அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குமுதமே! திருந்து.....திருத்து!!

குமுதத்தை அதிகபட்சம் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே அளவுக்குக் கண்டனக் கணைகளையும் எதிர்பார்க்கிறேன்!

இந்த வாரக் குமுதத்தின் [03-10-2012] நான்கு ஒ.ப.கதைகள் இங்கு ’அறுவை’ செய்யப்படுகின்றன.

விற்பனையில் நம்பர் 1தமிழ் வார இதழ் ஆசிரியருக்கு, ’நம்பர் 1 கதை இலக்கிய விமர்சகன்’ அறுவை மருத்துவன் வரையும் மனம் திறந்த மடல்.

குமுதம் ஆசிரியரே,

”விமர்சகன்’னு சொல்லிக்கோ. வேண்டாங்கல. ‘நம்பர் 1’ போட்டுக்கிறியே, அதுக்கு என்ன ஆதாரம்?”னு  கேட்குறீங்களா?

நானும் அதையேதாங்க கேட்குறேன்.

நீங்க ’நம்பர் 1’ போட்டுக்கிறீங்களே, அதுக்குப் புள்ளிவிவரத்தோட [பிரதிகள் விற்பனை] ஆதாரம் தந்தீங்களா?

நீங்க போட்டியாளர்கள் மூனு பேருமே [குமுதம், விகடன், குங்குமம்] ’நான்தான்  ஃபஸ்ட்...ஃபஸ்ட்...’டுன்னு பீத்திக்கிறீங்களே, உண்மையில் யாருங்க ஃபஸ்ட்?

இப்படி ஆளாலுக்கு நம்பர் 1 போட்டுக்கலாம். வளர்ற பையன் நான் போட்டுக்கக் கூடாதுங்களா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க எடிட்டர்.

‘குமுதமே திருந்து’ன்னு தலைப்பு வெச்சிருக்கேன். ‘நாம என்ன தப்புப் பண்ணினோம்?’னு நீங்க யோசிப்பது புரியுது. அதைப் பத்திச் சொல்லுறதுக்கு முந்தி உங்ககிட்டே சில கேள்விகளை முன் வைக்கிறேன். இந்தக் கத்துக் குட்டியை மதிச்சி, என் கேள்விகளுக்குப் பதில் தேடுங்க.

இதழ் தவறாம இந்த ஒ.ப.க. [ஒரு பக்கக் கச்சடா கதைகள்?] கிறுக்கல்களை வெளியிடுறீங்களே, அது எதுக்குங்க?

வாசகன் மனசில் உள்ள அழுக்குகளை நீக்கி, நல்ல எண்ணங்களை வளர்க்கவா?

குடும்ப உறுப்பினர்களிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளைப் போக்கி, சுமுக உறவை மேம்படுத்தவா?

சமுதாயப் பிரச்சினைகளைப் படம் பிடிச்சிக் காட்டி, அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கண்டறியவா?

வெறும் பொழுது போக்குக்காகவா?

இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களை  அடுக்கலாம்.

இதுகள்ல எந்த ஒரு காரணத்துக்காக கதைகள் வெளியிடுறீங்கன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேங்க.

இந்த வாரக் குமுதத்தில் [03-10-2012] நாலு கதைகள் வெளியிட்டிருக்கீங்க.

ஐரேனிபுரம் பால்ராசா அவுங்க ‘மாற்றம்’ னு அரியதொரு படைப்பைத் தந்திருக்காங்க.

’பனை ஓலையில் பெட்டி செய்யுற தொழில் எல்லாம் இன்னிக்கி இல்லாம போயிடிச்சி. அதைச் செஞ்சவங்க எல்லாம் வேறே தொழில் தேடிட்டாங்க.
அதுமாதிரி, உயிருக்கு ஆபத்தான பட்டாசுத் தொழிலை நிறுத்திட்டு, அதைச் செய்யுறவங்க வேறே தொழில் செய்யலாம்’கிறதுதான், இந்தக் கதையோட ‘உள்ளடக்கம்’.

குமுதம் ஆசிரியரே,

இதைப் படிச்ச மறுகணமே, பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, வாகனம் ஓட்டுறது; கட்டடம் கட்டுறது; கடலில் முழுகி மீன் பிடிக்கிறதுன்னு எல்லாத் தொழிலிலும் ஆபத்து இருக்கு. உயிர்ப்பலி நேராம தொழில் செய்யுறதுக்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுட்டு,ஆபத்தில்லாத தொழிலைத் தேடிக்கணும்னு சொல்றது அடிமுட்டாள்தனம்னு எங்களுக்கெல்லாம் தோணுதே.

கதை எழுதின பால்ராசய்யாவுக்கும் உங்களுக்கும் தோணலையே, அது ஏங்க?

அடிமுட்டாள்தனம்னு நான் சொன்னது பொதுவாத்தாங்க. நீங்களும் ஐரேனிபுரம் அய்யாவும் கோவிச்சுக்கிடாதீங்க. பிளீஸ்.....

மேலே சொன்ன படைப்புக்கான காரணங்களில் எது இந்தக் கதைக்குப் பொருந்தி வருது?

எதுவும் இல்லீங்களே!

இதை ஒரு நல்ல பொழுது போக்குக் கதைன்னுகூடச் சொல்ல முடியலையே.

நல்ல பொழுது போக்குக் கதைன்னா எதுன்னு கேட்குறீங்களா?

உங்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் உங்க குமுதத்தில் இருந்தே எடுத்துக்காட்டுத் தர்றேன். [’பல்லி விழுந்த பலன்’ ஆசிரியர்: ஹேமா. குமுதம் ப் 13-03-75]


வெளியூர்ப் பயணம் காரணமா, பெண்டாட்டியைப் பல நாள் பிரிஞ்சிருந்த இளைஞன் வீடு திரும்புறான்.

ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துரையாடிட்டிருக்கு.

அப்போ, ஒரு பல்லி, வாலிபனோட இடது தோள்பட்டையில் விழுந்துது.

கெட்ட பலன் ஏதும் இருக்குமோன்னு, பஞ்சாங்கம் எடுத்து,’பல்லி விழும் பலன்’ பார்க்குறாங்க. வாலிபனோட பெண்டாட்டிக்குக் காட்டாம எல்லாரும் அவளைக் கிண்டல் பண்ணிச் சிரிக்கிறாங்க.

அன்னிக்கி ராத்திரி, புருசனோட சந்தோசமா இருக்கும் போது, அவன் சொல்றான்: ‘இடது தோள் மேல பல்லி விழுந்தா அதுக்கான பலன் ‘ஸ்திரீ சம்போகம்’. அதாவது, பெண்டாட்டியோட உடலுறவு”. அப்பிடீன்னு சொல்லிட்டு அவன் அவளைக் கட்டித் தழுவுறானாம்.

இதைப் படிச்சதும் கிழடுகிண்டுகள் மனசில்கூட இனம் புரியாத ஒரு சந்தோசம் பரவுதில்லியா?

இம்மாதிரி ஒரு சந்தோசத்தைத் தர்றதுதான் உண்மையான பொழுது போக்குக் கதைங்க.

எடிட்டர் அவர்களே, இது உங்க...சாரி, நம்ம குமுதத்தில் ரொம்ப வருசங்களுக்கு முந்தி ’ஹேமா’ன்னு ஒருத்தர் எழுதினதுதானுங்க. காலரைத் தூக்கி விட்டுக்குங்க!

                            *                                            *                                            *

ஒரு முக்கிய அறிவிப்பு:     

குமுதத்தில்‘அவுட் ஸோர்ஸிங்னு கதை எழுதியிருக்கிற எஸ். ராமனுக்கும், குமுதம் ஆசிரியருக்கும் இதைத் [அவுட் ஸோர்ஸிங்] தமிழ்ப்படுத்தத் தெரியலையாம்.

பாவங்க இவங்க. உடனே, இதுக்கான தமிழாக்கத்தை அனுப்பி வைங்க. நீங்க நல்லா இருப்பீங்க.

தலைப்பைத்தான் தமிழில் போடலே. கதையாவது புரியுற மாதிரி இருக்கான்னா, அதுவும் இல்லீங்க.

ஒரு ஐ.டி. கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் [இதையெல்லாம் தமிழ் படுத்தினா தமிழ் வளர்ந்துடுமேன்னு கதாசிரியர் ராமன் ரொம்ப எச்சரிக்கையா இருக்காருங்க. எடிட்டருக்கு அட்டைப்படக் கவர்ச்சி நடிகையைத் தேர்ந்தெடுக்கவே நேரமில்ல; இதுக்கெல்லாம் அவரால் நேரம் ஒதுக்க முடியாதுங்க. தயவு செஞ்சி கோபப்படாதீங்க].

ஐ. டி.தொழிலகத்தின் துணைத் தலைவர் ராகுல், எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைச்சுட்டு, [இதைத்தான் ’அவுட் ஸோர்ஸிங்’னு ராமன் சொல்றாரு] நோகாம நோம்பி கொண்டாடுறவரு.

அப்பா அம்மாவைக்கூட முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டாராம். இதுவும் ஒரு வகையில் ‘அவுட் சோர்ஸிங்தான்’னு தன் பெண்டாட்டிகிட்டே பீத்திக்கிறாரு.

இந்த அவுட் சோர்ஸிங் என்கிற கருமாந்தரம் உங்களுக்குப் புரிஞ்சுதா? மரமண்டை எனக்கு ஒரு எளவும் புரியலீங்க.

அவரோட வூட்டுக்காரி, “ஏன்...நாம் குழந்தை பெற்றுக் கொள்வதற்குக்கூட, ‘அவுட் ஸோர்ஸிங் செய்யலாமே?”ன்னு கேட்குறாளாம்.

குமுதத்தில் இந்த மாதிரி கதைகளைப் படிக்காம தப்பிக்க ஏதாவது ‘அவுட் ஸோர்ஸிங்’ இருந்து சொன்னீங்கன்னா, வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன்.

                                  *                                             *                                    *

அடுத்து நம்மை வரவேற்கிற ஒ.ப.க. தூத்துக்குடி வி. சகிதாமுருகன் படைச்ச ‘பாரம்’

இதைப் படிச்சதும் ஏற்கனவே இருந்த தலைபாரம் அதிகமாயிடிச்சுங்க.

ஏற்கனவே படிச்ச கதையை மறுபடியும் மறுபடியும் வெவ்வேற வடிவத்தில் படிச்சா தலைவலி வரத்தாங்க செய்யும்.

குமுதம் எடிட்டர் கிட்டே சொன்னா, அடுத்த இதழோட ஒரு தலைவலித் தைலம் இலவச இணைப்பா அனுப்பிடுவாருங்க. மற்றபடி, மறந்தும் கதைகளைத் திருத்தி வெளியிட மாட்டார்!

மறக்காம ஒரு e MAIL  தட்டிவிடுங்க.

”அப்படியென்ன அறுப்புக் கதை?”ன்னு கேட்குறீங்களா?

சொல்றேன்.

மகனுக்குக் கல்யாணம் ஆகி, மருமக வலது காலை எடுத்து வெச்சி வீட்டுக்குள்ள நுழைஞ்சாளோ இல்லியோ, அவகிட்ட சம்பளக் கவரைக் கொடுக்கச் சொல்லித் தன் மகனுக்கு உத்தரவு போடுறா ஒரு அம்மாக்காரி.

அவ மகள் கேட்குறா:”ஏம்மா இப்படிச் சொன்னே?”

”வர்ற வருமானத்தில் குடும்பச் செலவைச் சரிக்கட்ட முடியாம நான் படாத பாடு படுறேன். இனி அவள் படட்டும்”

அம்மாக்காரி இப்படிச் சொன்னதும், “நாம போற வீட்டில் சம்பளக் கவரைத் தொடவே கூடாது”ன்னு மகள் சொல்லுறா.

ஒரு குடும்பம் உருப்படறதுக்கு எத்தகைய ஓர் உன்னதமான வழியை சகிதாமுருகன் காட்டியிருக்கார் பார்த்தீங்களா?

நெஞ்சு சிலிர்க்குதுதானே!?

இவருக்கும் இவர் கதையைப் பிரசுரிச்ச குமுதம் ஆசிரியருக்கும் நன்றி சொல்லலேன்னா கெட்ட சாபத்துக்கு ஆளாவீங்க. ஜாக்கிறதை!

                                      *                                      *                                      *

இன்னும் மிச்சமிருக்கிறது, கோவை நா.கி பிரசாத் எழுதின ‘வாய்மை’ கதை.

ஒரு பேச்சுப் போட்டியில் பேச, நெட்டில் கருத்துகள் திரட்டித் தரும்படி, ஒரு பாப்பா, தன் அப்பாவைக் கேட்குது.

அதைக் காது கொடுத்துக் கேட்ட அங்கே வாடகைக்குக் குடியிருக்கும் பெரியவர், “போட்டியில் கலந்துக்கப் போறியா பாப்பா?” ன்னு கேட்குறார்.

அது இல்லேங்குது.

“நீ பொய் சொல்லுறே. என் பொண்ணு சுவேதா அந்தக் குறிப்பைக் கேட்கும்னு பொறாமைப் படுறியா?”ன்னு சாடுறார்.

“எனக்கு நாக்கில் புண்ணு.. உங்க சுவேதாவுக்குக் கொடுக்கத்தான் என் அப்பாகிட்டே குறிப்பு வாங்கினேன்”ன்னு பாப்பா சொல்லுதாம்.

கதைக்கு இப்படி எதிர்பாராத நெஞ்சைத் தொடுற முடிவைக் கொடுத்து எழுத்தாளர் நம்மை ஏமாத்துறார்.

கொஞ்சம் யோச்சீங்கண்னா இதுல இருக்கிற ஓட்டைகள் புலப்படும்.

ஒரு பொண்ணு தனக்குத் தயார் பண்ணுற குறிப்பை இன்னொரு பொண்ணுக்கு எப்படிக் கொடுக்கும்?

அதுக்குப் பொறாமை காரணம்னு சுவேதா அப்பா திட்டுறது அநாகரிகம் இல்லையா?

இப்படியொரு சொத்தைக் கதையைக் குமுதம் ஆசிரியர் எப்படி அங்கீகரிச்சார்?

அடப் போங்கய்யா, இந்தக் கதையுலகத்தில் என்ன நடக்குதுன்னே புரியல.

                                  *                                     *                                      *

இதுவரைக்கும் ஓட்டை உடைசல் கதைகளைக் கேட்டு ரொம்பவே மனசு உடைஞ்சி போயிருப்பீங்க.

படிச்சதும் மனசைக் கனக்கச் செய்யுற கனமான ஒரு கதையைச் சொல்லி முடிச்சுடறேங்க.

இதுவும் குமுதத்தில் வந்ததுதாங்க. ஆனா, இது ஒரு அமுதக் கதைங்க.

கதைப் பேரு: ‘ஒரு பானை காலியாகிறது’. எழுதினவர்: எஸ்.பாலகிருஷ்ணன். [குமுதம் 11.10.84]

காலையில் இருந்து அந்தக் குடிசையில் அடுப்பு எரியல.

சாயங்காலமா, அந்தக் கூலிக்காரன் கொண்டு வந்த கொஞ்சம் அரிசியைச் சட்டியில் போட்டு அடுப்பை எரிய விடுறா அவன் பெண்டாட்டி.

சோறு தயாரானதும், பசியால் துடிச்சிட்டிருந்த புள்ளைகளை உட்கார வெச்சு, சோறூட்டப் போறா அந்தத் தாயி.

அந்த நேரம் பார்த்து. ஒரு அரசியல் கட்சித் தலைவர் அங்கே வர்றார்.

அவருக்கு ஒரு ஏழை வீட்டில் சாப்பிடணுமாம். அதைப் படம் எடுத்துப் பத்திரிகைகளில் போடணுமாம்.

குடிசையில் நுழைகிறார்.

பானையைக் காலியாக்குகிறார்கள் அவரும் உடன் வந்தவர்களும்!

அவர்கள் போகிறார்கள்.

கூலித் தொழிலாளி சட்டியைப் பார்க்கிறான்.

‘ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளுடன் பல்லிளித்தது மண்பாத்திரம்” -இப்படி முடியுதுங்க கதை.

இது கதை! இது படைப்பு!!

கதை முடிவு எப்படி ‘சக்’னு நெஞ்சில் ஒட்டிடிச்சி பார்த்தீங்களா?

இம்மாதிரிக் கதைகள் இப்போதெல்லாம் குமுதத்தில் வர்றதில்லேங்குற எரிச்சலில்தான்.................

‘குமுதமே! திருந்து.....திருத்து!!’ன்னு பதிவுக்குத் தலைப்புக் கொடுத்தேன்.

மற்றபடி, குமுதத்தின் மீது எனக்கு எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்ல.

நம்புங்கள் குமுதம் ஆசிரியரே.

********************************************************************************************************************


























வியாழன், 27 செப்டம்பர், 2012

படித்த கதைகள் 17. ”ஆஹா..” 4! ”ஐயோ..” 12! ”தேவலாம்..” 1!

தமிழ் வார இதழ்க் கதைகளின் சாரத்தைப் பிழிந்து தரும் தளம் இது. தவறாமல் படிக்கிறீர்களா?

கதைகள்... குங்குமம், கல்கி, தேவி, ராணி, பாக்யா, வாரக் கதிர், வார மலர், குடும்பமலர் இதழ்களில் வெளியானவை.

தலைப்பைப் படிச்சிட்டு, ”முதலில் தரமான நாலு கதையையும் சொல்லிடு அறுவை.”ன்னு கோரிக்கை வெச்சுடாதீங்க.

அந்த நாலையும் கேட்டுட்டு ’எஸ்கேப்’ ஆயிடுவீங்க. உங்களை நல்லாவே நான் புரிஞ்சி வெச்சிருக்கேன்!

‘சுபமி’ன்னு ஒரு எழுத்தாளர். [கதை: ‘ஷாக்’. இதழ்: குங்குமம் [01=10=2012]

சந்துருவையும் அவனுடைய புதுப் பெண்டாட்டியையும் கிராமம் பார்க்க அனுப்புறார் கதாசிரியர்.

சந்துரு, “கிராமத்தில் இருக்கிற தாத்தாவும் பாட்டியும் பழைமையில் ஊறினவங்க. என் பேரைச் சொல்லிக் கூப்பிடாதே”ன்னு புறப்படும் போதே பெண்டாட்டியை எச்சரிக்கை பண்றான்.

அவளும் அவன் சொன்னபடியே கிராமம் போனதும் மரியாதையா கூப்பிடுறா.

இப்போ முக்காக் கதை முடிஞ்சிதுங்க.

முழுக் கதையும் கேட்டா,  ”கடவுளே, இப்படியெல்லாம் கதை எழுதி நம்மைப் பித்துக்குளி ஆக்குறாங்களே”ன்னு தலை தலையா அடிச்சுக்குவீங்க. நான் உங்க பக்கத்தில் இருந்தா, “இந்தக் கதையைத்தான் முதலில் சொல்லணுமா?”ன்னு என்னையும் போட்டுத் தாக்கிடுவீங்க!

கதை முடிவில், பாட்டி தாத்தாகிட்ட சொல்லுது....................

“இவள் என்ன நம் சந்துருவை ‘என்னங்க’ங்கிறா.....நாகரிகமா பேசத் தெரியல” 

இங்கிலீசு படிச்ச பாட்டியாம். அதான் அப்படிச் சொன்னாங்கன்னு நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார் படைப்பாளர் சுபமி.

‘ஷாக்’ இப்போது சந்துருவைத் தாக்கியது’ன்னு கடைசியா ஒரு வரியும் சேர்த்திருக்கார்.

’ஷாக்’ சந்துருவை மட்டும் தாக்கல; நம் எல்லோரையும்தான்!

சுபமி வாழ்க!

                                     *                                   *                                 *

‘தேர்வு’ ன்னு ஒரு கதை. அதைப் பிரசுரம் பண்ணிப் பெருமை தேடிகிட்டதும் குங்குமம் தான். அதை எழுதின புதுவை சந்திரஹரி, வாசகரின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுறதில், ”சுபமிக்கு நான் எந்தவிதத்திலும் குறைஞ்சவனில்லை” என்கிறார்.

கல்யாணம் ஆகாத மனோகர், ’தளதள’ வனஜாவையும் ‘சுமார்’ சுமதியையும் பெண் பார்த்துட்டு வர்றான். யாரைக் கட்டிக்க விரும்புவான்னு உங்களுக்கே தெரியும்.

அம்மாக்காரி ரெண்டு குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சுட்டுச் சொல்றா.............

”வனஜாவோட அம்மா அடங்காப்பிடாரியாம். வனஜாவும் அப்படித்தான் இருப்பா. அதனால, நீ சுமதியைக் கட்டிக்கோ”.

‘தாயைப் போல பிள்ளை’ங்கிறது இன்னிக்கிச் செல்லுபடியாகாத பழமொழிங்கிறது கதாசிரியருக்குத் தெரியல.

பாவம் சந்திரஹரி!

                                        *                               *                           *

அடுத்த குங்குமக் கதை, உமா கல்யாணி எழுதினது. தலைப்பு: அக்கரைப் பச்சை.

இந்தக் கதைக்கு ‘ரத்தினச் சுருக்கம்’ மட்டும் தர்றேன்.

ஒரு குடும்பத் தலைவியோட கணவன், புதுசா காய்கறிக்கடை வைக்கிறான். அக்கம் பக்கத்துப் பொண்ணுக எல்லாம் இந்தத் தலைவியை நினைச்சி, ”இவ இனி நோகாம வீட்டோட இருப்பா. புருசன் காய்கறி கொண்டுவந்து கொடுத்துடுவான்”ன்னு பொறாமைப் பட்டாங்களாம்.

குடும்பத் தலை என்ன நினைக்கிறா தெரியுமா?

“மத்த பொம்மணாட்டிங்க ஜாலியா கடைக்குப் போயி, புத்தம் புதுசா வாங்குவாங்க. என் புருசன் முத்துனதைக் கொண்டு வருவான்”

”அடடா!....அடடா! எத்தனை உன்னதமான உளவியல் தத்துவத்தை இந்தக் கதை வெளிச்சம் போட்டுக் காட்டுது!”ன்னு நான் சொன்னா, “உன் ஊரைச் சொல்லுடா அறுவை. உதைக்க வர்றோம்”னு சொல்லுவீங்கதானே?

                               *                                    *                                    *  

அப்புறம், அடுத்து ஒரு குப்...........

கொஞ்சம் இருங்க. ‘குப்’னு மல்லிகை வாசம் வருது!

எதிர்த்த வீட்டு மாமி! அவங்க ஒரு ‘மதனகாமி!! நெட்டில் அவங்க பார்க்காத நீலப் படமே இல்லை!!!

“என்னடா அம்பி, அஞ்சாறு பதிவு போட்டுட்டே. கதை கதையா எழுதித் தள்ளுறே. ஒரு காதல் கதைகூட இல்லையேடா”ன்னு கேட்டுட்டு, அம்மாவைப் பார்க்க சமையல் கட்டுக்குள் நுழைஞ்சிட்டாங்க.

இநத மாமிக்குக் கூச்ச நாச்சமே கிடையாதுங்க. ஒரு விடலைப் பையன்கிட்டே கேட்கிற கேள்வியா இது?.

அவங்க பத்த வெச்சதில், என் மனத்திரையில் ஒரு பழைய காதல் கதை ஓட ஆரம்பிச்சுட்டுதுங்க.

அது அவர்களுக்கு முதலிரவு.

அன்புக் கணவன், ஆசை மனைவியைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறான். அவ நெருங்க விடல. எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் ஆசை நிறைவேறல.

“என்னைப் பிடிக்கலையா?”ன்னு  பாவமா கேட்குறான்.

அவ சிரிச்சிட்டே சொல்றா: “உங்க ஃபிரண்ட்ஸெல்லாம் பார்க்குறாங்க. எனக்கு வெட்கமா இருக்கு”.

“யாரும் நம்மைப் பார்க்கலையே”ன்னு சொல்லிட்டு, சாவித் துவாரத்தைத் துண்டுப் பேப்பர்ல அடைச்சுட்டு வர்றான் அவன்.

அப்புறமும் அவ வெட்கப்படுறா.

என்னை உனக்குப் பிடிக்கல. நான் போறேன்”ன்னு அவன் கதவைத் திறக்கப் போறான்.

”அதோ பாருங்க”ன்னு சுவர்ல தொங்குற ஒரு புகைப் படத்தைக் காட்டுறா அவ.

அவன் தன் நண்பர்களோட எடுத்துட்ட ‘குரூப் ஃபோட்டோ அது.

”அடச்சே”ன்னு படத்தை அவன் திருப்பி வைக்கிறதுக்குள்ள ஓடிப் போயி அவனைக் கட்டிப் பிடிச்சி முத்த மழை பொழியுறா அவ.

‘ஜிவுஜிவு’ன்னு உடம்பு பூரா இன்ப உணர்ச்சி பரவுதுங்களா? [இது குமுதத்தில் படிச்சது. ஆசிரியர் பேரு மறந்து போச்சு]

படிக்கிற நம்மை முட்டாள் ஆக்கினாலும் இதைப்படிக்கும் போது ஒருவித சுகம் கிடைப்பது உண்மைதானுங்களே?

என்னவோ தெரியல, இப்பவெல்லாம் இந்தமாதிரிக் கதைகள்  வார இதழ்களில் வர்றதேயில்லை.

கதை நடையும் ‘சப்’னு இருக்கு. கதாசிரியர்களுக்குச் சுவாரசியமா கதை சொல்லணும்கிற எண்ணமே அத்துப் போச்சுங்க.

அப்புறம்...............

அது வந்து ....குப்பைக் கதைகளைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன் இல்லியா?. அதைக் கடைசியா வெச்சுக்கலாம். இனி, கொஞ்சம் தரமான கதைகள் பத்திப் பேசுவோம்.

                            *                                   *                                *

கனகராஜன் எழுதின ‘பலி’. கல்கி [30-09-2012] சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வானது.  

அஞ்சு பொடிப்பசங்க [ஒருத்தனுக்குப் பதினஞ்சி வயசு] சேர்ந்துட்டு, கைக்காசைச் [ஒருத்தன் தன் முதல் சம்பளத்தைத் தர்றான்] செலவு பண்ணி, இவங்க தலைவன்  ’மஞ்சுநாத்’ ங்கிற சினிமா நடிகனின் பிறந்த நாளுக்குப், அட்டகாசமா ஒரு ’பிளக்ஸ்’ தயார் பண்ணி ஒரு டிரான்ஸ்பார்மருக்குப் பக்கத்தில், அதை, கம்பு நட்டு மாட்டுறாங்க.

அதைச் செயும்போது, பலமா காத்து வீச, இரும்புக் கம்பு டிரன்ஸ்பார்மரில் பட, ஒரு பையன் ஷாக் அடிச்சிச் செத்துப் போறான்.

சினிமா பித்துப் பிடிச்சி அலையுற பசங்களுக்கும், அரசியல்வாதிகளைத் துதிபாடித் திரியற ஏமாந்த சோணகிரிகளுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ஒரு தடவை கல்கியில் படிச்சாத்தான் எவ்வளவு நல்லா கதாசிரியர் கதை சொல்லியிருக்கார்னு புரியும்.

கல்கியைக் காசு கொடுத்து வாங்கப் பிரியம் இல்லேன்னா ஓசியில் படியுங்க.

                                  *                                       *                              *

வாரக்கதிரில் [செப்-23]வெளிவந்திருக்கிற பிரபா படைத்த கனவு மெய்ப்படும் கதையும் ரொம்பக் கனமானது.

ஊருக்குப் பொதுவான ஏரி குளங்களை ஆக்கிரமிக்கிற மக்கள், மனம் திருந்தி அதையெல்லாம் ஊருக்கே ஒப்படைக்க, எல்லாருமா சேர்ந்து, ஏரி குளங்களைச் சீரமைச்சி, மழைக் காலத்தில் நீரைச் சேமிக்க வழி காணுவதை யதார்த்தமா சித்திரிச்சிருக்கார் படைப்பாளர். நீங்க தவறாம படிக்கணும்; வாரக் கதிருக்கு ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதிப் போடணும்.

                                   *                                  *                                    *

வாரமலரில் [செப்-23] பிரசுரமான மணிமேகலை எழுதினதும் உருப்படியான கதைதாங்க.

தள்ளுவண்டிக்காரனிடம் பேரம் பேசுற ஒரு பெண்மணி, அவன் ஒரு கஷ்டத்துக்கு உள்ளான போது தயங்காம உதவி செய்யுறதை மிகைப் படுத்தாம கச்சிதமா படம் பிடிச்சிருக்கார் மணிமேகலை.

                                  *                                       *                                         *

எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கிறவர் கதிர் மாமா.

அன்னிக்கி, பிரபு அவரைச் சந்திக்கப் போனபோது, அவர் முகத்தில் இயல்பான சிரிப்பு இல்ல. ஆனாலும் சிரிச்சுட்டுத்தான் பேசுறார்.

“உடம்பு சரியில்லே”ங்குறார்.

உண்மையில் அவருக்கு மனசுதான் சரியில்ல.

அதுக்குக் காரணம்......................

ரெண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் பெண்டாட்டி, ஒருத்தனைக் கூட்டிட்டு ஓடிட்டதுதான்.

இப்படி வேதனையின் உச்சத்திலும் ஒருத்தர் சிரிச்சிப் பேசுறார்னா, அவர் லட்சத்தில் ஒருத்தரு.

அத்தகைய ஒருத்தரை நமக்கு அறிமுகப் படுத்திய அற்புத எழுத்தாளர் யார் தெரியுங்களா?

 பிரபு. கதை: எங்க அம்மா செத்துப் போச்சு. இதழ்: பாக்யா [செப் 28...]

தலைப்பு கச்சிதமா பொருந்தியிருக்குங்க.

                                      *                                        *                                   *

இந்த நான்கைத் தவிர, ’நல்ல கதை’ப் பட்டியலில் வேறு எதையும் சேர்க்க முடியலேங்கிறதை நினைச்சா மனசு கிடந்து தவியா தவிக்குதுங்க.

புதுப் புருசனோட  வாக்குவாதம் பண்ணும் போது, விட்டுக் கொடுக்க மனசில்லாம சண்டை போட்டுகிட்டுத் தாய் வீட்டுக்கு வந்துடறா ஒரு பொண்ணு.

தாத்தாவும் பாட்டியும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து அன்னியோன்னியமா பழகி, சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து மனம் திருந்துறா.

இது மாதிரி கதையெல்லாம் எத்தனையோ வந்திருக்கு. ஆனாலும் கதை சொன்ன முறை நல்லாயிருக்கு.

 ‘புது வாழ்வு’ ங்கிற இக்கதை தினத்தந்தி இணைப்பான குடும்ப மலரில் [23-09-2012] வந்தது

பழைய ‘கரு’வுக்குப் புதிய நிகழ்ச்சிகளை இணைச்சிப் புது வடிவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர் ஜி.விஜயலட்சுமி.

புதிய மொந்தையில் பழைய கள்ளு. கதை ’தேவலாம்’ ரகம்.

                            *                                         *                              

தரமான கதைகள் 4. சுமார் ரகம் 1. மொத்தம் 5.

17 இல் 5 போனா எத்தினீங்க?

மிச்சமுள்ள அத்தனையும் குப்பைதான்!

”மறுபடியும் குப்பையைக் கிளறாதே”ன்னு என்னை மிரட்டாதீங்க.

உங்களுக்காகத்தான் இந்தக் கதைகளையெல்லாம் கண் விழிச்சிப் படிச்சேன்.

நான் பெற்ற துன்பம் நீங்கள் பெற வேண்டாமா?

இனி, கதைச் சுருக்கம் சொல்லாம, கதையின் ‘உள்ளடக்கம்’ மட்டும் தர்றேன். பிகு பண்ணாம கேட்டுக்கிடுங்க!

குப்பை 4

அவனும் அவளும் ஓடிப்போகத் திட்டம் போடுறாங்க.

”உன் நகைகளைப் பணம் பண்ணிக்கலாம். கொண்டுவா”ன்னு அவன் சொல்ல, அவள் கவரிங் நகைகளைக் கொடுக்க, உண்மை தெரிஞ்சி, அவன் அவளைக் கை கழுவுறான். ”உன்னை ‘டெஸ்ட்’ பண்ணத்தான் இப்படிச் செய்தேன்” ன்னு சொல்லிச் சிரிக்கிறாள் அவள்!

இது பாக்யா [செப் 28-]கதை. படைப்பாளர்: ஜி.சுந்தரராசன்.

இப்படியெல்லாம் நடக்குதான்னு நான் சிரிக்கிறேன். நீங்களும் சிரிங்க.

ஹா........................ஹா.............................ஹா......................................

 *                                      *                                     *

குப்பை 5

ஒரு கம்பெனியில், சமமான தகுதியுள்ள ரெண்டு பேர்ல ஒருத்தரை மேனேஜரா தேர்ந்தெடுக்கணும்.

அதில் வேலை செய்யும் அலுவலர்களையே, அவரவருக்குப் பிடித்தவர் பேரை எழுதித் தரச் சொல்லி, மேனேஜரைத் தேர்ந்தெடுத்தாங்களாம்.

இந்தக் கதையை பாக்யாவில் எழுதின பி.சந்திரா,  நம் காதில் பூ மட்டும் சுத்தலீங்க; தலையில் மிளகாயே அரைச்சுடறார்!

சந்திராவுக்கு நம் நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்!

                                    *                                   *                                         *

குப்பை 6

’மண[ன] வாசம்’. மன்னன்காடு எஸ்.முத்துக்கண்ணு ங்கிறவர் , ராணியில் எழுதினது.

நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை, ஒரு பொண்ணு கட்டிக்க மாட்டேன்னு சொல்லுது.

காரணம் என்ன தெரியுங்களா?

‘நமக்குக் கல்யாணம் ஆனதும் தனிக் குடித்தனம் போலாம்”னு அந்தப் பையன் பொண்ணுகிட்ட சொல்லிட்டானாம்.

பொண்ணுங்க இப்படிச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஒரு பையன் சொன்னான்னு கதாசிரியர் சொல்றது புதுமையிலும் புதுமை போங்க!

                                *                                *                                          *

ஐயோடா! இதுக்கு மேல என்னால குப்பைகளைக் கிளற முடியலீங்க.

 இராஜேஷ்ஜோதி, கோவில்பட்டி எஸ்.தங்கராஜ் ஆகியோர்  பாக்யாவில் கொட்டிய குப்பைகளையும், தம்பி. பன்னீர்செல்வம், மீனாசுந்தர் ஆகியோர் தேவி [26-09-2012] இதழில் கொட்டியதையும், கல்கி [30-09-2012] யில், ஆனந்தகுமார் விரும்பிச் சமர்ப்பித்த குப்பையையும் அருள்கூர்ந்து நீங்களே கிளறிப் பார்த்துடுங்க.

தங்கள் வருகைக்கும் கட்டிக் காத்த பொறுமைக்கும் கோடி நன்றி!!!


*****************************************************************************************************************    

நாளை [28-09-2012] வெளிவரும் பதிவு..........  

‘குமுதமே! திருந்து.....திருத்து.....!’

****************************************************************************************************************


       














சனி, 22 செப்டம்பர், 2012

பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘விறுவிறு’ சரித்திரக் கதையும் ஒரு ‘சுறுசுறு’ விமர்சனமும்!

கவனியுங்கள்: நேற்று விகடனில் [26-09-2012]வெளியான சிறுகதைக்கு, இன்றைய தினமே ’சுடச்சுட’ ஒரு விமர்சனம்!

பட்டுக்கோட்டை பிரபாகரின் ’விறுவிறு’சரித்திரக் கதையும் ஒரு ‘சுறுசுறு’ விமர்சனமும்!

நீங்கள் சரித்திரக்கதைப் பிரியரா?

அதில் எதையெல்லாம் எதிர்பார்ப்பீர்கள்?

வரலாற்றில் இடம் பெற்ற இரு பெரும் மன்னர்களிடையே முரண்பாடு. அதன் விளைவாக நிகழ்த்தப்படும் போர்கள். அவை பற்றிய தத்ரூபமான வர்ணனைகள்.

கதைக்கு உயிரோட்டமாக இருக்கும் கதாநாயகன். அவன் நிகழ்த்தும் வீரதீர சாகசங்கள். அவன் தன் காதலியுடன் புரியும் சரச சல்லாபங்கள்.

விதம் விதமான குணாதிசயங்கள் கொண்ட கதை மாந்தர்கள் [கதாபாத்திரங்கள்]. அவர்களின் நடையுடை பாவனைகள். அவர்கள் பேசும் மொழி. அந்தக் காலத்து நாகரிகம் பண்பாடு. பழக்க வழக்கங்கள். வாழ்ந்த காலம்; இடம் என்று இவை அனைத்தும் இணைந்து உங்களைக் கதை நிகழும் காலத்துக்கே கதாசிரியன் இட்டுச் செல்ல வேண்டும். 

கதையின் இடையிடையே, ’எதிர்பாராத திருப்பங்கள்’ [turning points] வரவேண்டும். ‘இனி என்ன நடக்குமோ’ன்னு வாசகனைத் துடிப்புடன் எதிர்பார்க்க வைக்கிற [suspense] காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும். கதைத் தலைவனுக்கும் தீயவனுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்து, கதை உச்சக் கட்டத்தைத் [climax] தொட்டு, வாசகன் உள்மனதைத் தொடும்படியான ஒரு ‘முடிவு’ அமைய வேண்டும்.

 இப்படி, இன்னும் நிறையவே  நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்புகள் அவ்வளவையும் நிறைவேற்றுவது சரித்திர நாவல்’களில் மட்டுமே சாத்தியம்.


பட்டுக்கோட்டைப் பிரபாகர் எழுதியிருப்பது ஒரு சரித்திரச் சிறுகதை. [’ஆனந்தவல்லியின் காதல்’]

உங்கள் எதிர்பார்ப்புகளில் கொஞ்சமே கொஞ்சம்தான் அவரால் நிறைவேற்ற முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

‘விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான, மான் கொடி பறக்கும் அரண்மனையின் உப்பரிகை.....’ இப்படிக் கதையைத் தொடங்கும் போதே, கடந்த காலத்தில் ஒரு நாட்டை ஆண்ட மன்னனின் அரண்மனையின் முன்னால் நம்மை இழுத்துச் சென்று நிறுத்திவிடுகிறார் பிரபாகர்.

கதையின் நடுநடுவே.............

‘அன்று சித்ரா பவுர்ணமி என்பதால், சுந்தரபுரத்தின் கடற்கரை முழுதும் மக்கள் அலையலையாய்க் கூடியிருந்தனர். உறவினர்களும் நண்பர்களுமாக, நிலவொளியில் சித்ரான்னங்கள் சமைத்து உண்டு, ஆடியும் பாடியும் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க.......’

‘இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கிய நிலையில், சுந்தரபுரத்தைவிட்டு வெகு தூரத்தில்.....நடுக் கடலில், எந்தத் திசையிலும் நகராமல் ஒரே இடத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெரிய படகு....’

இப்படியெல்லாம் தத்ரூபமாகக் கதை நிகழும் இடங்களை வர்ணிப்பதன் மூலம், நிகழ் காலத்துக்கு நாம் திரும்பிவிடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டுவிடுகிறார் கதாசிரியர்.

‘ஆடைகளின் சரசரப்பும் வளையல்களின் சிணுங்கலும் தண்டைகளின் ஒலியும் கேட்டு அவள் திரும்ப.....எதிரே வந்து நின்றாள் இளவரசி ஆனந்தவல்லி. அவளை வர்ணிக்க ஒரே வார்த்தை போதும். ‘பேரழகி’. ...ஏதோ பேசத் துடிக்கும் ஈர மினுமினுப்புடன் இருந்த அவளின் அதரங்கள்....’ என்று கதைத் தலைவியை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இடமும்,

‘இளவரசியின் அதரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை’ என்று கதைநாயகன் நந்தகுமாரன் அவளை இழுத்து அணைத்துச் சொல்லும் சல்லாப வார்த்தைகளும் நம்மை இன்பலோகத்துக்கு இட்டுச் செல்கின்றன!

‘அவள் மார்பகம் சிறிதாய் இருந்தாலும் வாலிபத்தின் வேகத்தைக் காட்டியது. கழுத்தில் வளைந்து வந்து அவற்றைச் சுற்றிய ஆடையையும் இரட்டை அழகு அலட்சியம் செய்தது. விஷமத்தால் கன்னங்கள் இரண்டும் நன்றாகக் குழிந்து அங்கும் இரண்டு கண்கள் இருப்பது போல் பிரமையை ஏற்படுத்தின. அவள் முகம் குழந்தை போலிருந்தது. பருவத்தை எட்டிவிட்டாளா எட்டப் பார்க்கிறாளா அந்தத் திருடி என்று சந்தேகப்படும்படி இருந்தது அவள் திருக்கோலம்’ [இன்னும் முடியவில்லை!]. இது சாண்டில்யனின் ‘பல்லவ திலகம்’ நாவலில் வர்ற‘கிளுகிளு’ வர்ணனை. 

இந்த மாதிரி மிக நீண்ட வர்ணனையெல்லாம் சிறுகதையில் எதிர்பார்க்கக் கூடாதுங்க!

கதைமாந்தர்களுக்கு ஆசிரியர் சூட்டியுள்ள அத்தனை பெயர்களும் பழங்காலத்தவைதான்; பொருத்தமாவே இருக்கு.

ஆக, இது ஒரு சரித்திரக் கதை என்பதை வாசகர் மனதில் பதிய வைப்பதில் பட்டுக்கோட்டையார் முழு வெற்றி ஈட்டியிருக்கிறார் என்று துணிந்து சொல்லலாம்.

இனி, கதைக்கு வருவோம்.

அரகதத்தின் அரசன் அனிருத்தன் [சரித்திரக் கதைகளின் பாத்திரங்களுக்குப் பேர் வைக்கவே படாத பாடு படனுங்க]; படைபலம் உள்ளவன்; தன் ராச்சியத்தின் எல்லையை விரிவுபடுத்துபவன்.

விஜயநந்தன் என்னும் அரசன் ஆண்ட சுந்தரபுரத்தை அடிமை நாடா அறிவிச்சிக் கப்பம் கட்டணும்னு முதலில் ஓர் ஓலை அனுப்புறான். அடுத்து அனுப்புன இன்னொரு ஓலையில்,”உன் பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுய்யா”ன்னு சொல்றான்.

படையெடுபை நினைச்சிக் கவலைப்பட்ட நம்ம விஜயநந்தன் சந்தோசமா இதுக்கு ஒத்துக்குறார்.

ஆனா, அவர் பொண்ணு இளவரசி ஆனந்தவல்லிக்கு அதில் விருப்பம் இல்ல.

அரண்மனைக்கு வேலைக்கு வந்த சாதாரண  குடிமகன் நந்தகுமாரனை அவ காதலிக்கிறா.

ரெண்டு பேரும் இலங்கைக்கு ‘ஓடிப் போயி’ சாதாரணக் குடிமக்களா வாழ முடிவு பண்றாங்க.

இளவரசின்னா கடுமையான கட்டுக் காவல் இருக்குமே? மந்திரம் சொல்லி எல்லார் கண்ணையும் கட்டிப் போட்டுட்டுத் தப்பிச்சிப் போறது நடக்குமா  என்ன?

அதுக்குன்னு, தன் அபார மூளையைக் கசக்கித் திட்டம் தீட்டுறான் நம்ம கதாநாயகன் நந்தகுமாரன்.

அவங்க எப்படித் தப்பிச்சி ஓடிப்போறாங்க என்பதுதாங்க கதை.

இளவரசி ஆனந்தவல்லியைச் சந்திச்சித் திரும்பும் போது, காவலன்கிட்ட  மாட்டிகிட்டா  சிறையில் தள்ளப்பட்டு,  உயிரோட  சமாதி
கட்டப்படுவோம்கிறது நந்தகுமாரனின் கணிப்பு.

சமாதி எழுப்புற தீரனைக் கைக்குள்ள போட்டு,  காவலர்கள் போனதும் அதைப் பெயர்த்து எடுத்துட்டு வெளியே வர்ற மாதிரி, ஒரு கல்லுக்கு மட்டும் சுண்ணாம்பு வைக்காம மணல் வெச்சிக் கட்டச் சொல்றான். தீரனும் அதுக்குச் சம்மதிக்கிறான்.

இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டிச் சமாதியிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் நந்தகுமாரன்.

இவன் தப்பிக்கிற அதே நேரத்தில், ராஜகுமாரி, தன் தோழியோட, சித்ரா பவுர்ணமி அன்னிக்கிக் கடலாடப் போயி, அலை அடிச்சிப் போற மாதிரி போக்குக் காட்டி, நீந்திப் போய்,  சில காத தூரத்தில்  தயாரா நிறுத்தி வெச்சிருக்கிற படகில் ஏறிடுவா.

சமாதியிலிருந்து தப்பிச்ச கதைத் தலைவன் அவகிட்ட போய்ச் சேர்ந்துடுவான்.

இப்படி ஒரு திட்டத்தை, நாயகன் நாயகியிடம் சொன்ன போது, “என் தந்தை வாக்குத் தந்தபடி என்னை மணம் செய்து கொடுக்காம ஏமாத்துறாரேன்னு அநிருதத்தன் படையெடுப்பானே?”ன்னு நாயகி ஒரு சந்தேகத்தைக் கிளப்புறா.

“நான் சமாதியில் இருத்திக் கொல்லப்பட்டுட்டேன். நீயும் அலையில் சிக்கிச் செத்துட்டேங்கிற செய்தி அநிருத்தன் காதுக்குப் போகும். உன் தந்தை தன் மகளை இழந்துவிட்டார்ங்கிற சோகமான சூழ்நிலையில் அவன் படியெடுப்பு நிகழ்த்த மாட்டான்” என்கிறான் நந்தகுமாரன்.

[கதையின் ஆரம்பத்திலேயே, இளவரசியை அழைச்சிட்டு எப்பாடு பட்டோ இலங்கைக்கு இவன் தப்பிப் போயிருந்தா அநிருதத்தன் விஜயநந்தனைப் பழி வாங்கிடுவான்கிறதை மறந்துடாம எத்தனை கவனமா ஆசிரியர் நிகழ்ச்சிகளை அமைச்சிருக்கார் பாத்தீங்களா?]

இந்தக் கட்டத்தில், அட்டகாசமான  ஒரு ‘திருப்பத்தை’த் தர்றார் ஆசிரியர்.

கடலுக்குள்ள  நீந்திப் போயி, படகில் நந்தகுமாரனை எதிர்பார்த்து ஆனந்தவல்லி  காத்திருக்கிற காட்சி வருது.

அவ எதிர்பார்த்த படகும் வருது.

ஆனா, அதில் நந்தகுமாரன் வரல.

சமாதி கட்டின தீரன் வர்றான்.

‘நானும் உன் அழகில் என் மனதைப் பறி கொடுதேன். திட்டமிட்டபடி, ஒரு கல்லை மணல் வெச்சிக் கட்டாம சுண்ணாம்பு வெச்சிக் கட்டிட்டேன். நந்தகுமாரன் இந்நேரம் யமலோகம் போயிருப்பான். என்னை நீ ஏத்துக்கோ”ங்கிறான்.

மறைச்சி வெச்சிருந்த கத்தியை வீசித் தீரனைக் கொல்ல நினைக்கிறா இளவரசி........

இந்தக் கட்டத்தில் மீண்டும் ஒரு ஆனந்தத் திருப்பத்தைக் கொடுக்கிறார் எழுத்தாளர்.

இளவரசி கையில் ஏந்திய குறுவாள் வீசப்படாத நிலையில், வேறு ஒரு குறுவாள் தீரன் நெஞ்சில் பாயுது.

அதை வீசியவன் நந்தகுமாரன்.

சமாதியான அவன் எப்படி இங்கே முளைத்தான்?

அவன் வாயால் சஸ்பென்ஸை உடைக்கிறார் பிரபாகர்.

“தீரன் கண்களில் துரோகம் எட்டிப் பார்ப்பதை ஆரம்பத்திலேயே நான் கண்டுகொண்டுவிட்டேன். நான் சமாதி கட்டப்படும் போது என் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் சோறு ஊட்ட வந்த என் சகோதரி, மஜ்ஜை நீக்கிய பெரிய எலும்பில் சிறு கத்தி வைத்து ஊட்டினாள்.. அதை வைத்து என் கட்டுகளை அவிழ்த்து, கற்களைப் பெயர்த்து, மீண்டும் கற்களை வைத்துப் பூசிவிட்டு வந்தேன். நான் நிறுத்தி வைத்த படகில் தீரன் ஏறுவதைப் பார்த்துப் படகில் இருந்த வலைகளுக்குப் பின்னால் ஒளிந்து வந்தேன். அவன் எனக்கிழைத்த துரோகத்தையும் புரிந்துகொண்டேன்” என்கிறான்.

நாயகனை இழுத்தணைத்து நாயகி முத்தமிட, ”ஐயே, என் இளவரசியின் அதரம் இப்படி உப்புக் கரிக்கிறதே” என்று சொல்லி நாயகன் சிரிப்பதாக முடிகிறது கதை.

கதைக்குச் சுவை கூட்டக் கூடிய வர்ணனைகள், திருப்பங்கள், எதிர்பார்ப்பு நிலைகள், உச்சக்கட்டப் போராட்டம், இன்பமான முடிவு என்று சிறுகதைக்குரிய முக்கிய கூறுகளையெல்லாம் பக்குவமாகச் சேர்த்து அருமையான ஒரு சரித்திரச் சிறுகதையைப் பட்டுக்கோட்டை பிரபாகர் நமக்கு வழங்கியிருக்கிறார் என்று நான் சொன்னால்...............

“யோவ் அறுவை, நீ பிரபாகருக்கு ரொம்பத்தான் ஜால்றா தட்டுறே. கதையில் குறை சொல்லும்படியா ஒன்னுமே இல்லையா?”ன்னு நீங்க கேட்பது புரியுதுங்க.

அதையும் சொல்லிடறேங்க.

இளவரசியைக் காதலிச்சதுக்குச் சமாதி கட்டுறது தண்டனைன்னு நந்தகுமாரன் நினைக்கிறானே, அது எப்படி?

இளவரசிகளைக் காதலிக்கிறவனுக்கெல்லாம் சமாதி கட்டுறதுதான் தண்டனைன்னு அந்த நாட்டில் ஒரு சட்டம் இருந்துதா?

’சிரச்சேதம்’ போன்ற வேறு தண்டனையும் தரலாம்தானே?

அதில்லாம, நாயகன் சமாதி கட்டப்படுறதும் சித்ரா பவுர்ணமி விழாவும் ஒரே நாளில் நடந்தது எப்படி?

சமாதி கட்டினதும், அது நல்லா கெட்டிப்படுற வரைக்கும் காவல் போட மாட்டாங்களா? சமாதியின் ஈரப்பதம் காயறதுக்குள்ளேயே காவலர்கள் இடத்தைக் காலி பண்ணிடறாங்களே அது ஏன்?

இப்படி சில குறைகள் இருந்தாலும், இது நல்லதொரு பொழுது போக்குக் கதைன்னு நான் நினைக்கிறேங்க.

போயும் போயும் ஒரு பொழுது போக்குக் கதைக்கு இப்படியொரு நீஈஈஈஈளமான பதிவு தேவையான்னு நீங்க கேட்கிறீங்களா?

தேவைதாங்க.

உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறதும், வாழ்க்கைப் பிரச்சினைகளை மையப்படுத்துறதுமான கதைகளை மட்டுமே படிச்சிட்டிருந்தா வாழ்க்கை போரடிச்சிப் போடிடும். சிரிப்பூட்டக் கூடிய , இது மாதிரி ஏதோ ஒரு வகை சந்தோசத்தில் ஆழ்த்தக் கூடிய பொழுது போக்குக் கதைகளும் தேவைதாங்க.

இது என் தனிப்பட்ட கருத்துன்னு சொல்வதோடு, விறுவிறுப்பான சரித்திரக் கதை வழங்கிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும், அதை வெளியிட்ட விகடனுக்கும் நம் அனைவருடைய சார்பாகவும் நன்றி சொல்றேங்க.

நன்றி....................................நன்றி..............................................நன்றி...........................

************************************************************************************************************************














வியாழன், 20 செப்டம்பர், 2012

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ‘தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

சத்துக் கதையோ சொத்தைக் கதையோ, எத்தனை கதை படிச்சாலும் ‘தாகம்’ தணியலீங்க!

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ’தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

‘வெண்பாவுக்குப் புகழேந்தி. விருத்தப் பாவுக்குக் கம்பன்’னு சொல்ற மாதிரி, ‘ஒரு பக்கக் கதைக்குக் குமுதம்’னு சொன்ன காலம் ஒன்னு இருந்ததுங்க.

இப்போ எல்லாம் ....................

‘இருக்கிற ‘கொஞ்சம்’ அறிவே போதும். குமுதம் ஒரு பக்கக் கதை படிச்சி முட்டாள் ஆக வேண்டாம்”னு எல்லாரும் சொல்றாங்க!

ஒரு கூலித் தொழிலாளி. நாள் முழுக்க உழைச்சிச் சம்பாதிச்சதையெல்லாம் குடிச்சே தீர்த்துட்டுக் கொஞ்சம் சில்லரை மட்டும் பெண்டாட்டியிடம் கொடுப்பான். அதை வெச்சி அவ என்ன பண்ணுவா பாவம்? கொஞ்சம் கஞ்சிதானே காய்ச்ச முடியும்.

நாக்குச் செத்துப் போன அந்தக் குடிகாரன், ”என்னடி பண்றே, வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியாதா?”ன்னு அவளைக் கை நீட்டி அடிச்சுடறான்.

அதுக்கு அவள் எப்படி பதிலடி கொடுக்குறா தெரியுங்களா? கையால அல்ல; வாயாலதான்.

“உனக்கு ருசியா சமைச்சுப் போடணும்னா ஒரு கள்ளப் புருசனத் தேடிகிட்டாத்தான் முடியும்”

அதுக்கப்புறம் அவன் வாயே திறக்கல; கையும் நீளுல.

இது ஒரு கதைங்க [ஆர்.சி.சம்பத் எழுதினது]. அதுவும் குமுதத்தில் வந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா?

நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதி, நிகழ்த்த முடியாத சாதனையை ஒரு ‘ஒரு பக்கக் கதை’யால சாதிக்க முடியும்னு தெரிஞ்சிட்டீங்களா?

இந்த மாதிரி கதைகளெல்லாம் அந்தக் காலக் குமுதத்தில் அடிக்கடி வருமுங்க. [நான் அந்தக் கால ஆசாமின்னு முடிவு கட்டிடாதீங்க. நேத்துப் பொறந்த பையன்.  இதெல்லாம் என் தாத்தா சொல்லிக் கேட்டதுங்க].

இப்ப வர்ற கதையை, முதல் தடவை படிக்கும்போது “நல்லாத்தான் எழுதியிருக்கார்”னு சொல்லுவீங்க. அதையே மறுபடியும் படிச்சா, “அப்படியென்ன புதுசா சொல்லிட்டார்?” என்பீங்க. இன்னுமொரு தடவை படிச்சிக் கொஞ்சம் யோசனை பண்ணினீங்கன்னா, “சீ...இதெல்லாம் ஒரு கதையா?”ன்னு கடுப்படிப்பீங்க.

நான் சொன்னது  நெசமா இல்லியாங்கிறது இந்த வாரக் குமுதத்தில் வெளியான ரெண்டு கதையையும் கேட்டீங்கன்னா தெரிஞ்சி போயிடும்.

முதல் கதை: சாந்தியின் சாந்தி. எஸ்.முகமது யூசுப் எழுதினது.

ஒருத்தர் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கார்.

தரகர் ரெண்டு ஜாதகம் கொண்டு வர்றார்.

ஒரு ஜாதகர் மளிகைக் கடை நடத்தி மாசம் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர். இன்னொருத்தருக்கு தனியார் கம்பெனியில் கிளார்க் வேலை. மாசம் பத்தாயிரம் சம்பளம்.

அப்பா, தன் மகளோட விருப்பத்தைக் கேட்கிறார். அவ சொல்றா: “மளிகைக் கடைக்காரர் ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வருவாரு. சினிமா, பார்க், பீச்சுன்னு எங்கயும் போக முடியாது. என் சந்தோசம் போயிடும்”.

இந்தக் கதையைக் கேட்டவுடனே நீங்க என்ன நினைச்சீங்க? ’அந்தக் குட்டி எடுத்த முடிவு ரொம்பச் சரி’ன்னுதானே?

நீங்க கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா............

”இந்தப் பத்தாயிரம் சம்பளம் என்னத்துக்கு ஆனது? வீட்டு வாடகைக்கே பத்தாதே. அப்புறம் எங்கே கல்யாணம் கட்டிகிட்டு ஜாலி பண்றது?”ன்னு கேட்பீங்களா இல்லியா?

மளிகைக் கடை, ஜவுளிக்கடை, ஓட்டல் கடைன்னு தொழில் பண்றவங்க எல்லாம் , புதுப் பொண்டாட்டியைக் காயப் போடுற காரணத்தால கல்யாணமே கட்டிக்க வேண்டான்னு சொல்றாரா கதாசிரியர் யூசுப்?

இவங்க எல்லாம் ஒண்டிக் கட்டையாத்தான் இருப்பாங்களா? அப்பா, அம்மா, மாமனார், மாமியார்ன்னு விட்டில் இருக்கிற கிழடு கிண்டுகளைக் கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, புதுப் பெண்டாட்டியைத் தேடிப் போய்க் கொஞ்சுவாங்களா, மாட்டாங்களா?

அப்படியே யாரும் இல்லேன்னாலும், கடையில் வேலை செய்யுற ஆட்களை நம்பித்தானாகணும். எதையும் திருடுவாங்கன்னு பார்த்தா முடியுமா? கட்டிகிட்டு வந்தவளைச் சந்தோசமா வெச்சிக்கணும்னா, இந்த மாதிரி கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்னு அவங்களுக்கெல்லாம் தெரியாதா?

என்னவோ போங்க. இந்த ஒ.ப.கதை எழுத்தாளர்களுக்கு நம்ம காதில் பூ சுத்துறதே வழக்கமா போச்சி. பத்திரிகை ஆசிரியர்களும் அவங்களுக்கு உடந்தையா இருக்காங்க. இவங்க மாறவே மாட்டாங்களா?

அடுத்த கதையைக் கேட்டீங்கன்னா இன்னும் சூடாயிடுவீங்க!

கதை: வாழை மரம். கதாசிரியர்:கே. கணேச மூர்த்தி.

ஒரு மகன் தன் அப்பாகிட்ட, “உங்களுக்கு எழுபது வயசாச்சி. ஒன்னுமே சேமிக்கலையே?” அப்படீன்னு கேட்கிறான்.

“ஒரு வழை மரம், இலை, பூ, காய், கனி பட்டை எல்லார்த்தையும் தானமா தருது. அது மாதிரி நானும் என்னையே தந்திருக்கேன்’ன்னு சொல்றார்.

இதோட கதை முடிஞ்சிடிச்சி தாங்க?

ரெண்டு துக்ளியூண்டு பத்தியில் முடிஞ்சி போன இந்தத் ‘துணுக்குக் கதையை [கதைதானா?] ஒரு பக்கக்கதையா இழுத்துடறார் கதாசிரியர்!

இந்தத் தத்துவத்தைப் புரிய வைக்கத்தான் பெரியவங்க கல்யாணப் பந்தலில் வாழை மரம் கட்டுற பழக்கத்தை ஏற்படுத்தினாங்க. மரம் கன்று ஈனுவது மாதிரி உனக்கு நான் உயிர் கொடுத்தேன். நீதான் புத்தியா பொழைச்சிக்கணும் அப்படி இப்படின்னு  இழுக்கிறாருங்க கதையை!

‘பளிச்’னு ஒரு மின்னல் அடிச்ச மாதிரியும் கதை சொல்லல.

கதைத் தலைப்பாவது ரசிக்கும்படியா இருக்கா?

இல்லீங்களே.

வாழைமரம்! ஒன்னாங்கிளாஸ் பாடப் புத்தகத்தில் இருக்கிற ஒரு சின்னக் கட்டுரையோன்னு பார்த்ததும் நினைச்சங்க.

‘ஒரு பக்கக் கதை’ன்னு குறிப்பிடாம உரையாடலும் சேர்க்காம விட்டா இது ஒரு கட்டுரைதாங்க. ஒரு தடவை படிச்சிப் பாருங்க.

                      *                                          *                                       *

‘ஓஹோ’ன்னு வளர்ந்திட்டிருந்த ஒரு பக்கக் கதை இலக்கியம் இப்படிச் சிதைஞ்சி சீரழிஞ்சிட்டு வருதேன்னு நான் அடிக்கடி கவலைப்படுறது உண்டுங்க. இந்தக் கதைகளைப் படிச்சதும் என் கண்களில் ரெண்டு சொட்டுக் கண்ணீரே வந்துடிச்சி!

இந்த நேரத்தில், ’ஆர்.லதா’ [புள்ளமங்கலம்]ன்னு ஒரு பொண்ணு, ஆறுதலா என் முதுகில் தட்டிக் கொடுத்து, ’கூடு கலைத்தவன்’னு நான் ஒரு கதை எழுதியிருக்கேன். படிங்க அறுவை. உங்க புண்பட்ட மனசுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கும்’ன்னு சொல்லி,  தினமலர் ’வார மலரை’க் [16-09-2012]கொடுத்திச்சி.

விவாகரத்து வாங்கித் தருவதில் புகழ் பெற்ற ஒரு வக்கீலுக்கு வயசு அறுபது ஆகுது.

புள்ளைகளும் பேரப் புள்ளைகளும் சேர்ந்து அவரோட மணி விழாவுக்கு ஏற்பாடு பண்றாங்க. ஆனா, அவரு அறுபதாம் கல்யாணமே வேண்டாங்குறார்.
”ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பிரிச்சவன் நான். அப்படிப்பட்ட நான், என் பெண்டாட்டியோட பிரியமா வாழ்ந்து அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாருக்கும் வயித்தெரிச்சலை உண்டுபண்ணுமே”ன்னு காரணமும் சொல்றார்.

’தொழில் தர்மம்’னு சொல்லிகிட்டு, திருடர்களுக்கும் கொள்ளைக்காரங்களுக்கும் கொலைகாரர்களுக்கும் வாதாடுற வக்கீல்களுக்குச் சூடு கொடுத்த மாதிரி இல்லை?

கதையை, எதார்த்தமா சுவையா சொல்லியிருக்கார் லதா.

”இப்படி இன்னும் நிறையக் கதைகள் எழுதுங்க”ன்னு லதாவை வாழ்த்தி, நன்றியும் சொன்னேங்க.

                            *                                       *                                      *

“ராணி’ பத்திரிகை, புதுமுக எழுத்தாளர்களுக்குப் புகலிடம் தருது. அதை எப்பவும் படி. நீயும் ஒரு கதாசிரியர் ஆகலாம்”னு என் தாத்தா அடிக்கடி சொல்வார்.

இந்த வார ராணி [23-09-2012] படிச்சேன்.

ரோசியும் பூனைக் குட்டியும்’னு ஒரே ஒரு கதைதான். ‘கலாவிசு’ எழுதினது.

தலைப்பைப் பார்த்தா, குழந்தைகளுக்கானதுன்னு தோணும். பெரியவங்களுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ராமுவுக்கு ஒரு அணில் குட்டி தோழன். ‘ரோசி’ன்னு அதுக்குப் பேர் வெச்சிருக்கான்.

ஜன்னல் கிட்ட சோறு வச்சா அது தின்னுட்டுப் போகும்.

ஒரு நாள், அது சோத்துப் பருக்கை சாப்பிடும் போது, வீட்டில் வளர்ற பூனை பக்கத்தில் வர, அது பயந்து ஓடிடுது.

ராமு பூனையைக் கண்டபடி திட்டிடறான்.

அன்னிக்கிருந்து, பூனை சோறு சாப்பிட மாட்டேங்குது. அதுக்குத் தட்டில் வெச்ச சோறு அப்படியே இருக்குது.

அப்புறம், பூனை பட்டினி கிடக்குறதைப் பார்த்துட்டு, அணில் வந்து பூனைக்கு வெச்ச சோத்தைச் சாப்பிட்டிச்சாம். பூனையும் சாப்பிட்டிச்சாம்.

ரெண்டும் சேர்ந்து சாப்பிடறதைப் பார்த்து ராமு சந்தோசப்படுறான்.

 நாய் பூனைக் குட்டிக்குப் பால் தர்றது.  பூனையும் எலியும் ஒன்னா விளையாடுறது மாதிரியான செய்திகளைப் படிச்சுட்டுக் கதாசிரியர் இதை எழுதியிருப்பாரோன்னு நினைக்கிறேன்.

நடைமுறை சாத்தியம் இல்லேன்னாலும், கதை மனசை உருக்குகிற மாதிரி இருக்குதானே?

பாராட்டலாம்தானே?

                                 *                                     *                                    *

கடைசியா ’விகடன்’ இதழின் [19-09-2012] நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்புக் கதை.

கதைப் பெயர்: லூஸு ஓனர்’   படைத்தவர்:ம.காமுத்துரை.

[ எச்சரிக்கை! நான் ஒரு லூஸு. இந்த லூஸுக்கு நீங்க ஓனரு. அதனால, உங்களுக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு” அப்படீன்னு கதையில் வர்ற ஈஸ்வரன் பாத்திரக் கடைக்காரரைப் பார்த்துச் சொல்றான். அதனாலதான் இந்தக் கதைக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு. மத்தபடி, கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு குழம்பி ‘லூஸு’ ஆயிடாதீங்க!]

ஈஸ்வரன் ஒரு சமையல் ஒப்பந்தக்காரர் [cotracter]. கதாசிரியர் காமுத்துரை, தன்னையே ‘சமையல் பாத்திரக் கடைக்காரரா’ உருவகம் பண்ணிகிட்டு அவரே  சொல்ற மாதிரி கதை தொடங்குது.

‘தூரத்தில் ஈஸ்வரன் வர்றதைக் கண்டதும்சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமா கணக்கு நோட்டுக்குள் ஒளித்து வைத்தேன்’னு கதையைத் தொடங்குறார்.

அது ஆடி மாசம் ஆனதால, ஈஸ்வரனுக்குத் தொழில் வாய்ப்பு இல்ல. இவருக்கும் வியாபாரம் டல்லடிக்குது.

இந்தச் சூழ்நிலையில், இவர்கிட்ட கடன் கேட்க வரும் சமையைல்காரங்க, ”நாங்க இல்லாம உங்க வியாபாரம்  நடக்காது. நீங்க இல்லாம எங்களுக்குப் பிழைக்க வழியில்ல”ங்கிற மாதிரி ரொம்பச் சாமர்த்தியமா பேசிக் கடன் கேட்பாங்களாம். இவரும் அவங்களுக்கு ஈடு கொடுத்துச் சமாளிப்பாராம். இதைப் பத்தி எல்லாம் சொல்றார்.

 ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற பாத்திரக் கடைக்காரருக்கும் சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையிலான உறவையும், அதனால் விளையும் சாதக பாதகங்களையும் காட்சிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்தக் கதையைப் பின்ன நினைத்திருக்கிறார் காமுத்துரை.

ஆனா, அந்த நோக்கம் இந்தப் படைப்பின் மூலம் நிறைவேறவில்லை என்றே சொல்லத் தோணுது.

அதற்குப் பதிலாக எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு சமையல்காரர்களை இழிவு படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.

”யேண்ணே....ஒரு பத்து ரூபாய்க்காக அப்போ பிடிச்சிக் கேட்டுட்டிருக்கேன்....”  வேல்கண்ணன் என்கிற சமையல்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார்.

”எனக்கு இப்போ குடிக்க ஒரு 70 ரூபாயாவது தருவீங்களா?” என்று அவரிடம் கெஞ்சுகிறார் சரவணன் என்கிற சமையல்காரர்.

“எனக்கு அவசரமா வேணும்னே....”

“பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கிக் குடுங்கண்ணே....”

சமையல்காரர்கள் மாறிமாறி இவரிடம் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிக் கதை முழுக்க, சமையல்காரர்களைப் பழிப்பதிலும் மட்டம் தட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் காமுத்துரை!

நூறு ரூபா கடன் கேட்டு வந்த ஈஸ்வரனும், “பக்கத்துக் கடையிலாச்சும் வாங்கிக் கொடுங்க” என்று மன்றாடுறான்.

இவர் சித்திரித்துக் காட்டுவது போல சமையல் ஒப்பத்தக்காரர்கள் வறுமையில் வாடுகிறார்களா என்ன?

எழுத்தாள நண்பரே,

சட்டை மடிப்புக் கலையாமல், விலையுயர்ந்த வாகனங்களில் இவர்களில் கணிசமானவர்கள் வலம் வருவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

நீங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போல இவர்களில் பலரும் மாமூல் குடிகாரர்களா?

பிச்சைக்காரர்கள் போல, கடை முதலாளிகளிடம் கடன் கேட்டு அலைபவர்களா?

தயவு செய்து இனியேனும்,  கதாபாத்திரங்களைப் படைத்து உலவவிடுவதற்கு முன்னால், அவர்களைப் பற்றித் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

செய்வீர்களா?

‘நான் ஒரு நட்சத்திர எழுத்தாளன். என் படைப்பைக் கேட்டு வாங்கிப் போட பத்திரிகைகள் இருக்கின்றன என்ற மிதப்பில் எதை வேண்டுமானாலும் எழுதக் கூடாது.

மறந்துவிட மாட்டீர்களே?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


திங்கள், 17 செப்டம்பர், 2012

கடுப்பேற்றும் ’கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய 'பாக்யா'வும்!

இந்த இரண்டாவது பதிவும்  சற்றே நீண்டுவிட்டது! அடுத்து வருபவை உங்களைப் பயமுறுத்தா. துணிந்து படியுங்கள்.


கடுப்பேற்றும் ‘கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய `பாக்யா’வும்!

கதை எழுதுவது ஒரு கலை.

ஒரே ‘தம்’மில் வாசகர் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றால், கதையில் புதிய புதிய ‘உத்தி’ [techniques]களும் கலையம்சம் சார்ந்த சரளமான ’நடை’ [style]யும் கையாளப்பட்டிருக்க வேண்டும்.

அழகான அந்தப் பெண்ணை அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’ என்று எழுதினால், அது கட்டுரை நடை.

அதையே கொஞ்சம் மெருகூட்டி, ‘அந்த அழகு தேவதையை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்’ என்றோ, ‘பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான்’ என்றோ எழுதினால் அது கவர்ச்சியான ’கதை நடை’ ஆகிறது.

‘எனக்குச் சதைப் பற்றில்லாத ஒட்டி உலர்ந்த உடம்பு’ என்று எழுதும்போது, அது உடம்பு பற்றிய வெறும் விவரணம் மட்டுமே.

அதையே, ‘நான் வீதிக்கு வந்தால் வானத்தில் கழுகுகள் வட்டமிடத் தொடங்கிவிடும்’ என்று எழுதினால், வாசகரை இன்புறுத்தும் வல்லமை பெற்றதாக அத்தொடர் மாறிவிடுகிறது.

நடை மட்டுமல்லாமல்.....................

‘அப்பாவித் தனமான உன் அழகு முகம். உன் விழிகளில்தான் எத்தனை குளிர்ச்சி! மருட்சி!! நீண்ட கூந்தல். மணக்கும் சந்தன மேனி. காதோரப் பூனை முடி. கழுத்தோரச் செம்பட்டை கேசம்.........!’

இது போன்ற குட்டிக் குட்டி வருணைகளும் ஒரு சிறுகதையைச் சிறந்த படைப்பாக்கும்.

தொய்வில்லாமல் ஒரு கதையைக் கொண்டு செல்ல இவை மட்டும் போதா. புதிய புதிய ‘உத்தி’களைக் கையாளும் திறனும் ஒரு கதாசிரியனுக்குத் தேவை.

நீங்கள் பலவீனமான மனசுக்காரரா? இந்தக் கதையைப் படிக்காதீர்கள்!’

‘கவிதாவின் கதை எப்படி முடியுமோ தெரியாது. சுபமாகவே தொடங்குவோம்’

இவ்வாறெல்லாம் , வாசகரைப் படிக்கத் தூண்டும் வகையில், கதையைத் தொடங்குவது நம் எழுத்தாளர்களுக்குக் கைவந்த கலை.

கதையை முடிக்கும் போதும் இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவர்களின் வழக்கம்தான்.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும்...............................

இளம் மனைவியுடன் தனிமையில் நடந்து செல்கிறான் ஓர் இளைஞன்.

எதிர்ப்பட்ட சில ரவுடிகள் அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வாலிபன், அவர்கள் தன் மனைவியைக் கற்பழிக்கும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதைக் காண்கிறான். எழுந்து நிற்க முடியாத,  கயவர்களுடன் போராட முடியாத நிலையில் தன்னுடையவள் மானபங்கப் படுத்தப்படாமல் தடுப்பது எப்படி என்று துடிப்புடன் யோசிக்கிறான்.

அருகில் கிடந்த, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறி பார்த்துத் தன்  முழு பலத்தையும் பயன்படுத்தி வீசுகிறான்.

அவன் குறி தப்பவில்லை.

அவன் எதிர்பார்த்தது போலவே, அது அவன் மனைவியின் நெற்றிப் பொட்டைத் தாக்க, அவள் சுருண்டு விழுந்து செத்துப் போகிறாள்.


வாலிபன், வாசகரைப் பார்த்து இப்படிக் கேட்பதாகக் கதை முடிகிறது...............

“என்னவள் மானபங்கப்படுத்தப் படுவதைத் தடுக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அடடா! எத்தனை அருமையான உத்தியைக் கதாசிரியர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?!

அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. [பல வருடங்களுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான இக்கதையின் ஆசிரியர் பெயர் மறந்துவிட்டது]

இவ்வாறெல்லாம் கதையின் வடிவத்தில் கருத்துச் செலுத்துகிற கதாசிரியன், தான் கதை படைப்பதன் நோக்கம் என்ன என்பதிலும் தெளிந்த அறிவுடையவனாக இருத்தல் அவசியம்.

வாசகரைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்கச் செய்வதா? இன்புறுத்துவதா? துன்புறுத்துவதா? அனுதாபப்பட வைப்பதா? ஆர்ப்பரித்துப் பொங்கி எழச் செய்வதா? இவை எதுவுமே இல்லை என்றால், வெறும் பொழுது போக்கிற்காகவா?

எதற்காக எழுதுகிறோம் என்பதை எழுத்தாளான் நன்கு சிந்தித்துத் திட்டமிடுதல் இன்றியமையாத் தேவை.

திட்டமிடல் இல்லையெனின், அவன் உருவாக்கும் படைப்பு ஒரு ’வெற்று’ப் படைப்பாக [எதற்கும் பயனற்றதாக] அமைந்துவிடும்.

இன்றைய வார இதழ்களில் இத்தகைய ‘வெற்று’ப் படைப்புகளைத்தான் பெரும் எண்ணிக்கையில் காண முடிகிறது.

இவ்வாறான சிந்தனைகளுடன், இவ்வாரக் ’கல்கி’ [23-09-2012] யிலும் ‘பாக்யா’ [செப் 21-27] இதழிலும் வெளியான சிறுகதைகளை ஆராய்வோம்.

மொத்தம் மூனு சிறுகதைகள். ‘முடிவே முதலாக.....வாசகர் கதைப் போட்டி-5ல் பிரசுரத்துக்குத் தேர்வான கதைன்னு ரெண்டு கதைகளைப் போட்டிருக்காங்க. படிச்சேன்.....படிச்சேன்.... பத்து தடவைக்கு மேல் படிச்சேன். ஒன்னுமே புரியல. அப்போ சுத்த ஆரம்பிச்சது என் தலை. இன்னும் சுத்திட்டே இருக்கு.

அதனால, ‘சினேகிதியே.....’ங்கிற  ஒரு சிறுகதையைப் பத்தி மட்டும் இப்போ சொல்லப் போறேன்..................... 

’சித்ரா’ன்னு ஒரு குடும்பத் தலைவி. அவங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரிஞ்ச ஒரு பொண்ணு. [என்னய்யா வாகனம்னு கேட்டு என்னை மூடு அவுட் ஆக்கிடாதீங்க. அதைப் பத்தி கதாசிரியர் ,ஹேமலதா’ ஒன்னுமே சொல்லல]

ஒரு நாள் திடீர்னு, பள்ளித் தோழி பத்மா நினைவுக்கு வர்றா. அப்போதைய அனுபவங்கள் சித்ரா மனசில் குறும்படமா ஓடுது. அதன் சுருக்கத்தைச் சொல்லித்தான் கதாசிரியர் கதையைத் தொடங்குறார்.

உடனே பத்மாவைப் பார்க்கணுங்கிற ஆசை சித்ரா மனசில் விஸ்வரூபம் எடுக்குது. முப்பது வருடம் போல ஏன் அந்த ஆசை தலை தூக்கலேன்னு கேள்வி கேட்டு மடக்க நினைக்காதீங்க . பாவம் கதாசிரியை ஹேமலதா.

கூகுளில் தேடினாங்க. பத்மா சுப்ரமணியம்தான் கிடைச்சாஙகளாம். நம்ம பத்மா கிடைக்கல.

மகளின் உதவியோட ஃபேஸ்புக்கில் வலை வீசினதில் கொஞ்சம் பள்ளிப் பருவத் தோழிகள் சிக்கினாங்க. அவங்கள்ல ‘ரம்யா’வும் ஒருத்தர். ஆனா, அந்த ரம்யா தனக்கு ரெருங்கிய தோழி இல்லேன்னு நம்ம சித்ராவே சொல்றாங்க.

சென்னையிலேயே இருக்கிற ரம்யாவை வீடு தேடிப் போய் சந்திக்கிறாங்க சித்ரா.

மாணவிப் பருவத்தில் ரம்யா நகைச்சுவையா பேசுவாங்களாம். அந்தச் சின்ன வயசில் ஒரு தடவை அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப, ரெண்டு பேரும் கமல் பத்தியும் கார்த்திக் பத்தியும் கதைச்சாங்களாம்.

ஆனா, அந்த ரம்யா இன்னிக்கித் தன் மகன் கிருஷ்ணா பத்தியே பேசிப் பேசி அறுத்துத் தள்ள, நம்ம சித்ராவுக்குக் கொட்டாவியே வந்துடிச்சாம்!

அறுபட்டது போதுமடா சாமின்னு மகளைக் கூட்டிகிட்டு வீடு திரும்பிடறாங்க சித்ரா.

ரம்யாவைச் சந்தித்த பிறகு, சித்ராவைப் பத்தி, ”எதிலோ ஏமாந்தது போல் தோன்றியபடி இருந்தது இவளுக்கு” என்கிறார் கதாசிரியர்.

இதுதாங்க கதை.

எனக்குக் கதை நல்லாவே புரிஞ்சுது. கடைசியா கதாசிரியர் சொல்றது மட்டும் சுத்தமா புரியல.

ரம்யா இந்த அம்மாவுக்கு நெருங்கிய தோழி அல்ல. அப்படியிருக்க, எதை எதிர்பார்த்து சித்ரா அவங்களைச் சந்திக்கப் போனாங்களாம்?

ரம்யாவின் நகைச் சுவையையா? ஸ்வர்ணலதா போல அவங்க பாட்டுப் பாடுவதை எதிர்பார்த்தா?

அது நிஜம்னா, வெளிப்படையா, “ஒரு பாட்டுப் பாடு. கொஞ்சம் ஜோக்கெல்லாம் சொல்லு”ன்னு கேட்க வேண்டியதுதானே?

அதுக்கு எது தடையா இருந்தது?

விளக்கம் தரத் தவறிவிட்டார் ஹேமலதா. 

கதாசிரியை அவர்களே,

இப்படி ஒரு கோரிக்கை வைத்து, அதை ரம்யா நிறைவேற்றியிருந்தால் இந்தக் கதைக்கே அவசியமில்லாமல் போயிருக்கும் என்று பயந்துவிட்டீர்கள். சரிதானே?

போகட்டும்.

‘ஆண்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக அதிக சலனமற்றுச் செல்ல, பெண்களுடையது திருமணத்துக்குப் பின் காட்டாறு போலப் பாதை திரும்புவதாக அவளுக்குப் பட்டது’ன்னு ஒரு கட்டத்தில் குறிப்பிடுறீங்களே அது மட்டும் என் உள்ளத்தைத் தொட்டது.

மற்றபடி, குறிப்பிட்டுச் சொல்லும்படியா, கதைபடிப்பவரைக் கட்டி இழுத்துச் செல்லும் நடை, உத்தி, பாத்திரப் படைப்புன்னு எதுவும் சிறப்பா அமையல..

கதை முடிவில்,”வாம்மா, பத்மா ஆண்ட்டியைத் தேடலாம்” என்று மகள் சொல்ல.................

‘பத்மா கிடைத்தாலும் பதினொரு வயதில் தொலைத்த பத்மா கிடைக்க மாட்டாள்’ என்று சித்ராவைச் சொல்ல வெச்சிருக்கீங்க.

ஒரு பதினொரு வயசுக்காரர் முப்பது வருசங்களுக்கு அப்புறம் மாறிப் போவது இயற்கைதானே? சிறு வயசுக் குணாதிசயங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அவ்வளவே. இது நீங்க சொல்லித்தான் தெரியணுமா?

அடுத்து வெளிவரவிருக்கும் உங்கள் சிறுகதை முழுமையான பாராட்டுக்குரியதாக அமைய என் மனப்பூர்வ வாழ்த்துகள்.


                       *                                   *                                         *


ஹேமலதாவை வாழ்த்திய கையோடு,  ‘பாக்யா’ இதழில் வெளியான சி.கதைகள் பற்றிய என் சீரிய [???] திறனாய்வையும் உங்கள் முன் சமர்ப்பித்து விடுகிறேன். இனி அடுத்து வரும் இடுகைகள் சுருக்கமாக இருக்கும். நம்புங்கள்.

அந்தரத்தில் சாகசம் புரிந்துவிட்டுப் பிச்சை எடுக்கும் சிறுமியையும், ஷோபாவில் ஒய்யாரமாகப் படுத்து, பாப்கார்ன் சாப்பிட்டு டி,வி.பார்க்கும் தன் ஏழு வயது மகளையும் ஒப்பிட்டு வருந்தும் ஒரு நல்ல மனதுக்காரரின் மன ஒட்டத்தைக் காட்சிப் படுத்தும் உருக்கமான ஒரு சிறுகதை ‘நிஜமாத்தான் சொல்றீங்களா?’. எழுதியவர் இராஜேஷ்ஜோதி.

ஒரு குழந்தைகளுக்கான பள்ளியில்.................

“என் குழந்தைக்கு டென்னிஸ் கோச் தருவீங்களா?” என்று கேட்கும் நவ நாகரிகத் தாய்!

”பொறந்ததிலிருந்து உங்க குழந்தையின் கையைப் பார்த்திருக்கீங்களா?டென்னிஸ் விளையாடுற வயசா இது?” என்று சூடு கொடுக்கும் நிர்வாகம். இப்படியொரு உரையாடலை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் ‘டாப்’ கிளாஸ் கதை ‘பள்ளித் துவக்கம்’.  படைத்தவர் ‘எல்கே’

பலூனை ஊதிப் பெரிதாக்கி, ”இந்தா இதை வச்சிக்கோ. என் மூச்சிக் காத்து எப்பவும் உன்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லும் கவுசல்யா.

தான் கொஞ்சம் ஊதி, கவுசல்யாவையும் ஊதச் சொல்லி,”ரெண்டு பேர் மூச்சுக் காத்தும் இதில் இருக்கு. உன்னிடமே இருக்கட்டும்” என்று அவளிடம் ஒரு பலூனை நீட்டும் காவியா.

இது ஒரு கடற்கரைக் காட்சி!

படித்தவுடன் நெஞ்சு சிலிர்க்கிறதுதானே!? இது ஒரு சூப்பர் சிறுகதை! கதைத் தலைப்பு ‘பலூன்’. வடித்துக் கொடுத்தவர் ‘குட்டி’.

மனைவி பிறந்த வீடு போன நேரத்தில் வேலைக்காரியை வீட்டுக்காரன் அனுபவிக்க நினைப்பது போல், கதையைத் தொடங்கி, முடிவில் அவன் மகா யோக்கியன் என்பதாகக் காட்சிப் படுத்தி, வாசகரை முட்டாள் ஆக்கும் இரண்டு கதைகளோடு மேலும் சிலவும் ’சுமார் ரக’க் கதைகள்தான் என்றாலும்...........

மூன்று சிறந்த கதைகளைத் தந்ததற்காகப் ’பாக்யா’வை மனம் திறந்து பாராட்டலாம்.

கல்கி. பாக்யா என்னும் இரண்டு வார இதழ்களின் கதைகளை முழுமையாகப் படித்து ‘மதிப்பீடு செய்து இப்பதிவை வழங்கியிருக்கிறேன்.

பொறுமையாகப் படித்து முடித்ததற்கு நன்றி.

சொல்ல நினைத்ததைச் சுவையாகச் சொன்னேனா, இல்லை, ’அறுவை மருத்துவன்’ ஆகிய நான் ‘அறுத்து’த் தள்ளினேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

அடுத்து வரும் பதிவுகள் சுருக்கமானவையாகத்தான் இருக்கும் என மீண்டும் உறுதி கூறுகிறேன்.

************************************************************************************************






















திங்கள், 10 செப்டம்பர், 2012

முதல் அறுவை!

ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை [’அடுத்த முறை’] இங்கே ‘அறுவை’ செய்யப்படுகிறது!                                            

 முதல் அறுவை!

கதை சொல்வது ஒரு கலை.

நெடுங்கதையோ குறுங்கதையோ, கதை கேட்கும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.  சொல்வது அத்தனை சுலபமல்ல..

அதில் தேர்ந்தவர்கள் கதை இலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

புதினம், சிறுகதை, நாடகம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தக் கதை இலக்கியம் அமோக வளர்ச்சி பெற்றது கடந்த நூற்றாண்டில்தான்.

இதன் வளர்ச்சியில் படைப்பாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் பங்களிப்பு இருப்பது போலவே, பருவ இதழ்களுக்கும் முக்கிய பங்குண்டு.

இன்றைய காலக்கட்டத்திலும் ,கதை இலக்கியப் பணியில் இவை ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இவற்றின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

பருவ இதழ்களில், பிறவற்றைக் [மாத, மாதம் இருமுறை, காலாண்டு வெளியீடுகள்] காட்டிலும் வார இதழ்களின் விற்பனை மிக அதிகம் எனலாம்.

குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன், ராணி, கல்கி, தேவி, பாக்யா போன்றவை விற்பனையில் முன்னணி வகிப்பவை.

இவற்றில் வெளியாகும் சிறுகதை, ஒரு பக்கக் கதை போன்றவற்றின் ‘தரம்’ குறித்த என் மதிப்பீடுகளைப் பிறருடன் பகிர்வதற்காகவே இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பகிர்வு  பிறருக்கு, குறிப்பாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு ஓரளவேனும் உதவும் என்ற நம்பிக்கையுடன்.................

 முதன் முறையாக, இவ்வார ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதையைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

‘சுருக்’,  ’நறுக்’ பற்றியெல்லாம் கவலைப்படாமல், சிறுகதைக்குப் பல பக்கங்கள் ஒதுக்குகிற விகடன், இக்கதைக்கும் நான்கு பக்கங்களுக்கு மேல் ஒதுக்கியிருக்கிறது. இதன் சுருக்கத்தை...........

“கொஞ்சம் இரு. சுருக்கத்தை அப்புறம் சொல்லலாம். முதல்ல கதைத் தலைப்பு என்னன்னு சொல்லு”

என்ன இது, திடீர்னு ஒரு குறுக்கீடு! யாருங்க நீங்க?

“நான் யாரா இருந்தா என்ன? ஒரு X ன்னு வெச்சிகிட்டு பதில் சொல்லு”.

சொல்றேன்.

‘அடுத்த முறை’..........இதுதான் தலைப்பு.

“என்னப்பா இது? தலைப்பு கவர்ச்சியா, வாசகனைப் படிக்கத் தூண்டுறதா இருக்கணும்னு சொல்வாங்க. இது அப்படி இல்லியே”.

அது உண்மைதாங்க. ஆனா, இவரை மாதிரி பிரபல நட்சத்திர எழுத்தாளர்களிடம் அதை எதிர்பார்க்கக் கூடாதுங்க. ரொம்ப கனமான ‘கதைக்கரு’ வை வெச்சிச் கதை வடிக்கிறவங்க இவங்க. தலைப்பெல்லாம் இவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல

“நடை எப்படி?”

”அவர் நடை எனக்கு எப்படிங்க தெரியும்? அசோகமித்திரனை நான் பார்த்ததே இல்லீங்க”.

“இந்த லொள்ளுதான் வேண்டாங்கிறது. வாசகன் கொட்டாவி போடாம படிச்சி முடிக்கணும்னா, கதை நடை [style] சூப்பரா இருக்கணும்பாங்களே, அந்த நடையைக் கேட்டேன்”.

அதை ஏன் கேட்குறீங்க. நாலு பக்கத்தைப் படிச்சி முடிக்கறதுக்குள்ள நாலஞ்சி தடவை தூங்கி விழுந்துட்டேன். அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?. பிரபல எழத்தாளர்னா, அழுத்தமான ‘கதைக்கரு’ இருக்கா? உன்னதமான ‘உள்ளடக்கம்’ இருக்கான்னுதான் பார்க்கணும்.

“அப்படியா, சரி. இனிமே நீ கதைச் சுருக்கம் சொல்லலாம்”.

அவன் பேரு ஸ்ரீகுமார். வேலை பார்த்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பொண்ணு ரமாவும் இவனும் வீட்டாருக்குத் தெரியாம கல்யாணம் கட்டிக்கிறாங்க......

“கொஞ்சம் இருப்பா....ஏன்? ரெண்டு வீட்டிலும் எதிர்ப்பா?”

இவங்க முன்கூட்டியே வீட்டில் அனுமதி கேட்டதாகவே தெரியல. ஒரு கட்டத்தில், ’என்கிட்ட சொல்லியிருந்தா நான் எல்லார் சம்மதத்தையும் கேட்டுப் பத்திரிகை வெச்சிக் கல்யாணம் செய்திருப்பேன். தம்பி, ஏன் இந்தத் திருட்டுக் கல்யாணம்?’ என்று இவன் மாமனார் இவன்கிட்டே சொல்றார். அப்புறம் ஏன் இவங்களுக்கு அசோகமித்திரன் திருட்டுக் கல்யாணம் செஞ்சி வெச்சார்னு தெரியல.

“அதை அவர்கிட்டதான் கேட்கணும். மேலே சொல்லு”.

ஸ்ரீகுமாரும் ரமாவும் மாலையும் கழுத்துமா பெத்த அம்மா முன்னால வந்து நிற்கிறாங்க. அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிடுது.

“அடப் பாவமே!”

கண்ணீரும் கம்பலையுமா நிற்கிற பெண்டாட்டியை அவள் வீட்டில் விட்டுட்டுத் தன் வீட்டுக்கு வருகிறான் ஸ்ரீகுமார். நீ வேலைக்குப் போக வேண்டாம். அவள் மூஞ்சியில் முழிக்க வேண்டாம். நான் உனக்கு நல்ல பொண்ணாப் பார்க்கிறேன்” என்கிறாள் இவன் அம்மா.

“அம்மா நீ அப்பாவைச் சித்திரவதை பண்றதோட நிறுத்திக்கோ’ என்று கடுபடிக்கிறான் ஸ்ரீகுமார்.

“அறுவை மருத்துவா, கொஞ்சம் இருப்பா. எனக்கொரு சந்தேகம். குமாரோட அம்மா தன் புருஷனை எப்படியெல்லாம் சித்ரவதை பண்ணினாளாம்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்”.

அது சாத்தியமில்ல.

“ஏன்?”

கதாசிரியர் இதைப் பத்தி ஒன்னுமே சொல்லல.

அந்த அம்மா கேரக்டரை எப்படிப் படம் பிடிக்கிறார்? அவங்க நல்லவங்களா, கெட்டவங்களா, இல்லை, ரெண்டுங்கெட்டானா?”

மன்னிக்கனும். இதுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.

“கதையை முழுசா படிச்சியா?”

வரிவரியா வார்த்தை வார்த்தையா படிச்சுட்டேன். அந்த அம்மாவை அசோகமித்திரம் ஒழுங்கா ’கேரக்டரைஸ்’ பண்ணவே இல்லை.

”நல்லா யோசனை பண்ணிச் சொல்லு. ஸ்ரீகுமாரோட அப்பா வாயால அந்த அம்மாவின் குணாதிசயங்களை ஆசிரியர் விவரிச்சிருப்பாரே?”.

அதையும் அவர் செய்யல.

‘போகட்டும். மாமியார் பண்ணின கலாட்டாவில், கண்ணீரும் கம்பலையுமா பிறந்த வீடு போனாளே ஸ்ரீகுமார் பெண்டாட்டி....என்ன பேர் சொன்னே.... ஆங்...ரமா. அவளைப் பத்தி சொல்லு அறுவை”.

கல்யாணமாகி ஏழெட்டு மாசத்தில் அது அமெரிக்கா போயிடுச்சி.

“அமெரிக்காவுக்கா, எதுக்கு?”

இந்தக் கேள்விக்கும் அ.சோ.மித்திரன்தான் பதில் சொல்லணும்.

”என்னாய்யா எதைக் கேட்டாலும் அவரையே கை காட்டுறே”.

கதை எழுதினவர் அவர்தானே.

“அந்தப் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கா?”

தெரியல. அதைப் பத்தியும் அவர் சொல்லல.

‘தெரியல...தெரியல....தெரியல. உன் கிட்டே நான் கதை கேட்க வந்ததே தப்பு. பாதியில் விட்டுட்டுப் போகவும் மனசில்ல. சொல்லு. ”இங்க நடக்குற கதையை அமெரிக்காவுக்கு ஏன் கடத்தினார்? இதுக்காவது பதில் தெரியுமா?”

அவரைச் சந்திக்க முடிஞ்சா கேட்டுச் சொல்றேன்.

”நீ ஒன்னும் கேட்க வேண்டாம். மிச்சம் இருக்கிற கதையைச் சொல்லி முடி”.

அமெரிக்காவிலிருந்தே ஃபோன் பேசிப் பேசி ஸ்ரீகுமாருக்கு தெம்பூட்டி, இவனை B.A. பாஸ் பண்ண வெச்சுடறா ரமா. இவனையும் அமெரிக்காவுக்கு வரவழைச்சு சொந்தமா ஒரு சிற்றுண்டிக் கடை வெச்சுத் தர்றா. சில வருஷங்கள் கழிச்சி, குழந்தைகளோட மாமனார் வீட்டுக்கு வந்த இவன், தான் மட்டுமே பெத்தவங்களைப் பார்த்துட்டு  அமெரிக்கா திரும்பிடறான். நாலு வருஷம் கழிச்சி, இப்போ பெத்தவங்களைச் சந்திக்கிறான். இவங்க சந்திச்சிப் பேசுற இந்தச் சம்பவம்தான் ‘அடுத்த முறை’ என்னும் இந்தச் சிறுகதையின் தொடக்கம். நான் சொன்ன மத்த சம்பவங்கள் எல்லாம் ’பின்னோக்கு’ [flash back] என்ற உத்தியைக் கையாண்டு ஆசிரியர் சொன்னது.

”அது என்ன பின்னோக்கு உத்தி? விளக்கமா சொல்லு”.

ஒருத்தன் ஊரைச் சொல்லி, பேரைச் சொல்லி, ஆதியோடந்தமா கதையை விவரிக்கிறது பழைய கதை சொல்லும் பாணி. அப்படியில்லாம, கதையின் நடுவில் வர்ற சுவையான சம்பவத்தைக் கதையின் தொடக்கமா வெச்சி, மற்ற சம்பவங்களை அடுக்கிட்டுப் போறதைத்தான் பின்னோக்கு உத்தின்னு சொல்வாங்க. இந்த உத்தி, மிச்சக் கதையையும் ஆர்வத்தோட படிக்கத் தூண்டும்.

‘இந்த உத்தி இந்தக் கதையிலும் ஆர்வத்தைத் தூண்டுதா?”

இல்ல. ஆனாலும் கதை முழுக்கப் படிச்சுட்டேன். கதையின் முடிவைச் சொல்லிடுறேன். என்ன சொன்னேன்? ஸ்ரீகுமார் நாலு வருசத்துக்கு அப்புறம் அம்மாவைச் சந்திச்சான், இல்லியா?

“சொல்லு”.

‘நீ மட்டும் வந்திருக்கிற, நான் ரமாவையும் என் பேரப் புள்ளைகளையும் பார்க்க வேண்டாமா?” என்கிறாள் அம்மா. [அம்மாவிடம் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுன்னு ஆசிரியர் விளக்கல].

அடுத்த முறை [இதுதான் கதையின் தலைப்பு] பெத்தவங்களை அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போறதா ஸ்ரீகுமார் சொல்றான்.

அம்மா உடம்பு பூதம் மாதிரி பெருத்து நகர முடியாம இருக்கா. ”பத்து வருஷமா ஏதேதோ மருந்து சாப்பிடுறா” ன்னு அப்பா சொல்றார். அதுக்கு மேல அவருக்கு ஏதும் சொல்ல முடியல. அப்பாவை நொந்து கொள்கிறான் குமார்.

அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போவதாகக் குமார் சொல்ல, அவள் மறுக்கிறாள்.

பெற்றோருக்குத் தேறுதல் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் பயணம் புறப்படுகிறான் குமார்.

‘கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள். அழுத மாதிரி தெரியவில்லை’ என்கிறார் ஆசிரியர்.

அவன் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ”உங்கள் அம்மா போய்விட்டாள்” என்கிறாள் ரமா.

வாசகன் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் [suspense] கொடுத்துக் கதையை முடிக்கிறார் அசோகமித்திரன். இவர் இந்த உத்தியை இங்கே கையாண்டது பாராட்டத்தக்கது.

”ஒரு வழியா கதையை விரிவாகவே சொல்லி முடிச்சிட்டே. இந்தக் கதையின் மூலமா அசோகமித்திரன் சொல்ல நினைப்பது [message]? அல்லது, இந்தக் கதையின் ‘கரு’ [theme] என்ன என்பதைப் புரியும்படி சொல்லிடு”

எந்த ஒரு கதாபாத்திரத்தையும் முழுமையா சித்திரிக்கல. நிகழ்ச்சி அமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்ல. அப்புறம் எப்படி கருவைக் கண்டுபிடிக்கிறது?

"புனைகதை அறுவை மருத்துவன்னு பெத்த பேர் சூட்டிக்கிட்டு இப்படி நழுவுனா எப்படி? நல்லா சிந்திச்சிப் பாரு. அசோகமித்திரன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். கருவைக் கதைக்குள்ளே எங்காவது ஒளிச்சி வெச்சிருப்பாரு. நல்லா தேடு”.

ஆங்...கண்டுபிடிச்சுட்டேன். ஸ்ரீகுமாரின் அப்பாவும் மனைவிக்குக் கட்டுப்பட்டவராய் பெத்த தாயைத் தவிக்க விட்டவர். அந்த அம்ம இறந்தபோதுகூட இவர் அவரோடு இல்லை என்ற தகவல் கதையில் இடம் பெற்றிருப்பது இப்போது நினைவுக்கு வருது. ஸ்ரீகுமாரும் தன் அப்பவைப் போலவே தன் தாயைத் தவிக்க விட்டவன். அவள் சாகும்போது இவன் அவளுடன் இல்லை. இதன் மூலம் அசோகமித்திரன் சொல்ல நினைப்பது..............................

’இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பெண்டாட்டிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இவர்களைப் பெற்று வளர்த்தவர்கள் நிராதரவாக வாழ்ந்து, அனாதைகளாகச் செத்துப் போகிறார்கள்’.

உண்மையில் இதுதான் இந்தக் கதையின் கருவா?

என்னுடைய இந்த விமர்சனம் ஏற்கத் தக்கதா?

கதையைப் படித்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

இது முதல் இடுகை மட்டுமல்ல; ‘முன்னோட்ட இடுகை’யும்கூட.

வாரத்தில் மூன்று நாட்களேனும் இடுகை சேர்க்கும் எண்ணம் உள்ளது. சூழ்நிலையின் பாதிப்பால் இடுகைகளின் எண்ணிக்கை குறையவும் கூடும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000