எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 24 மார்ச், 2019

அ.தி.மு.க.வுக்கே என் ஓட்டு!!!

ஆவி அடிக்குமா? அடிக்கும்!... கடிக்குமா? கடிக்கும்!... இறுக்கிக் கட்டிப்பிடிச்சிட்டுக் கூரிய பற்களால் குரல்வளையைக் கீறிக் குருதி குடிக்குமா? குடிக்கும்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற, மானாமதுரைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கான அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாஸ்கர் அவர்கள் ஆற்றிய உரையில்.....

''சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்குச் சென்றவர்களை அம்மாவின் ஆவி சும்மா விடாது'' என்று எச்சரித்தது தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது.

'கடந்த காலங்களில் அம்மாவின் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, இப்போது வேறு கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களையும் அம்மாவின் ஆவி சும்மா விடாது' என்பதை அவர்கள் உய்த்துணர்வார்களாக.

அம்மாவின் ஆவி மிக மிக மிகவும் சக்தி வாய்ந்தது. அதனினும் மேலான சக்தி வேறு எங்கும் இல்லை. கட்சி மாறி ஓட்டுப் போடுபவர்களை அது கண்டிப்பாகத் தண்டிக்கும். எனவே.....

இந்தத் தேர்தலிலும் என் ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கே என்பதை உறுதிபட அறிவிக்கிறேன்...கூவுகிறேன்!
==================================================================================
நன்றி: தினகரன்[24.03.2019]