எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

கலப்பு முன்னே! இனப்பெருக்கம் பின்னே!!

[ஒட்டு மாம்பழம்]

ரஷியன் தொல்பொருள் ஆய்வாளர்கள் 'டெனிசோவா' மலைகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எலும்புத் துண்டைக் கண்டறிந்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்ததில் அது இருவேறு உயிரினங்களின் கலப்பில் பிறந்த குழந்தை என்று தெரியவந்தது என்கிறார்கள் அவர்கள்.

"அது நீண்ட எலும்பின் ஒரு பகுதியாகும், அந்த எலும்புக்கு உரியவருக்கு தோராயமாக 13 வயது இருக்கும் என்று மதிப்பிடலாம்" என்று சொல்கிறார் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பென்ஸ் ஒயோலா  என்னும் ஆய்வறிஞர்.

குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்தப் பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அந்தக் குகை 'ரஷ்யா' நாட்டில் உள்ளதாம். மேற்கண்ட இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்ததால் கலப்பினக் குழந்தை பிறந்தது, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வாக இது இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு[கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் நியாண்டெர்தல் (Neanderthal) இனம் பரவியதாக நம்பப்படுகிறது. இன்றைய மக்களில் ஆப்பிரிக்கர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களின் மரபணுக்களிலும் மிகச்சிறிய விகிதத்தில் நியாண்டெர்தல்களின் மரபணு காணப்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

சைபீரியாவின் அல்தாய் மலைகளில் உள்ள டெனிசோவா குகையில், நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்களின் புதைபடிவச் சான்றுகள் இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.

இதே போல.....

20க்கும் குறைவான பழங்கால மனிதர்களில் அவர்கள் வெவ்வேறு இனங்களின் கலவையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வையும், இது போன்ற பிற ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், "நமது பரிணாம வரலாற்றின் மூலம், இன்றைய மனிதர்கள் வெவ்வேறு இனங்களின் கலப்பில் உருவானவர்கள் என்பது உறுதியாகிறது" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த உண்மை இன்று வாழும் மனிதர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்தால்.....

'என் மதம்... என் இனம்... என் ஜாதி...' என்று வேறு வேறு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்வதையும், சமர் புரிந்து பெரும் எண்ணிக்கையில் செத்தொழிவதையும் இனியேனும் தணிக்க முடியும்! முற்றிலுமாய்த் தவிர்க்கவும் இயலும்! 

                                    *  *  *

***ஆதாரக் கட்டுரை சுருக்கப்பட்டு, எளிய தெளிவான நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

====================================================================================

நன்றி: https://www.bbc.com/tamil/science-45302701  

'பாஜக' அண்ணாமலை அவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!!!

 

#தமிழகத்தில் தனிமனிதனாகப் போய் சிலைகளைக் கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதிலிருந்து, இவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை, தமிழக மண்ணின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்#

-இது நேற்றைய செய்தி[https://tamil.oneindia.com/news/theni/dmk-rule-will-end-if-ganesha-stops-the-procession-says-bjp-annamalai/articlecontent-pf589702-431746.html  -Thursday, September 2, 2021

                          *  *  *

தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை அவர்களே,

'சித்தாந்தம்' என்றால் சிந்தித்துக் கண்டறிந்த உண்மை என்று பொருள்[விக்கிப்பீடியா].

பண்டைக்காலம் முதல் தமிழர்கள் பல்வேறு சித்தாந்தங்களை[அரசியல், பொருளாதாரம், மதம், சமூகம், அறிவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சித்தாந்தங்கள் உருவாக்கப்படுகின்றன] ஏற்று வாழ்ந்திருக்கிறார்கள். இவற்றில் நீங்கள் குறிப்பிட நினைக்கிற சைவசித்தாந்தமும் ஒன்று. கடவுளை ஏற்க மறுப்பதும் ஒரு சித்தாந்தம்தான்.

'ஓரில் நெய்தல் கறங்க ஓரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

புணர்ந்தோர் பூஅணி அணிய பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப

படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்'

இவை சங்கப் பாடல் வரிகள்.

கடைசி வரியைக் கவனியுங்கள். கடவுளைப் பண்பில்லாதவன் என்று சாடுகிறான் பாடலாசிரியன்.

எனவே, நீங்கள் குறிப்பிடுகிற ஒரு சித்தாந்தம் மட்டுமே தமிழர்களுக்கானது என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும், 

தமிழ்நாட்டை ஆளும் அரசு[இந்திய அரசும்தான்] மதச்சார்பற்றது என்பதை அறிந்த நீங்கள், அரசை மிரட்டும் தொனியில்.....

"தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறீர்கள்.

தற்சார்பற்று ஆட்சி நடத்தும் தமிழ்நாடு அரசை மிரட்டுவதுதான் நீங்கள் ஏற்றுள்ள சித்தாந்தம் கற்றுத்தந்த பாடமா?!

நீங்கள் உண்மையான சைவசித்தாந்தி என்றால்.....

'விநாயகர் சதுர்த்தி' என்று சொல்லி நீங்கள் யாருக்காக ஊர்வலம் நடத்துகிறீர்களோ, அந்த விநாயகரிடம், கொரோனாவை முற்றிலுமாய் அழித்தொழிக்கக் கோரிக்கை வையுங்கள்.

முதலில் அந்த அதிசயத்தை அவர் நிகழ்த்திக் காட்டட்டும். அதன் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு 'முடிவுரை' எழுதட்டும்.

இது நடந்தால்.....

ஒட்டுமொத்த உலகமும் உங்களின் சித்தாந்தத்தைப் போற்றிப் புகழும்; கிஞ்சித்தும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும்!

====================================================================================