உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்வில் இடம்பெற்ற கீழ்க்காணும் நிகழ்வை, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், நினைவுகூர்வதில் தவறேதும் இல்லை.
ஒட்டுமொத்த உலகையும் வெல்லும் ஆசையில் படை நடத்திச் சென்ற அலெக்சாண்டர், எதிர்ப்பட்ட நாடுகளையெல்லாம் வென்றான். அவனுடனான சமருக்கு அஞ்சிச் சமரசம் செய்துகொண்ட மன்னர்கள் பலர். அவர்களுள் பாரசீக மன்னனும் ஒருவன். அவன், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தங்கப்பேழை ஒன்றினை அலெக்சாண்டருக்குப் பரிசளித்தான்.
ஈடுஇணையற்ற அந்த அற்புதப் பேழையைத் தன் வீரர்களிடம் காட்டி மகிழ்ந்த அலெக்சாண்டர், ''இதைவிட உயர்ந்த பொருளைத்தான் இந்தப் பேழையில் வைத்திட வேண்டும். தரத்தில் குறைந்த எதனையும் இதில் வைப்பது இதனை அவமதிப்பதாகும். இதனுள் வைக்கத்தக்க அரிய அந்தப் பொருள் எது? சொல்லுங்கள்'' என்று கேட்டான்.
எவரொருவரும் சரியான பதில் தரவில்லை. அலெக்சாண்டரே சொன்னான்.....
''இதனுள் வைப்பதற்கான தகுதி பெற்ற ஒரே பொருள் 'ஹோமரின் இலியட்' காவியம்தான்.''
அலெக்சாண்டர் மாவீரன் மட்டுமல்ல, விலைமதிப்பற்ற படைப்புகளை [நூல்கள்] மதிக்கத் தெரிந்தவன் என்பதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
நம்மிடமும் தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற விலைமதிப்பற்ற படைப்புகள் உள்ளன. தங்கப்பேழைகளில் வைத்து இவற்றைப் போற்றாவிடினும், நம் மனப் பேழைகளில் வைத்தேனும் போற்றிட வேண்டும்.
போற்றுகிறோமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

