அமெரிக்கா 2021இல் அங்கிருந்து வெளியேறியபோது, பெண்களுக்கு எதிரான ஆட்சியாகத் தங்கள் ஆட்சி இருக்காது எனத் தாலிபான்கள் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் இயற்றிய சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே அமைந்தன.
தனியாக வெளியே செல்லக்கூடாது, ஒட்டுமொத்த உடம்பையும் மறைக்கும் வகையில் ஆடை[பர்தா] உடுத்தல் வேண்டும், உடன் பணிபுரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது என்று மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோருக்குக் குலை நடுங்க வைக்கும் தண்டனைகளையும் வழங்கினார்கள்; வழங்குகிறார்கள்.
இப்போது, ‘திருமணம் செய்யவிருக்கும் ஒரு கன்னிப் பெண், அவளின் விருப்பம் அறியப்படும்போது, அவள் அமைதியாக[மௌனம்] இருந்தால், அது அவளின் திருமணத்திற்கான சம்மதமாகவே எடுத்துக்கொள்ளப்படும்’ என்னுமொரு கொடூரச் சட்டத்தை அமலாக்கியிருக்கிறார்கள் அந்தக் கொடுங்கோலர்கள். மௌனம்[அமைதி காப்பது] என்பது பெரும் உணர்ச்சிப் போராட்டங்களின்போது அவற்றிலிருந்து சற்றேனும் விடுபடுவதற்குக் கையாளப்படும் எளிய வழிமுறை என்பதை அறியாத நீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்/சிறுமியர்களுக்குத் திருமணம் செய்விப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அதிகாரமும் அந்தப் பிள்ளைகளின் தந்தை & தாத்தாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்களால் 10 மாதம் சுமந்து பெற்றெடுக்கப்பட்ட இந்தத் தலிபான் தடியர்களுக்குப் பெண்கள் மீது இத்தனை வன்மமா?
ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தத் தறுதலைகளைக் கண்டித்துத் தண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது உலகம் கண்டிராத பேரதிசயமாகும்.
அணு ஆயுதத் தயாரிப்பைக் காரணம் காட்டி, ஈரான் மீது போர் நடத்திக்கொண்டிருக்கும் ‘பெரிய அண்ணன்’ என்று மரியாதையுடன் அழக்கப்படும் ’டிரம்ப்’கூட, இது விசயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை!
கடவுளால் அனுப்பப்பட்ட நம் பிரதமர் மோடிப் பெருமகனார்கூட, தன்னை அனுப்பிவைத்த கடவுளிடம் கோரிக்கை வைத்து, தலிபான்களை அழித்து, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு[குறிப்பாகப் பெண்கள்]ச் சுய ஆட்சி நடத்தும் உரிமையைப் பெற்றுத் தராதது ஏன் என்பதும் புரியவே இல்லை!!

