச்சரிக்கை செய்யவில்லை என்று நினைக்கிறேன்]. இதுவும் ஏற்கத்தக்கதே.

இவரைப் போலவே மற்ற மாவட்டத் தலைவர்களும் வேண்டுகோள்கள் வைத்தால் அவையும் ஏற்கத்தக்கனவே.

திரையரங்க உரிமையாளர்கள் உங்களின் வேண்டுகோளைப் புறக்கணித்தால், அரங்குகளுக்கு முன்னால் உங்கள் இனத்தவர் திரண்டு மறியலில் ஈடுபடுவார்களெனின் அதிலும் நியாயம் இருப்பதாகவே  கருத இடமுள்ளது.

இம்மாதிரியான போராட்டங்களில் ஈடுபடும்போது காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்; கைது செய்து சிறையிலடைக்கும். சோர்ந்து இருந்துவிடாமல் தினம் தினம் மறியலில் ஈடுபடுவீர்களேயானால், இதற்குத் தீர்வு காணும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளக்கூடும்.

அதற்கு முன்னதாக, திரையரங்குகளின் உரிமையாளர்களே, 'ஜெய் பீம்' படத்தைத் திரையிடும் முயற்சியை கைவிட்டுவிடவும் வாய்ப்புள்ளது.

இவையனைத்திற்கும் மேலாக, 'இந்தப் படத்தை எவரும் பார்க்கக் கூடாது' என்று நீங்கள் கட்டளையிட்டால், வன்னியர் இன மக்களில் பெரும்பாலோர்[100% ஆகவும் இருக்கலாம்] படம் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

பிற சமூக மக்களிடமும் கோரிக்கை வைத்தீர்களேயானால், அதில் நியாயம் இருப்பதாக அவர்கள் நம்பினால், நிச்சயமாக அவர்களும் 'ஜெய் பீம்' பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

எதிர்பார்க்கும் பலன் கிடைக்கவில்லையாயின், ஊர் தோறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்கள் ஈடுபடலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளால், ஜெய் பீம்  திரையிடப்படுவதும், வருமானம் ஈட்டுவதும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது உறுதி.

உண்மை இதுவாக இருக்கையில்.....

உங்கள் இனத் தலைவர்களில் கணிசமானோர்.....

'சூர்யாவை நாடெங்கிலும் நடமாட விடமாட்டோம்' 

'எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசு தருவோம்'

"போலீசாரால் சூர்யாவைக் காப்பாற்ற முடியாது"-காடுவெட்டி குருவின் மகன் எச்சரிக்கை(இது சற்று முன்னரான செய்தி).

என்றெல்லாம் ஆவேசக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்; அசிங்கமான வார்த்தைகளால் சாடியிருக்கிறார்கள்.

இம்மாதிரியான மிரட்டல்களை உங்கள் இனத்தின் மதிக்கத்தக்க மாபெரும் தலைவர்களான மருத்துவர் இராமதாஸ் அவர்களோ, டாக்டர் அன்புமணியோ கண்டித்ததாகத் தெரியவில்லை.

இம்மாதிரியான ஆவேசப் பேச்சுகளும், அசிங்கமான சாடல்களும் ஏற்கனவே அறவழிப் போராட்டங்கள் மூலம் நீங்கள் பெற்றிருக்கும் அனுகூலங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதையும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதையும் உணரத் தவறிவிட்டீர்கள்.

உங்களின் இம்மாதிரியான போக்கு தொடருமேயானால், உங்களின் இனம்[சமுதாயம் எனினும் சரியே] பிற சமுதாய மக்களால் முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் என்பதையும், இத்தனைக் காலமாகத் தமிழ் மக்களுக்கு நீங்கள் அரும்பணி ஆற்றிப் பெற்ற புகழுக்குப் பெருமளவில் ஊறு நேரும் என்பதையும் அன்புகொண்டு உணர்ந்திட முயற்சி செய்யுங்கள்.

எது எவ்வாறாயினும், உங்களின் அறவழிப் போராட்டங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டிட என் மனப்பூர்வ வாழ்த்துகள்.

நன்றி! வணக்கம்!!

                                      *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================


வியாழன், 18 நவம்பர், 2021

'ஜெய் பீம்' சூரியாவுக்கு அன்பானதும் அவசரமானதுமான புத்திமதி!!!

(இப்பதிவு எழுதப்பட்ட சூழ்நிலை வெகுவாக மாறிவிட்ட நிலையில், இப்பதிவின் உட்கருத்துக்கு மாறான கருத்துகள் அடங்கிய வேறு சில பதிவுகள் பின்னர் எழுதப்பட்டுள்ளன என்பதை அறிந்திடுக. நன்றி.)

மதிப்பிற்குரிய சூரியா அவர்களுக்கு, வணக்கம்.

உங்களின் 'ஜெய் பீம்' திரைப்படத்தில், தவறு நேர்ந்ததாகச் சொல்லப்படும் 'வன்னியத் தமிழர்கள்' தொடர்பான காட்சியமைப்புகளில்  ஒன்று 'அக்கினிக் கலசம்' படத்துடனான நாட்குறிப்பு. அதை அகற்றியது வரவேற்கத்தக்கதே.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'[Yaathoramani.blogspot.com]  என்னும் வலைத்தளத்தில் 'சூரியாத்தனம்...' என்னும் தலைப்பில் இன்று ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில்.....

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த வேறு சில தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் அதன் உரிமையாளர். தரமானதும் பயனுள்ளதுமான பல பதிவுகளைத் தந்த/தந்துகொண்டிருக்கும் பதிவர் அவர்.

பட்டியல்:


மேற்கண்டவாறு தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு, 'வில்லன் பெயரை மாற்றாமல் பம்மாத்து செய்ய வேண்டாம்' என்றும்  அவர் கூறியிருக்கிறார்.

இவர் குறைபட்டுக்கொள்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, 'பாமக' கொடி, துண்டு, ராமதாஸ் ஐயா படம் ஆகியவற்றை 'ஜெய் பீம்' திரைப்படத்திலிருந்து உடனடியாக நீக்கிவிடுங்கள்; வில்லன் பெயரை மாற்றவும் நடவடிக்கை எடுங்கள். கூடவே அவர்கள் இழப்பீடாகக் கேட்கும் ரூபாயைக் கொடுத்து மன்னிப்பும் கேளுங்கள். தவறினால்.....

அவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் உள்ள திரையரங்குகளில் 'ஜெய் பீம்' படத்தைத் திரையிட்டுக் காசு பார்ப்பதென்பது குதிரைக் கொம்புதான் என்பது என் எண்ணம்[இது தவறானதாகவும் இருக்கலாம்]. 

மன்னிப்புக் கேட்பதெல்லாம் உங்களின் தன்மானத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தவொரு சூழலில் உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் புத்திமதி ஒன்று உண்டு.

திரைப்படக் காட்சிகளைப் படமாக்கும்போது.....

படப்பிடிப்பு நடைபெறுகிற வீதிகளிலோ, தெருக்களிலோ எந்தவொரு கட்சித் தலைவரின் பெயர் பொறிப்போ, சுவரொட்டியோ, கட்சிக் கொடியோ, அவர்கள் தொடர்பான வேறு சின்னங்களோ 'இல்லவே இல்லை' என்பதைத் தேடிக் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

'படப்பிடிப்பு நிகழ்த்தும் இடங்களில் மேற்கண்ட பிரச்சினைக்குரிய அம்சங்கள் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு படம் பிடிப்பது நடைமுறை சாத்தியமல்ல' என்று நீங்களும் உங்களைப் போன்ற படத் தயாரிப்பாளர்களும் சொல்லக்கூடும்.

அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, உங்களின் இயல்புக்கு உகந்த தொழில் அல்ல இது என்பதே என் கணிப்பு.

ஆகவே சூரியா அவர்களே, 

சமுதாயத்தைத் திருத்துகிறேன்; அடித்தள மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரைப்படம் தயாரிக்கும் எண்ணைத்தை அறவே துடைத்தெறியுங்கள். 

இனி, படங்களில் நடிப்பது மட்டுமே உங்களின் தொழிலாக இருக்கட்டும். முடிந்தால், அதில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமானதொரு தொகையை ஏழை எளியோருக்கு உதவும் வகையில் செலவு செய்து மன உளைச்சலின்றி வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள்.

வாழ்த்துகள்!       

                                         *  *  *                           குறிப்பு: உங்களைவிடவும் வயதில் மிக மூத்தவன் என்ற முறையில் 'புத்திமதி' என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறேன். இதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக, 'பரிந்துரை' என்பதை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
                                        *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

==========================================================================
நன்றி: சக பதிவரின் பதிவை[Yaathoramani.blogspot.com], அவர் பொருட்படுத்தமாட்டார் என்னும் நம்பிக்கையில் அவரின் அனுமதி இல்லாமல் எடுத்தாண்டிருக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

*  *  *

#'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

'சூரியாத்தனம்.....'
நிச்சயமாக சூரியா தெரிந்தே இத்தனையும் செய்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம்.இனியும் வில்லன் பெயரை மாற்றாது பம்மாத்து செய்து கொண்டிருந்தால் எம்மைப் போன்ற நடுநிலையாளர்கூட எரிச்சல் கொள்ளுதல் தவிர்க்க இயலாதது..இந்த விசயத்தில் கிடைத்த ஒரே ஒரு லாபம் சைகைக் காட்டியதும் ரொட்டி போட்டதும் குரைக்கக் கூடியவைகளை அடையாளம் காண முடிந்ததே..(அனைவரின் உண்மைப் பெயரைப் பதிவு செய்ததைப் போலவே வில்லன் பெயரையும் பதிவு செய்திருக்கலாம்..அல்லது அனைவரின் உண்மைப் பெயர்களையும் தவிர்த்திருக்கலாம்.செய்திருந்தால் யதார்த்தமாய் தெரிந்திருக்க வேண்டிய இந்தக் காட்சிகளை கூர்ந்து கவனிக்கத் தோன்றாது.மாறாக.ஆதிக்க இனத்தால் அதிகார வர்க்கத்தால் அன்றாடம் இன்றும் அல்லல்படுகிற பாமர மக்கள் குறித்த அற்புதமான படம் இது போன்ற குள்ள நரித்தனத்தால் குரங்காய் முடிந்திருக்கிறது..)#
==========================================================================

புதன், 17 நவம்பர், 2021

எட்டி உதைத்தால் ஒரு லட்சம்! 'அதை'க் 'கட்' பண்ணி எடுத்தால்.....!?!?!?

அனைத்து மக்களும் அரசின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் இது.

ஒருவன் மற்றொருவனையோ, அவன் சார்ந்த சமுதாயத்தையோ இழிவுபடுத்தித் திரைப்படம் எடுத்தாலோ, புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று வேறு வேறு படைப்புகளின் மூலம் அதைச் செய்தாலோ பாதிக்கப்பட்டவன் செய்ய வேண்டியது என்ன?

அதே ஊடகங்களின் மூலம் அவனை இழிவுபடுத்தி மனநிறைவு பெறலாம். அது போதாது என்றால்.....

சக மனிதர்களைக் கூட்டிவைத்துப் பஞ்சாயத்துப் பேசி, தன்னை இழிவுபடுத்தியவனை மன்னிப்புக் கேட்க வைக்கலாம்; ஏற்ற வகையில் தண்டனையும் வழங்கலாம்.

காவல்துறையிடம் புகார் செய்வது, நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது[அதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது பின்னர் வந்த செய்தி] என்று பிற வழிகளையும் கையாளலாம். மாறாக.....

இவ்வழிமுறைகளை முற்றிலுமாய்த் தவிர்த்துவிட்டு, 'அவனை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவேன்" என்று பகிரங்கமாக அறிவித்து இரு சாராருக்கிடையே வன்முறையைத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது; கடுமையாகத் தண்டிக்கத்தக்கதும்கூட.

மயிலாடுதுறையிலோ மானாடுதுறையிலோ, மிகச் சில நாட்கள் முன்பு இப்படி ஒருவர் பேசியிருக்கிறார்.

தன்னைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்னும் மமதையில் அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமலும், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமலும் நடந்துகொண்டிருக்கும் இவர் மீது அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

"நம் சமுதாயத்தவரை இழிவுபடுத்திய அவனை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்" என்று அடுத்து அவர் அறிவிப்பாரேயானால், அப்போதுதான் அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது.....

நடவடிக்கை எடுக்காமல், 'இதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான்; குற்றச் செயலே அல்ல' என்று கருதி வேடிக்கை பார்க்குமா?

இது விசயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று அறிய விரும்புவது நாம் மட்டுமல்ல, நம்மைப் போன்று அரசின் சட்டதிட்டங்களையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் மதித்து வாழ்பவர்களும்தான்.

                                              *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================

முக்கியக் குறிப்பு:

தலைப்பில் உள்ள, 'அதை' என்னும் சொல் 'தலை'யைக் குறிக்கிறது! ஹி... ஹி... ஹி!!!


செவ்வாய், 16 நவம்பர், 2021

செத்துப் பிழைத்த[?]வர்களின் அந்திமக்கால அனுபவங்கள்!!!

'டாக்டர் ரேமண்ட் மூடி 1975ஆம் ஆண்டு 'வாழ்க்கைக்குப்பின் வாழ்க்கை' என்று ஒரு புத்தகம் எழுதினார். இவர் இந்த நூலுக்காக, செத்துப் பிழைத்த 150 தனி நபர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தினார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்' என்னும் குறிப்புடனான இந்தக் கட்டுரை 'தினபூமி'யில் வெளியானது.

அந்த 09 அம்சங்கள்:

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியினைக் கேட்டு உணர்தல்: ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்தத் தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும்  குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்: கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள்[நடப்பது போலவோ ஓடுவது போலவோ உணரவில்லையா?]. மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலைத்  தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள்.

3)அமைதியும் வலியின்மையும்: மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்தக் கணத்தில் உருவான வலி மறைந்துவிடுவதோடு[ஆசை... பேராசை!] பேரமைதி கிடைப்பதாகவும்  தெரிவித்தனர்.

4) சுரங்க வழிப்பாதை அனுபவம்: பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்க வழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்தச் சுரங்க வழிப்பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளியை நோக்கிச் சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.

5)பூமியைப் பார்த்தல்: சிலர் சுரங்க வழிப்பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கிச் சொர்க்கம்[நரகமாகவும் இருக்கலாமே!] போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும், பூமியை விட்டும் வெளியே போய், பூமியானது அண்ட சராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். 

6)ஒளி மனிதர்களைக் காணுதல்: சுரங்க வழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப்போன சொர்க்க பூமியில்  ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்துபோயிருந்த ஒரு சில நண்பர்களையும்[நண்பிகள் இல்லையா?!], நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாகச் சிலர் கூறியிருக்கின்றனர்.

7) அருட் பெரும் ஜோதியைக் காணுதல்: ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப்[அது தெய்வீகப் பிறவி என்பதை எப்படி அறிந்தார்கள்? இதற்கு முன்பு அதைப் பார்த்தவர்கள் உண்டா?] பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும்போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின்[?] உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்.

8)வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலித்தல்: அந்தத் தெய்வீகச் சக்திக்கு முன்னால் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காணக் கூடியதாகவும் அமைந்ததாம்.

9)வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என தெரிவிக்கப்படல்: அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னமும் முடிந்துவிடவில்லை[இது உண்மை எனில் மனிதர்கள் கொடுத்துவைத்தவர்கள்] என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படிக் கூறப்பட்டதாகச் சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கியக் காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.

                                *  *  *

மூடியால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் சொல்வதையெல்லாம் முழுமையாக நம்பலாமா?

நம்பலாம், உண்மையிலேயே செத்துப்போன ஒருவர் பிழைத்தெழ முடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும்போது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 150 பேரும் உண்மையில் செத்துப்போனவர்கள் அல்ல; செத்துப்போனதாக நம்பப்படுபவர்கள்.

எனவே, டாக்டர் ரேமண்ட் மூடி தந்துள்ள தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. எனினும், மரணத்திற்குப் பின்னரான நிலை குறித்து ஆராய்ந்து அறியும் மூடியின் ஆர்வமும், கடின உழைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும்.

முக்கியக் குறிப்பு:

நம்மவர்களை மிஞ்சும் 'புருடா மன்னர்கள்' அயல் நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை உறுதிப்படுத்துகிறது!

========================================================================== http://www.thinaboomi.com/2017/05/02/what-happens-after-death-scientific-information-71016.html



திங்கள், 15 நவம்பர், 2021

பதின்பருவப் பெண்களின் பலவீனங்கள்!


சிறுமி ஒருத்தியை[பத்து வயதுக்குள் என்று வைத்துக்கொள்ளுங்கள்] உறவினரான ஓர் ஆடவனோ,  நெருங்கிப் பழகிய அண்டை வீட்டுக்காரனோ தொட்டுத் தொட்டுப் பேசிவிட்டுத் தொடவே கூடாத அந்தரங்க உறுப்பை வருடுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

சிறுமியின் நிலை என்னவாக இருக்கும்?

".....இப்படியெல்லாம் யார் செய்தாலும் அனுமதிக்கக் கூடாது; அனுமதித்தால் உன் எதிர்காலம் பாழாகும்" என்றிப்படிப் பெற்றோரால் விழிப்புணர்வு ஊட்டப்படாத சிறுமியாக அவள் இருப்பாளேயானால், ஆடவனின் செயலால் ஏதோ ஒருவகையான சுகம் இருப்பதை உணர்வதோடு, எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவனின் கெட்ட நடவடிக்கையை அனுமதிக்கவும் செய்வாள்.

அவ்வாறு அனுமதிப்பது தவறு என்று அறிந்திருந்தாலும்கூட, அந்த ஆடவன் தன் குடும்பத்தாரால் மதிக்கத்தக்கவனாகவோ, தன்னால் பெரிதும் நட்புப் பாராட்டப்பட்டவனாகவோ இருந்தால், அவனின் அத்துமீறலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பெற்றோரிடம் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுவதும் உண்டு.

வன்புணர்வு செய்யப்பட்டு, உடலளவில் பாதிப்பு நிகழ்ந்தால் மட்டுமே அந்த அனுபவத்தைப் பெற்றோரிடம் அவள் பகிர்வாள்.

வயதுக்குவந்த பதின்பருவப் பெண்களும்கூட, தமக்கு ஏற்படும் இம்மாதிரியான அனுபவங்களைப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவிடுவதும் நடக்கிறது. இவ்வாறு மறைப்பதற்கும் மேற்கண்ட உறவு நிலைகளே காரணங்களாக அமைகின்றன.

இவை மட்டுமல்லாமல், தொடக்கத்தில் வெற்று உரையாடலாக இருந்து, படிப்படியாக ஆபாசமாக மாறும் பேச்சு, தொட்டுவிடாமல் சற்று எட்ட இருந்தே செய்யும் உடலுறுப்புச் சேட்டைகள் என்றிவை போன்ற, ஆடவரின் அடாவடித்தனங்களின் விளைவாக, பதின்பருவப் பெண்கள் பெரும் மனப்போராட்டங்களுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

கோவை மாணவி பொன்தாரணி(17) இவ்வகையான மனப்போராட்டத்திற்கு உள்ளானதே அவளின் விரும்பத்தகாத 'முடிவு'க்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தச் சிறுமியின் தற்கொலை குறித்து, அடுத்தடுத்துக் காணொலிகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில்.....

அவற்றிற்கான மிகப் பெரும்பாலான கருத்துரையாளர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியன் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், ஒரு சிலர்[பின்னூட்டக்காரர்கள்] 'பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் நடந்தவற்றை மறைத்தது ஏன்? நெருங்கத் தகாதவன் என்று தெரிந்திருந்தும் ஆசிரியனுடன் ஆடியோவில் உரையாடியது ஏன்?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி,  அச்சிறுமியும் தவறு செய்திருக்கிறாள் என்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். 

எந்தவொரு பதின்பருவப் பெண்ணும் பாலுறவு விசயத்தில் ஆணுடன் இணங்கிப்போவதில்லை; ஆடவன் அவளை இணங்க வைக்கிறான்' என்பதே அத்தகையவர்களுக்கு நாம் அளிக்கும் மறுப்புரை.

மன முதிர்ச்சி இல்லாத சிறுமிகளை மருவிச் சுகம் காண முயலும் காமுகர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்ப உரையாகும்.

==========================================================================


ஞாயிறு, 14 நவம்பர், 2021

அவர் சுமப்பது கடவுள்களையல்ல, மனிதாபிமானத்தை!


#வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாடின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சாய்ந்த மரங்களை அக்கல்லறையில் பணி செய்யும் ஊழியரான உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தபோது, அங்கு அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்தத் தகவல் டி.பி.சத்திர காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அங்கு விரைந்து சென்று அவரைத் தன் தோளில் தூக்கிச் சுமந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்த இருவருடன் அவரை அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் வே.பாலு, அந்த ஆய்வாளரின் செயலைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:

யாரம்மா நீ?

விழி பிதுங்கி,

நுரைதள்ளி,

மொத்தக்கண்ணீரும்

மழை நீரோடு கலக்க

ஒரே ஒரு செயல்..

கடமை கடந்து,

கருப்பை சுமப்பவள்

நீ .. என்பதை

மரணம் தொட்ட

மனிதனை

அன்னையாய் சுமந்த

உன் தோளுக்குள்

அத்தனை தீரமா?

இல்லை அம்மா,

மழை நீரையும்

மிஞ்சிய ஈரம்!!!#

மேற்கண்ட செய்தியும் பாராட்டுக் கவிதையும் 'நக்கீரன்' தளத்தில் வெளியானவை[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/advocate-v-balu-written-poem-pt-chatram-inspector-rajeswari    Published on 12/11/2021 (15:24) | Edited on 12/11/2021 (16:28)]

ஆய்வாளரின் அருஞ்செயலைப் பாராட்டிக் கவிதை படைத்த வழக்கறிஞருக்கு நம் பாராட்டுகள். ஆயினும், கவிதைக்குச் சூட்டப்பட்ட தலைப்பு நம் உள்ளத்தை உறுத்துகிறது. தலைப்பு.....

‘இதோ, இந்த ராஜேஸ்வரி தோளில்தான் ஈசனும், யேசுவும், அல்லாவும்..’ 

கடமையுணர்வுடன் பணியில் ஈடுபட்டு மயங்கியவர் உதயகுமார். அவரைத் தோளில் சுமந்தவர் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இது மனிதாபிமானச் செயல். மனிதாபிமானத்தை ஆய்வாளர் தோளில் சுமப்பதாகத் தலைப்பிட்டிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். ஈசனையும் ஏசுவையும் அல்லாவையும் சுமப்பதாகத் தலைப்பிட்டிருப்பது உள்மனதை உறுத்துகிறதே.

கடவுள்கள் இருப்பது உண்மையானால்.....

தேவை ஏற்படும்போது, அவர்கள் தாங்களாகவே ஒருவரையொருவர் சுமந்துகொள்வார்கள்.

மனிதர்கள் சுமக்க வேண்டியது மனிதாபிமானத்தைத்தான்; கடவுள்களையல்ல!
==========================================================================
 


சனி, 13 நவம்பர், 2021

"போகாதே... போட்டுத்தள்ளு"


#கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர்[மாணவி] எழுதியுள்ள கடிதம் ஒன்று காவல்துறையால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது#

இது, 'நக்கீரன்' தளத்தில் இன்று வெளியான செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/teacher-arrested-coimbatore-school-student-case    Published on 13/11/2021 (07:36) | Edited on 13/11/2021 (09:17)

பதின்பருவம்[Teenage] என்பது எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், அதன்  பின்விளைவுகள் குறித்துச் சிந்தித்து அறியும் 'மனப்பக்குவம்' அற்றதும் ஆகும்.

இப்பருவ வயது மாணவிகளை, அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே பாலுறவுக்கு உள்ளாக்குவதும், அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுமான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் ஒரு கூடுதல் நிகழ்வைத்தான் நக்கீரன் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்த அப்பாவி மாணவி தற்கொலை புரிவதைத் தவிர்த்திருக்கலாம். 

புனிதமானது கற்பிக்கும் தொழில் என்பதை மறந்த ஒரு கழிசடையின் இழிசெயலால், சம்பந்தப்பட்ட மாணவியின் உடல்நிலையைக் காட்டிலும் மனநிலை அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இனியும் படிப்பில் கவனம் செலுத்த இயலாது என்று அவள் எண்ணியதும், இந்தச் சம்பவத்தால் தன் எதிர்காலம் சூனியம் ஆகிவிட்டதாக நம்பியதும், பெற்றோருக்குச் சுமையாக இருத்தல் வேண்டாம் என்று முடிவெடுத்ததும் போன்ற காரணங்களால் தவிர்ப்பது முடியாமல் போயிருக்கலாம்.

பொதுவாக, பெண்ணைப் பெற்றவர்களும், உற்றார் உறவினரும், காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் குற்றவாளி எந்த அளவுக்குத் தண்டிக்கப்படுவான் என்பதை முன்கூட்டியே அனுமானிப்பது சாத்தியமில்லை.

இந்த அபலையைப் போல, அறியாமை காரணமாக, இனி வாழ்ந்து பயனில்லை என்று முடிவெடுக்கும் மாணவிகள், தற்கொலைக்கு மாறாக, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் அயோக்கியர்களைக் கத்தியால் குத்தியோ, தடியால் அடித்தோ தீர்த்துக்கட்டுவது வரவேற்கத்தக்கது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயினும்.....

இதற்கான துணிச்சலும், பின்விளைவை எண்ணிக் கலங்காதிருக்கும் மன திடமும் பதின்பருவ மாணவிகளுக்கு வாய்க்காது என்பதை எண்ணும்போது மனம் வெகுவாகக் கனத்துப்போகிறது.

==========================================================================


வெள்ளி, 12 நவம்பர், 2021

பெண்ணின் அழுத கண்ணீரும் அழியாத மனித இனமும்!!!

மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, தான் பெற்ற குழந்தையைத் தானே குழி தோண்டிப் புதைத்துவிட்டதாக இளம் பெண்ணொருத்தி மீது குற்றம் சாட்டப்பட்டதான வழக்கு அது. மாடு மேய்ய்ப்பவர்கள் மூலம் தகவல் கிடைத்து, அவள் மீது கொலைக் குற்றம் சாட்டி நீதிபதிகளின் முன்பு நிறுத்தியிருந்தார்கள் காவல்துறையினர்[17.7.1929ஆம் தேதியில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வு இது].

அந்த இளம் பெண்ணின் பெயர் பீபியா. அவளுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிகள், அரசாங்கத்திடம் 'கருணை மனு' சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்தார்கள்.

இந்த நிகழ்வு இயல்பான ஒன்றுதான்.

இதன் பின்னணியோ நம்மைக் பேரதிர்ச்சிக்கும் கடும் வேதனைக்கும் உள்ளாக்க வல்லதாக உள்ளது.

அந்தப் பெண்  ஐந்து வயதிலேயே திருமணம் முடிக்கப்பெற்று, கணவனை இழந்து 'விதவை' என்னும் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டவள்; கணவன் வீட்டிலேயே வாழ்ந்தவள். பருவம் எய்திய பின்னர் அந்தக் குடும்ப உறுப்பினராலேயே கர்ப்பிணி ஆக்கப்பட்டவள். இந்தச் சூழ்நிலையில்தான், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதைக் குழி தோண்டிப் புதைத்த சோகமும் நிகழ்ந்தது.

நீதிபதிகளால் தண்டிக்கப்பட்டாள் அவள். அவளைக் கர்ப்பிணி ஆக்கியவன் தண்டிக்கப்படவில்லை.

கல் நெஞ்சுடன் ஆணினம் தங்களுக்குக் காலங்காலமாகச் செய்த வஞ்சகத்தைப் பெண்கள் மறக்காமலும்,  துறவு மனத்துடன் மணம் புரிய மறுத்தும் வாழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட மனித இனம் பூண்டோடு அழிந்து காணாமல் போயிருக்கும். 

இப்படியொரு அவலம் நேராதிருந்தமைக்குக் காரணம்.....

'பெண்களுக்கு மறதியும் மன்னிக்கும் உயர் குணமும் அதிகம்! மிக மிக மிக... அதிகம்' என்பதுதான்!!!

==========================================================================

-குடி அரசு - செய்திக் குறிப்பு - 11.08.1929

https://books.google.co.in/books?id=p4olDwAAQBAJ&pg=PT107&lpg=PT107&dq=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?&source=bl&ots=qE0aMr2QD3&sig=ACfU3U3ypJvJDLsW0IVk4VRDXbcIdQxwCQ&hl=ta&sa=X&ved=2ahUKEwiGqOjYke_zAhWS9nMBHXGtBnUQ6AF6BAghEAM#v=onepage&q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%3F&f=true