வியாழன், 25 டிசம்பர், 2014

மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் மகிழ்வித்த அவள்.....

1997 ஆம் ஆண்டில், ‘பாக்யா’ இதழில் வெளியானது என்னுடைய இந்தச் சிறுகதை. கொஞ்சம் மாற்றியமைத்து, கொஞ்சம் சுருக்கி வெளியிடுகிறேன்.      

                      சுகுணா தூங்குகிறாள்[‘பாக்யா’ இதழ்]

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?”

சதை வற்றி, சருமம் கறுத்து, கண்கள் குழிந்து, வாடி வதங்கிய கீரைத் தண்டுபோல் தரையில் சுருண்டுகிடந்த முன்னாள் அழகியான என் மனைவியிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்டேன்.

அவளிடமிருந்து பதில் இல்லை.

அவள் உண்ணும் உணவும் உறங்கும் நேரமும் சுருங்கிவிட்டது போல உரையாடுவதும் சுருங்கிவிட்டது.

ஊட்டிவிட்டால் மட்டுமே நான்கு கவளம் உள்ளே போகிறது. தாகம் எடுக்கிறதோ இல்லையோ தண்ணீர் பருகுவதுகூடக் குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த உடம்பும் உலர்ந்த நிலையில், வறண்டுபோன தொண்டையைக் கடந்து வார்த்தைகள் வெளிவருவது அரிதாகிவிட்டது.

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். உடம்பு சிதைஞ்சிருந்தாலும் பார்வைக்கு நம்ம பொண்ணு மாதிரி தெரியுதாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?” -குனிந்து, அவளின் காது மடலில் உதடு பொருத்தி, வார்த்தைகளில் உரமேற்றி மீண்டும் ஒரு முறை சொன்னேன்.

என் வார்த்தைகளை அவள் உள்வாங்கியிருக்க வேண்டும்.

“என்ன சொன்னீங்க? இளங்கோ ஃபோன் பண்ணினாரா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” என்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஆறு மாதம் போல செத்துச் செத்துப் பிழைத்து உருக்குலைந்து போயிருந்த அவளின் மெலிந்த தேகத்தில் அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ, என் தோள் பற்றி உலுக்கி, “புறப்படுங்க போகலாம்” என்றாள்.

“முகம் கழுவி சேலை மாத்திட்டு வாம்மா.”

இரண்டே நிமிடங்களில் தயாரானாள்.

காரில் புறப்பட்டோம். வழக்கத்திற்குச் சற்றே கூடுதலான வேகம்.

“ஏங்க, நம் பொண்ணுக்கு விபரீதமா ஏதும் நடந்திருக்காதுதானே?”

தினம் தினம் எனக்கு நானே கேட்டுக்கொண்டு, விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. என்னவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

சொன்னேன்: “கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்.”

“கை விட்டுட்டா அப்புறம் அந்தக் கடவுளை நான் கும்பிடவே மாட்டேங்க.”

படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் தினமும் பத்து நிமிடமாவது தியானம் பண்ணத் தவறாத என் சுகுணாதான் இப்படிச் சொன்னாள். மகளைத் தொலைத்த துக்கத்தில், ‘உண்டு, இல்லை’ என்று தலை மட்டும் அசைத்தவள் இன்றுதான் முழு வாக்கியம் பேசுகிறாள்.

ஆறு மாதம் முன்பு, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது ரவுடிகளால் காரில் கடத்தப்பட்டாள் எங்கள் ஒரே மகளான சுதா. அன்றிலிருந்து சுகுணா வேண்டாத தெய்வம் இல்லை. செலுத்தாத காணிக்கை இல்லை.

“கடவுளே, இந்தப் பிறவியில் மனசறிஞ்சி நாங்க யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யல; பாவ காரியங்கள் பண்ணல. பூர்வ ஜென்மங்களில் பண்ணியிருந்தா, அதுக்கான தண்டனையை இப்பவே எங்களுக்குக் கொடுத்துடு. மிச்சம் மீதியிருந்தா அடுத்து வர்ற பிறவிகளில் அனுபவிச்சித் தீர்த்துடுறோம். நாங்க உயிருக்கு உயிரா நேசிக்கிற எங்க சுதாவை மட்டும் தண்டிச்சிடாதே. எந்தவித பங்கமுமில்லாம எங்களோடு சேர்த்துடு.” தினமும் இப்படி வேண்டினாள்.

மாதம் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணுவதாகவும் அனாதை இல்லங்களுக்கு உதவுவதாகவும் கடவுளின் சந்நிதிகளில் சத்தியம் பண்ணினாள்.

ஆரம்பத்தில், கண்ட கண்ட தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதே வேலையாகிப் போனவள், நாட்கள் செல்லச் செல்ல, ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்து சிதற, முழு நேரமும் படுக்கையில் ஒடுங்கிவிட்டாள். நான் நடைப்பிணம் ஆனேன்.

எங்கள் சுதா கடத்தப்பட்டபோது, அவள் தோழி தரங்கிணி மட்டுமே உடனிருந்தவள். கடத்திய ஆட்களை அடையாளம் சொல்லியிருக்கிறாள். காரின் எண் பார்க்கத் தவறிவிட்டாள்.

அவர்கள் ரவுடிகள் என்பது போலீசாரின் அனுமானம். ஆனால், வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இங்கே விபத்து; அங்கே அனாதைப் பிணம் என்று சொல்லி எங்களை அலைக்கழித்த காவல்துறை இப்போது மௌனம் சுமந்திருந்தது.

நானும் சுகுணாவும் உறவினர்களின் துணையுடன் ஊர் ஊராகத் தேடினோம். பலன் மட்டும் பூஜ்யம்.

மனம் பேதலித்து, என் சுகுணா மரணப் படுகுழியில் விழுந்துகொண்டிருந்தாள். “தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்குதுங்க.” வார்த்தை வார்த்தையாய் முனகி, கொஞ்ச நாளாய் என்னைக் குலை நடுங்கச் செய்கிறாள்.

மகளைத் திருடு கொடுத்துத் தவிக்கும் நிலையில் என் மனைவியையும் இழந்துவிடுவேனோ?

எந்த வகையிலும் ஆறுதல் பெற முடியாத அவல நிலையில், கனத்த சோகம் சுமந்து, என் மிக நெருங்கிய நண்பரான காவல்துறை அதிகாரி இளங்கோவைச் சந்தித்தேன்.

ருத்துவமனை.

கைத்தாங்கலாக சுகுணாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றேன்.

ஒவ்வொரு வார்டாக ஒதுக்கி, ஆப்ரேசன் தியேட்டரை நோக்கி நடந்தோம்.

“சொல்லுங்க, சுதா எப்படீங்க இருக்கா?” குரலில் பரிதாபம் பொங்கக் கேட்டாள் சுகுணா.

“அவளைப் பார்க்கத்தானே போறோம்...வா சுகுணா.”

அவளின் தோள்களை அழுந்தப் பற்றி அணைத்து, தியேட்டருக்குள் அழைத்துப் போனேன். அங்கே, என் காவல்துறை நண்பருக்கு நண்பரான டாக்டர் காத்திருந்தார்.

“சுகுணா, மனதைத் தேத்திக்கோ. நம்ம சுதா செத்துட்டாம்மா...”

சொல்லிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரை நெருங்கி, போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை விலக்கி, பிணத்தின் இடது முழங்கையை ஒட்டியிருந்த சற்றே பெரிதான மச்சத்தைத் தொட்டுக் காட்டினேன்.

அதைப் பார்க்கும் நிலையில் சுகுணா இல்லை. அவள் மயக்க நிலையில் துவண்டு என் தோளில் சரிந்திருந்தாள்.

ப்போதெல்லாம், “என் மகளைக் கடத்திப் போய் எங்கே வெச்சிருக்காங்களோ.....  காலிப் பசங்க அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யுறாங்களோ.....ஐயோ....” என்று சொல்லி, உருகி மருகி என் சுகுணா நொறுங்கிப் போவதில்லை.

முழுப்பட்டினி என்ற நிலையைத் தாண்டி, ‘பரவாயில்லை’ என்று சொல்லுமளவுக்குச் சாப்பிடுகிறாள். ஒரு நாளைக்கு நான்கைந்து மணி நேரமாவது தூங்குகிறாள். இனி, அவள் பிழைத்துவிடுவாள். ஆனால், நான்.....

தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் வலம் வந்து எங்களை மகிழ்வித்த எங்கள் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன்.  சிதைந்து, சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறேன்.....

........ஒரு அனாதைப் பிணத்தின் இடது முழங்கை அருகே செயற்கையாய் ஒரு மச்சத்தை உருவாக்கி, டாக்டரின் உதவியோடு அருமையாக ஒரு நாடகம் நடத்தி, என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?

=============================================================================================











15 கருத்துகள்:

  1. சார் கதை நன்றாக இருக்கிறது.. மனைவி மட்டுமாவது சோகத்தில் இருந்து மீள வழி கண்ட கணவன் பாராட்டுக்குரியவன்.
    இக்கதையில் இருவருமாக சேர்ந்து முடிவுக்கு வந்தோம் என்று சொல்லாமல் தவிர்த்து விட்டு ( இது கதையின் சஸ்பென்சை உடைத்து விடுகிறது என்பதால்) கடைசியில் நண்பர் இளங்கோ உண்மையை சொல்லிவிட்டு ,உங்கள மனைவியை தேற்ற வழி கண்டு பிடித்து விட்டீர்கள் உங்களை எப்படி தேற்றிக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்பதாக முடித்திருக்காலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’இருவரும் சேர்ந்து முடிவுக்கு வந்தோம்’ என்ற வாசகம் பாக்யாவில் வெளியான போது இல்லை. கதையைச் சுருக்கியதால் அவசியம் என்று நினைத்துச் சேர்த்தேன்.

      நீங்கள் சொல்வது சரிதான். சஸ்பென்ஸ் உடையாமலிருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும், உங்களைப் போன்ற கதாசிரியர்களுக்கு இந்தக் குறை தெரிகிறது. மற்றவர்களுக்கு அதற்கான வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நன்றி முரளி.

      நீக்கு
  2. சிறப்பான கதை! மீண்டும் கருத்துப்பெட்டியை திறந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வருகை தந்து கருத்துச் சொல்கிறீர்கள்.

      மிக்க நன்றி சுரேஷ்.

      moderation வைத்ததால் பதில் தருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதை இப்போது நீக்கிவிட்டேன்.

      நீக்கு
  3. மனம் கணத்து விட்டது நண்பரே....
    த.ம 1
    நண்பரே எனது பதிவு ''இன்றைய Moneyதர்கள்''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.

      moderation வைத்ததால் பதில் சொல்ல தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதை இப்போது நீக்கிவிட்டேன்.

      நீக்கு
    2. ’இன்றைய மனிதர்களை இன்னும் சற்று நேரத்தில் படித்துவிடுவேன் கில்லர்ஜி.

      நீக்கு
  4. மனைவியின் மகிழ்ச்சிக்காக அவர் செய்த காரியம் ,மனதை கனக்க வைத்தது !
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. முடிவை வேறு விதமாக கூட மாற்றி இருக்கலாம்... மனதளவில் எதையும் தாங்கும் இதயம் பெண்களுக்கு உண்டு - இன்றைக்கு அல்ல... என்றும்...

    பதிலளிநீக்கு
  6. பெண்கள் ஆண்களைவிட மன உறுதி உள்ளவர்கள்தான். அதை நான் முன்பே சிந்திக்கத் தவறிவிட்டேன்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  7. வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று இரவுதான் ஊர் திரும்பினேன்.

    பாராட்டிற்கு மிக்க நன்றி ஏலியன்.

    பதிலளிநீக்கு
  8. சுகுணாவையாவது துர்ங்க வைத்தீர்களே....
    கதை அருமை ஐயா.

    பதிலளிநீக்கு