நகரப் பேருந்து நிலையம்.
அதை ஒட்டியிருந்த அந்தப் பங்களா மேட்டுக்குடிக்கானது.
வெளிப்படையாகச் சொன்னால்.....
வசதி படைத்தவர்களின் அந்தரங்கத் ‘தாபம் தணிக்கும்’
வணிக நிலையம் அது.
குறைந்தபட்ச ‘ரேட்’
ஓர் இரவுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே.
அந்தச் சொகுசு மாளிகை இருக்கும் வீதி வழியாகத்தான்
தினமும் ‘அவன்’
தான் வேலை செய்யும் லாரிப் பட்டறைக்குச் செல்வான்.
போகும்போதெல்லாம் அதை நின்று கவனித்துச் செல்வது
அவனின் வழக்கம்.
அன்றும் வழக்கம்போல் ஏக்கத்துடன் அதை ‘அவன்’
பார்த்துக்கொண்டிருக்கையில்.....
“உன்னைப் பார்த்தா ஐயோ பாவம்னு இருக்கு.
எட்டாக் கனிக்கு ஆசைப்படுறே.
நூறு ரூபாதான், வர்றியா?”
திரும்பிப் பார்த்தான் அவன். அழகியல்ல அவள்;
அவசரத்திற்குத் தாகம் தணிப்பவள் என்பது தெரிந்தது.
‘அவன்’ சட்டைப் பையைத் துழாவினான்.
ஐம்பது ரூபாய் மட்டும் இருந்தது.
“ஒரு பெண்ணாக இருந்தும் வலிய வந்து கூப்பிடுறே,
ரொம்பத்தான் பசியோ?
இந்தா ஒரு தட்டி விலாஸ் ஓட்டலில் புரோட்டா சாப்பிடு.”
அவள் கையில் ரூபாயைத் திணித்துவிட்டு நகர்ந்தான்.
திகைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்
அன்றாட வயித்துப்பாட்டுக்குத் தன்னை விலைபேசும்
அந்த விலைமாது!

