அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 31 மார்ச், 2021

காதல் யுகம்!!

தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“உடம்புக்கு ஒரு கேடும் இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” -கோபத்தின் எல்லையைத் தீண்டியிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ‘உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, விரக்தி தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல, அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

நாட்கள் கழிந்தன. 

கீர்த்தியின் அப்பா மாரடைப்பால் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

அன்று 'காரியம்’.

“வா கீர்த்தி.” -காரியம் செய்பவர் கீர்த்தியை ஒரு மர நிழலுக்கு அழைத்துச் சென்றார்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்: “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

”கூடாதுப்பா. அது நம் பரம்பரை வழக்கம்.” -கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்தவருக்கு ’மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்துச் சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

“கலியுகம் முடிஞ்சிடிச்சி. இது காதல் யுகம்... அதைவிடவும் இது ரொம்பப் பொல்லாதது” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்.
======================================================================================
கதை ரொம்பப் பழசு! தலைப்பு புத்தம் புதுசு!!




 

திங்கள், 29 மார்ச், 2021

அந்தோ பரிதாபம் மனிதகுலத்தின் எதிர்காலம்!!!

'பல கோள்களையும்  நட்சத்திரங்களையும் உள்ளடக்கியது சூரியக் குடும்பம். பல சூரியக் குடும்பங்களைக் கொண்டது பால்வெளி மண்டலம். பல பால்வெளி மண்டலங்களைத் தன்னுள் கொண்டது நீளம், அகலம், வரம்பு, சுற்றளவு, திசை, மையப்புள்ளி, விளிம்பு என்று எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாமல் எல்லையற்று[எந்தவொரு விவரிப்புக்கும் உட்படாதது] விரிந்து பரந்து கிடப்பது  பிரபஞ்சம்' -இது, 'பிரபஞ்சம்' என்பதற்குத் தரப்படுகிற பொதுவான விளக்கம். 

பிரபஞ்சம் குறித்து முடிவு எட்டப்படாத சில கருதுகோள்களும் உள்ளன. 'பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது' என்று சொல்லப்படுவது அவற்றுள் ஒன்று.

'பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால், அதற்கு விளிம்பு என்று ஒன்று உண்டு என்பதை ஏற்றாக வேண்டும். அந்த விளிம்புக்கு அப்பால் என்ன உள்ளது? அங்கே பிரபஞ்சம் அல்லாத வேறு எதுவும் உள்ளதா?' என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் விடை இல்லை. எனவே, விரிவடைதல் என்பது ஆதாரமற்ற கூற்று என்றே கருதவேண்டியுள்ளது.

'பிரபஞ்சங்கள் பல' என்னும் கருத்தும் ஆய்வாளர்களிடையே இடம்பெற்றுள்ளது. அந்தப் 'பல' பிரபஞ்சங்கள் தவிர வெளியில் வேறு எவையெல்லாம் உள்ளன என்பதும் விடை அறியப்படாத கேள்வியாக உள்ளது.

விரிவடைவது குறித்தும், 'பல' என்னும் எண்ணிக்கை குறித்தும் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லையாயினும், பிரபஞ்சம்' என்று இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.

இருந்துகொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம் என்றேனும் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள். அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.

//பெரிய உறைவு(big freeze), பெரிய உடைவு(big crunch), பெரிய உதறல்(big rip), வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை(vacum metastability), வெப்ப இறப்பு(heat death) என்பவை அவற்றுள் சில.

உறைதல்:

ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள், 'பிரபஞ்சத்தில் மிக மிகக் கடுமையான குளிர் நிலவும். அந்தக் குளிரினால் பிரபஞ்சம் மொத்தமும் உறைந்துபோய், அது அழிவைச் சந்திக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்தனர்.  அவர்கள் கூறிய அந்தப் பெரிய உறைவு  6-10 பில்லியன் ஆண்டுகள் கழித்து ஏற்படக்கூடுமாம். 

இருண்டுபோதல்:

எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறுவதால் பிரபஞ்ச அழிவு ஏற்படலாம். ஹாவ்கிங் கதிர்வீச்சு விதிப்படி, கருந்துளைகளும், கேலக்ஸியும் ஆவியாகும்.

உடைவு:

100 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக உள்ள 'டார்க் எனெர்ஜி' எனும் கரிய சக்தி ஒரு கட்டத்தில் 'நின்று மறு பக்கம் திரும்பும்'[?] எனவும், இதனால் பிரபஞ்சம் சுருங்கி, சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும், இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நிலையில், பிரபஞ்சம் மிக வேகமாகவும் பெரிதாகவும் விரிவடைந்து, ஈர்ப்புச் சக்தியை இழந்து ஒன்றுமில்லாததாக மாறிவிடும். பிரபஞ்சத்தில் எதுவுமே எஞ்சாமல் அனைத்தும் அழிந்துவிடும். இது நடக்க 16 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்//[https://tamil.boldsky.com].

'பிரபஞ்சம் முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பதைவிட, உறைந்தும், உடைந்து சிதறியும், அடர் இருளில் உள்ளடங்கியும், மிகை வெப்பத்தால் உருகியும் மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும்' என்று சொல்வதே ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுவாரும் உளர்.

ஆக, 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்னும் வழக்குக்கு ஏற்ப, பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் இடைவெளியில் பிரபஞ்சம் உருமாறிக்கொண்டே இருக்கும் என்பதை நம் போன்றவர்களால் புரிந்துகொள்ள இயலுகிறது. 

அண்டவெளியில் அடைபட்டுக் கிடக்கும் அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தின் நிலை இதுவென்றால், அற்ப மனிதர் குலத்தின் கதி 'அதோ கதி'தான்.

என்றேனும் ஒரு நாள் அழிந்துபோகவிருக்கும் மனித இனம் மீண்டும் தோன்றும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படியொரு அவலநிலைக்கு ஆட்பட்டிருப்பது புரியாமல், ஆயிரக்கணக்கில் மதங்களையும், பல்லாயிரக் கணக்கில் கடவுள்களையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, மனித நேயம் மறந்து, நாளும் மோதலும் சாதலுமாக, வாய்த்திருக்கும் அற்ப வாழ்நாளை வீணடிக்கும்  மனிதர்களை நினைத்தால்..... 

அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!

======================================================================================


ஞாயிறு, 28 மார்ச், 2021

'புரட்சியாளன் பிரபாகரன்'... அறியப்படாத பல அரிய தகவல்கள்!!!

"உலகில் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பெண் அல்லது ஆண் புரட்சியாளர் பற்றிய சுவாரசிய மற்றும் அதிகம் அறியப்படாத தகவல்கள் சொல்ல முடியுமா?" என்னும் 'Quora'  வின் கேள்விக்கு[·23 பிப்ரவரி], 'மயூரன் குமாரசாமி'[New Zealand Customs Service-இல் Customs Officer (2015–தற்போது வரை) அவர்கள் அளித்த பதில்:

"னக்குப் பிடித்த புரட்சியாளர் - ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தலைவர் பற்றிய '25 குறிப்புகள்'..... நிச்சயம் இவை படிப்பவரைச் சிலிர்க்கச் செய்யும்.

01.'அரிகரன்' - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்துப் பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல், 'அலெக்ஸ் ஹேவி'யின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையொட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும்தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து, தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்துp பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்Wink மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க, செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாகp போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதிவரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்கமாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்."

======================================================================================

நன்றி: 'மயூரன் குமாரசாமி' அவர்கள்[ta.quora.com]



சனி, 27 மார்ச், 2021

'அப்பா பைத்தியம்' இங்கே! 'அம்மா பைத்தியம்' எங்கே...எங்கே?!?!

அப்பா பைத்தியமோ, அம்மா பைத்தியமோ பைத்தியத்துக்கு ஒரு கோயிலா என்று நினைத்து நீங்கள்  மண்டை காய வேண்டாம். 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'ன்னு மாணிக்கவாசகர் பாடினார் இல்லையா, அந்த அப்பா மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்த காரணத்தால் இவர் 'அப்பா பைத்தியம்' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது அடியேனின் யூகம். ஹி...ஹி...ஹி...

'ஒரு காலத்தில் முருகப் பக்தராக இருந்த என். ரங்கசாமி கடந்த 90ஆம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிரப் பக்தராக மாறினார்[முருகன் கோபிக்க மாட்டாரோ?]. முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள 'அப்பா பைத்தியம்' கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தைக் கும்பிடாமல் எங்கேயும் புறப்படமாட்டார்[நம் முதல்வர் அய்யா, சட்டைப் பையில் அம்மா படம் வைத்திருக்கிற மாதிரி, அப்பா பைத்தியம் படத்தை இவர் தன் சட்டைப் பையில்  வைத்துக்கொள்ளலாம்]' என்பது செய்தி.

புதுச்சேரி முதல்வராவதற்கு அப்பா பைத்தியம் சாமிகள்தான் காரணம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாம். போன தேர்தலில் தோற்றுப்போனாரே, அந்தத் தோல்விக்கும் இந்த அப்பா பைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று ரங்ஸ் நினைக்கிறாரோ? இந்தச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்பாக சேலம் வந்த என். ரங்கசாமி யாருடன் கூட்டணி அமைப்பது என்று குறி கேட்டு விட்டுச் சென்றாராம்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளார் ரங்கசாமி. இன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 பேர், அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் பாஜக வேட்பாளர்கள் 9 என மொத்தம் 30 வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியம் சிலை முன்பாக வைத்து வணங்கினாராம்.

வணங்கிய கையோடு, எத்தனை பேர் ஜெயிப்பாங்க, யார் யாரெல்லாம்  மண்ணைக் கவ்வுவாங்கன்னு கேட்டிருந்தா அப்பா பைத்தியம் சாமி சொல்லியிருக்கும். 

அதோட, ஜெயிச்சி ஆட்சி அமைச்சதுக்கப்புறம், "பா.ஜ.க.காரங்க எப்போ கூட இருந்தே குழி பறிப்பாங்க?" என்றும் அப்பா பைத்தியத்துகிட்டே கேட்டிருக்கலாம். கேட்டாரா ரங்கசாமி?

வேட்பாளர்கள் அனைவரின் ஜாதகங்களை மூலவரின் பாதத்தில் வைத்துத் தரிசனம் செய்தார். மூலவரின் வாயில் சுருட்டு வைத்து, காதுகளில் பேசி உத்தரவு வாங்கினார்[இதைச் 'சுருட்டுச் சாமி'ன்னும் சொல்லாம்]. மூலவர் சன்னதியில் 1-30 மணி முதல் 2-30 மணி வரை தியானத்தில் ஈடுபட்ட அவர் கோவிலை வலம் வந்து கையில் சில காகிதங்களுடன் காரில் புறப்பட்டார் என்கிறது செய்தி.

"வாயில் சுருட்டு வைத்தால்தான் சுருட்டுச் சாமி காதுகொடுத்துக் கேட்குமா? உத்தரவு கொடுக்குமா?" என்று யாரும் கேட்டுவிட வேண்டாம். அப்படிக் கேட்ட பலரின் நுனி நாக்கை, அப்பா பைத்தியம் சாமி சுருட்டால் சுட்டுக் கருக்கிவிட்டதைச் சேலம் சூரமங்கலம் மக்கள் கதை கதையாய்ச் சொல்லுகிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, "புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 சதவிகித வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கு, சாமியிடம் வேண்டுகோள் வைத்தேன். வெற்றி பெற்றதும் மீண்டும் வந்து தரிசனம் செய்வேன்" என்றாராம். வெறும் தரிசனம் போதாதே, அப்பா பைத்தியத்துக்குத் தங்கக் கிரீடம் சூட்டுவேன்; உடம்புக்குத் தங்க முலாம் பூசுவேன் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்.

கடந்த 90ஆம் ஆண்டு, முதல் முறையாக தட்டாஞ்சாவடித் தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெற்றார்கள். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், 'ஓராண்டில் அமைச்சராவாய்' என்றாராம்.

91ஆம் ஆண்டு திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்றுக் கூட்டுறவு அமைச்சரானார். அன்று முதல் 'அப்பா பைத்தியம்' சாமியின் பக்தரானார். கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்குச் செல்லத் தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்துக் காரியங்களையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார்.

நாமக்கல்காரங்க 'அப்பா பைத்தியம்' சாமிக்குக் கோயில் கட்டத் திட்டமிட்டிருக்காங்க. அதுக்கு முன்னாடி ரங்கசாமி வெற்றி பெற்று, அப்பா பைத்தியம் சக்தியுள்ள சாமிதான்னு நிரூபணம் ஆகணுமாம். 

எங்க ஊர்க்காரங்க ரொம்பவே புத்திசாலிங்க!

======================================================================================

* 'பக்தர்களிடம் தன்னைப் பைத்தியம் என்று இவர் கூறிக்கொண்டமையால் பைத்திய சாமி என்றும், பக்தர்களின் கோரிக்கைகளைத் தந்தைபோல இருந்து நிறைவேற்றியதால் அப்பா பைத்தியம் சாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். எண்ணற்ற ஊரில் தங்கி, பக்தர்களுக்கு உதவிய இவர் சேலம் சூரமங்கலத்தில் 141வது வயதில் தை 28 2000 த்தில் ஜீவ சமாதி அடைந்தார்'--விக்கிப்பீடியா


வியாழன், 25 மார்ச், 2021

கடவுளைப் புறக்கணித்து, 'காமக்கலை' கற்பிக்கும் 'கோயில்கள்'!!!

காமம் அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் குறுகிய காலத்தில் பிரபலமாகி ஊடகச் செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றன. இதற்குக் காரணம், அச் செய்திகளின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. 

நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. 

உண்மையில், காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. 

சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாப் பார்த்துத் தண்டனை அளிக்கிறது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகிறது. இப்படித்தான் சமூகத்தின் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல, நியாயமற்றதுமாகும்.....

இந்தியாவிற்கான எனது முதல் பயணத்தில் முக்கியமானதாகச் சென்ற ஒரு இடம் கஜூராஹோ என்றழைக்கப்படும் இடத்திலிருக்கும் கோவில்கள் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்குப்பகுதியில் தாஜ்மாகால் இருக்கும் பிரதேசத்திற்குக் கீழே இருக்கிறது. ஜான்ஸி ராணியின் நினைவாக இருக்கும் ஜான்ஸி புகையிரத நிலையத்திலிருந்து பேருந்தில் பயணிக்கவேண்டும். 

இந்தக் கோவில்களில் உள்ள விசேசம் என்னவென்றால், இவற்றின் கர்ப்பகிரகத்திற்குள் அதாவது மூலஸ்தானங்களில் கடவுள்கள் இல்லை. வெறுமையான இடம் மட்டுமே இருக்கிறது. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிறுதுவாரத்தின் மூலம் வெளிச்சம் வருகிறது. இக் கோயில்களின் கோபுரங்களின் வெளிப்புறமாகப் பிற இந்து சைவ கோயில்களில் இருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதிலாக நிர்வாணச் சிலைகளும் மற்றும் பாலியல் அல்லது காம இன்பத்தை அனுபவிக்கும் உறவுகளின் பல்வேறுவிதமான முறைகளும் அழகான சிலைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

இதன் நேரிடையான அர்த்தம் என்னவெனில் காமத்தை அனுபவிக்காமல் மனிதர்கள் முக்தி பெற முடியாது என்பதே. இப்படிப் பல காரணங்களைக் கூறலாம். அடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்த பின்பே உயர் நிலையை அடைய முடியும் என்பதே உண்மை. இதற்கு, புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். 

குறிப்பாக, பிற மதக் கடவுகளின் வாழ்க்கை வரலாறுகளிலும் இவ்வாறன பகுதிகள் இருந்தன; பின்னர் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டுவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கஜூராவில் 1000 கோவில்கள் இருந்தன என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அரேபிய மற்றும் ஐரோப்பியப் படையெடுப்புகளாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் இந்தக் கோயில்கள் அழிக்கப்பட்டு இன்று 10 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. 

இந்திய வரலாறு, நமக்கு ஆணின் பார்வையில் அமைந்த காமசூத்திராவையும் பெண்ணின் பார்வையில் அமைந்த தந்திராவையும் தந்திருக்கிறது. சீனாவிலும் காம சாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் காம சக்தியைப் பெறும் முறைகளும், பல்வேறுவிதமான உறவு முறைகளும், உறவு நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வரலாறு கொண்ட இந்தியப் பிரதேசத்தில்தான் இன்று காமம் மற்றும் பாலியல் உறவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பிற நாடுகளைவிடவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளில் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான போக்கு மிக அதிகமாகவும் நுண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஒரு புறம் பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகம் மறுபுறத்தில் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்களையும் அவர்களது காமத்தையும் கட்டிப்போடுகிறது. 

பிரம்மச்சரியம் என்பது அதியுயர் மனித நிலையாக, அனைத்து மதங்களாலும் போற்றப்பட்டுவருகிறது. இதானால் பல பெற்றோர் குழந்தைகளை, குறிப்பாக ஆண் குழந்தைகளைச் சிறுவயதிலையே சமய நிறுவனங்களில் அல்லது மடங்களில் சேர்த்து அவர்களைத் துறவிகளாக்கிவிடுகின்றனர். 

இவ்வாறு செய்வது சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகப பார்க்கப்படுவதில்லை. 

குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரியம் நோக்கி மத வழியில் வளர்க்கப்பட்டு, வாலிப வயதில் தமது காம உணர்வினால் உந்தப்பட்டு, பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் அவதிப்படுகின்ற பலரை நமது சமூகங்களில் சாதாரணமாகக் காணலாம். 

இவ்வாறானவர்கள் வாய்ப்புகள் கிடைத்தால் துறவற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சதாரண வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். முடியாதவர்கள் மறைவாகப் பாலியலுறவுகளில் ஈடுபடுகின்றனர்.  இதற்கான உதாரண நிகழ்வுகள, அனைத்து மத நிறுவனங்களிலும்  இடம்பெறுவதைக் காலம் காலமாகக் காண முடிகிறது.

[நீட்சியைத் தவிர்க்க, கட்டுரை சுருக்கப்பட்டது]

======================================================================================

நன்றி: மீரா பாரதி

https://meerabharathy.wordpress.com/2010/08/10



புதன், 24 மார்ச், 2021

கூவுங்க கூவுங்க! ஓட்டுக்கு 'ரேட்' கேட்டுக் கூவுங்க வாக்காளர்களே!!

நம் 'உத்தமப் புத்திரர்'களான வாக்காளர்களுக்கு 'விழிப்புணர்வு' ஊட்டுதல் பொருட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எழுதிய பதிவு இது. எதிர்பார்த்த பலன் விளையவில்லை. 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்குக் கணிசமான நாட்களே எஞ்சியுள்ளதால், வாக்காளப் பெருமக்களின் நலம் கருதி இதை மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

குத்தாட்டங்களுக்கும், அரசியல்வாதிகளின் வெத்துவேட்டுக் கூப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஊடகக்காரர்கள், பொதுமக்கள் அறியும் வகையில் இப்பதிவைப் பிரபலப்படுத்துவார்களேயானால், ஏழேழு பிறவிகளிலும் நான் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன்.

மீள்பதிவு.....

வாக்காளர்களே,

உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவும் செய்வார்கள்[தேர்தலில் வெற்றிபெறும் நோக்கம் இன்றி வேறு காரணங்களுக்காகப் போட்டியிடுபவர்கள் இதற்கு விதிவிலக்கு].

வேட்பாளரின் பொருளாதாரம், அவர் சார்ந்துள்ள கட்சியின் பணபலம் போன்றவற்றிற்கேற்ப வாக்குக்கான தொகை மாறுபடக்கூடும்.

ஓட்டுக்குப் பணம் தருவது குற்றமாகும் என்று ஓவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் எச்சரிக்கையையும் மீறி,  ஓட்டுக்குப் பணம் தருவதும் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.


இது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். ஆட்சியாளர்களும் அறிவார்கள். ஆனால், தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை இல்லை. அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை.

இந்நிலையில்.....

ஓட்டுக்கான [லஞ்சத்]தொகையை ஆணையமே நிர்ணயம் செய்து, தேர்தல் நடைமுறை விதிகளில் இதையும் ஒன்றாக மாற்றியமைப்பதன் மூலம் தொடரும் இந்தக் குற்றத்தைக் குற்றமற்றதாக்கிவிடலாம்; எதிர்பார்த்துக் காத்திருந்தும், பணம் கிடைக்காமல், கணிசமானவர்கள் ஏமாந்து தவித்துக் கிடப்பதையும் தவிர்க்கலாம்.

போட்டியிடும் வேட்பாளரின் பொருளாதாரப் பின்புலத்தையும், அவர் சார்ந்துள்ள கட்சியின் நிதி இருப்பையும் கருத்தில்கொண்டு ஒட்டுக்கான கையூட்டுத் தொகையை நிர்ணயம் செய்யலாம்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலேயே இதற்கான ஆணையை வெளியிட்டு நடமுறைப்படுத்துமாறு வாக்காளப் பெருமக்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பது மிக மிக மிக முக்கியத் தேவையாகும்; கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஒருங்கிணைந்த ஓங்கிய குரலில் முழங்கலாம்.

நம் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்கள்.....

முழங்குவார்களா, 'நமக்கு வரவேண்டியது வந்தால் போதும்' என்று முடங்கிக் கிடப்பார்களா?!#

                                        *                       *                  *               *                *

செவ்வாய், 23 மார்ச், 2021

பொங்கும் அழகுடன் பொம்மைப் பெண்டாட்டிகள்!!!


இந்த ஆள் பேரு 'யூரி டோலோச்கோ'; கஜகஸ்தானைச் சேர்ந்தவன்.

ரெண்டு பெண்டாட்டிக்காரன்; இன்னும் பல பெண்களைக் கட்டிக்கப் போறானாம்.

இவன் ஒரு பாடி பில்டர். இவனைச் சமாளிக்க முடியாம முதல் மனைவியான 'மார்கோ' உடைஞ்சிபோனாளாம். பழுது பார்க்க முடியலையாம்.....

'அது என்ன, பெண் உடைஞ்சி போறதும், பழுது பார்க்குறதும்'னு தலையைச் சொறியாதீங்க. இந்த ஆள் கல்யாணம் பண்ணிகிட்டது மனுசச் சாதிப் பொண்ணை அல்ல; பொம்மையை. இந்தப் பொம்மையோடுதான் இவன் தாம்பத்திய சுகம் அனுபவிச்சிருக்கான். 

முதல் 'பொம்மை மனைவி'[கடைக்காரங்க ஏமாத்தி வித்துட்டாங்களாம்] உடைஞ்சிபோனதால, அவளை விவாகரத்துச் செய்துட்டு[?], வேறொரு பெண் பொம்மையைக் கல்யாணம் கட்டிகிட்டானாம்.

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்பற்றுகிற 1,00,000 பேருக்கு[இந்தக் கிறுக்கனுக்கு 1,00,000 பேர். அறிவுஜீவி[???]யான 'பசி'பரமசிவத்துக்கு வெறும் 57 பேர்]. இந்த இரண்டாந்தார பொம்மைப் பெண்டாட்டியை அறிமுகம் செய்திருக்கிறான்.

அதோட தொப்புள் ரொம்பவே அழகாம். 'அது'க்கும் பயன்படும்னு சொல்லி நம்மைக் கடுப்பேத்துறான்.

இது மாதிரியான பொம்மைப் பெண்களைத்தான் இவனுக்கு மிகவும் பிடிக்கும் என்கிறான் இவன். பல பொம்மைகளைக் கட்டிக்கப் போறானாம்.

இப்படி, இன்னும் என்னவெல்லாமோ உளறி வைத்திருக்கிறான். கீழே சுட்டி தந்திருக்கேன். வாசிச்சிப் பாருங்க.

மத்த ஆண்களைப் போல,  நிஜமான பொண்ணுகளைக் கல்யாணம் செய்துகிட்டா காலமெல்லாம் அவங்களோடு போராடணும்னு நினைச்சி இவன் பொம்மைப் பொண்ணுகளைக் கட்டிக்கிறானா? இல்லே, பொம்மைகள் தரும் சுகமே போதும்னு நினைக்கிறானா?

இவன் புத்திசாலியா, கிறுக்கனா?

ரொம்பவும் யோசிச்சா நமக்குக் கிறுக்குப் பிடிச்சிடும்! ஹி...ஹி...ஹி!!

======================================================================================

https://tamil.samayam.com/viral-corner/omg/bodybuilder-married-a-sex-toy-for-the-second-time-after-a-divorce-with-the-first-one/articleshow/81649884.cms

திங்கள், 22 மார்ச், 2021

'ஜக்கி'[வாசுதேவ்]க்குச் 'சவுக்கு' கொடுக்கும் சரமாரி சவுக்கடி!!!


'சத்குரு' என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட ஜக்கி வாசுதேவின் அதிர்ச்சிதரும் அதிரடி வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள விழைவோர், 'சவுக்கு' இணைய இதழ் வெளியிட்ட இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.

வழக்கமான, 'சுருக்குதல்', 'பிழை திருத்துதல்' எல்லாம் தவிர்த்து, கட்டுரையை உள்ளது உள்ளபடியே வெளியிட்டுள்ளேன்.

'கோடியில் புரளும் கேடி['சவுக்கு' கொடுத்த தலைப்பு]

BY SAVUKKU · 17/02/2015

சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம்

“நாம சொல்லுற ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”.

இது தான்  “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். ?

இவரின் அத்தனை வார்த்தைகளிலும் இருக்கும் ஒரே உண்மை “யோகா”.  இந்த யோகா என்ற ஒற்றை வார்தையை வைத்துத்தான், இன்று ஜக்கி பல ஆயிரக்கணக்கான கோடிகளை அபகரித்துள்ளார்.

எண்பதுகளில், சத்குரு என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஜக்கி, மைசூர் அருகில் உள்ள கொம்மட்டகிரி என்ற இடத்தில் அமைந்துள்ள ரிஷி சம்ஸ்க்ருதி வித்யா கேந்திரா என்ற யோகா பயிற்சி மையத்தில் ரிஷி பிரபாகர் என்ற குருவிடம்தான் யோகா பயிலுகிறார்.    பின்னாளில் அவரது குரு ரிஷி பிரபாகர், கோவைப் பகுதியில் ஆசிரமம் அமைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஜக்கி.   ஆனால் எந்தப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டாரோ, அந்தப் பணியை மறந்து, தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியவர்தான் ஜக்கி.   சில நாட்களில் தன்னைத்தானே சத்குரு என்றும் அறிவித்துக் கொண்டார்.    சரி. சத்குரு என்றால் என்ன என்று விசாரித்தால், ஒரு படிக்காத குருநாதன் என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் ஜக்கி.    சத்குரு என்றால் படிக்காத குருஜி என்பதற்கு எந்த சொற்களஞ்சியங்களில் தேடினாலும் விடையில்லை.

யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.

1988ம் ஆண்டு கோவைக்கு வந்த ஜக்கி வாசுதேவுக்கு, இது போன்றதொரு பெரிய ஆசிரமம் அமைத்து, வசூல் செய்யும் திட்டமெல்லாம் கிடையாது. இந்த ஆசிரிம பிசினெஸ் இப்படி பணத்தை அள்ளி அள்ளிக் கொட்டும் என்பதை அவர் நினைத்தே பார்த்திருக்கவில்லை.    பாரா க்ளைடிங் (Para Gliding) எனப்படும் விளையாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதே இவரது திட்டம்.   இவரது ஜாவா பைக்கில் அமர்ந்துகொண்டு,  இந்த பயிற்சி மையத்துக்கு மலை உச்சிதான் பொருத்தமாக இருக்கும் என்பதா, கோவையில் உள்ள மருதமலை, கணுவாய் அனுவாவி சுப்ரமணியர் கோவில் மலை, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற இடங்களில் பயிற்சி மையத்துக்கான இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தார்.  அப்போது இவர் சிறிய அளவில் தொடங்கியிருந்த யோகா வகுப்புகள், படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது.  இதன் பிரபலத்தை நன்றாக உணர்ந்த ஜக்கி யோகா பயிற்சியை வணிகமயமாக்கினால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் என்பதை உணர்ந்தார். 1989ம் ஆண்டு முதல், ஜக்கியின் யோகா வகுப்புகள் பிரபலமாகத் தொடங்கின.

செல்வந்தர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளில், மன உளைச்சலில் இருந்த தொழில் அதிபர்கள் ஜக்கியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.  என்னுடைய சரிபாதி என்று ஜக்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் ஜக்கியின் கையாலேயே உயிரை இழந்த பாரதியின் முன்னாள் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிக்க கம்மவார் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார்.  இவர்களின் அறிமுகம், ஜக்கியை ஜாவா மோட்டார் சைக்கிளில் இருந்து மாருதி காருக்கு உயர்த்தியது.

யோகா வகுப்புக்கு வந்தவர்களில் பலர், ஜக்கியின் அடிமையாக மாறியதையும், பணத்தை அள்ளி அள்ளி தந்ததையும் கண்ட ஜக்கி, இதை பல்வேறு இடங்களில் செய்து கொண்டிருப்பதை விட, நிரந்தரமாக ஒரு இடத்தில் ஆசிரமம் அமைத்து செய்தால் உரிய பயனை அளிக்கும் என்று உணர்ந்தார். பயிற்சிக்கு வரும் பணக்கார அமைகளிடம்,

“இந்த அற்புதமான யோகாவை நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டும்.  அதற்கான நமக்கென ஒரு சொந்த இடம் இருந்தால்தான், நாம் நெடுநாள் இந்த யோக கலையை வாழவைக்க முடியும்”

என்று அடித்த உருக்கமான சொற்பொழிவைக் கேட்டு, பணக்கார ஜக்கி அடிமைகள், நன்கொடையை கொட்டித் தீர்த்தன.

ஜக்கியிடம் உள்ள மிக மிக முக்கியமான திறன் அவரது வசீகரிக்கும் பேச்சுத் திறன்.  உண்மையில் கடவுள் நேராக வந்து, நம்மிடம் பேசினால் எப்படி கருணையோடு பேசுவார் என்று நாம் கற்பனை செய்து வைதிருக்கிறோமா… அதே போல பேசும் கைதேர்ந்த கேடிதான் ஜக்கி.  முதலில் மக்களின் இறுக்க உணர்வை தளர்த்த ஒரு நகைச்சுவையை கூறுவார்.   இது போன்ற நகைச்சுவை ஜோக்குகளை இவருக்கு எடுத்துத் தர ஒரு தனி டீமே பணியாற்றுகிறது.    ஜோக்கை கேட்டு கெக்கே கெக்கே என்று சிரிக்கும் மக்களிடம் பெற்றோர், உறவு, நாடு மக்கள், ஏழ்மை என்று உணர்ச்சி மயமாக பேசுவார்.  குருவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்திருக்கும் மக்களை எழுச்சியூட்டுவார்.   தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.    இதயம் அதிரும் வகையில் ஒலியோடு இறுதியாக நடனமாட வைப்பார்.   இப்படி உங்கள் மன நிலை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நெகிழ்ந்திருக்கும் நிலையில், நன்கொடை விவகாரத்தை எழுப்புவார்.   இப்போதெல்லாம், ஜக்கி நேரடியாக எந்த நன்கொடையும் கேட்பதில்லை.  அவர் வளர்த்து வைத்துள்ள ஆயிரக்கணக்கான அடிமைகள் அந்தப் பணியை கச்சிதமாக செய்கின்றனர்.

ஆசிரமம் அமைப்பது என்று முடிவானதும், கோவையைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில்உள்ள ஆனைக்கட்டி, பொள்ளாச்சி, வெள்ளியங்கிரி ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் வெள்ளியங்கிரி மலை.  ஆனைக்கட்டிக்கு செல்ல மலைப்பாதை வழியாக வர வேண்டும் என்பதால், விலை உயர்ந்த கார்களில் வரும் பெரும் செல்வந்தர்கள்  வருவது கடினம் என்பதால் ஆனைக்கட்டி நிராகரிக்கப்பட்டது.  பொள்ளாச்சியில் நிலத்தின் விலை அதிகம்.  ஆகையால் அதுவும் நிராகரிக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலை தேர்ந்தெடுக்கப்பட்டது.   ஆனால், வெள்ளியங்கிரியை தேர்ந்தெடுத்ததற்கு இந்த ஆள் விட்டான் பாருங்கள் ஒரு கதை. …..

சிறு வயது முதலே இவரது கண்களில் திரை போல ஒரு மலை தெரியுமாம்.  இது போலத்தான் மற்றவர்களுக்கும் தெரியும் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தாராம்.    தன்னோடு இருந்த மற்ற சிறுவர்ளிடம் கண்களில் தெரியும் இந்த மலை எங்கே இருக்கிறது என்று கேட்டாராம்.  மற்ற சிறுவர்கள் கேலி பேசவும், இவர் அவமானமாக உணர்ந்து அது குறித்து பேசுவதை தவிர்த்து விட்டாராம்.  இவர் தந்தை ஒரு கண் மருத்துவர்.   எல்லா குழந்தைகளையும் போல “அப்பா கண்ணு சரியா தெரியலை” என்று கூறியிருந்தால் அப்போதே விஷயம் முடிந்திருக்கும்.    ஆனால் ஜக்கி அப்படி செய்யவில்லை.

இந்த கண்ணில் தெரிந்த மலையோடே வளர்ந்தார் ஜக்கி.   தனது முதல் வயதில் நடந்த சம்பவங்களை கூட துல்லியமாக நினைவில் வைத்திருந்ததாகவும், சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குழந்தையாக தான் வளர்ந்ததாக அவரே கூறிக்கொள்வார்.  ஜக்கியின் சுயசரிதையில் தனது ஆசிரியையின் உள்ளாடையின் நிறத்தை தனது ஞானதிருஷ்டியால் கூறி அவரை வியப்படைய வைத்தாக பெருமையாக கூறிக்கொள்கிறார் ஜக்கி.  இவரை ஜட்டி வாசுதேவ் என்று அழைப்பது பொருத்தம்தானே ?

சரி. விஷயத்துக்கு வருவோம்.   இப்போது ஆசிரமம் அமைக்க இடம் வேண்டும்.  காற்றில் கயிறு திரிக்கும் ஜக்கிக்கா தெரியாது ?

சிலர் வெறும் கையில் முழம் போடுவார்கள்.  ஆனால் கை கூட இல்லாமல் காற்றிலேயே முழம் போடுபவர் யாரரென்றால் அது ஜக்கிதான்.     கோவை லட்சுமி மில்ஸ் அதிபரான காலம் சென்ற கரிவரதனுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்தது.    பாரதியின் கணவர் சுதர்சன் மூலமாக கரிவரதனின் அறிமுகம் கிடைக்க, மடியில் உள்ள பிள்ளை நழுவி விழும் வகையில் கரிவரதனிடம் பேசினார் ஜக்கி.  ஜக்கியின் பேச்சில் மயங்கிய கரிவரதன் தனது 14 ஏக்கர் நிலங்களையும் இலவசமாகவே ஜக்கிக்கு கொடுத்தார்.  அன்று முதல் இன்று வரை, ஜக்கி வாசுதேவ் ஈஷா மையத்தில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் முதல் பளிங்கு கற்கள் வரை, அத்தனை வேலைகளையும் இது போன்ற உதவிகள் மூலமாகவே முடித்துள்ளார்.

பக்த சிகாமணிகளுக்கு கேட்க வேண்டுமா ?  நிதி உதவியை அள்ளி அள்ளி கொட்டினார்கள்.   சரி.  இத்தனை விபரங்களும் புட்டு புட்டு வைக்கிறீர்களே… உங்களுக்கு எப்படி இவை அனைத்தும் தெரியும் என்று கேட்கலாம்.  இந்த அத்தனை விபரங்களும், ஜக்கியின் பல்வேறு ஒலி நாடாக்கள், ஒலி, ஒளி நாடாக்கள் மற்றும் அருளுரைகளில் இடம் பெற்றுள்ளன.  விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப, ஜக்கியின் தோற்றம் முதல் பொய் புரட்டு, பித்தலாட்டம் இவையே ஜக்கி.   இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி, வனத்தை அழித்து, ஒரு அரசாங்கத்தையே நடத்தி வரும் ஜக்கி வாசுதேவின் மறுபெயரே பொய் பித்தலாட்டம் ஆகியவையே.  ஜக்கியின் வாழ்க்கை சம்பவங்களை முழுமையாக தொகுத்து ஒப்பிட்டுப்  பார்த்தால், இந்த உண்மைகள் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் பலர் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க மெனக்கெடுவதில்லை.

சவுக்கு முதன் முதலாக ஜக்கியின் முகத்திரையை கிழித்த பிறகே, சாதாரண மக்களுக்கு லேசாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  ஆனால் தனது அடிமையாக உள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தின் உதவியோடு, தனது பித்தலாட்டத்தை தங்கு தடையின்றி அரங்கேற்றி வருகிறார் ஜக்கி.

ஈஷா வகுப்புகளில் ஜக்கியின் சிடி ஒன்று காட்டப்படும்.  அந்த சிடியில் ஒருவருக்கு வரும் சிரமங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போதிப்பார் ஜக்கி. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். அதாவது அவர் யோகா வகுப்புகள் எடுப்பதற்காக ஜாவா பைக்கில் செல்கையில் விபத்து ஏற்பட்டு கணுக்காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். அருகில் இருந்த கிராம மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்குமாறு ஜக்கி கேட்டுள்ளார்.    தன்னிடம் மரத்துப் போகச் செய்யும் ஊசி இல்லை. ஆகையால் நகர மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த மருத்துவர் கூறினாராம்.  ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதால், ஊசி இல்லாமலேயே தையல் போடுங்கள் என்று கூறினாராம்.    மருத்துவர் ஒன்பது தையல் போடும்போது, மருத்துவரிடம் சகஜமாக பேசிக்கொண்டே இருந்தாராம்.  ஆச்சர்யப்பட்ட மருத்துவர், எப்படி உங்களால் இதை செய்ய முடிகிறது என்று கேட்டாராம்.  உடனே ஜக்கி “வலி நிஜம். ஆனால் பாதிப்பு நீங்கள் உண்டாக்கியது” என்று கூறினாராம்   இதை கேட்கும் ஜக்கி அடிமைகள் ஜக்கிக்கு எப்படி இத்தனை வலி தாங்கும் சக்தி, அவர் பிறக்கும்போதே சத்குருவாக பிறந்தார் என்று வாயைப் பிளப்பார்கள்.  முதல் விஷயம், ஜக்கிக்கு நடந்தது இருதய அறுவை சிகிச்சை கிடையாது.   சாதாரண காயத்துக்கு ஏற்படும் தையல்.  மரத்துப் போகும் ஊசி இல்லாமல்தான் இப்போது பல காயங்களுக்கு தையல் போடுகிறார்கள்.   சரி. ஜக்கி சொன்னது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.   ஒன்பது தையல் போட்ட இடத்தில் தழும்பு இருக்க வேண்டுமா இல்லையா ?  ஜக்கியை தழும்பை காட்டச் சொல்லுங்கள்.  காட்ட மாட்டார்.   ஏன் தெரியுமா ?  அப்படி ஒரு சம்பவம் ஜக்கிக்கு நடக்கவேயில்லை.  ஜக்கியோடு இருந்த மற்றொருவருக்கு நடந்தது.  இதை தனக்கு நடந்ததாக சொல்லி ஜக்கி அல்வாவை கிண்டி பக்தர்களுக்குத் தருவார்.

இப்படி பொய்யிலும் பித்தலாட்டத்திலும் நடந்து வரும் ஈஷா யோக மையத்தின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா ?  ஈஷா மையத்தின் பெயரில் 200 ஏக்கர் நிலங்களும், பினாமி பெயரில் 270 ஏக்கர் நிலங்களும் உள்ளன.   ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு ஏக்கர் நிலத்தைக் கூட இவர்களுக்குத் தெரியாமல் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது.   ஈஷா பெயரில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அனைத்திலும் தொண்டாமுத்தூர் ராஜேந்திரன் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பார்.  இவர்தான், பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் நிலங்களின் விபரத்தை ஈஷாவுக்கு தெரிவித்து, அந்த பதிவை தடுத்து நிறுத்தி, ஈஷா மையத்தினருக்கு விபரத்தை சொல்லுவார்.  ஈஷா மையத்தினர் உடனடியாக தலையிட்டு, அந்த விற்பனையை தடுத்து நிறுத்தி நிலத்தை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

சென்ற ஆண்டு மட்டும் ஈஷாவின் மொத்த வருமானம் 243 கோடிகள்.    ஆண்டு வருமானமாக ஜக்கி நியமித்த இலக்கு 400 கோடிகள்.   தன்னுடைய உள் வட்டாரத்தில் உள்ளவர்களை, இலக்கை அடையத் தவறியதற்காக ஜக்கி கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.   சாதாரணமாக யோகா வகுப்பு நடத்தினால், வசூல் தேவையான அளவில் கிடைக்காது என்பதை ஜக்கி மிகத் தாமதமாகவே உணர்ந்தார்.    தொடக்க காலத்தில், அதாவது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, யோகம், ஞானம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.  இந்த அவசர உலகத்தில் இவர்களுக்கு யோகம் ஞானமெல்லாம் அடைவதற்கு பொறுமை இல்லை, குறுகிய காலத்தில் ஞானத்தை டப்பாவில் அடைத்துத் தருகிறேன் என்று தந்திரத்தை மாற்றத் தொடங்கினார்.

தொண்ணூறுகளின் இறுதியில் பக்தி, ஞானம், சக்தி, க்ரியா ஆகியவற்றை கலந்து ஒரு காக்டெயிலாக தருகிறேன் (I AM GIVING YOU THE RIGHT COCKTAIL FOR THIS GENERATION) என்று முதன் முதலாக இந்த தந்திரத்தை “ஞானியின் சந்நிதியில்” என்ற புத்தகத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தினார்.  இவருக்கு இந்த காலக்கட்டத்தில் பெரும் உதவி புரிந்தது ஆனந்த விகடன்.  ஆனந்த விகடன் புத்தகத்தில் இவர் எழுதிய “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற தொடர், இவரை மிக மிக பிரபலமாக்கியது.  ஒரு வகையில் ஜக்கி வாசுதேவ் போன்ற மிகப்பெரிய சமூக விரோதியை பூதாகரமாக வளர்த்து விட்டதற்கு விகடன் நிர்வாகம் ஒரு வகையில் பொறுப்பாகும்.  பொறுப்புணர்ச்சி இல்லாமல், வியாபார நோக்கத்துக்காக விகடன், குமுதம் போன்ற ஊடகங்கள், ஜக்கி வாசுதேவ் மற்றும் நித்யானந்தா போன்றவர்களை வளர்த்து விட்டதன் காரணமாகவே, இன்று மிக மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.  பகுத்தறிவுவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்ளும், தொல் திருமாவளவன் போன்றவர்களும், ஜக்கியின் வியாபாரத்திற்கு உதவியவர்களே என்பதுதான் வேதனை.

வெறுமனே ஆன்மீகத்தை போதித்துக் கொண்டிருந்தால் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், வசூலும் மேம்படாது என்பதை ஜக்கி உணர்ந்தார்.  அந்த அடிப்படையில் ஜக்கி கையாண்ட தந்திரம்தான் “பசுமைக் கரங்கள்”.  2007ம் ஆண்டு முதன் முதலாக இந்த பசுமைக் கரங்கள் திட்டத்தை தொடங்கினார்.    இன்னும் பத்தே வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகி விடும்.   உடனடியாக மரங்களை நட வேண்டும்.  வெள்ளியங்கிரி மலை நான் போன பிறகுதான் பசுமையானது என்று அள்ளி அள்ளி விடுவார்.    எனது பசுமை கரங்கள் திட்டத்துக்காக நிதி உதவியை அள்ளித் தாருங்கள் என்று கேட்பார்.  கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்தன.  இந்தத் திட்டத்தை பிரபலமாக்கும் நோக்கோடு, மிக மிக தந்திரமாக, கருணாநிதியை வைத்து மரம் நட வைத்து, அதன் மூலமாக பல சலுகைகளை பெற்றதை, சவுக்கு ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.   இந்தத் திட்டம் ஓரளவு நிதியை அள்ளித்தந்ததும், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் ஜக்கி.   “ஞானியின் சன்னதியில்” என்ற அவரது நூல் அளித்த வெற்றியின் அடிப்படையில்,  “ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற தலைப்பில் லிங்க பைரவி குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.   தியானலிங்கம் கோவிலில் பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது.  அந்த சக்தி வீணடையக்கூடாது.  வருங்கால சந்ததியினருக்கு அதை விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறி, அந்த தியானலிங்கக் கோவிலை பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று அடுத்த திட்டத்தை செயல்படுத்தினார். ?

ஞானத்தை அடைவதற்கான ஒரே வழி பக்தி மார்க்கமே என்று பல்வேறு விளக்கத்தை கூறினார்.    பரவசமளித்து, தையை சுருக்கும் பக்தி என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்தார். இணைப்பு.  லிங்க பைரவியை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் உங்களுக்கும் உங்கள் வீட்டுக்கும் அருள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றார்.  அதை நம்பிய பக்தி அடிமைகள், பணத்தை அள்ளி அள்ளி கொட்டினர்.  கடவுள் உருவாவதைக் காண வாருங்கள் என்று ஒரு விழாவை அறிவித்தார்.  அந்த விழாவுக்கு கட்டணமாக, 50 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நிர்ணயம் செய்தார்.  50 ஆயிரம் கொடுத்தால் ஜக்கியின் அருகிலேயே அமர்ந்து கொள்ளலாம்.   இந்த விழா மூன்று நாள் நடைபெற்றது.  சுமார் ஆயிரம் பேர் 50 ஆயிரம் கட்டணம் செலுத்தினர்.  2 ஆயிரம் பேர் 25 ஆயிரம் கட்டணம் செலுத்தினர்.   10 ஆயிரம் செலுத்தியவர்கள் நாலாயிரம் பேர். மூவாயிரம் பேர் 7000 செலுத்தி இவ்விழாவில் பங்கு கொண்டனர்.  இதைத்தவிர்த்து, வெளிநாட்டினரின் சொத்துக்களை மொத்தமாக கபளீகரம் செய்ய, கோவில் உருவாகும் பிரகாரத்தினுள்ளேயே அமர்ந்து, நேரடியாக காண்பதற்கு ஒரு நபருக்கு 10 லட்சம் என்று அறிவித்தார்.  மொத்தம் 42 பேர் இவ்வாறு கட்டணம் செலுத்தினர்.

இந்த இந்த விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், நக்கீரன் காமராஜ், சுதா ரகுநாதன், மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர்.

இந்த லிங்க பைரவி கோவிலை, கடவுளுடன் நேரடி தொடர்புள்ள கோவில் என்றே பிரச்சாரம் செய்தார் ஜக்கி.    இந்த கோவில் கட்ட திட்டமிடப்பட்டபோதே, நன்கொடை வசூல் தொடங்கியது. மூன்று கோடியில் திட்டமிடப்பட்டு 4.5 கோடி செலவில் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.   ஆனால் இந்த கோவிலை பிரதிஷ்டை செய்கிறேன் பேர்விழி என்று நடத்தப்பட்ட அந்த விழாவின் வசூல் தொகை மட்டும் 20 கோடி.     கோவிலுக்கு இவ்வளவு வசூல் என்றால், இதனுள் இருக்கும் லிங்க பைரவி சிலையின் பெயரால் தனி வசூல் நடத்தப்பட்டது.    லிங்க பைரவியின் மூன்று கண்கள் வைரத்தில் செய்யப்பட வேண்டும் என்று, அதன் பெயரால் ஜக்கி வசூல் செய்த தொகை 80 லட்சம்.  லிங்க பைரவிக்கு ஒட்டியாணம் செய்ய வேண்டும் என்று அறிவித்து, அதற்கு நகையாக மட்டுமே நன்கொடை பெறப்படும் என்று கூறி, தங்கமாக வசூலை நடத்தினார்.  இந்த தங்க வசூலுக்கு எவ்விதமான ரசீதுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, எங்கே சென்றன என்பது யாருக்குமே தெரியாது.

இந்தக் கோவிலின் பெயரால் இத்தனை கோடி வசூல் நடந்தது.  ஆனால் இக்கோவிலுக்கான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இலவசமாக கிடைத்தன என்பது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த கட்டுமானத்துக்கு விலை உயர்ந்த க்ரானைட் கற்களை முழுக்க முழுக்க இலவசமாக கொடுத்து உதவியது, காலஞ்சென்ற கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் ட்ரூ வேல்யு ஹோம்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ?

ராமஜெயத்துக்கும், ஜக்கி வாசுதேவுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவையான கதை.  ராமஜெயமும், அவர் குடும்ப உறுப்பினர்களும், ஜக்கியின் யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு, உடல்ரீதியாக சில பலன்களை அடைந்தனர்.  இதனால் ராமஜெயம் ஜக்கியோடு நெருக்கமடைந்தார்.  இந்த அடிப்படையில், தனது கோயில் கட்டுமானத்துக்கான பல பொருட்களை இலவசமாகவே பெற்றார் ஜக்கி

2011ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினார் ஜக்கி.   தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், She is very arrogant. She should not come back to power என்று கருத்து தெரிவிவித்துள்ளார்.   பயணிகளுக்கான வனத்துறையின் சுங்கக் கட்டணம் ரத்து, தனிப்பட்ட முறையில் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அடைந்ததன் காரணமாகவே இந்த விருப்பம்.

அதிமுக அரசு அமைந்ததும் உள்ளபடியே ஜக்கி நடுங்கித்தான் போனார்.   ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ நமது தொழிலுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சினார்.  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலமாக தூது அனுப்பினார்.  ஆனால் இவரது தூது எடுபடவில்லை.   இந்த நேரத்தில்தான், நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய ராமஜெயம் தலைமறைவாக இருந்தார்.    அப்போது தனக்கு அடைக்கலம் தருமாறு ராமஜெயம் ஜக்கியிடம் கோரியபோது, ஜக்கியின் ஈஷா ஆசிரமத்தினுள் இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிய கட்டிடத்தினுள்  தாங்க வைத்தார்.    ஆனால் தற்போது, மன்னார்குடி மாஃபியாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தனது சட்டவிரோத கட்டிடங்களை ஒழுங்குமுறைப் படுத்தும் முயற்சியில் ஜக்கி ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் வேதனையான செய்தி.

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கு எத்தனை கட்டணம் என்று ஈஷா ஆசிரமத்தில் தொலைபேசி செய்து கேட்கப்பட்டபோது அவர்கள் கூறியது.  மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன.   முதல்பிரிவு 1.25 லட்சம்.  அடுத்த பிரிவு 1 லட்சம்.  மூன்றாவது பிரிவு 50 ஆயிரம்.  15 நாட்களுக்கு முன்னதாகவே இது குறித்து விசாரித்தபோது, 50 ஆயிரம் பிரிவு முடிந்து விட்டதாகவும் 1 லட்சம் மற்றும் 1.25 லட்சம் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தனர்.

இப்படி நடத்தப்படும் வசூல் அனைத்தும், நன்கொடை என்ற பெயரில் வரவு வைக்கப்பட்டு வருமானவரி விலக்கு பெறப்பட்டு வருகிறது.   விரைவில் இந்த நன்கொடை சலுகையை ரத்து செய்ய, சவுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சவுக்கில் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாக, ஜக்கி வாசுதேவை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளே கிடையாது.  ஜக்கி வாசுதேவிடமிருந்து விலகி, அவரைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ள முன்னாள் பக்தர்கள் கூட, அவரைப்பற்றி வெளிப்படையாக பேச அஞ்சி நடுங்கிய சூழல் இருந்தது.   ஆனால், இன்று நம்மிடம் தொடர்பு கொண்டு, பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.   ஜக்கியின் சாம்ராஜ்யத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கிறோம்.

ஜக்கியின் பக்தர்களில் வெறும் 10 பேர், நம் கட்டுரைகளை படித்த பிறகு, விழிப்புணர்வு பெற்றார்கள் என்றாலே நாம் வெற்றியடைந்துள்ளோம் என்பதே பொருள்.

https://www.savukkuonline.com/9401/

======================================================================================

'சவுக்கு'க்கு நம் நன்றி.



சனி, 20 மார்ச், 2021

ஒரு முதிர்கன்னியின் முன் அனுபவங்கள்!!!


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது இந்த என் கதை. ஏற்கனவே நீங்கள் வாசித்திருப்பினும், இன்றையப் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மறந்துபோவதற்கான வாய்ப்பு மிகுதி[ஹி...ஹி...ஹி...] என்பதால் மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

ழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர்பெண் பார்க்கும்சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பிகுடித்து, மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விசயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!

 

முகத்தில்ரெடிமேட்புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் அவள்.

மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” -கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமாஎன்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

கொஞ்சம் பொறுங்க.....” -குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” -வறண்ட புன்னகையுடன் ஒரு சிறியடைரியைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள்.