எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 21 நவம்பர், 2022

‘ஓநாய் முக நோய்’[Hypertrichosis [அ] werewolf syndrome]... இது, 50 பேருக்கான அதிசய நோய்!!!

Hypertrichosis என்பது ஒருவகை நோய். இந்த நோய் பெரும்பாலும் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தை ஏற்படுத்துவதால், ‘இதனை ஓநாய் நோய்க் குறைபாடு’ (werewolf syndrome) என்றும் அழைக்கின்றனர்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான ’லலித் படிதார்’ என்னும் இளைஞர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பாதிப்பானது பூமியின் இடைக்காலத்தில் இருந்து வெறும் 50 பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

லலித் படிதாரின் முகம் முழுவதும் பரவி உள்ள முடிகள் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இது இருவகைப்படும். முதல்வகை, உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது. இரண்டாவது வகை, சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்து மற்றப் பாகங்களில் அதிகமான முடி வளர்வது.

’லலித் படிதார்’ இந்த நோய்ப் பாதிப்பு குறித்துப் பேசுகையில், “நான் மிகவும் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை ஒரு விவசாயி. சிறு குழந்தையாக இருக்கும்போது இந்தப் பாதிப்பு குறித்து எதுவும் தெரியாது. சிறிது வளர்ந்த பிறகு நான் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன் என்று உணர்ந்தேன்.....

பள்ளிகளில் என்னைச் சகமாணவர்கள் “குரங்கு... குரங்கு” என்று கூவிக் கிண்டல் செய்வார்கள். குழந்தைகளோ நான் கடித்து விடுவேன் என்று பயந்து ஓடுவார்கள். சிலர் என்னைப் பயங்கர விலங்கு என்று நினைத்துக் கல்லால் அடித்துத் துரத்திய நாட்களும் உண்டு.....

நான் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையை நான் ஒருபோதும் விட்டுத்தரப்போவது இல்லை. நான் தொடர்ந்து முன்னேறுவேன்; சாதனைகள் நிகழ்த்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

லலித் படிதாரரின் தன்னம்பிக்கையைப் போற்றுகிற அதே நேரத்தில்.....

உலக அளவில் 50 பேர்களுக்கு[ஆண்கள், பெண்கள், குழந்தைகள்]மட்டுமே என்று ஒரு விபரீத நோயை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையைக் கடும் சோதனைக்கும், பெரும் வேதனைக்கும் உள்ளாக்கியது இயற்கையா, கருணை வடிவான கடவுளா என்று கேட்கத் தோன்றுகிறது.

இயற்கை என்றால் அதை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் என்றால்.....

“இத்தனைக் கொடூர மனம் படைத்த அவன் கெட்டழியும் நாளும் வருமா?”

========================================================================

"சிவபெருமானே தமிழ்! தமிழே சிவபெருமான்!!”... ஜோ பைடன்

‘உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் 19/11/2022 அன்று மதியம் நடந்த ’காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்’ என்பது செய்தி. இச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.


அவர் என்ன பேசினார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

அறியாதவர்களுக்காக அவர் உரையிலிருந்து என் கவனத்தை ஈர்த்த சில கருத்துரைகள்:

"தெற்கிலிருந்து வடக்குவரை நமது ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ராமரால் நிர்மாணிக்கப்பட்ட ஜோதி லிங்கமும், காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஜோதி லிங்கமும் தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. அதற்குப் பழங்கதை ஒன்று உள்ளது. இந்துக் கடவுளான சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன. அவற்றில் ஒன்று தமிழ்; மற்றொன்று சமஸ்கிருதம். அத்தகைய பழமை வாய்ந்த மொழி தமிழ்."

‘ஆதியநாத்’ அவர்கள், ஜோதிலிங்கம் பற்றி, கடவுள் என்று பக்தர்களால் நம்பப்படும் ‘ராமன்’ஐச் சம்பந்தப்படுத்திக் கதை சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே சொல்லப்பட்ட பழங்கதை இது. சொல்லிவிட்டுப்போகட்டும்.

தமிழரல்லாத ஆதியநாத் தமிழினத்தைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து, “சிவபெருமான்’ எனப்படும் கடவுளின் வாயிலிருந்து தமிழ் வந்ததாக[சமசுக்கிருதத்துடன்]இன்னொரு கதையும் கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் தேர்தலில், அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ‘ஜோ பைடன்’கூட அங்கு வாழும் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, “நீங்கள் வணங்கும் சிவபெருமானே தமிழின் மறு வடிவம்தான். அவர் பேசும் தமிழைக் கர்த்தா, அல்லா[ஹ்] உட்பட உலகிலுள்ள கடவுள்கள் பலரும் விரும்பிப் படித்தார்கள்; மேலும் பலர் படித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று பேசித் தமிழர்களின் மனங்களைக் கிளுகிளுக்க வைத்து வாக்குகளைப் பெற முயற்சி செய்யலாம்[தமிழைப் புகழ்ந்தால் தமிழர்கள் மயங்குவார்கள். அத்தனை இளிச்சவாயர்கள்].

ஆனால், தேனினும் இனிய தமிழ், அன்னைத் தமிழ், தெய்வத் தமிழ் என்றெல்லாம் தங்களின் தாய்மொழியைத் தாங்களே புகழ்ந்தது போதாது என்று இன்றையத் தமிழ்த் தலைமுறையினர் நினைக்கிறார்கள்.

’தமிழில் அறிவியல் வளர்ந்திருக்கிறதா? அது நாட்டின் ஆட்சிமொழியாக உள்ளதா? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்றெல்லாம் அவர்கள் கேள்விகள் கேட்டுச் சிந்திக்கிறார்கள்.

எனவே, ஆதியநாத், பிரதமர் மோடி போன்றவர்களுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

தலைவர்களே, ”இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கக் கோடி கோடியாய்ப் பணம் செலவழித்திருக்கிறோம்[தமிழுக்கு வெகு அற்பம்]. அதே அளவுத் தொகையைத் தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம். இனிப் பாரபட்சமின்றி, அவற்றிற்குச் சமமாகத் தமிழையும் போற்றி வளர்ப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். இனியும் தாமதம் செய்யாமல் தமிழையும் இந்த நாட்டின் ஆட்சிமொழி ஆக்குவோம்” என்றிப்படிப் பேசினால் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதோடு வாக்குகளையும் கொள்ளையடிக்கலாம்.

ஆனால், இப்படியெல்லாம் நீங்கள் பேசமாட்டீர்கள்; பேசுவதைச் செயல்படுத்தமாட்டீர்கள் என்பது எங்களுக்கு அத்துபடியாய்த் தெரியும்.

ஆகவே தலைவர்களே, இனியும் பொய்யான பழங்கதைகளைச் சொல்லித் தமிழர்களான எங்களை முட்டாள்களாக்கும் முயற்சியைத் தயவு செய்து கைவிடுங்கள்.

செய்வீர்களா?

===========================================================================