எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 29 நவம்பர், 2011

விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

                     விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருப்பர்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?

அவ்வாறு ஆராய்வதில் பலன் ஏதுமுண்டா? வீண் வேலையா?

விடை எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்பதில் தவறில்லை எனலாம்.

விஞ்ஞானி: ’எந்த ஒன்றையும்’ அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] அது பற்றிய ‘உண்மைகளை’ ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.


மெய்ஞ்ஞானி: ’ஆழ்ந்த சிந்தனையின் மூலமே அனைத்து ‘உண்மைகளை’யும் கண்டறிந்துவிட முடியும் என நம்புபவர்.


விஞ்ஞானி: ‘இவ்வாறு இருக்கலாம்’ என்று, தான் ‘அனுமானித்தவற்றை,
ஆய்வு செய்து,‘உண்மை’ எனக் கண்டறிந்த பிறகே அதை உலகுக்கு 
அறிவிப்பவர். அதை உலகம் ஏற்குமா இல்லையா என்பது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
தான் அனுமானித்ததை, “இது என் அனுமானம்தான்” என்று ஒப்புக்கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் 
கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர்.
[படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி: பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்வார்.


மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்ததில்லை. “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுவார்..


விஞ்ஞானி: மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.


மெய்ஞ்ஞானி: ஒன்றும் புரியாத நிலை வரும்போது, தொடர்ந்து சிந்திக்கும் திறன் இழந்து, “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி உண்மைகளை ஆராய்ந்து அறியும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பவர்.


விஞ்ஞானி: ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பார்; சேர்த்து வைத்த பொருளை இழப்பார்; ஆய்வுக்குத் தன் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிவார்.


மெய்ஞ்ஞானி: உடல் உழைப்பும் மூளை உழைப்பும் இன்றி, ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்பவர். [தாங்குவதற்குத் தொண்டர்படை உள்ளது. பிறகென்ன.....!]

இந்த ’முன்மாதிரி’  ஒப்பீடு தற்சார்பானதா? நடுநிலை பிறழாத ஒன்றா?

இந்த இருவரில், உண்மையாக மக்கள் நலனுக்கு உழைப்பவர் யார்? நம்பத் தகுந்தவர் யார்? [இவர்களால் விளையும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுக்கு இங்கு இடம் தரப்படவில்லை]

நம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் யார்?

முடிவு...?

சிறந்த சிந்தனையாளர்களான உங்கள் கையில்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^