எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 30 ஏப்ரல், 2018

மயக்கும் வாலிபமும் அறிஞர் அண்ணாவின் வியத்தகு சாதனைகளும்!!

கல்லூரி மாணவராக இருந்தபோதே ஆழ்ந்து சிந்தித்து எழுதும் திறன் வாய்த்திருந்தது அறிஞர் அண்ணாவுக்கு. 'ஆனந்த விகடன்', 'ஆனந்த போதினி'[1964இல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, என் கதை இந்த இதழில் வெளியானது! இருந்தும்... இன்றுவரை நான் 'கத்துக்குட்டி'தான்!  ஹி...ஹி...ஹி!] ஆகிய இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாயின.

1931ஆம் ஆண்டில் 'தமிழரசு' என்னும் வார இதழில், 'மகளிர் கோட்டம்' என்னும் அவரின் கட்டுரை பிரசுரம். அப்போது அவரின் வயது.....

இருபத்தொன்றுதான்.

1932இல், கல்லூரியில் நடைபெற்ற 'சேஷைய சாஸ்திரி கட்டுரைப் போட்டி'யில், 'அணிவகுப்பு' என்னும் தலைப்பிலான ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றது.

'கொக்கரக்கோ' என்னும் வசீகரமான தலைப்பில் விகடனில்[1934] இடம்பெற்ற அவரின் படைப்புக்கு விகடன் ரூ20/=[அன்று இது மிக உயரிய சன்மானம்] வழங்கியது.

1935இல் 'பால பாரதி' என்னும் ஏட்டின்[நீதிக்கட்சித் தலைவர் பாசுதேவ் என்பவருடன் இணைந்து தொடங்கியது] ஆசிரியர் ஆனார். அதில் பொதுவுடைமைத் தத்துவம் பேசும் கட்டுரைகளும், தொழிலாளர் நலம் பேணும் பதிவுகளும் முக்கிய இடம் பெற்றன.

1937இல் காஞ்சி மணிமொழியார் தொடங்கிய 'நவயுகம்' என்னும் வார இதழின் ஆசிரியரானார் அறிஞர் அண்ணா.

1938இல், 'விடுதலை', 'குடியரசு' ஆகிய இதழ்களில் உதவியாசிரியர்.

1942இல், அப்போது பிரபல நடிகராயிருந்த கே.ஆர்.ராமசாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட 'திராவிட நாடு' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
அதில்.....

'உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதிகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை 
உங்கள் மடங்கள் உங்கள் சடங்குகள்
இவைகள் இதுவரை சாதித்ததென்ன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்ததென்ன?...'

என்பன போன்ற விழிப்புணர்வூட்டும் படைப்புகள் மட்டுமல்லாமல், அறிவியல், வரலாறு, தமிழ் இலக்கியம், புராணப் புரட்டு, மூடநம்பிக்கை, வர்க்க பேதம், தொழிலாளர் நலன் குறித்த ஏராளமான படைப்புகளும் வெளியாயின.

பெரியாரின் இலட்சியங்களைப் பரப்புரை செய்த  தன்மான ஏடாகவும் இது திகழ்ந்தது.

கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், என்.வி.நடராசன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன் போன்றோரின் ஆக்கபூர்வமான எழுத்துகளும் இடம்பெற்றன.

திராவிடநாடு ஆரம்பிக்கப்பட்டபோது 'உலகப்போர்' தொடங்கியிருந்தது. தமிழகத்திலும் தமிழருக்கு எதிரான ஆளும் வர்க்கத்தாரின் செயல்பாடுகளைக் கண்டித்துக் களம் இறங்கியிருந்தது திராவிடர் கழகம். இச்சூழ்நிலையில்.....

'திராவிடநாடு' இதழில் அண்ணா எழுதிய முதல் தலையங்கத்திற்கு, 'கொந்தளிப்பு' என்று அவர் தலைப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: ''பேரறிஞர் அண்ணாவின் திராவிடநாட்டில் சிந்திய முத்துக்கள்', முதல் பதிப்பு: 2010; அதியமான் பதிப்பகம், கோவை.