அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 31 மார்ச், 2020

அம்மம்மா!...அண்டவெளியில் இத்தனை சூரியன்களா!!!

நாம் பார்க்கும் சூரியனிலிருந்து ஒளி நம் பூமிக்கு வந்துசேரப் பத்து நிமிடங்கள்தான் ஆகிறது. பூமிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அடுத்த சூரியன் 04[நான்கு] ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அந்தச் சூரியனின் ஒளியானது நம்மை வந்தடைய நான்கு ஆண்டுகள் ஆகும்.

வெகு தொலைவில் இன்னும் பல சூரியன்கள் உள்ளனவாம். அவற்றிலிருந்து ஒளிக்கிரணங்கள் இங்கு வந்தடைய லட்சக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தப் பூமி உருவாவதற்கு முன்னரே வெகு வெகு வெகு தொலைவிலிருக்கும் பல சூரியன்கள் தத்தம் ஒளிக்கிரணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கிரணங்கள், பூமி உருவாகி 450 கோடி  ஆண்டுகள் ஆன பிறகும் இங்கு வந்துசேரவில்லையாம்.

அந்தச் சூரியன்களுக்கு அப்பாலும் பல சூரியன்கள் இருக்கக்கூடுமாம். நெடு நெடு நெடு நெடு நெடுந் தொலைவிலுள்ள அவற்றின் ஒளிக்கிரணங்கள் நொடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல்கள் என்ற அளவில் அதிபயங்கர வேகத்தில் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. இருந்தும், அவை வந்து சேருவதற்கு முன்னரே இந்தப் பூமி அழிந்தும் போகலாம் என்று அனுமானிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

இவையெல்லாம் விண்வெளியில் நிகழும் விந்தைகள். 

ஒட்டுமொத்தப் பிரபஞ்ச வெளியில் இம்மாதிரி எத்தனை எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். அனைத்தையும் மனித அறிவால் அனுமானிப்பதென்பது எக்காலத்தும் சாத்தியமே இல்லை என்கிறார்கள் இந்த அறிஞர்கள். இந்த அற்ப அறிவை வைத்துக்கொண்டுதான் கடவுள், ஆன்மா, பூதம் பேய், பிசாசு, சொர்க்கம் நரகம் என்று கதையளந்துகொண்டிருக்கிறார்கள் நம் அவதாரங்களும் ஆன்மிகப் பிதாமன்களும்!
========================================================================================================================================================================================================================
ஓர் அறிவியல் பருவ இதழிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த குறிப்புரை கொண்டு எழுதப்பட்ட பதிவு இது. இதழின் பெயரைக் குறித்துவைக்கவில்லை.


ஞாயிறு, 29 மார்ச், 2020

நட்சத்திரம் உருவாவது எப்படி?

அண்டவெளியில் நிறையவே ஹைட்ரஜனும் ஹீலியமும் இருக்கும். ஏற்கனவே, விண்வெளியில் சிதறிக் கிடக்கும் அணுக்கள் இவற்றுடன் கலக்கும். 

காலப்போக்கில், இவை ஒன்றிணைந்து கலந்து பல மில்லியன் கிலோமீட்டர் நீளம் கொண்ட ‘அண்டவெளி’ மேகங்களாக[நம் தலைக்கு மேல் தெரிகிற மேகங்கள் அல்ல] உருவாகும்.

இந்த அண்டவெளி மேகங்கள் பூமியிலிருந்து கோடானுகோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இடம்கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில், ஒன்றுதிரண்டிருக்கும் இவை சுழல ஆரம்பித்து, ஈர்ப்பு விசை காரணமாகப் பிரமாண்டமான உருண்டையாக மாறித் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும்.

இந்நிலையில், பிரமாண்ட உருண்டையின் மையப்பகுதி அதி பயங்கரமாக அழுத்தப்பட்டு அப்பகுதியில் பல மில்லியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றும்.

ஒரு கட்டத்தில், அங்கே அணுச்சேர்க்கை நிகழ்ந்து ஒரு நட்சத்திரம் உருவாகி  ஒளிவிடத் தொடங்குகிறது.

சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களும் தோன்றக்கூடும்.

சூரியன் என்னும் நட்சத்திரம் தோன்றியதும் இவ்வகையில்தான். சூரியனின் தோற்றத்தைத் தொடர்ந்து பூமியும் தோன்றியது.

நம் உடம்பில் உள்ள அணுக்கள் உட்பட, பூமியில் உள்ள அனைத்து அணுக்களுமே அண்டவெளி நட்சத்திரங்களிலிருந்து தோன்றியவைதான். அந்த வகையில், இங்குள்ள உயிர்கள் அனைத்தும் நட்சத்திரக் குழந்தைகளே என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
Lonely young star caught in a growth spurt | Cosmos
=======================================================================
எனக்கு அறிவியலறிவு மிக மிகக் குறைவு. அறிவியல் பதிவுகள் எழுதும் ஆசையோ அதிகம். ஆழ்ந்த படிப்பறிவு கொண்டு எழுதுதல் சாத்தியம் இல்லையாதலால், அவ்வப்போது அறிவியல் நூல்களிலிருந்து ‘சுட்டெடுத்து’ப் பதிவிடுதல் வழக்கம்.

என்.ராமதுரை அவர்களின், ‘அணு-அதிசயம்-அற்புதம்-அபாயம்’ என்னும் நூலிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. 

மறைந்த அந்த அறிஞருக்கு என் நன்றி.

சனி, 28 மார்ச், 2020

ஒரு பெண் பித்தன் ‘ஆன்மிகப்பித்தன்’ ஆன கதை!!!

அவர் பெரிய படிப்பாளி; ஆகச் சிறந்த அறிவாளியும்கூட. நானிலம் போற்றும் நல்லவர். அவரிடம் இருந்த ஒரே ஒரு குறை...அல்ல, பலவீனம்.....

உடலுறவு ஆசை. சல்லாபிக்கப் பெண்டாட்டி இல்லாமல் ஒரு நாள்கூட அவரால் தனித்திருக்க முடியாதாம். பிறந்தகத்துக்குகூட அவரை அனுப்பியதில்லை. பகலில் எப்படியோ, இரவில் வேறு எங்கு செல்லவும அனுமதிப்பதில்லை.

இது அந்த அம்மையாருக்குக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு மன உளைச்சலைத் தந்தது.

இவர் பக்கத்தூர் சென்றிருந்த நாளில், அம்மையாரின் சகோதரன் தமக்கையைக் காண வந்திருந்தார். “நம்ம ஊர் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குப் போக இருக்கிறேன். நீயும் வாயேன்” என்று அழைத்தார். இதுதான் சாக்கு என்று அம்மையாரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு சகோதரனுடன் கிளம்பிவிட்டார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற சில நிமிட அவகாசத்தில் பக்கத்தூர் சென்றிருந்த  நம்மவர் ஊர் திரும்பினார். வீடு பூட்டியிருந்தது கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். அண்டை வீட்டாரிடம் விசாரிக்க, அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.

ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்று தன் மனைவியும் மைத்துனனும் சென்றுகொண்டிருந்த வண்டியைத் தடுத்து நிறுத்தினார் அவர்; தன்னவளைக் கண்டித்தார்.

அவரோ, இத்தனை காலமும் கட்டிக் காத்த கட்டுப்பாட்டை முற்றாக இழந்தார்; வெடித்தார்: “நீயெல்லாம் ஒரு மனுசனா? ‘அது’ இல்லாம உன்னால ஒரு நாள்கூட இருக்க முடியாதா?”

பெண்டாட்டி கொடுத்த சாட்டையடியால் நிலைகுலைந்தார் பெண்டாட்டிதாசர். ஆனாலும், அடுத்த சில நொடிகளில் அவருக்கு ஞானம் பிறந்தது. உடலுறவைத் துறந்தார்; உடன் வாழ்ந்த மனைவியைத் துறந்தார்; துறவியானார்; ஆன்மிக நெறியில் பயணிக்கலானார்.

“புணர்ச்சி செய்யாம அவர் ஒரு நாளும் இருந்ததில்லை; இருக்க முடிந்ததில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லையே?” என்று நீங்கள் கேட்க நினைக்கிறீர்களா? 

மூச்ச்ச்ச்.....

இந்தக் கதையின் கதாநாயகர் ‘துளசி ராமாயணம்’ எழுதிய துளசிதாசராக்கும்[வட இந்தியப் பகுதிகளில் ராமசரித் மானஸ்{துளசி ராமாயணம்} பெரும் புகழ்பெற்றது]

வாழ்க துளசிதாசரின் திருநாமம்!
=======================================================================
ஆதாரம்: ஸ்ரீவேணுகோபாலனின்[எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை], ‘ஆன்மிகம் வரும் வழிகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரை[குமுதம் பொங்கல் சிறப்பு மலர், சனவரி 2013]




வெள்ளி, 27 மார்ச், 2020

கேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் - 1

அவன் மற்ற பையன்களைப் போல்தான் வளர்ந்தான்; விளையாடினான்; பள்ளிக்குப் போனான்; படித்தான்.

ஒரு நாள் “நான்  இறந்துவிடுவேனா?” என்று பயந்தான். அடிக்கடி அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டான். விடை கிடைக்கவில்லை.

அப்புறமும் சாவு குறித்து ஆழ்ந்து... மிக ஆழ்ந்து சிந்தித்தான்.

“நான் செத்த பிறகு ‘நான்’ என்னும் உணர்வும் செத்துப்போகுமா? நான் என்பது என்ன? மற்ற உறுப்புகளைப் போல அதுவும் என் உறுப்புகளில் ஒன்றா?” என்று மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தானாம்.

இந்த நான் குறித்து, தீவிரமாக...அதிதீவிரமாகச் சிந்தித்ததன் விளைவாக, ஒரு கட்டத்தில் ‘நான்’ ஐ மறந்து வெட்ட வெளியில் அவன் சிந்தனை படர்ந்ததாம். விவரிக்க இயலாத ஏதோ ஒன்றில் அவன் மனம் லயித்ததாம். அவனுக்கு ‘ஞானம்’ பிறந்ததாம்.

இது, ஆன்மிகவாதிகள் பலராலும் பல்வேறு காலக்கட்டங்களில் சொல்லப்பட்ட கதை. இங்கே, என்னுடைய நடையில் நான் சொல்லியிருக்கிறேன்.

கதையில் இடம்பெற்றுள்ள ‘அவன்’ வேறு யாருமல்ல, ‘ரமண மகரிஷி’ எனப்படுபவர்.

மேற்கண்ட வகையில் ஞானம் பெற்று ஞானியாகத் திகழ்ந்த இவர், “நான் என்பதை அறிந்துகொள். நீ பற்றுக்களிலிருந்து விடுதலை பெறுவாய்” என்று உலகோருக்குப் போதிக்கத் தலைப்பட்டாராம்.

‘நான் என்பது நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் ஒன்றா? அல்ல எனின், அது என்ன? செத்துத் தொலைத்த பிறகு அதன் கதி என்ன?’ -என்றிவ்வாறான கேள்விகளில் எந்த ஒன்றுக்கும் இந்த ரமண மகரிஷி[?] விடை கண்டறியவில்லை; சொன்னதும் இல்லை.

அப்புறம் எப்படி ஞானி ஆனார்?

ஞானம்[அறிவு] உள்ளவர்கள் சிந்திக்கலாம்!





வியாழன், 26 மார்ச், 2020

எச்சரிக்கை!...ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனாவின் ‘கோரதாண்டவம்’!!!

தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரைக் கொரோனா தாக்கும் அபாயம்


     

புதன், 25 மார்ச், 2020

அந்தக்காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை!

பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான குமுதம் வார இதழில்[04.02.2009] வெளியான என் ஒரு பக்கக் கதையைக் கீழே காணலாம். வாசித்து மகிழுங்கள்; என்னையும் மகிழ்வியுங்கள்.

இப்போதெல்லாம் குமுதம் என்னை மாதிரிக் கிழவட்டங்களைப் புறக்கணிக்கிறது; இளவட்டங்களுக்கே வாய்ப்புத் தருகிறது.

குமுதம் ஆசிரியர்





செவ்வாய், 24 மார்ச், 2020

கிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை!

வரலாற்றுப் பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவள் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன.

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாகப் பிறந்த கிளியோபாட்ரா  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களைப் போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியைக் கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11  மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.

14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள்.  எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தாலமியைத் திருமணம் செய்துகொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்குப் பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து  மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இ ருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரைக் காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரைத் தன் காதல் வலையில்  வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்குப் பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்குத் தப்பினாள்.

சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்தக் காலத்தில் தனது 2 சகோதரி கள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண் டாள்.

இந்நிலையில் கிளியோபாட்ராவுக்குச் சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர்  எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை
பிடிக்கப்பட்டனர்.

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பைக் கடிக்க  வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள்  என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.

சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார்  செபர். எகிப்தின் பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின்  வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
===============================================================
நன்றி: தமிழ்முரசு http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12

திங்கள், 23 மார்ச், 2020

“நானே ராமன்...நானே அல்லா... நானே எல்லாம்!”...சொன்னவர் யார்?

‘ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மசூதியிலிருந்து புறப்பட்டு, நெடுந்தொலைவிலுள்ள ஆலமரம் ஒன்றின் அருகிலிருக்கும் கிணற்றடிக்குச் செல்வது அவர் வழக்கம். அந்தக் கிணற்று நீரில் குளிப்பார்; தன் குடல், கும்பி[இரைப்பை] ஆகியவற்றை வாந்தி எடுத்து, அவற்றின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து அருகிலிருந்த நாவல் மரத்தில் தொங்கவிட்டுக் காய வைப்பார்; மீண்டும் விழுங்கிவிடுவார்!

மேற்கண்ட இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் 96 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான்[மறைவு: 1918] என்றால் நீங்கள் நம்புகிறீர்களா?

இது போன்ற இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.

மூன்று அங்குல அகலமும் இருபத்திரண்டு அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியை விழுங்கி அரை மணி நேரம் போல வயிற்றுக்குள் வைத்திருந்து கக்குவாராம். ‘தவ்தி’ எனப்படும் இந்த யோகப் பயிற்சியை அவர் அடிக்கடி செய்வதுண்டாம். [இதுவும் தொண்டை முதலான உறுப்புகளைச் சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையோ?]

தவ்தி யோகம் மட்டுமல்லாது, உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியாகக் கழற்றிப் பின்னர் ஒன்று சேர்க்கும் ‘கண்ட யோகப் பயிற்சி’யிலும் அவர் வல்லவராம்.

கொஞ்சமே கொஞ்சம் எண்ணையில் தண்ணீர் கலந்து விளக்கு எரித்திருக்கிறாராம்!

வெறும் கைகளையே செக்கில் இட்டு, கோதுமை இல்லாமலே அவர் அரைத்துக் கொடுத்த கோதுமை மாவை ஊர் எல்லையில் கொட்டி வைக்க, கிராமத்தில் பரவியிருந்த காலரா நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம்[ஒட்டுமொத்த உலகிலிருந்தும் கொரானாவை விரட்டச் சொல்லி மானசீகமாக் கும்பிட்டுக்குங்க].

தொலை தூர ஊர் ஒன்றில், உலைக்களத்தில் தவறி விழுந்த ஒரு கொல்லனின் குழந்தையைத் தன் இருப்பிடத்தில் இருந்தவாறே ‘துனி’ எனப்படும் நெருப்புக் குண்டத்தில் கைவிட்டு மீட்டார்.

பேய் மழை பெய்வித்து, இவர் வாழ்ந்த ஊரையே வெள்ளக் காடாக மாற்றிய வருண பகவானின் கோரதாண்டவத்தை, “நிறுத்து உன் சீற்றத்தை” என்று இடிமுழக்கம் செய்து தடுத்து நிறுத்தினார். 

கடுமையான ஆசாரங்களை அனுசரிக்கும் ஓர் அந்தணர், தயங்கியவாறே இந்த மகானைத் தரிசிக்க வந்தபோது, மகான் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை; ராமச்சந்திர மூர்த்தி நின்றுகொண்டிருந்தார்! ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை அந்தணர் வணங்கி எழுந்த போது அங்கே அந்த மகானே நின்றுகொண்டிருந்தார்!

'நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்ட இவர், 1886 ஆம் ஆண்டு“நான் கடவுளைக் காணச் செல்கிறேன். திரும்பி வரும்வரை என் உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி உயிர் துறந்து, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அதிசயங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்த மகான்தான், “அல்லாவும் நானே! ராமனும் நானே!” என்று முழக்கமிட்டவர்.

நாம தேவர், கபீர் என்னும் ஞானிகளைப் போல இவரும் ஒரு குழந்தையாக ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த போது கண்டறியப்பட்டார். இவரின் பெற்றோர், பிறந்த இடம் பற்றிய விவரங்களை எவரும் அறியார்.

அளப்பரிய அதிசயங்களை நிகழ்த்திய இந்த மகானின் சமாதியைத் தினம் தினம் சுமார் 50,000 பேர் ‘ஷீர்டி’ சென்று வணங்கிச் செல்கிறார்கள்[வியாழன், சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகுமாம்].

இந்த மகான் ஷீர்டி சாயி பாபா என்பது புரியாதவருக்கும் இப்போது புரிந்திருக்கும். 

ஆதார நூல்
‘சாய்’ என்றால் மகான் என்று பொருள்.

இவர் மகான்களுக்கெல்லாம் அப்பாவாகத் திகழ்ந்தாராம். அதனால், ‘சாயி பாபா’ என்று அழைத்தார்களாம்.

இந்த நாட்டில், நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து, காவியுடுத்து, மழையையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மரத்தடியில் ஐந்தாறு நாட்கள் போல எதையாவது முணுமுணுக்கத் தெரிந்தால் அவன் யோகி ஆகிவிடலாம்.

மாந்திரீகங்களும் மாயாஜால வித்தைகளும் கற்றுக்கொண்டால் அவன் மகான் ஆகிவிடலாம்.

“அவர் கட்டித் தழுவினால் தீராத நோய்கள் தீரும்; கை உயர்த்தி ஆசீர்வதித்தால் பாவங்கள் விலகும்” என்பன போல் ‘கட்டுக்கதைகள்’ பரப்ப ஏஜண்டுகள் இருந்தால் வெகு விரைவில் பிரபலம் ஆகிவிடலாம்.

மேலே குறிப்பிடப்பட்டது போல, அவர் அதிசயங்கள் பல நிகழ்த்துவதாகப் பக்கம் பக்கமாக இட்டுக்கட்டி எழுதுவதற்குத் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற வார இதழ்கள், மற்றும் இவை போன்ற இன்ன பிற ஊடகங்களின் ஆதரவும் இருந்தால் வி.வி.வி.ஐ.பிகள் தேடி வந்து காலில் விழும் அளவுக்குப் புகழின் உச்சியைத் தொடலாம்; கோடிகள் சேர்க்கலாம்.

ஷீர்டி சாயி பாபா அதிர்ஷ்டசாலி. ஆனாலும்..........

“நான் சொர்க்கத்திலிருந்து வந்தவன், நானே அல்லா, நானே ராமன், நானே எல்லாம்” என்று சொல்லிக்கொண்ட இவரை மகான் என்று புகழ்வது பேதைமையின் உச்சம் என்கிறேன் நான். நீங்கள்.....?
======================================================================

ஞாயிறு, 22 மார்ச், 2020

எழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்!

தினமலரில்,  நீங்கள்[எழுத்தாளர் இந்துமதி] அண்மையில் எழுதிய ஆன்மிகக் கட்டுரையின்[தொடர்] இறுதிப் பகுதி இது.

பக்தர் குலசேகரர், செத்தப்புறம் கிருஷ்ணனின் திருநாமத்தை உச்சரிக்க முடியாது என்பதால் உயிரோடு இருக்கும்போதே அதை உச்சரிச்சி அவரோட திருவடியை அடையணும்னு ஆசைப்படுறார்.

“என்னை நினப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள்”னு அந்தக் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனிடம் சொல்றாரு.

சரி.....

அவர்[கிருஷ்ண பரமாத்மா] எங்கே இருக்கிறார்? எவ்வளவு காலமா அங்கே இருக்கிறார்?  இங்கிருந்து அவர்கிட்டே போனவங்க எவ்வளவு பேர்? அவ்வளவு பேரும் வெறும் ஆவியா அவரைச் சுத்திச் சுத்தி வருவாங்களா? எந்தெந்த உருவில்  வேறே என்னவெல்லாம்  செய்யுறாங்க? எவ்வளவு காலத்துக்கு அங்கே இருப்பாங்க? அப்புறம் அவங்க கதி என்ன?

இப்படி விடை தெரியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுகளைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காம பலரும் எழுதினாங்க. இப்பவும் இம்மாதிரி ஆன்மிகக் குப்பைகளைக் கிளறுறதுக்கின்னே ஆட்கள் இருக்காங்க. ஆகையால்.....

நல்ல நாவல் ஆசிரியை என்று புகழ் பெற்ற நீங்கள் இனியும் அவை போன்ற நாவல்களை எழுதலாம். அன்புகொண்டு  குப்பை கிளறும் வேலையைத் தொடராதீர்கள். 


சனி, 21 மார்ச், 2020

கரோனாவை ஒழிக்க, ‘சாயி’ பக்தர்கள் காட்டும் வழி!!!

#மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் வாழ்ந்த சாய்பாபா, அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, நன்மைகளைச் செய்தார்.

1910ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் ‘காலரா’ நோய்த் தொற்று வேகமாகப் பரவியதில் பலர் உயிரிழந்தனர்.

இதனை அறிந்த[காலரா பரவுவதற்கு முன்னரே பகவான் இதை ஞானக்கண்ணால் அறிந்து தடுக்கத் தவறியது ஏன் என்று புரியவில்லை] பகவான் சாயிபாபா, மக்களிடம்.....

‘திருகு கல்லில் கோதுமையை அரைத்து, அந்த மாவை ஊரின் நான்கு திசைகளிலும் கொட்டுமாறு கூறினார். மக்களும் செய்தார்கள். காலரா முற்றிலும் காணாமல் போனது#
இப்படிச் சொல்பவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, பகவான் சத்திய சாய்பாபா பக்தர்கள்.

இதை இப்போது நினைவுகூர்ந்த அவர்கள்,  உலகில் வெகு வேகமாகப் பரவிவரும் ‘கரோனா’ வைரஸைக் கட்டுப்படுத்தவும், பாபா காட்டிய இந்த வழிமுறையைப் பின்பற்ற எண்ணினார்கள்.

பாபா கோயிலில், திருகு கல் வைத்துக் கோதுமையை அரைத்து மாவாக்கி, அதனை நான்கு சாலைச் சந்திப்புகளில் தூவியிருக்கிறார்கள். இதன்  மூலம திருச்செங்கோடு வட்டாரத்தில் கரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது!!!

இச்செய்தியை, இன்றைய ‘தமிழ் இந்து’[21.03.2020] நாளிதழ் வெளியிட்டுள்ளது.  இதனை ஆட்சியாளரும் முக்கிய அதிகாரிகளும் வாசித்து அறிந்திருப்பார்கள். உடனடியாக, சாயி பக்தர்கள் காட்டிய இந்த வழிமுறையை உலகெங்கிலும் உள்ள நாட்டு அரசுகளுக்கெல்லாம்  அவர்கள் அறிவிப்பார்களேயானால்.....

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, கோதுமை மாவு அரைத்து, விமானங்கள் மூலம் உரிய முறையில் உலகம் முழுதும் தெளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அதன் விளைவாக, ஒட்டுமொத்த உலகையும் நடுநடுங்கச் செய்துகொண்டிருக்கும் கரோனா என்னும் அரக்கன் அழித்தொழிக்கப்படுவான் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!

அறிவிப்புச் செய்வார்களா?
=======================================================================

வெள்ளி, 20 மார்ச், 2020

அதென்னங்க ‘உஞ்சவிருத்தி’?!

//தலையில் சிவப்பு அங்கவஸ்திரம். இடது தோள்பட்டையில் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்ட சொம்பு. காலில் சலங்கை. இப்படியானதொரு கோலத்துடன், கிருஷ்ண பஜனை பாடியவாறு வீடு வீடாகச் சென்று தானம் கேட்பதற்கு ‘உஞ்சவிருத்தி’ என்று பெயர்// - உஞ்சவிருத்திக்கு இப்படியானதொரு விளக்கத்தைத் தந்திருக்கிறது இன்றைய ‘தினமலர்’[20.03.2020] நாளிதழ்.

உஞ்சவிருத்தி தானம் பெற்றே வாழ்ந்து முடித்தவர்கள்  முன்பு இருந்ததாகக் கேள்வியுற்றிருக்கிறோம். இன்றும்கூட, [40 ஆண்டுகளாக] இவ்வகைத் தானத்தைப் பெற்று ஒருவர் வாழ்ந்துகொண்டிருப்பதாக இந்நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவர் பெயர் கல்யாணராமன்[திருச்சி]. “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்களெல்லாம் உஞ்சவிருத்தி எடுத்திருக்கிறார்கள். இது எனக்கு என் தந்தையார் கற்றுக்கொடுத்த வேதம். 40 ஆண்டுகளாக இதைச் செய்துதான் பிழைக்கிறேன்.

மக்கள் பச்சரிசியைத்தான் தானமாகக் கொடுப்பார்கள். சொம்பு நிரம்பிவிட்டால் தானம் பெறுவதை நிறுத்திவிட வேண்டும். ஆனால், நான் தெருவில் இறங்கினால் இரண்டு மூட்டைவரை அரிசியைத் தானமாக்ப் பெற்றுவிடுவேன். எனக்குத் தேவையானது போக எஞ்சியிருப்பதை முதியோர் இல்லத்திற்கோ[அவர் வழக்கமாகத் தங்கும் இடம்] அனாதை இல்லங்களுக்கோ தந்துவிடுவேன்.

சாமி கதைகள் சொல்லும்போது[உபன்யாசம்] மக்கள் பட்டு வேட்டி, சேலை எல்லாம் கொடுப்பார்கள் அதுகளையும் நான் வைத்துக்கொள்வதில்லை.; ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவேன்” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்  கல்யாணராமன்.

சாமி பெயரால் பிச்சை எடுப்பதுதான் உஞ்சைவிருத்தி என்று நான் நினைத்ததுண்டு. இச்செய்தியைப் படித்தபிறகு, இதுவும் ஒரு வகையான வாழ்தல் முறையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வாழ்க கல்யாணராமன்!
========================================================================

உஞ்சவிருத்தி பிராமணர் என்பவர்கள் பிராமணர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தலையில் தலைப்பாகை கட்டி, காலில் சலங்கை கட்டி, இடது தோளில் ஒரு பித்தளைச் செம்பை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டபடி தம்பூராவை மீட்டியபடி சப்ளா கட்டையைத் தட்டி பசனைப்பாடல்களைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று அரிசி முதலான தானியங்களைத் தானமாகப் பெற்று அதை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைத்து உண்டு வாழ்பவர்கள் ஆவர்.[1] [2] இதில் இன்னொரு பிரிவினர் அறுவடையான நெல் வயல்களிலில் சிதறிய தானியங்களை சேகரித்துவந்து வைத்து சமைத்து உண்பவர்கள் ஆவர் - விக்கிப்பீடியா





வியாழன், 19 மார்ச், 2020

கடவுளுக்குச் ‘சவால்’ விடும் கரோனா!!!

#உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் உயிர்கொல்லி 'கொரோனா வைரசால்' மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 90 பேர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கொடுத்துள்ளனர்.

latest tamil news


இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போகவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கரோனா பரவியது தெரிய வந்தது -https://www.dinamalar.com/news_detail.asp?id=2503710 #

கடவுளைப் போற்றி வழிபடும் மனிதர்கள், தீய சக்திகளின் தலைவனான சாத்தானையும் போற்றுவதற்குப் பதிலாகக் காலமெல்லாம் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், கடும் சினம் கொண்ட அவன்... அவர் ‘கரோனா’வைப் பரப்புவதன் மூலம்.....

கடவுளுக்கே ‘சவால்’ விடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது: மனதில் பேரச்சம் பரவுகிறது!
=======================================================================


புதன், 18 மார்ச், 2020

ரஜினி முதலமைச்சர் ஆக[100%] ஒரே வழி!!!

#ரஜினிக்குத் தீவிர அரசியலில் இறங்குவதற்கான மன வலிமை இல்லை. களத்தில் தனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்களையோ, ரசிகர்களையோ, வாக்களிக்கும் மக்களையோ அவர் அரைகுறையாகக்கூட நம்பத் தயாராயில்லை. சக மனிதர்கள் மீது அத்தனை அவநம்பிக்கை.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடவும் அவரால் இயலவில்லை. உச்ச நடிகராக நீடிப்பது இனி சாத்தியம்[வயது 71] இல்லை என்ற நிலையில், முதலமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தால் எஞ்சிய வாழ்நாளை சூப்பர் அரசியல்வாதியாகக் கழிக்கலாம் என்னும் நப்பாசை அவருக்கு உண்டு.

எனினும், ரெண்டுங்கெட்டான் மனநிலையில் உள்ள அவர் கட்சி தொடங்கமாட்டார் என்பது உறுதி. பதவி ஆசையைத் துறக்க இயலாமல் அவ்வப்போது பேட்டி என்னும் பெயரில் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்#

12.03.2020 இல் நான் எழுதிய பதிவில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வகையில்.....

“நான் உருவாக்கிய அலை சுனாமியாக மாறுகிறது. அதை உருவாக்க நானும் ரசிகர்களும் மக்களை நோக்கிச் செல்வோம். அந்த அரசியல் சுனாமியை யாரும் தடுக்க முடியாது. 
சில நாட்களுக்கு முன்பு நான் போட்ட அரசியல் புள்ளி சுழலாக மாறியுள்ளது. இந்தச் சுழலை யாராலும் தடுக்க முடியாது. அதை மக்கள்தான் வலுவான அலையாக மாற்ற வேண்டும்”[இந்து தமிழ், 18.03.2020] என்றிப்படிப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, தென் மாவட்டங்கள் சிலவற்றில், நடத்தப்பட்ட சர்வேயில், இவரின் பேச்சுக்கு 85% மக்கள் ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும், இதையறிந்த உச்ச நடிகர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகவும் நக்கீரன்[18.03.2020] செய்தி வெளியிட்டிருக்கிறது.

தனக்கு ஆதரவாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரும் நடிகர் கட்சி தொடங்குவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. “எல்லாம் அவன் சொன்னால் நடக்கும்” என்று அவ்வப்போது மேல் நோக்கிக் கை நீட்டுவார் என்பது மட்டும் உறுதி.

ரஜினியோ குஜினியோ யாராக இருந்தாலும் கடவுள் எனப்படுபவர் வாய் திறந்து சொல்லப்போவதில்லை. துணிச்சலுடன் தேர்தலைச் சந்திப்பதன் மூலம் ரஜினி முதல்வர் ஆகப்போவதும் இல்லை. அதற்கான ஒரே வழி.....

நாட்டை ராஜாக்கள் ஆண்ட முன்னொரு காலத்தில், யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் சூட்டுகிறதோ அந்த நபரை அரியணை ஏற்றுகிற ஒரு வழக்கம் இருந்ததாகச் சொல்வார்கள்.  

நம் மக்களும், அனைத்து அரசியல்வாதிகளும் மனம் வைத்தால், ஒரே ஒரு முறை அதை நடைமுறைப்படுத்தலாம்.

பாகனிடம் சொல்லிவைத்து, யானையை நேரே ரஜினியின் வீட்டிற்குச் செலுத்தி, அவர் கழுத்தில் மாலை சூட்டச் செய்தால் ரஜினி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். சிஸ்டம் சரிசெய்யப்படும்!
=====================================================================

செவ்வாய், 17 மார்ச், 2020

தமிழ் வளர்க்கும் குமுதமும்[வார இதழ்] ‘கொன்றை’ அறக்கட்டளையும்!!

போட்டியில், முதல் பரிசு ரூ3,00,000/, 2ஆம் பரிசு ரூ2,00,000/, 3ஆம் பரிசு ரூ1,00,000/, தேர்வாகும் 15 கதைகளுக்குத் தலா ரூ10,000/ என்று, ‘அவர்கள்’ நடத்தும் ‘சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டிக்கு, மிகப் பெரும் பரிசுத் தொகையை அறிவித்து நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள் குமுதம் வார இதழ் நிறுவனத்தாரும் ‘கொன்றை’ அறக்கட்டளைதாரரும்.

சிறுகதைகள் உரிய முகவரியை அடைவதற்கான இறுதி நாள் 31.03.2020.

கதையின் அளவு 1000 சொற்களுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்[மேல் விவரங்களை அறிய, http://www.konrai.org/kumudam என்னும் முகவரியைச் சொடுக்கலாம்].

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பாடுபடுவது தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுதலுக்கு ஒப்பாகும் என்பதால், இப்பதிவுக்கு மேற்கண்டவாறு தலைப்புத் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கான அறிவிப்பு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்பே குமுதம் இதழில் வெளியானது. இதனை அறியாத வலைப்பதிவு எழுத்தாளர்கள் இருக்கக்கூடும் என்பதால்  போட்டி குறித்த செய்தி பதிவாக வெளியிடப்படுகிறது.

நன்றி.
எழுத்தாளர்களின் கவனத்திற்கு: குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி - சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி
=======================================================================

திங்கள், 16 மார்ச், 2020

‘அது’ இல்லாத இடமே இல்லை!!!

படத்தைப் பார்த்ததிலிருந்து என் வாய் முணுமுணுத்துக்கொண்டிருப்பது கீழ்வரும் வரியைத்தான்!

“நீ இல்லாத இடமே இல்லை... கரோனா...கரோனா!”


ஞாயிறு, 15 மார்ச், 2020

இந்த ஆளைக் கண்டுபிடிச்சி ஒரு ‘கொரோனா ஊசி’ குத்துங்கப்பா!

திருவண்ணாமலையில் வேலைவெட்டி இல்லாம சுற்றிக்கொண்டிருந்த இந்த ஆள் ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தான். கொஞ்சம் பேச்சுத் திறமை உள்ளவன்; ரொம்பவே புத்திசாலியும்கூட.

மக்கள் தொகையில் படுமூடர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது அத்துபடியாய் இவனுக்குப் புரிந்திருந்தது. துணிந்து, ‘பரமஹம்சர்’ பெயரை இணைத்துத் தன்னை ‘பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்று அறிவித்தான். 

பக்திப்பித்துப் பிடித்து அலைபவர்கள் சாரி சாரியாகச் சென்று இவனைத் தரிசனம் பண்ணினார்கள். 

ஊரூருக்கு ஆசிரமம் தொடங்கினான்.  தான் கடவுளின் அவதாரம் என்று மேடை போட்டு முழங்கினான். அந்த மேடையிலேயே பல பேர் முன்னிலையில் குமரிப் பெண்களைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து ஆசீர்வாதம் பண்ணுவதாக நடித்தான்.

நடிகையுடனான இவனின் தொடர்பு அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் இவன் திருந்தவில்லை. தன் அடாவடித்தனத்தை நிறுத்தவில்லை.

தரையில் அமர்ந்து தியானம் செய்கையில் என் தேகத்தை இரண்டடி உயரத்துக்கு அந்தரத்தில் மிதக்கச் செய்வேன் என்றான். செய்துகாட்டவில்லை, தன்னைத் தட்டிகேட்பார் எவரும் இல்லை என்ற தைரியத்தில்.

சிவபெருமான் போல வேடம் புனைந்து “நானே கடவுள்” என்றான். நம் ஆட்சியாளர்களோ, அரசியல்வாதிகளோ, சமுதாயச் சீர்திருத்தவாதிகளோ கண்டுகொள்ளவில்லை.

வயசுப் பெண்களிடம் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்படும் நிலை உருவானபோது அயல்நாட்டுக்குத் தப்பி ஓடினான்.

எங்கோ ஒளிந்திருந்துகொண்டு, ஈக்வெடார் அருகே, கைலாசா என்னும் பெயரில் தீவு அமைத்துத் தனக்கெனத் தனி நாடு உருவாக்கிகொண்டிருப்பதாக ஒரு பொய்யைப் பரப்பினான்.

இப்போது, கீழ்க்காணும் ஓர் அறிக்கையை[இந்து தமிழ், 15.03.2020] வெளியிட்டிருக்கிறான். 
அனைத்து நாடுகளின் ஆட்சித் தலைவர்களையும் நாம் வேண்டிக்கொள்வது.....

உடனடியாக இந்தப் பொய்யனைக் கைது செய்து, இவன் உடம்பில் ஊசி மூலம் ‘கொரோனா’ வைரஸ் கிருமிகளைச் செலுத்துங்கள். இவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம்.

உங்களின் இந்த நடவடிக்கை, இவனைப் போலவே, தங்களை அவதாரங்கள் என்று சொல்லித் திரியும் போலிச் சாமியார்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
=======================================================================

சனி, 14 மார்ச், 2020

ஓட்டைக்குள் ஒளி புகுவது ஓர் அதிசயமா?!

மதுரை முத்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2ஆவது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவரைக்குள் பிரவேசிக்குமாம். இது ஒரு செய்தின்னு இந்தப் பத்திரிகைக்காரனுங்க வெளியிடுறானுங்க.

வான்வெளியில் சூரியன் பயணிக்கும் பாதையில் ஏற்படும் மாறுதல் காரணமாகவும் துவாரத்தின் வடிவமைப்புக்கு ஏற்பவும், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாகச் [கருவறைக்குள்]சூரிய ஒளி புகுகிறது.

இதில் என்ன அதிசயத்தைக் கண்டார்கள் இவர்கள்?!
இதுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையெல்லாம் நடந்துதாம். வந்து குவிந்த பக்தகோடிகள் ஒளியை வழிபட்டு ஆனந்தப் பரவசம் எய்தினார்களாம்.

இவர்கள் இப்போதைக்குத் திருந்த மாட்டார்கள்; திருத்தவும் முடியாது!
================================================





வியாழன், 12 மார்ச், 2020

‘சூப்பர் ஸ்டார்' சூப்பர் அரசியல்வாதி ஆவது எப்போது?

’நடிகர் ரஜினிகாந்து இன்று[12.03.2020] தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்’ என்று நேற்று முதல் பரபரப்புச் செய்தி வெளியிட்டன சில தமிழ்  தொ.கா.களும் பத்திரிகைகளும்.

கடந்த காலங்களில் அவ்வப்போது அவர் வெளியிட்ட தன் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளின் தொகுப்பை ஊடகக்காரர்களுக்குச் சிறப்புச் செய்தி[10.30 மணிக்கு] என்னும் பெயரில் வழங்கி, அவர்களின் முகங்களில் கரி பூசியிருக்கிறார்; நடைமுறையில் பெரும் குழப்பம் ஏற்படுத்தும் சில திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்.

ரஜினிக்குத் தீவிர அரசியலில் இறங்குவதற்கான மன வலிமை இல்லை. களத்தில் தனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்களையோ, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களையோ, வாக்களிக்கும் மக்களையோ அவர் அரைகுறையாகக்கூட நம்பத் தயாராயில்லை. சக மனிதர்கள் மீது அத்தனை அவநம்பிக்கை.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடவும் அவரால் இயலவில்லை. உச்ச நடிகராக நீடிப்பது இனி சாத்தியம்[வயது 71] இல்லை என்ற நிலையில், முதலமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தால் எஞ்சிய வாழ்நாளை சூப்பர் அரசியல்வாதியாகக் கழிக்கலாம் என்னும் நப்பாசை காரணம்.

ஆக, ரெண்டுங்கெட்டான் மனநிலையில் உள்ள இவர் கட்சி தொடங்கமாட்டார் என்பது உறுதி. ஆனாலும், பதவி ஆசையைத் துறக்க இயலாமல் அவ்வப்போது பேட்டி என்னும் பெயரில் எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார். இந்நிலை நீடித்தால்.....

‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர் ரஜினிகாந்து ‘சூப்பர் அரசியல்வாதி’ ஆவது எப்போதும் இல்லை!
========================================================================


//ரஜினி பேச்சு

நேற்று முதல் ரஜினி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார், கட்சி பெயரை அறிவிக்கிறார் என பயங்கரமாக பில்ட்-அப்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று ரஜினி செய்தியாளர்கள் மத்தியில் பேசியது அவரது ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முதல்வர் பதவியை கனவிலும் நினைத்து பார்த்ததில்லை எனக் கூறி அந்தப் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் பின்வாங்கியது தான். கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ரஜினி கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் அது சந்தேகமே. -tamil.oneindia.com //
மாநிலக் கட்சிகள்
தமிழருவி மணியன் தலையில் கைக்கான பட முடிவுகள்

========================================================================


புதன், 11 மார்ச், 2020

ஆன்மாவிடம் சில கேள்விகள்![‘அறுவை’ விரும்பிகளுக்கு மட்டும்]

ஆன்மாவைப் பற்றிப் பேசாத ஆன்மிகவாதிகள் இல்லை. அவர்கள் பாட்டுக்குக் கதைகதையாகச் சொல்லி வைக்கிறார்கள். நமக்குத்தான் புரிவதில்லை. எனவே, ஆன்மிகவாதிகளைப் புறக்கணித்து ஆன்மாவிடமே விளக்கம் கேட்பது என்று முடிவெடுத்தேன். 

கேட்டேன். கேட்டவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
.....என் ஆன்மாவே!

இப்போது நீ என் உடம்பில் குடியேறியிருக்கிறாய். இதற்கு முன்பு எத்தனை உடம்புகளுக்குள் நீ புகுந்து வெளியேறியிருக்கிறாய்? புள்ளிவிவரம் உண்டா?

கடந்த பிறவிகளில் எத்தனை தடவை ஆண் உடம்பிலும் எத்தனை முறை பெண் உடம்பிலும் சுக துக்கங்களைச் சுமந்தாய்? ‘அலி’களின் தேகத்திலும் நீ விரும்பிப் பயணித்ததுண்டா? அழகான பெண் உடம்பில் நீ விரும்பிப் புகுவது உண்டா?

எந்தவொரு உடம்பிலும் புகாமல், வெறுமனே விண்ணில் அலைந்து திரிகிறபோது உன் நிலை என்ன? அப்போதெல்லாம் நீ உணர்ச்சிவசப்பட்டதுண்டா? அதாவது, உன் மனதில் காதல் முகிழ்க்குமா? காமம் உன்னைப் பாடாய்ப் படுத்துமா?

கடவுளைப் போலவே உன்னையும் உணரத்தான் முடியுமா? உணரும் சக்தியைக் கடவுள் எமக்கு வழங்குவாரா? அவரை வசியம் செய்வது எப்படி?

ஒரு பிறவியில் வாழ்ந்து முடித்த அனுபவம் அடுத்தடுத்த பிறவிகளிலும் உன் நினைவில் தங்கியிருக்குமா?

என்னைப் பொறுத்தவரை, என் ஆன்மாவாகிய உன்னைப் பற்றிய எந்தவொரு பதிவும் என்னிடம் இல்லை. முற்பிறவி பிற்பிறவி என்று எப்பிறவி பற்றியும் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. அப்புறம், பாவம் புண்ணியம் என்றெல்லாம் அலட்டிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு பிறவியில் என் உடம்பிலும், இன்னொன்றில் இனியன் உடம்பிலும், மற்றொன்றில் அமுதாவின் உடம்பிலும், அடுத்த ஒன்றில் சூர்யாவின் உடம்பிலும்...இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவர் உடம்பில் புகுந்து வெளியேறுவது உன் வழக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில், மேற்சொன்னவர்களில் எவருக்குச் சொந்தமான ஆன்மா நீ? நீ எனக்கே எனக்கான ஆன்மா அல்லதானே?

தன்னின் ஒரு கூறான உன்னைக் கூடு விட்டுக் கூடு பாயப் பணித்து, பல பிறவிகள் எடுக்கச் செய்து, அலையவிட்டு , சொல்லொணாத துன்பங்களுக்கு உட்படுத்திக் கடவுள் உன்னைத் தண்டிப்பது ஏன்? அதற்காக அவரை நீ நொந்துகொண்டதே இல்லையா?

இதுவும் அவருடைய திருவிளையாடல்களில் ஒன்றா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் மேற்கண்டவற்றிற்கு மட்டும் இப்போது  பதில் தேவை.

‘எனக்குப் பேசும் சக்தி இல்லை’ என்று சொல்லி நழுவ வேண்டாம். நீ பயணிக்கும் உடம்புக்கு ஒரு மழலை முத்தமிட்டால், அந்தப் பேரின்பத்தைத் தொடு உணர்ச்சி மூலம் உன்னால் அனுபவிக்க முடிகிறது. அவ்வாறே எதிர் நின்று ஒருவர் பேசுவதையும் உன்னால் கேட்க முடிகிறது. பார்க்க முடிகிறது; சுவைக்க முடிகிறது. ஆக, ஐம்புல நுகர்ச்சி உனக்கு உண்டு. ஆதலால், ஐயத்திற்கு இடமின்றி உன்னால் நீ குடி கொண்டிருக்கும் உடம்பின் வாய் மூலம் எம்முடன் பேச இயலும்.

இப்போது எனக்குள்ளே இருந்து நீ பேசு; மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலைச் சொல்.

என் அன்புக்குரிய ஆன்மாவே சொல்...சொல்...சொல்!
========================================================================