கீழ்வரும் படத்தைக் கவனியுங்கள். ஒரு கற்சிலையின் மீது அருவியாய்ப் பால் கொட்டுகிறது. கொட்டப்பட்டது 108 குடம் பால். சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்குச் செய்யப்பட்ட அபிசேகம் இது. [செய்தி: தி இந்து 17.07.2017]
இந்தக் காட்சியைக் காணும்போது நம் மனம் பற்றி எரிகிறது. ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு உணவாக வேண்டிய பால் குடம் குடமாய்க் கொட்டி வீணடிக்கப்படுவது ஒரு துரோகச் செயல். ஏழை மக்களுக்குச் செய்யும் துரோகம். இதைச் சகித்துக்கொள்வதற்கான மன உறுதி நம்மில் எவருக்கு உண்டு?!
பக்தர்களின் ‘பாஷை’யில் சொன்னால் இதுவொரு பாவச் செயல். பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் பலரும் பசியால் துடித்துக்கொண்டிருக்க, கல்லால் வடிக்கப்பட்ட ஒரு சிலைக்குக் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுவது பாவச் செயல் அல்லாமல் வேறு என்ன?
ஆளும் வர்க்கங்களின் ஆதரவு இந்தப் பாவச் செயல் புரிவோருக்கு எப்போதும் உண்டு. பின்னணியில், பல்லாயிரக்கணக்கான பக்திமான்கள் இருக்கிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராடுவதற்கான பலம் நல்ல மனம் கொண்டவர்களுக்கு இல்லை..
இது ஒரு கற்சிலை. உள்ளே கடவுள் இருப்பதாகக் கொண்டாலும் நம் கட்புலனால் அறியப்படுவது கற்சிலை மட்டுமே. இதன்மீது தூசு படிவதும், சுற்றுச் சூழல் காரணமாக அழுக்குச் சேர்வதும் தவிக்க இயலாதவை. அவற்றைப் போக்குவதற்குத் தண்ணீர் கொட்டிக் கழுவலாம்; தவறில்லை. பாலையும் பழங்களையும் மஞ்சள் சந்தணம் போன்ற அரிய பொருள்களையும் கொட்டி வீணடிப்பது அறியாமையா, அறிந்து செய்யும் ஆதிக்கப் போக்கா?
சிலை மீது கொட்டுகிற பாலும் பழக்குழம்புகளும் உள்ளே இருக்கிற கடவுளின் பசியைத் தணிக்கின்றனவா? கடவுளுக்கும் பசிக்குமா?
பூசுகிற சந்தணமும் மஞ்சள் குழம்பும் உள்ளே இருக்கிற சாமியின் பொன் மேனியைக் குளிர்விக்கின்றனவா?
இம்மாதிரி பயனற்ற பழக்க வழக்கங்கள் எப்போதிருந்து தொடர்கின்றன?
தொடங்கிவைத்த புத்திமான் யார்? எவரெல்லாம்?
விடைகளை எதிர்பார்த்து எழுப்பப்படும் கேள்விகள் அல்ல இவை. காரணம், இவற்றிற்கான நியாயமான பதில்களை எவரும் தருதல் இயலாது என்பதுதான்.
விடைகள் நமக்குத் தேவையில்லை எனினும் ‘விடியல்’ தேவை. இம்மாதிரி மூடத்தனமான சடங்குகளின் உள்நோக்கத்தைப் பக்தர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.
===============================================================================

