வியாழன், 31 ஆகஸ்ட், 2017

“இந்தியத் திணிக்காதே”-சீறுகிறார் சித்தராமையா!

“நாட்டின் மதச்சார்பற்ற நிலையை அழித்துவரும் ஒரு மதவாதக் கட்சி ‘பாஜக’. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயல்கிறது அது. திணிப்பை எதிர்த்துக் கர்நாடக மக்கள் போராடுகிறார்கள்” என்று, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா[‘தி இந்து’{தமிழ்}, 29.08.2017].
தாமும் தம் மக்களும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கான காரணங்களையும் அவர் விவரித்திருக்கிறார். 

= இந்த நாட்டில் பேசப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.

= இது இந்தியாவின் தேசிய மொழி அல்ல.

= இது தேசிய மொழியாக ஆகவும் முடியாது.

=ஒரு மொழியைக் கற்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

=‘பாஜக’வினர் அனைத்து மக்கள் மீதும் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்.

தம் நேர்காணலில், கர்நாடக மாநிலத்தின் தனிக்கொடிக்கான தேவையையும் வலியுறுத்தியிருக்கிறார் தாய்மொழிப் பற்றாளர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து இந்தி அல்லாத பிற மொழி பேசும் மாநில முதல்வர்களும் இந்தித் திணிப்பை எதிர்த்து முழக்கமிடுதல் வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு; பேரவா.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++