எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 1 மார்ச், 2024

பக்தர்களை கடும் பதற்றத்திற்குள்ளாக்கும் ஒரு கத்துக்குட்டிப் பகுத்தறிவாளனின் கேள்விகள்!!!

 டைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்று சொல்லி, பக்தர்களை நம்பச் செய்திருக்கிறார்கள் மகான்கள் என்று போற்றப்பட்டவர்கள்.

அவர்களிடம் அவர்கள் கேட்காத கொஞ்சம் கேள்விகளை இப்போது அவர்களிடம் நாம் கேட்கிறோம்.

*படைப்புத் தொழிலை முதன்முறையாக எப்போது அவர்[கடவுள்] தொடங்கினார்?

*பிரபஞ்சத்தில் உள்ள உலகங்கள், உயிர்கள் என்று அனைத்தையும் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, இல்லை, தொகுதி தொகுதியாகவா?

*தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக அவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். அவர் படைத்த உலகங்களுக்கு யாரால் ஊறு விளைவிக்க  முடியும்? அப்புறம் எதற்குக் ‘காத்தல்’ தொழில்?

*அனைத்தையும் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

அதர்மம் தலைவிரித்து ஆடும்போது அழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

*அதர்மம் எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டாரா? அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

*விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

*ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் தான் படைத்த உலகங்களை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

*ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்ததா? எங்கே?

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாவம் பக்தர்கள். விடை தெரியாமல் விழி பிதுங்கியிருக்கும் அவர்கள் வெகுவாக மனம் உடைந்துபோவார்கள் என்பதால் தொடர்ந்து கேள்விக் கணைகள் தொடுப்பதைத் தவிர்க்கிறோம்!

ஹி... ஹி... ஹி!!!