அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பா.ஜ.க.வில் இன்னுமொரு ‘அறிவுச் சூன்யம்’!!!

சில நாள் முன்பு, பிரயாக்சிங் தாக்கூர்[நாடாளுமன்ற உறுப்பினர்] என்னும் பா.ஜ.க.வின் சாமியாரிணி, அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற பா.ஜ.க.வின் தலைவர்களை எதிர்க்கட்சியினர் சூன்யம் வைத்துக் கொன்றுவிட்டதாக உளறியது.

இப்போது அக்கட்சியைச் சேர்ந்த இன்னொரு ‘மெண்டல்’[அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ., திலீப் குமார் பால்], “கிருஷ்ணர் போல் புல்லாங்குழல் வாசித்தால் பசு மாடுகள் கூடுதலாகப் பால் கறக்கும்” என்று திருவாய் மலர்ந்தளியிருக்கிறது.

பசுக்கள் செவிமடுக்கும் வகையில் இன்னிசைக் கருவிகளை நாளும் இசைத்தால், அவை சிறிது கூடுதலாகப் பால் வழங்கக்கூடும். அதுவும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்தப் பா.ஜ.க.வின் அறிவுச் சூன்யம் புதியதொரு மூடநம்பிக்கையை மக்கள் மனங்களில் திணித்திருக்கிறது.

கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை இந்த ஆள் எப்போதாவது பார்த்திருக்கிறாரா? அப்புறம் எப்படி இப்படியான ஒரு பொன்மொழியை இவரால் உதிர்க்க முடிந்தது!

இவரைப் போன்றவர்கள் இனியும் இம்மாதிரி உளறிக்கொட்டுவதைத் நிறுத்திட வேண்டும். தவறினால், இது போன்ற குற்றங்களுக்கான எதிர்வினைகளைப் பா.ஜ.க. எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
=================================================================================

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஆண்கள் இப்படித்தான்!...பெண்களுக்கான சிறப்புப் பதிவு!!

“ஒரு பெண்ணைக் கண்டவுடன் அவளிடமுள்ள  எந்த அம்சம் உங்களைக் கவர்கிறது?” என்ற கேள்வியுடன் இளைஞர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தியது ஒரு முன்னாள் நம்பர் 1 வார இதழ். அதன் முடிவு.....

பெண்ணின் கட்டுக்குலையாத கவர்ச்சியான உடலமைப்பே தங்களைக் கவர்வதாக, ஏறத்தாழ பாதிப்பேர் சொன்னார்கள். 47.1 சதவீதம்.

அழகிய முகமும் நிறமுமே தங்களைக் ஈர்ப்பதாகச் சொன்னவர்கள் 31.2 சதவீதம் பேர்.

பெண் உடுத்தும் ஆடையும் விதம் விதமான அணிகலன்களுமே தங்களை வசீகரிப்பதாகச் சொன்னவர்கள் 9.3 விழுக்காடு.

பெண்ணின் நீண்ட கரிய கூந்தலைக் கண்டவுடன் குப்புறக் கவிழ்ந்துவிடுவதாக  அசடு வழிந்தவர்கள் 5.8 விழுக்காட்டினர்.

இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பெண்ணிடமுள்ள அத்தனை அம்சங்களுமே தங்களுக்குப் பிடிப்பதாக ஜொள்ளியவர்கள்  1.8சதவீதம்!

வாக்கெடுப்பு நடத்தியவர்களிடம், “உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று எரிந்து விழுந்தவர்கள்[நம்ம கட்சி] 1.7 விழுக்காடு.
========================================================================
ஜொள்ளுவிடாமல் புள்ளிவிவரத்தை நகலெடுத்துப் பதிவு செய்தவர்: ‘பசி’பரமசிவம்!

புதன், 28 ஆகஸ்ட், 2019

நாடாளுமன்றத்தில் ஒரு ‘ஞான சூன்யம்’!!!

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தேர்தலில்[அண்மையில் நடைபெற்றது] வெற்றி பெற்று அவை உறுப்பினராக ஆகியிருப்பவர் பிரக்யாசிங் தாக்கூர் என்னும் சாமியாரிணி[பெண் சாமியார்]. 

[பில்லி]சூன்யத்தில் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர் இவர் என்பதை, “சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மரணம் அடைந்ததற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் சூன்யம் வைத்ததுதான்” என்று ப.ஜ.க.அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் இவர் பேசியதன் மூலம் அறியலாம்.

சூன்யத்தை முழுமையாக நம்புகிற இந்த இவர் தன் தொகுதி மக்களில் பெரும்பான்மையோரைச் சூன்யம் வைத்து மயக்கித் தனக்கு வாக்களிக்கச் செய்தார் என்று நாம் கருதினால் அதில் தவறேதும் இல்லை.

ஆனால், இவ்வாறு கருதுவதற்கு நம் பகுத்தறிவு அனுமதிக்காது.

சூன்யம் என்பது மூடநம்பிக்கைகளில் ஒன்று என்பது அறிவியலாளர்களால் ஆராய்ந்து கண்டறியப்பட்ட உண்மையாகும்.

இந்த அறிவியல் யுகத்தில் இந்த மூடச் சாமியாரிணிபோல இன்னும் எத்தனை ஞான சூன்யங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ தெரியவில்லை.  இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாயின் இந்த நாடு பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்பதில் எள்ளத்தனையும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இவர் போன்றவர்களைக் கண்டித்துத் திருத்துவது ப.ஜ.கட்சிக்குத் தலைமை வகிப்போரின் தலையாய கடமை ஆகும்.


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஒரு கருமாந்தரக் கதை![100% நகைச்சுவை]

ணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

“பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க” என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

“இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு”என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, “தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ‘ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்” என்றாள்.

“இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?” -தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

“டைலர் ரவி வந்தான்......”

குறுக்கிட்டான் மனோகரன், “அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?”

“ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்.”

“தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு.”

“அப்புறம்....வந்து....”

“சொல்லு.”

“நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது.”

மனோகரனின் முகம் முழுக்கக் ‘குப்’பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு  கிளம்பினான்.

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” -வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவள்கிட்ட கடன் வாங்கல; ‘அது’க்குக் கடன் சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறி விரைந்தான் மனோகரன், குமுதாவுடன் சல்லாபித்ததற்கான ஆயிரம் ரூபாய்க் கடனுக்கு மேலும் அவகாசம் கேட்பதற்காக!
###########################################################################################
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘கடவுளின் கடவுள்’[முடக்கப்பட்டது] என்னும் என் இன்னொரு தளத்தில் வெளியானது இக்கதை. 

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மோடியும் மொழிபெயர்ப்புக் கருவியும்!

நேற்று[10.07.2019] வெளியிட்ட ஒருபதிவில்[https://pasiparamasivam.blogspot.com/2019/08/blog-post_25.html] காதில் பொருத்திக்கொள்ளும் ஒரு மொழியாக்கக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கீசியம் என நான்கு மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

உலகின் முக்கிய மொழிகள் பலவும் விரைவில் இடம்பெறக்கூடும் என்று குறிப்பிட்டதோடு, அவற்றுள் தமிழும் ஒன்றாக இருக்கும் என்னும் என் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

தமிழ் இடம்பெற்றதோ இல்லையோ, இந்தி இடம்பிடித்துவிட்டதை இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் வாய்மொழி மூலம் அறிய முடிகிறது.

கீழ்வரும் நகல் பதிவே அதற்கான ஆதாரமாக உள்ளது.

[நன்றி: ‘தமிழ் இந்து’]

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் இந்தியும் ஒன்று. 

மோடி, தன் தாய்மொழியான குஜராத்தியில் பேசுவதற்கேற்ற வகையில் மொழியாக்கக் கருவியை வடிவமைக்கச் செய்து, அம்மொழியிலேயே கிரில்ஸ்ஸுடன் உரையாடியிருப்பாரேயானால் அது மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கும்.

நடந்தது எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். இந்திய நாடாளுமன்றங்களில் உறுப்பினர்கள் தத்தம் மொழிகளில் பேசுவதற்கும், அவை உடனடியாக மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுவதற்குமான கருவிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் உடனடித் தேவையாகும்.

இனியும் இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்று சொல்லிக்கொண்டிராமல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துதல் வேண்டும் என்றும் நடுவணரசை வற்புறுத்துகிறோம். 
========================================================================


ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

பைலட் வயர்லெஸ் ஹெட்ஃபோன் டிரான்ஸ்லேட்டர்?


இது ஒரு மொழிபெயர்ப்புக் கருவி. இதைக் காதில் பொருத்திக்கொண்டால், எதிரிலிருப்பவர் பேசும் மொழியைப்[பிற மொழி] நம் மொழியில் மொழிபெயர்த்துத்[இன்றைய நிலையில் சற்றே காலதாமதம் ஆகுமாம். உடனுக்குடனான மொழியாக்கம் விரைவில் சாத்தியப்படக்கூடும்] தந்துவிடும்.

இப்போதைக்கு இது இணைய இணைப்பின் மூலம் இயங்குகிறது. விரைவில் இணைய இணைப்பு[Internet] இல்லாமலே இயங்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

ஆங்கிலம்,பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கீசியம் ஆகிய மொழிகள் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன. விரைவில் உலகின் குறிப்பிடத்தக்க பல மொழிகளும் சேர்க்கப்படுமாம்.

அந்தப் பல மொழிகளில் தமிழும் ஒன்று என்று உறுதியாக நம்பலாம்.

ஆக.....

பைலட் வயர்லெஸ் ஹெட்போன் ட்டிரான்ஸ்லேட்டரைக்[தமிழில்?]  காதில் பொருத்திக்கொண்டு நம் மொழி தெரியாத பிறருடன் உரையாடுவது விரைவில் சாத்தியப்படும் என்பது பேருவகை தரும் செய்தியாகும்.

 
நன்றி: தினமணிக் கதிர்[.08.2019]

சனி, 24 ஆகஸ்ட், 2019

ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஒரு குட்டு!!!

புலன்களால் அறியப்படுகிற இந்தப் பிரபஞ்சம் எப்போது உருவானது? 

"உருவாக்கப்படவில்லை;  எப்போதும் இருந்துகொண்டே இருப்பது" என்றால், அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று? 

உருவானது அல்லது உருவாக்கப்பட்டது எதன் பொருட்டு? அதற்கு ஆதாரமாக இருந்தவை எவையெல்லாம்? எவரெல்லாம்?

பிரபஞ்சம் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்திருக்கலாமே. கணக்கிலடங்காத உயிர்களின் தோற்றங்களும் போராட்டங்களும் அழிவுகளும் ஏன்?

இப்படி எத்தனையோ ‘ஏன்’களுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றே ஒன்றுக்கேனும் இன்றளவும் விடை கிடைத்திடவில்லை. 

ஆக..... 

பருப்பொருள்கள் குறித்த ஆய்வுகளே முற்றுப் பெறாத நிலையில், உணர மட்டுமே முடியும் என்று சொல்லப்படும் நுண்பொருளாம்[???] கடவுளைக்...கடவுள்களைக் கற்பித்ததும், அவருக்காக... அவர்களுக்காக அளவிறந்த பொருளையும் பொழுதையும் வீணடிப்பதும் மனிதகுலம் செய்துவரும் மாபெரும் குற்றங்களாகும்! 

இவை மன்னிக்க இயலாத குற்றங்களும்கூட!!
==============================================================================
இது, புதுப்பிக்கப்பட்ட மிகப் பழைய பதிவு.


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

70 வயதிலும் பிள்ளை பெறும்[சுகப்பிரசவம்] மலைவாசிப் பெண்கள்!!!


பாகிஸ்தானின் வடக்கு எல்லையில்கம்பீரமாகஉயர்ந்து நிற்கும் இமயமலைக்குப் பக்கத்திலேயே காரகோரம் பனிமலை. திரும்பிப் பார்த்தால் ஹிந்துகுஷ் மலைத்தொடர். இந்த மலைத் தொடர்கள் சந்திக்கும் இடத்தின் நடுவே சிந்து நதியும், கில்கிட் ஆறும் சங்கமிக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழகிய இயற்கைக் காட்சிகளின் மத்தியில் ஹன்சா பள்ளத்தாக்கு (Hunza Valley) அமைந்திருக்கிறது.
சுற்றி இருக்கும் இடம் மட்டும் அல்ல, அங்கு வாழும் மக்களும் பேரழகுதான். 50 வயது நிரம்பியவரும் 30 வயது தோற்றத்துடன் இளமையாய்த் தோன்றுகின்றனர். அழகு மட்டும் அல்ல, உலகிலேயே அதிகமான ஆயுட்காலமும், ஆரோக்கியமும் கொண்டு ஹன்சா பள்ளத்தாக்கில் சுமார் 85,000 மக்கள் அமைதியாய் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியினர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வதைக் கண்டு வியந்த மானுடவியலாளர்கள், இதற்கான காரணத்தை ஆராயும்போது, ஹன்சா மக்கள் இயற்கையின் வழியில் தங்கள் வாழ்வுமுறையை அமைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வதால்தான் இந்த உலகிலேயே ஆரோக்கியமாக அதிக நாட்கள் உயிர் வாழக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இத்தனைக்கும் இவர்கள் தினமும் ஜிம் செல்வது கிடையாது, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது கிடையாது. அதற்கான பணமும் இவர்களிடம் கிடையாது. பெண்கள் மேக்-அப் செய்யாமல், அழகு நிலையங்கள் என எங்கும் போகாமலே உலகிலேயே அழகான பெண்கள் என்ற பெருமையுடன் சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, இயற்கை வளங்களை அளவாகப் பயன்படுத்தி வாழ்கின்றனர்.

நம் ஊரில் 50 வயதை தாண்டினாலே சீனியர் சிட்டிசன் பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஹன்சா பள்ளத்தாக்கில் 70 வயது பெண்களும் குழந்தை பெற்றெடுக்கின்றனர். 90 வயது வரைகூட மாதவிடாய் நிற்பது இல்லையாம். ஹன்சா மக்கள் சராசரியாக 130 வயது வரை சுறுசுறுப்புடன் எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் உயிர்வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் இவர்கள் வாழும் இடமும் இவர்களின் வாழ்வுமுறையும்தான். தினமும் பழமும் காய்கறிகளும் தானியங்களும்தான் இவர்களின் முக்கிய உணவு. பதப்படுத்தப்பட்ட உணவுகளோ அல்லது அதிக நேரம் சமைத்த உணவுகளோ சாப்பிடுவது இல்லை. வருடத்தில் இரண்டு மாதம், வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும்தான் முழு நேர உணவாகச் சாப்பிடுவார்கள். வால்நட், அவகேடோ, ஹேசில்நட் போன்ற நட்ஸ் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

இவர்களின் இந்த ரகசியத்திற்கு முக்கிய காரணம் பாதாமி பழங்கள்தான் என அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். Apricots என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதாமிப் பழங்களை அதிகம் உண்கின்றனர். கோடை நேரத்தில் ஹன்சா பள்ளத்தாக்கிற்குச் சென்றால், அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் பாதாமி பழங்கள் வெயிலில் உலர்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். பாதாமி விதைகளிலிருந்து பாதாமி எண்ணை எடுத்து, உணவிற்குப் பயன்படுத்துகின்றனர்.

இறைச்சியைச் சிறப்பு நாட்களின் போது மட்டும் சிறிய பங்கில் உட்கொள்கின்றனர். முட்டை மற்றும் பால் பொருட்களைத் தினமும் தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்கின்றனர். இவர்களின் முக்கிய வேலை விவசாயம்தான். அதனால் உடல் உழைப்பில் குறைவில்லை. மலைப் பகுதிகளில் வாழ்வதால் தினமும் பல மைல் தூரம் நடக்கின்றனர். 15 கி.மீ முதல் 20 கி.மீ வரை இவர்களால் சாதாரணமாக நடந்து செல்ல முடியும். இங்கு எந்த விதமான மாசுபாடும் கிடையாது. எந்த விதமான நோயும் கிடையாது.

ஹன்சா மக்களில் ஒருவருக்குக்கூட இதுவரை கேன்சர் நோய் வந்தது இல்லை. என்னதான் இயற்கையுடன் பழமையான வாழ்வுமுறையைப் பின்பற்றினாலும், ஹன்சாவினர் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அங்கு வாழும் பெண்களும், விரும்பிய மேல் படிப்பினைப் படிக்கின்றனர். ஆண்களுக்கான வேலை எனச் சொல்லப்படும் தச்சு வேலையையும் அப்பெண்கள் கற்கின்றனர். 

இந்தப் பகுதியில் குளிர் காலத்தில், அடர்ந்த பனியுடன் ஜீரோ டிகிரியில் உறையும் குளிர் இருக்கும். அந்தச் சமயத்திலும் மக்கள் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்களாம். மொபைல் போனை, உறவினர்களிடம் தொடர்புகொள்ள மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தக் காரணங்களால் தான், ஹன்சா பள்ளத்தாக்கில் பெண்கள் 70 வயதிலும் கருத்தரிக்கும் உடல் வலிமையுடன் இருக்கின்றனர். 130 வயதுவரை சர்வசாதாரணமாக வாழ்கின்றனர்.

ஹன்சா மக்கள் அலெக்சாண்டர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். அங்கு கொலை, கொள்ளை என எந்த வன்முறையும் இல்லை. அடுக்கு மாடி ஆஸ்பத்திரிகளும் இல்லை, நோயாளிகளும் இல்லை.

ஆரோக்கியமான உணவு, சுத்தமான சுற்றுச்சூழல், தினசரி உடல் பயிற்சி. இவையெல்லாம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுட்காலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வைக்கிறது. அதைத்தேடி எங்கும் அலையாமல், பேராசைப்படாமல், இருப்பதைக்கொண்டு வாழ்ந்தாலே அமைதி கிடைக்கும் என்பதற்குச் சாட்சியாய் ஹன்சா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அதிசய மக்களைச் சந்திப்பதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து, இவர்களின் வாழ்வுமுறையைக் கற்கின்றனர். 
=================================================================================
நன்றி: குங்குமம்[தோழி] இதழ்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

‘கடவுள்’.....ஒரு தேடல்!

இது ஒரு ‘ஜென்’ கதை.


#வயதான ஜென் குரு அவர்.

தனக்குப் பிறகு ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்துவதற்கான தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

தன் சீடர்களில் சிறந்த மூவரை அழைத்தார்; “எனக்கு வயதாகிவிட்டது. இந்த ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்த உங்கள் மூவரில் ஒருவரைத் தேர்வு செய்ய விரும்புகிறேன். நீங்கள் மூவரும் மனம்போன போக்கில் எங்குவேண்டுமானாலும் பயணம் செய்யுங்கள். பயணத்துக்கிடையே இடைவிடாமல் கடவுளைப் பற்றிச் சிந்தியுங்கள். பயணம் முடிந்து ஆசிரமத்திற்குத் திரும்பியதும் கடவுள் குறித்து நீங்கள் உணர்ந்தறிந்த உண்மையை என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறி மூவருக்கும் ஆசி கூறி வழியனுப்பி வைத்தார்.

ஓராண்டு நிறைவு பெற்றதும் சீடர்கள் மூவரும் ஆசிரமம் திரும்பினார்கள்.

“கடவுள் பற்றி நீங்கள் சிந்தித்தறிந்த உண்மைகளைச் சொல்லுங்கள்” என்றார் குரு.

“குருவே, கடவுளுக்கு உருவமில்லை. ஆயினும், அனைத்துப் பொருள்களிலும் உயிர்களிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார்” என்றான் ஒரு சீடன்.

“கடவுளுக்கு உருவம் இருக்கிறது. அவரை ஒளி வடிவில் காணலாம். நாம் வடித்தெடுக்கும் சிலை வடிவிலும் கண்டு வணங்கலாம்” என்றான் இரண்டாவது சீடன்.

மூன்றாவது சீடனோ.....

“குருவே, எத்தனை சிந்தித்தும் என் மனதாலோ அறிவாலோ கடவுள் என்று ஒருவர் இருப்பதை என்னால் உணரவோ நம்பவோ இயலவில்லை” என்றான்.

குருவின் முகத்தில் மலர்ச்சி பரவியது.

“உன்னுடைய முடிவே என்னுடையதும். இந்த ஆசிரமத்தில் முற்றும் துறந்த ஒரு துறவியாக இத்தனை காலமும் வாழ்ந்து சிந்தித்த என்னாலும் கடவுளை அறியவோ உணரவோ இயலவில்லை. பொருள்கள், உயிர்கள் என அனைத்தும் உருவாகக் காரணம் எது என்பது எவராலும் அறியப்படவில்லை. அது விடுவிக்க இயலாத ஒரு புதிர். இனி இந்த ஆசிரமத்தை நீயே பொறுப்பேற்று நடத்து” என்றார் குரு#
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதை... வறுமை, நோய், பகைமை போன்றவற்றால் அளவிடற்கரிய துன்பங்களுக்குள்ளாகித் தவிக்கும் மனிதர்களைப் புறக்கணித்துக் கடவுள், கோயில், கும்பாபிசேகம், திருவிழா என்று அலையும் ஆன்மிகப் பித்தர்களுக்குச் சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ஞானம் தரும் ஜென் கதைகள்’ என்னும் நூலில்[கிளாசிக் பப்ளிகேசன்ஸ், பிராட்வே, சென்ன-600,108] இடம்பெற்ற ஒரு கதையைத் தழுவி எழுதப்பட்டது இக்கதை. நூலாசிரியர் அம்பிகா சிவம் அவர்களுக்கு என் நன்றி.


செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை!

இது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் உண்டு! 

கன்ற பெரிய அறை. அதன் நடுவே ராஜாக்களின் ஹம்ச தூளிகா மஞ்சம் போல படுக்கை. அது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையெங்கும் மனதைக் கிறங்கடிக்கும் வாசனைத் திரவியங்களின் நறுமணம்.

கதவு திறந்து மூடப்படும் சப்தம்.

எதிரே, அழகிய சிற்பம் போல் சர்வ அலங்காரங்களுடன் அவள்.

அவள் என்னவள்; எனக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டவள்.

பால்பழத் தட்டுடன், வண்ண மயிலாக ஒயிலாக நடை பயின்று என்னை நெருங்கினாள்; தட்டை வைத்துவிட்டுச் சட்டெனக் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

“ஏன் இந்த மூடப் பழக்கம்?” என்று கேட்டு, அவள் தோள் பற்றித் தூக்கி நிறுத்தினேன்.

மெலிதாக அவள் தேகம் நடுங்குவது தெரிந்தது. முகம் முழுக்க வியர்வை முத்துகள்.

அவளின் அழகு மேனியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை நோட்டம் விட்டு, “என்னைத் தவிர வேறு யாரும் உன் அழகை ரசித்துவிடாமல் இருக்கவா அங்கங்களை மறைக்கும் இந்த  அலங்காரம்?” என்று நான் கேட்க, அவள் வதனத்தில் வெட்கம் பரவியது; தலை கவிழ்ந்தாள். அந்த அழகுக் கோலம் என் ஆண்மையைக் கிளர்ந்தெழச் செய்தது.

அவளைப் பஞ்சணையில் அமர வைத்து அவள் அணிந்திருந்த தாலி தவிர, காதணி, மூக்குத்தி உட்பட அத்தனை நகைகளையும் கழற்றினேன்; அவள் அழகை மறைத்திருந்த ஆடைகள் மூலைக்கொன்றாய்ப் பறந்தன.

எதை மறைப்பது, எதைத் தவிர்ப்பது என்று திகைத்து மயங்கி, “என்னங்க இதெல்லாம்?” என்று  முணுமுணுத்தாள் அவள். அந்த முணுமுணுப்பின் பின்னணியில் கட்டுக்கடங்காத தாபம் கரைபுரண்டுகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

“எதுக்குங்க......” என்று இன்னுமொரு கேள்வியை அவள் எழுப்ப முயன்றபோது, “உன் உடம்பில் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அத்தனை இடங்களிலும் முத்தம் பதிக்க வேண்டும். அதுக்குத்தான்” என்றேன்.

அவளின் ஒட்டுமொத்த உடம்பும் ஒரு முறை சிலிர்த்து ஓய்ந்தது.

அவளை இதமாகத் தழுவிப் படுக்கையில் கிடத்தியபோது, வான வெளியிலிருந்து வண்ண மலர்களை யாரோ தூவினார்கள். எங்கும் மதுரகீதங்கள் ஒலித்தன. வகை வகையான வாச மலர்கள் நேசமுடன் என் நாசியில் உறவாடின.

ஈருடம்பு என்ற நிலை மாறி ஓருடம்பாய் இருவரும் பிணைந்தோம்.

காற்றுப் புகக்கூட இடைவெளி இல்லை.

அவளிடம்தான் எத்தனை மலர்கள்! எத்தனை கனிகள்!!

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை ஐம்புல இன்பங்களும் பெண்ணிடத்தில் உண்டு என்று பெரியவர்கள் சொன்னது எத்தனை உண்மை. அதை அனுபவபூர்வமாக அறிந்து அனுபவித்துப் பூரித்தேன்.

“நன்றி...நன்றி இறைவா!” என்று ஓசைப்படாமல் என் உள்மனம் முழக்கமிட்டது.

எல்லாம் முடிந்தபோது எங்கள் உடம்புகள் குளிர்ந்திருந்தன.
இப்போது என் சிந்தனை வேறுபுறம் திரும்பியது.

உடலுக்கும் மனதுக்கும் அற்புத சுகம் அளிக்கும் இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்கிறார்களே, ஏன்?

“பேரின்பம் என்று ஒன்று இருப்பதால்” என்கிறார்கள்.
இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்னொரு பேரின்பம் இருப்பதால் இது சிற்றின்பம் ஆகிவிடுமா?

ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து இணைகிற போது பெறும் இன்பம் பேரின்பம்தான். அனுபவித்து அறிய வேண்டிய உண்மையல்லவா இது.
---------------------------------------------------------------------------------------------------------------------------சேலத்தைச் சேர்ந்த, அரிமா ச. மாதவன்[M.A] எழுதிய, ‘கடவுளிடம் நூறு கேள்விகள்’[பாலாஜி பதிப்பகம், சேலம், முதல் பதிப்பு:2005] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவு.

கட்டுரை வடிவில் இருந்த நூலின் ஒரு சிறு பகுதியை, எனக்குக் கைவந்த நடையில் மெருகூட்டிக் கதையாக்கித் தந்திருக்கிறேன். 

எழுதி முடித்துத் திரும்ப வாசித்தபோது, விரசமான வாசகங்களும் வர்ணனைகளும் தென்பட்டன. அவற்றை நீக்கிப் பதிவிட்டபோது கதை வெகுவாகச் சுருங்கிவிட்டது தெரிந்தது. கதையைப் பெரிதாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த நன்றி.-----------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ!

பறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.



இவற்றையும், இவற்றையொத்த வேறு சில விசித்திரப் பூக்களையும் கண்டு அதிசயித்து மகிழ்ந்த நான்.....

‘பெண்ணின் உருவில் பூக்கள்’ என்று தேடுபொறியில் பதிவு செய்தபோது கீழ்க்காணும் படத்தையும் ஒரு காணொலியைக் கண்ணுற நேர்ந்தது. மகிழ்வுடன் பகிர்கிறேன்.

பெண் உருவத்தில் பூக்கள் க்கான பட முடிவு

https://www.youtube.com/watch?v=ldzfggOd_h4


சனி, 17 ஆகஸ்ட், 2019

அத்திவரதரின் அபார சாதனை!?!?!

‘அத்திவரதர் தரிசனம் நிறைவுற்றது. ஒரு கோடி பக்தர்கள் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றார்கள்’

‘அத்திவரதர் தன்வசம் ஒரு கோடிப் பக்தர்களைக் கவர்ந்திழுத்துச் சாதனை நிகழ்த்தினார்’

‘இது, இன்றளவும் நிகழ்ந்திராத அதிசயம்’

-இன்று அதிகாலையிலிருந்து, இவ்வகையிலான செய்திகளை ஒளி/ஒலி பரப்பி ஆன்மிகத் தொண்டு புரிந்துகொண்டிருக்கின்றன அனைத்துத் தொலைக்காட்சி ஊடகங்களும்.

அனந்தசரஸ் குளத்துக்குள் கிடத்தப்பட்டிருந்த  சிலையைத் தூக்கிவந்து கோயிலில் படுக்க வைத்து..... 

‘வரதர் எழுந்தருளினார்; அனந்த சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்; அப்புறம் நின்ற கோலத்தில் காட்சி தந்து கடைத்தேற்றுவார்’

‘இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னும் 40 ஆண்டுகளுக்குத் தரிசனம் செய்ய இயலாது’

‘வரதரைத் தரிசித்தால் அனைத்துத் துன்பங்களும் அகலும்; சொர்க்கத்தில் ஓரிடம் நிச்சயம்’ என்றிவ்வாறு நாளெல்லாம் இடையறாது செய்தி வெளியிட்டு நம்பாதவர்களையும் நம்ப வைத்து ஒரு கோடிப் பக்தர்களின் வரவுக்குக் காரணமாயிருந்தவை[பிரபலங்களும் போட்டிபோட்டுக்கொண்டு தரிசித்துத் தம் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள்] ஊடகங்களே.

இந்தச் சாதனை ஊடகங்களுக்கானது. இந்த உண்மைக்கு மாறாக, ஊடகங்கள் ‘அத்திவரதர் சாதித்தார்’ என்று செய்தி வெளியிடுகின்றன.

“தொலைக்காட்சி ஊடகங்கள் உருவாகாத காலக்கட்டத்தில், நாளிதழ்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்த தருணத்தில் லட்சக்கணக்கானவர் வரதரைத் தரிசித்திருப்பார்களா?”

“வரதரே பக்தகோடிகளுக்குத் தன் வரவைக் கனவின் மூலமோ அசரீரியாகவோ அறிவித்திருப்பாரா?”

“வரதர் 40 ஆண்டுகள் இடையறாது ஏன் நீரில் மூழ்கிக்கிடக்கிறார்?” என்றிவ்வாறான கேள்விகளை[இன்னும் பல கேள்விகள் உள்ளன]க் கேட்கத் துணிச்சல் மிக்க புத்திசாலிகள் இல்லாமல் போன சூழலில்.....

போட்டிபோட்டுக்கொண்டு, பெரும்பான்மை மக்களுக்குள்ள கொஞ்சம் பகுத்தறிவையும் சீரழித்துச் சிதைக்கும் ஊடகக்காரர்களே, உங்களின் ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்களே, இது நியாயமா?

மனசாட்சியே இல்லாதவர்களா நீங்கள்?!

தமிழ் ஊடகங்கள் க்கான பட முடிவு

தமிழ் நாளிதழ்கள் க்கான பட முடிவு
=================================================================================