எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 24 செப்டம்பர், 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’... ஓர் உதவாக்கறைத் திட்டம்!?

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர்  விஜயா.

இவர் தன் மாமனார் அய்யங்கண்ணு பெயரிலிருந்த ஒன்றரை செண்ட் நிலத்தைத் தன் கணவன் பாஸ்கர் பெயருக்கு மாற்றுவதற்காக[பட்டா பெயர் மாற்றம்], ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி கூடங்குளத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு அளித்தார்.

மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட கூடங்குளம் கிராம நிர்வாக அதிகாரி, பட்டாப் பெயர் மாற்றம் செய்வதற்காக விஜயாவிடம் ரூ25000 லஞ்சம் கேட்டிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயா, லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்ய, அவர்கள் வழக்கமான தந்திர உத்தியைக் கையாண்டு நிர்வாக அதிகாரியைக் கைது செய்தது நமக்கு முக்கியமல்ல, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதால்.

நாம் வருத்தத்துடன் குறிப்பிட விரும்புவது:

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தேர்தல்களில் வாக்குத் திரட்ட உதவலாமே தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என்பதுதான்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டமோ, உதயநிதி ஸ்டாலின் திட்டமோ முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள், திட்டத்தைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

அப்புறம் நடப்பது? 

மேற்கண்டதே ஓர் உதாரணம்.

ஸ்டாலினோ எடப்பாடியோ சீமானோ  எந்தக் கொம்பாதி கொம்பன் முதலமைச்சராக இருந்தாலும் லஞ்சலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் நம் அரசு அதிகாரிகளை[மிகப் பெரும்பாலோர்]த் திருத்துவது இயலவே இயலாதது.

                                        *   *   *   *   *

https://www.dinamalar.com/amp/news/india-tamil-news/vao-caught-red-handed-accepting-rs-25000-bribe-for-change-of-title-deed/4040325

கடுப்பேற்றும் ‘சன்’ தொ.கா.வின் சில காலைச் செய்திகள்!

சற்று முன்னர்[காலை 06.45] ‘சன்’ தொ.கா. வில் வெளியான செய்திகளில் கீழ்க்காண்பவையும் அடக்கம்.

செய்தி: “அம்மாவின் ஆட்சி[அருளாட்சி!!!] அமைய வருண பகவான் கருணை காட்டினார்” என்பது எடப்பாடியாரின் தேர்தல் பரப்புரைப் பேச்சு[நீலகிரி]. 

“ஆகாயத்தில் ‘மேக மூட்டம்’ இருந்தபோதும் மழை கொட்டோகொட்டுன்னு கொட்டாமல் பார்த்துக்கொண்டார் வருணபகவான்” என்கிறார் புரட்சித் தமிழன்[செய்த புரட்சிகளில் மூடத்தனம் வளர்ப்பதும் ஒன்று]. 

“அப்பா, எடப்பாடியப்பா, அம்மாவின் அருளாட்சி அப்புறம். முதலில் ‘அவன்கள்’க்கு அடிமைச் சேவகம் செய்வதிலிருந்து விடுபட்டு,  மக்களையும் அடிமைகள் ஆக்கும் முயற்சியைக் கைவிடுங்கப்பா” என்பது நம் வேண்டுகோள்.

செய்தி: //‘திருப்பதியில் பிறமோற்சவ விழா’ தொடக்கம்//

அதென்ன ‘பிறமோற்சவம்? எத்தனைப் பேருக்கு இதன் அர்த்தம் தெரியும்? பக்தியின் பெயரால், யார் எதைச் சொன்னாலும் தலையாட்டித் தரையில் விழுந்து கும்பிடுவதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் நம் பக்தக்கோடிகள்?

இவர்கள் முட்டாள்களாகவே வாழ்ந்து செத்துத் தொலையட்டும். இவர்களின் வாரிசுகளாவது உருப்பட வேண்டாமா?

தினமும் இது போன்ற ஆன்மிகச் செய்திகளை வெளியிட்டு[வெளிடச்சொல்லி விண்ணப்பம் அளித்தார்களா பொதுமக்கள்?] ஆன்மிகம் வளர்க்கப்போகிறதாம் ‘சன்’. காலை என்ன 24 மணி நேரமும் ஆன்மிகம் வளர்க்கலாம். வளர்த்தால், ஆன்மிகம் வளர்கிறதோ அல்லவோ போலிப் பகுத்தறிவுவாதிகளான அவர்கள்[மாறனின் புதல்வர்கள்] வளர்வார்கள்.

செய்தி: தென்காசிப் பக்கமுள்ள ஓர் ஊரில் திருவிழா. 10000 பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு 21 ஆயிரம் பொடி தோசைகள்[கடந்த ஆண்டு புரோட்டா] வழங்கப்பட்டன. 

அடுத்த ஆண்டு பூரியா, சப்பாத்தியா?

வாய்க்கு ருசியாகச் சாப்பிடக் கொடுத்துப் பக்தி வளர்க்கிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!