வெள்ளி, 31 டிசம்பர், 2021

யாங்கோன்[Yangon] தேவதை!!!

யாங்கோன்[ரங்கூன்] மியான்மர்[பர்மா] நாட்டின் மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தில் உள்ள மிகப் பெரிய ஒரு காய்கறிகள்&பழங்கள்&சமைத்த உணவுகள் அங்காடியைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ள...

"யோவ், பர்மா அங்காடியைப் பத்தித் தெரிஞ்சிட்டு, விமானம் ஏறிப் போய்க் காய்கறியும் பழமும் மற்றதும் வாங்கிட்டு வரவா போறோம்? தேவதையைப் பத்திச் சொல்லய்யா" என்று இடைமறிக்கும் உங்களின் மனப் பதற்றத்தை உணர முடிகிறது. 

சொல்கிறேன்[அவசரப்பட்டு, 'காணொலி'க்குத் தாவிவிடாதீர்கள். தேவதையை ஒரு முறை பார்த்துவிட்டால் மீண்டுவந்து வாசிப்பைத் தொடர்வது இயலாமல் போகலாம்].

'அவள் சிக்கென்று இருந்தாள்' என்று நம் கதாசிரியர்கள் வர்ணிப்பது பலருக்கும் தெரியும். அது கதைகளில் மட்டுமல்ல, எதார்த்த வாழ்க்கையிலும் 100% 'சிக்' உடம்புக்காரியாக இந்தத் தேவதை வலம் வருவதை இந்தக் காணொலியில் காணலாம்.

இவள் பர்மா நாட்டுப் பைங்கிளி. பர்மிய மொழி உச்சரிப்பில் இவள் பேசுகிற ஆங்கிலம், ஆங்கிலேயனுக்கும் பர்மாக்காரனுக்கு புரியுமா தெரியவில்லை. நம்மவர்க்குப் புரிவது சந்தேகம்தான்.

அங்காடிப் பகுதிகளில் உலா வந்து மழலைக் குரலில் ஏதேதோ சொல்லி நம் செவிகளில் தேன் பாய்ச்சுகிறாள்.  

ஊன்றிக் கவனித்தால் புரியக்கூடும். கள்ளம் கபடமற்ற இவளின் முக அழகை ரசிப்பதில் முழு நேரமும் கழிவதால், பேச்சைக் கவனிப்பது சாத்தியப்படாது.

முகம் காட்டி நடக்கிறாள்; முதுகு காட்டியும் நடந்து செல்கிறாள். எதைக் காட்டியும் காண்போரைக் கவரும் எண்ணமெல்லாம் இவளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சூதுவாதற்ற ஒரு பதின்பருவக் குழந்தையாகத்தான் தெரிகிறாள்.

இவளுடையது அன்ன நடையல்ல; தரை பார்த்து நடக்கும் நம்ம ஊர்ப் பெண்ணின் நாண நடையுமல்ல; நிமிர்ந்த நடை.

இவளின் நடை தளர் நடையல்ல; தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் நளின நடை.

பேசும்போதெல்லாம் சிரிக்கிறாள்; பேசி முடித்த பிறகும் சிரிக்கிறாள். சிரித்து இன்புறுத்துவதற்கென்றே பிறந்தவளோ என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

"பிரம்மன், இந்தத் தேவதையைப் படைத்து, மேலுதட்டில் ஒரு திருஷ்டிப் பொட்டும் இட்டு, பூந்தேரில் ஏற்றிவந்து, பர்மாவின் 'யாங்கோன்' தெருவில் இறக்கி விட்டுவிட்டுப் போனானோ!" என்று வியந்து மகிழ்ந்தேன்.

நன்றியும் நவின்றேன்.

காணொலி:

வியாழன், 30 டிசம்பர், 2021

திருநீறும் நெற்றியும்![புத்தம் புதிய புதுக்கவிதை]

[படங்கள்: கூகுள்]
நான் மதச் சார்பற்றவன்.

ஆடவர்கள்

நெற்றி நிறையத் திருநீறு தீட்டுவது

எனக்கு

அறவே பிடிக்காது. 

ஆனாலும்,

பிறை வடிவ நெற்றியில் 

புருவ இடைவெளிப்

பொட்டுக்குச் சற்று மேலே

வரிவரியாகவும் சின்னஞ்சிறு கீற்றாகவும்

பெண்கள் இட்டுக்கொள்ளும் 

திருநீறு

எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அவர்கள் பக்தைகள் என்பதால் அல்ல;

அது

அவர்களின் அழகு முகத்துக்கு

மேலும் அழகு சேர்ப்பதால் மட்டுமே!

==========================================================================


புதன், 29 டிசம்பர், 2021

விரல்களை வீங்க வைத்த 'வயாகரா'!!![சிரிப்புக் கதை]

'ஜேம்ஸ்', சிகாகோ மருத்துவமனையில் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தார்.

தனக்கான முறை வந்ததும் பார்த்தார்.

தேவையான பரிசோதனைகள் முடிந்ததும் "உங்க உடம்பில் பிரச்சினை ஏதுமில்லை. நீங்க போகலாம்" என்றார் மருத்துவர்.

ஜேம்ஸ் தயங்கியபடி நிற்க, மருத்துவர் மீண்டும், "நீங்க போகலாம்” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார். 

ஜேம்ஸ் மருத்துவருக்கு மிக அருகில் சென்று, "எனக்கு வயாகரா வேண்டும்” என்றார். 

மருத்துவர் 1 வயாகரா 100mg எழுதினார். 

"இது போதாது டாக்டர்.” -ஜேம்ஸ்.

"ஒன்றுக்கு மேல் எழுத முடியாது." -டாக்டர்.

ஜேம்ஸ் விடுவதாக இல்லை. “மூன்று கேர்ள் ஃபிரண்ட்ஸைச் சந்திக்க போகிறேன். எனக்கு மூன்று மாத்திரைக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார்[ஒரு சந்தேகம்: மருத்துவர் சீட்டு எழுதித் தந்தால் மட்டும்தான் வயாகரா வாங்க முடியுமா? உலக நடப்பு என்னவோ?].

டாக்டர் மூன்று மாத்திரைகளை எழுதினார். 

சில நாட்கள் கழிந்தன.

முதல் ஆளாக மருத்துவமனை சென்று அதே மருத்துவரைப் பார்த்தார் ஜார்ஜ்.

"என்ன பிரச்சினை?" என்றார் மருத்துவர்.

"என்னோட மூனு கேர்ள் ஃபிரண்ட்ஸ் என்னைச் சந்திக்கிறதா இருந்த அந்த நாள் வந்தது. காலையில் ஒரு மாத்திரை போட்டுகிட்டு ஒருத்திக்குப் போன் பண்ணினேன். ஒரு மணி நேரத்துக்கு மேலா காத்திருந்தும் அவள் வரல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இன்னொரு மாத்திரை விழுங்கிட்டு மற்றொருத்திக்குத் தகவல் சொன்னேன். அவளும் வரல. காத்திருந்து சலிச்சிப் போய், மூனாவதா ஒரு மாத்திரை எடுத்துட்டு இன்னொருத்தியிடமும், உடனே புறப்பட்டு வா"ன்னு சொன்னேன். அவள் "அடுத்த வாரம் வர்றேன்"னு சொல்லிப் போனை வைச்சுட்டா" என்று குரலில் சோகம் கொப்பளிக்கச் சொன்னான் ஜார்ஜ்.

அவனை உற்றுப் பார்த்த மருத்துவர், "அவங்க ஏமாத்தினதுக்கும் உன் கை விரல் வீக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.

சற்றே தயங்கிய ஜார்ஜ், "அது வந்து... வந்து... வந்து..." -சொல்ல நினைத்ததைச் சொல்ல இயலாமல் முகத்தில் அசடு வழிய நின்றுகொண்டிருந்தான்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவன் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர், லேசான புன்னகையுடன், "கட்டிய பெண்டாட்டியை நம்பலாம். இனியும் கேர்ள் ஃபிரண்ட்ஸை நம்பி உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம்" என்று புத்திமதி சொன்னதோடு, விரல் வீக்கத்துக்கான மாத்திரையும் எழுதிக் கொடுத்தனுப்பினார்.

குறிப்பு: கதையின் முடிவு புரிந்ததா? புரியலேன்னா இழப்பு ஏதும் இல்லை. முக்கிய வேலை எதுவும் இருந்தா பாருங்க! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================ஆதாரம்: 

https://nakkheeran.in/360-news/life/20-years-viagra-gives-pleasure-and-gets-life-2


கல்லூரிக் காதல்![படிப்பினைக் கதை]

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ”உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

’தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.” -ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, ’அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.

செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு முதலிரவு 'முன்னோட்டம்'[இளசுகளுக்கு மட்டும்]!!!

வழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, 'குழம்பி' குடித்து மணமகள் பல்லவியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

உள்ளறையிலிருந்து சர்வ அலங்காரங்களுடன் வெளிப்பட்ட பல்லவி அனைவரையும் கும்பிட்டு அமர்ந்தாள்.

அவளின் அபார அழகு அவர்களை வெகுவாகக் கவர, "பெண்ணை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்துடலாம்" என்றார்கள் ஒருமித்த குரலில்.

"பார்த்துடுவோம்" என்றார் பல்லவியின் அப்பா.

"பல்லவியோடு தனியா பேசணும்" என்றான் மாப்பிள்ளை சந்திரன்.

பெண் வீட்டார் சம்மதிக்க, தனியறைக்கு இடம் பெயர்ந்தாள் பல்லவி. சந்திரன் பின்தொடர்ந்தான்.

"உட்காருங்க". -அவள் நின்றுகொண்டே அவனுக்கு ஓர் இருக்கையைக் காட்டினாள்.

சந்திரன் உட்காரவில்லை. அதிரடியாக, மது ஊறிப் பளபளக்கும் அவளின் அதரங்களில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

மூச்சுத் திணறிய பல்லவி, "தனியா பேசணும்னு சொல்லி....." -சிரமப்பட்டுச் சிதைந்த சொற்களை  உதிர்த்தாள்.

"காதலர்களாகிய நாம் பல தடவை ரகசியமாச் சந்தித்துப் பேசிட்டோம். நம் கல்யாணத்துக்கு முன்பே உனக்கு முத்தம் கொடுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். நீ சம்மதிக்கவே இல்லை. இன்னிக்கி நம் கல்யாணம் உறுதியாயிடிச்சி. உன் சம்மதம் இல்லாமலே....."  என்று சொல்லி நிறுத்தி, அவளின் முன்னெற்றி, கண்கள், கன்னங்கள், கழுத்து..... என்று ஆசைப்பட்ட இடங்களிலெல்லாம் அசுரத்தனமாக முத்தங்கள் பதிக்கலானான் சந்திரன்.

"வரம்பு மீறிடுவீங்களோன்னு எனக்குப் பயமா இருக்கு" என்று கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக்கொண்டு, கிறங்கிய குரலில் சொன்னாள் பல்லவி.

"பயப்படாதே. இந்த முத்தம் நம் முதலிரவுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே" என்று முணுமுணுத்தான் சந்திரன்.

நேரம் கரைந்துகொண்டிருந்தது. இருதரப்புச் சொந்தங்களும் இவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்!

==========================================================================


திங்கள், 27 டிசம்பர், 2021

மாதவிலக்குக் குருதியின் மருத்துவக் குணம்!

எதைத் தீட்டென்றும் அசூசை என்றும் நம்மவர்கள் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்.

'வேர் செல்'களைப்[Stem Cells] பயன்படுத்தி உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

வளரும் கருவிலிருந்து 'வேர் செல்'களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி.....

குழந்தை பிறந்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து 'வேர் செல்'களைப் பிரித்தெடுப்பதே. பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கிலிருந்தும் 'வேர் செல்'களைப் பெறமுடியும்.

இரத்தத்தில் காணப்படும் 'வேர் செல்'களை 'ஸ்ட்ரோமல்-ஸ்டெம் செல்' என்பார்கள். கருவிலிருந்து பெற்ற 'வேர் செல்'களிலிருந்து சகலவிதமான திசுக்களையும் பெற முடியும்.

'வேர் செல்'களிலிருந்து அடிபோஜெனிக், காண்ட்ரோஜெனிக், ஆஸ்டியோஜெனிக், அதாவது கொழுப்புத் திசு, இணைப்புத் திசு, எலும்புத் திசு, இதயத் திசு, நரம்புத் திசு ஆகியவற்றைப் பெறமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன் மூலம்,

'வேர் செல்' சிகிச்சைகளுக்குப் பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இனியேனும், பெண்களின் மாதவிலக்குக் குருதி அசூசையானது என்று சொல்லி, நம் மக்கள்[பெண்கள் உட்பட] பெண்ணினத்தை இழிவுபடுத்துவதைத் தவிர்ப்பார்களாக!

==========================================================================

நன்றி:

மு.குருமூர்த்தி, KETRU.COM

http://idhuthanunmai.blogspot.com/2008/10/blog-post_28.html

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

'மரபணு'[Gene] நிகழ்த்தும் மாயாஜாலம்!!!

ஜீன் என்னும் ‘மரபணு’[பரம்பரைப் பண்பு தொடர்வதற்குக் காரணமாய் அமைவது; gene, unit of hereditary information that occupies a fixed position (locus) on a chromosome]க் கண்டுபிடிப்பே இந்த நூற்றாண்டின இணையற்ற சாதனையாகும். கிளியிலிருந்து கிளியும் மானிலிருந்து மானும் மனிதனிலிருந்து மனிதனும் தோன்றக் காரணம் இந்த ஜீன்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உயிரினங்களின் தனித்தன்மைக்குக் காரணமான இந்த வஸ்துவைப் பிரித்தெடுப்பதில் அறிவியலார் அடைந்த வெற்றியே இன்று மரபுப் பொறியியலாகப் பரிணமித்து, நேற்றுவரை இயற்கையின் கைப்பாவையாக இருந்த பரிணாமத்தை விஞ்ஞானத்தின் தத்துப் புத்திரியாக மாற்றி அமைத்துள்ளது.

மாறுபட்ட வண்ணங்களைக் கலந்து வேறுபட்ட நிறங்களைத் தோற்றுவிக்க முடிகிறதல்லவா? அது போல, மாறுபட்ட ஜீன்களை இணைப்பதன் மூலம் விதம் விதமான விந்தை உயிர்களைப் படைத்து அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது அறிவியல்.

ஒன்றன் உடலிலிருந்து ஜீன்களைப் பிரித்தெடுத்து அதை மற்றொரு தாவரம் அல்லது விலங்கினுள் செலுத்திப் புதிய உயிரினத்தை உருவாக்க முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

சான்றுகளாகச் சில சாதனைகள்.....

கல்கத்தா உயிரியல் விஞ்ஞானிகள், பெண் சிங்கத்தின் ஜீனையும் ஆண் புலியின் ஜீனையும் இணைத்துப் புதிய விலங்கினமான ‘புலிங்கம்’[Tigon] படைத்துள்ளனர்.

இங்கிலாந்து உயிரியலார், குதிரையையும் வரிக்குதிரையையும் இணைத்துக் ‘குதிரைவரி’ என்ற புதிய மிருகத்தை உருவாக்கி மக்கள் பார்வைக்காக லண்டன் மிருகக் காட்சி சாலையில் உலவ விட்டார்கள்.

நீல ரோஜாவை உருவாக்கும் வேலை ஆஸ்திரேலியாவில் மும்முரமாக நடக்கிறது [முயற்சி வெற்றி பெற்றதா என்பதை அறிய இயலவில்லை].

நாம் உண்ணும் காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவை  இவ்வாறு உருவாக்கப்பட்டவையே.

இவ்வகையில் ஏராளமான நாய் இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

‘கிரேட்டன்’ என்ற நாய் வலுவிலும் உருவிலும் ஒரு சிறிய குதிரையை ஒத்தது.

சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொஞ்சுவதற்குக் கைக்கு அடக்கமான நாயும் உருவாக்கப்பட்டுள்ளது.

மரபுப் பொறியியல் மூலம், ஒரு D.N.A இழையை வேண்டியவாறு பிரித்து அல்லது, துண்டித்து, அதை மற்றொரு வகை D.N.A  வுடன் இணைத்து, கலப்பு D.N.A [Recombinat D.N.A]வை இன்றைய உயிரியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.

வைக்கோலை விதைத்தே நெல் நாற்றுகளை முளைக்க வைக்கும் விவசாய முறை வெகு விரைவில் தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம்.

விதைப்புக்காக ஒதுக்கப்படும் பெருமளவு தானியம் உணவுக்குப் பயன்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள்.

ஒரே ஒரு மரத்தின் கிளைகளில்,  சமையலுக்குத் தேவையான பல வகைக் காய், கனிகள் காய்த்துப் பழுத்துத் தொங்கும் காலமும் விரைவில் வரும் என்று நம் காதில் தேன் சொரிகிறார்கள் விஞ்ஞானிகள்.

கூந்தலில் சூடுவதற்கான மலர்களுக்கென்றே சில கிளைகள் ஒதுக்கப்படுமாம்!

பலவித மாமிசத் துண்டங்கள் காய்க்கும் கிளைகள்கூட அதே மரத்தில் இடம்பெறுமாம்!

மரபணு சிகிச்சை மூலம் தீராத நோய்களைக்கூடக் குணப்படுத்தலாமாம். விவசாயத்தில் விளைச்சலின் அளவைப் பன்மடங்கு பெருக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஆக, மற்றத் துறைகளுக்கிடையே ‘மரபுப் பொறியியல்’ சூப்பர் ஹீரோவாக இன்று வலம் வந்துகொண்டிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.

==========================================================================இராஜா பாலச்சந்தர் எழுதிய, ‘பாதை அமைக்கும் பரிணாமம்’ [மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம். முதல் பதிப்பு: மார்ச் 2004] என்னும் நூலிலிருந்து ஆசிரியரின் அனுமதியின்றி எடுத்தாளப்பட்டது.

ஆசிரியருக்கு என் மனப்பூர்வ நன்றி.

சனி, 25 டிசம்பர், 2021

கடவுளும் தட்டாம்பூச்சியும்!!

அவருக்குத் தோற்றம், அழிவு என்று எதுவுமே கிடையாதாம். எப்போதும் இருந்துகொண்டே இருப்பாராம். நமக்கெல்லாம் அற்ப ஆயுள். 

அவர் சக்தி வடிவானவராம். அவருக்கு இணையான சக்தி படைத்தவர் எவரும் இல்லையாம். எதையாவது தின்று ஜீரணித்துக் கழிவை வெளியேற்றினால்தான் நம்மால் உயிர் வாழ்ந்திட முடியும். உண்ண உணவு இல்லையேல் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்.

அவர் எந்தவொரு விருப்பு வெறுப்புக்கும் உள்ளாகாதவர். ஆசை, பாசம், காமம், கருமாந்தரம் என்று ஏதேதோ உணர்ச்சிகள், நோய்கள் போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி,  எண்ணற்றத் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்த பிறகே அழிவை எதிர்கொள்வது நமக்கான விதி[அதை வகுத்தவரும் அவர்தானாம்]. 

அவர் படைப்பாளி. நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள்; இருக்கும்வரை அவர் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடி ஓய்ந்து உருக்குலைந்து மறைந்துபோகிற அற்ப ஜீவன்கள்.

அவர் கடவுள்; நல்லவராம்; கருணை வடிவானவராம்.

100% நல்லவர் என்றால்... 100% கருணை வடிவானவர் என்றால், நம்மையும் ஏனைய உயிர்களையும் அவரின் 'மறுபிரதி'[True Copies]களாகத்தான் படைத்திருத்தல் வேண்டும். மனம்போன போக்கில் ஏறுமாறாகவும், எக்குத்தப்பாகவும் படைத்துவிட்டார்.

இந்தத் தவற்றைச் செய்ததால் அறிவுஜீவி மனிதர்கள் இவரைக் கடுமையாகச் சாடுகிறார்கள்.

படைத்தல், துடைத்தல்[அழிப்பது] என்று எதையும் செய்யாமல் 'சும்மா'வே இருந்திருந்தால்[படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பு 'சும்மா'தானே இருந்திருப்பார்?] சாடல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

சும்மா இருப்பதில் சுகம் ஏதுமில்லை என்றால், மூலக்கூறுகள்[பஞ்சபூதங்கள்], நட்சத்திரங்கள், கோள்கள் என்று எதை வேண்டுமானாலும் படைத்து, வான்வெளியில் உலவவிட்டும், சுழலவிட்டும், வெடிக்கவிட்டும் வேடிக்கை பார்த்துப் பொழுதைக் கழித்திருக்கலாம்.

இப்படியாக எதையும் செய்யாமல், உயிர்களைப் படைத்து, போராடவிட்டு வேடிக்கை பார்த்து இவர் குதூகளிப்பது, தட்டாம்பூச்சி[தும்பி]யின் வாலில் நூல் கட்டிச் சிறுவர்கள் விளையாடி மகிழ்வது போல உள்ளது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று போற்றப்படும் இவரின் தகுதிக்கு இது ஏற்றதல்ல.

படைத்தலும் காத்தலும் அழித்தலும் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள். வருங்காலத்தில், இருப்பவை அழித்துப் புதியவை படைக்கும்போதாவது கடவுள் தன்னைத் திருத்திக்கொள்வார் என்று நம்பிவோம். ஹி... ஹி... ஹி!!!

==========================================================================


வெள்ளி, 24 டிசம்பர், 2021

மண்ணுலகம் 'மயான பூமி' ஆகும் அந்தக் கணங்களில்.....

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு சுமார் 149,600,000 கிலோமீட்டர்கள். சூரியன் ஒரு பெரிய நெருப்புக் கோளமாக உள்ளது; பூமியைவிடவும் 13 லட்சம் மடங்கு பருமன் உடையது.

சூரியன் பூமியைப் போல் திண்மையாக இல்லை. சாதாரண விண்மீன்களைப் போல் இதுவும் ஹைட்ரஜன் வளிமத்தால் ஆனது.

ஒரு நொடிக்குள் 'அணுக்கரு வினை' புரியும் ஹைட்ரஜனின் நிறை லட்சம் கோடிப் பவுண்டுகள். குத்துமதிப்பாக 45 கோடி டன்கள்.

இந்த ரீதியில் போனால், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியன் தன்னிடமுள்ள ஹைட்ரஜன் முழுவதையும் இழந்து 'செம்பூதமாக[Red Giant]' மாறிவிடக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்நிலையில், அதன் அருகிலுள்ள புதனும் வெள்ளியும் சூரியச் சூட்டில் உருகிப்போகும்.

பூமியிலுள்ள கடல்கள் வற்றி ஆவியாக மாறிட, இங்கே வெறும் பாறைகள் மட்டுமே மிஞ்சும். மரங்கள் செடிகொடிகள் என்று எல்லாமே முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகும். மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில், இந்தப் பூமி ஒரு முழு மயானமாகக் காட்சியளிக்குமாம்.['விண்வெளி விந்தைகள்', தி.பட்டாபி சீத்தாராமன்; அழகுப் பதிப்பகம், சென்னை].

இந்த மண்ணுலகம் இத்தகையதொரு அவலத்துக்கு உள்ளாகும் நிலையில் இங்குள்ள கணக்கற்ற கடவுள்கள் இதை அழியாமல் காப்பாற்றுவார்களா?

மாறாக, இவர்கள் எல்லோரும்[அனைத்து மதக் கடவுள்களும்], கும்பிடுவதற்கும், கட்டுக்கட்டாய்ப் பணத்தையும், கொத்துக் கொத்தாய்த் தங்க நகைகளையும் உண்டியலில் போடும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் கோள்களைத் தேடிக் கண்டறிந்து அங்கெல்லாம் குடியேறுவார்களா?

முனியப்பன், கருப்பனார், ஐய்யனாரப்பன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற அசைவக் கடவுள்களும் அவர்கள் போன பாதையில் தங்களின் பயணத்தைத் தொடர்வார்களா?

சாமிகளை விடுங்கள், இங்கு ஆசாமிகள் உருவில் நடமாடியபோது, சாமிகளுக்குச் சமமாக மதித்து வழிபடப்பட்ட மகான்களும் அவதாரங்களும் சொர்க்கத்தில்தான் இருந்துகொண்டிருப்பார்கள். அங்கிருந்தவாறே இந்தப் பூமி மயானமாகக் காட்சி தருவதைக் கண்டு மனம் கலங்குவார்களா?

மயான பூமியை, மீண்டும் மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கேற்ற பழைய புண்ணியப் பூமியாக மாற்றுவதற்கு ஆவன செய்வார்களா?

'செய்திட வேண்டும்' என்று அவர்களைத் துதிபாடும் பக்தகோடிகள் இக்கணமே கோரிக்கை வைக்கலாம்!

=======================================================================


வியாழன், 23 டிசம்பர், 2021

'விந்து' திசை மாறிப் பயணிக்கும் விந்தை!!

ஆண் பெண் உடலுறவில் விந்து வெளியேற்றம் என்ற நிலை மிகவும் முக்கியமானது. ஆனால் நிறைய ஆண்கள் தங்களின் விந்தணுக்களை வெளியேற்றுவதில் சிக்கலைச் சந்திக்கிறார்களாம். 

உடலுறவில் உச்சநிலையை அடையும்போது விந்துப் பையிலிருந்து வெளியேறிப் பாயும் விந்து, அதற்கான பாதை வழியாக வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பைச் சென்றடைவது இயல்பான நிகழ்வாகும்.

விந்து வெளியேறும்போது சிறிநீர்ப்பையின் வாய்ப்ப் பகுதி அடைபட்டுவிடுவது இயல்பு. ஆனால், சிறுநீர்ப் பிரச்சினைக்கு மருந்து உட்கொள்ளுதல் போன்ற சில காரணங்களால், அது அடைபடாமல் திறந்த நிலையிலேயே இருந்துவிடுகிறதாம். இதன் விளைவு.....

உடலுறவின் உச்ச நிலையில் வெளியேறத் தொடங்கும் விந்துத் திரவம் உரிய பாதை[சிறு குழாய்] வழியாக முன்னோக்கி வெளியேறாமல் பின்னோக்கிச் சென்று, திறந்திருக்கும் சிறுநீர்ப் பைக்குள் இறங்கிச் சிறுநீருடன் கலக்கிறது[படம்]. பின்னர், சிறுநீர் வெளியேறும்போது அதனுடன் கலந்து நுரையாக வெளியேறவும் செய்கிறது. முறையாகப் பயணித்து ஆண் உறுப்பு வழியாக வெளியேறுவது நிகழாமல் போவதால் பெண் கருவுறுதலுக்கான வாய்ப்பும் நழுவிப்போகிறது.

மருத்துவர்களை அணுகினால், சிறுநீர்ப் பையின் வாய்ப்பகுதித் தசை உரிய நேரத்தில் சுருங்கி மூடிக்கொள்வதற்கான மருந்துகளை[மிடோட்ரின், ப்ரோம்பெனிரமைன் மற்றும் இமிபிரமைன் (டோஃப்ரானில்)]ப் பரிந்துரைப்பார்கள். 

உளவியல் காரணங்கள் உள்ளனவா என்று ஆராய்ந்து சிகிச்சை அளிப்பதும் உண்டு.

==========================================================================https://tamil.samayam.com/lifestyle/health/did-you-know-about-an-ejaculation-problem-of-men/articleshow/83308015.cms?story=4       7 Jun 2021, 5:28 pm


புதன், 22 டிசம்பர், 2021

கல்லுக்குள் தேரை!... கடவுளின் கருணை?!

உருப்பெருக்கி[பூதக்கண்ணாடி]க் கண்ணாடி மூலம் பாறைகளை நுணுகி ஆராய்ந்தால், அரிதாகச் சில இடங்களில் கீறல்கள் தெரியும். பாறையின் மீது படிந்திருக்கும் மிக மிக நுண்ணிய முட்டைகள் காற்றிலும் மழை நீரிலும் நகர்த்தப்படும்போது, அந்தக் கீறல்களின் வழியாக பாறைக்குள் அவை நுழைந்துவிடும்.

அதே கீறல் வழியாக காற்றும் நீரும் முட்டைகளை அடைகின்றன.

அவற்றில் அழுக்கும், சிறு சிறு கிருமிகளும் உள்ளன.

முட்டை(கள்), தேரையாக/தேரைகளாக உருப்பெறும் நிலையில்,  காற்றிலும் நீரிலும் உள்ள கிருமிகளும் அழுக்கும் உணவாகி அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஈரப்பதம் வாய்க்காதபோது, பல நாட்கள் காய்ந்த கருவாடு போல் கிடந்து அது/அவை உயிர் வாழுமாம்.

இதுதான், கல்லுக்குள் தேரை உயிர் வாழும் அதிசயம்.

மாங்கொட்டைக்குள் வண்டு மறைந்திருப்பதும் இது போன்றதொரு நிகழ்வால்தான்.

உருப்பெருக்கியில் பார்த்தால், நம் தோலில் உள்ளது போலவே, மாம்பழங்களிலும் துவாரங்கள் இருப்பதைக் காணலாம்.

வண்டின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது பழத் துவாரங்களின் வழியாக உள்ளே நுழைகிறது. பழத்திலிருந்து தனக்குத் தேவையான உணவைப் பெறுகிறது.

அது உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று, சூரிய ஒளி ஆகியவையும் துளைகள் வழியாக உள்ளே செல்கின்றன.

கல்லுக்குள் தேரையாகட்டும், பழத்துக்குள் வண்டாகட்டும் அவை அசைவற்ற நிலையிலேயே இருப்பதால் அவற்றிற்கான உணவின் தேவை மிக மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேரை, பழத்துக்குள் வண்டு ஆகியவை பற்றிய இந்த விளக்கவுரையை வாசித்த பிறகும், 'தேரையும், மாம்பழத்து வண்டும் உயிர் வாழ்வது கடவுளின் கருணையால்தான் என்று எவரேனும் சாதிப்பார்களேயானால், அவர்கள் காற்றும் ஒளியும் புகாத ஒரு பெட்டிக்குள் ஒரு தவளையையோ தேரையையோ கொஞ்சம் நாட்கள் அடைத்து வைத்து, அவற்றிற்கு உணவளித்துக் காப்பாற்றுமாறு தங்களின் குலதெய்வத்தையோ, வழிபடு கடவுளையோ வேண்டிக்கொள்ளலாம்.

அவை உயிரோடு இல்லையென்றால், கடவுள்களைச் சபிக்க வேண்டாம்.

பாவம் கடவுள்கள்!

==========================================================================ஆதார நூல்: 'கடவுளும் பிரபஞ்சமும்' -மா. சிங்காரவேலு. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.

                                               *  *  *

தேரை: கூடுதல் தகவல்:

'கல்லுக்குள் தேரை' என்பது பழக்கமான சொற்றொடர் என்றாலும் கல்லிடைத் தேரை என்பதுதான் சரியான சொற்றொடர் ஆகும். தவளையைப் போன்றே தேரையும் இருவாழ்வி வகையைச் சார்ந்தது. தேரை ஒரு குளிர் ரத்தப் பிராணி ஆகும். இனப்பெருக்கக் காலமான மழைக் காலத்தில்தான் வெளிப்படும். மற்றக் காலங்களில் பூமிக்கடியில் ஈரமான சூழ்நிலையில் எல்லாவிதமான செயல்களையும் முடக்கி ஒருவித உறக்க நிலையில் இருக்கும்.

அப்போது, குறைந்தபட்சச் சுவாசம் தோல் மூலம் நடைபெறும். பொதுவாகத் தேரைகள், பூமிக்கடியில் உள்ள பொந்துகளிலும் கற்களுக்கு இடையேயும் உறக்க நிலையை மேற்கொள்ளும்.

எப்போதாகிலும் கற்களைப் புரட்டும் போதும் அல்லது கற்களை உடைக்கும் போதும் இந்த உறக்க நிலையிலுள்ள தேரைகள் வெளிப்படும். அதனால்தான் 'கல்லுக்குள் தேரை' என்ற சொற்றொடர் உருவாகி இருக்கிறது. ' கல்லிடைத் தேரை ' என்பதுதான் சரியான பயன்பாடு.

தேரை இவ்விதம் உறக்க நிலையில் இருக்கும்போது தன் தசைகளில்,  கல்லீரலில் சேமித்து வைத்துள்ள(க்ளைக்கோஜன்) உணவுப் பொருளை ஆற்றல் உற்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.

https://www.kalviseithi.net/2020/05/blog-post_66.html

செவ்வாய், 21 டிசம்பர், 2021

மதங்கள் குறித்து அன்று பெரியார் கேட்ட 'கிடுக்கிப்பிடி'க் கேள்விகள்!!!

பகுத்தறிவாளன்: மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?

ஆத்திகன்: கடவுளால் உண்டாக்கப்பட்டன.


கேள்வி[பகுத்தறிவாளன்]:

மதங்கள் எத்தனை?

பதில்[ஆத்திகன்]:

பல மதங்கள் உள்ளன.


கேள்வி: இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?

பதில்: கடவுளால்.


கேள்வி: என்ன ஆதாரம்?

பதில்: வேதங்கள் சொல்கின்றன..


கேள்வி: வேதங்கள் தோன்றியது எப்படி?

பதில்: கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.


கேள்வி: இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?

பதில்: இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.


கேள்வி: இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?

பதில்: ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.


கேள்வி: ஆதாரம்?

பதில்: பைபிள்.


கேள்வி: ஏசுநாதர் என்பவர் யார்?

பதில்: கடவுளின் குமாரர்.


கேள்வி: அப்படி என்று யார் சொன்னது?

பதில்: ஏசுவே சொல்லியிருக்கிறார்.


கேள்வி: அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?

பதில்:ஏன் போதாது?


கேள்வி: இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?

பதில்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.


கேள்வி: அதற்கு என்ன ஆதாரம்?

பதில்: குரான்.


கேள்வி: அது யாரால் சொல்லப்பட்டது?

பதில்: கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.


கேள்வி: அப்படி என்று சொன்னது யார்?

பதில்: நபி அவர்கள் சொன்னார்கள்.


கேள்வி: அப்படி என்று யார் சொன்னார்?

பதில்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.


கேள்வி: வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?

பதில்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.


கேள்வி: அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான்.

[உரையாடல் தொடர்கிறது..........]

==========================================================================ஆதார நூல்: ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ், 4, இந்துக் காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.

நூலாசிரியர்; தந்தை பெரியார்.

*** ‘குடியரசு’[20.03.1938] இதழில், கடவுள் குறித்தும் மதங்கள் பற்றியும் பெரியார் எழுப்பிய கேள்விகளில்[உரையாடல் மூலம்] சிலவற்றின் தொகுப்பு இப்பதிவு.

திங்கள், 20 டிசம்பர், 2021

காய்கறி அங்காடியும் கடவுள் குடியிருப்பும் வேறு வேறல்ல!!!

பேருந்துப் பயணத்தின்போது முகக் கவசம் அணிவது அவசியத் தேவை; தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடன் பயணிக்கிற மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்றும் என்பது அதற்கான காரணம்.

காய்கறி வாங்கச் சென்றால் மேற்கண்டவற்றை முறையே அணிந்திருப்பதும், குத்திக்கொண்டிருப்பதும்  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றைப் புறக்கணித்துப் பொது இடங்களில் நடமாடினால் காவல்துறை தண்டம் விதிக்கும்.  

மருத்துவமனைகளிலும்கூட, மனிதர்களைக் கொரோனா குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் என்பதால். தடுப்பூசிகள் போடாமலும்,  முகக் கவசம் பொருத்திக்கொள்ளாமலும் அங்குச் செல்வது ஆபத்தானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களும்கூட இந்த நடைமுறைகளுக்கு விதிவிலக்கானவை அல்ல.

இதன் மூலம் நாம் ஐயம்திரிபறப் புரிந்துகொள்வது.....

அங்கிங்கெனாதபடி மண்ணுலகில் எங்கும் விரவியிருக்கும் கொரோனாவுக்குக் கடவுள்கள் குடிகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கோயில்களும் ஒரு பொருட்டல்ல என்பதே.

அவற்றைப் பொருத்தவரை, காய்கறி அங்காடிகளும், கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்களும் ஒன்றுதான். 

இது மறுக்க இயலாததொரு உண்மையாக இருக்க, பக்தகோடிகள்  அணி அணியாகவும்  அலையலையாகவும் கோயில்களுக்குப் படையெடுக்கிறார்களே, ஏன்?

இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழிபட்டால், இவர்களின் கடவுள் கண் திறக்க மாட்டாரா? கருணை மழை பொழிந்திட மறந்து இருந்திடுவாரா?

கொரோனா என்னும் இந்தத் தொற்று நோய் முற்றிலுமாய் அழிந்து ஒழிந்திடும்வரை  கோயிலுக்குப் போவதைத் தவிர்த்தால் குடிமுழுகிப்போகுமா? 

இவர்கள்.....

'வாழ்வாங்கு வாழ்வதற்குப் பக்தி ஒன்றே போதும்; பகுத்தறிவெல்லாம் தேவையில்லை என்று நம்புகிறார்களா? 

"ஆம்" என்று சொல்லி இவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

==========================================================================


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

'அந்தரங்கப் பகிர்வு'க்கு உதவும் தலைமுறை இடைவெளி!

பதின்ம வயதில்[Teen Age] ஆண்களைக் காட்டிலும் பெண் பிள்ளைகளின் உடல், மனம் ஆகியவற்றில் புதிது புதிதாக ஏராள மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் குறித்து, தயக்கம் காரணமாக எவரிடம் விளக்கம் கேட்பது என்பது புரியாமல் அவர்கள் மனம் குழம்புவார்கள்; கவலைக்குள்ளாவார்கள்; வாட்டி வதைக்கும் சந்தேகங்களைச் சம வயதுள்ள தோழிகளிடம் பகிர்வதன் மூலம் விடை காண முயற்சி செய்வார்கள். இவர்கள் எல்லோருக்குமே அனுபவ அறிவு சிறிதும் இல்லாத நிலையில், அரைகுறையாய்க் கேட்டறிந்த தகவல்களைத் தமக்குள் பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த அரைகுறைப் புரிதல் இவர்களுக்கான குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும். ஆகவே.....

தன் மகளுக்கான சக தோழிகளில் ஒருத்தியாகத் தன்னைப் பாவித்து, தயக்கத்தை விட்டொழித்து, அவளின் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் தந்து மனதில் தெளிவை உண்டுபண்ணுவது பெற்ற தாயின் கடமையாகும்.

மூன்று வயதில் ஜட்டி போடாவிட்டால், "பப்பி ஷேம்" என்கிறோம். ஆறு வயதில் பிறப்புறுப்பைத் தொடுவதற்கு எவரையும் அனுமதிக்கக் கூடாது என்று விழிப்புணர்வை உண்டுபண்ணுகிறோம். எட்டு வயதில், அவளின் 'அந்தரங்கம்' தொடர்பான எச்சரிக்கைகளைச் செய்கிறோம்[குறிப்பாக, ஆண் நண்பர்களைப் பற்றி]. 

ஆண்கள் அவளின் உணர்வுபூர்வமான உறுப்புகளைத் தொடுதல், உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுதல் போன்ற தகாத செயல்களுக்கான உள்நோக்கம் என்ன என்பதையும் அவளுக்குப் புரிய வைத்தல் மிக முக்கியத் தேவை ஆகும்.

இதற்கிடையே,

என்னதான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாக இருந்தாலும், பெற்ற மகளிடம் அந்தரங்க விசயங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாயின் மனம் பெரிதும் தயங்கவே செய்யும். இதைத் தவிர்த்திட.....

அந்தரங்கம் குறித்த விழிப்புணர்வை, பெண்ணின் பாட்டி, அல்லது அம்மாயி மூலம் ஏற்படுத்தலாம். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், குடும்ப நலனில் மிகவும் அக்கறை கொண்ட வயதான பெருசுகளின் உதவியை நாடலாம்.

ஆக, வளரிளம்[பதின் பருவம்] வயதில் பெற்ற மகளின் உடலைப் பாதுகாப்பதிலும், மனதைப் பக்குவப்படுத்துவதிலும் தாய்க்குள்ள பங்கு மிக அதிகம் என்பதை எந்தவொரு குடும்பத் தலைவியும் மறத்தல் கூடாது.

==========================================================================நன்றி: 'குமுதம்' இணைப்பு, 07.09.2015['அம்மாக்களுக்கு டிப்ஸ்...']

இயல்பான உள்ளடக்கத்துடன், கருத்துகளைப் பதியும் முறையில் மட்டும் சற்றே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சனி, 18 டிசம்பர், 2021

இப்படியெல்லாம் பொய் சொன்னால்தான் இந்துமதம் பிழைத்திருக்குமா?!?!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரங்களைக் காட்டிலும் உயரம் குறைவானதுதானாம் 'கைலாயம்'[கைலாஷ்] என்னும் சிகரம். இது சீனா நாட்டின் எல்லைக்கு உட்பட்டது.

இந்துக்களின் கடவுளான சிவபெருமான் குடும்ப சகிதம் குடியிருக்கும் சிகரம் என்பதால் இதைச் சுற்றிலும் அமானுஷ்யச் சக்தி பரவியிருப்பதாகக் காணொலிகள் மூலம் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்கள் தீவிர இந்துமதப் பற்றாளர்கள்.

இந்தக் 'கைலாயம்' என்னும் சிகரத்தை ஆராய்வதற்காகச் சீன அரசாங்கம், ஜப்பான் விஞ்ஞானிகளும் சீன விஞ்ஞானிகளும் அடங்கிய குழுவை ஹெலிகாப்டரில் அனுப்பியதாம். மோசமான வானிலை, பெரும் பனிச்சரிவு போன்றவை காரணமாக, முயற்சி பலனளிக்காததோடு ஆய்வுக் குழுவினர் பரிதாபமாக மாண்டுபோனார்களாம்.  

சீனா மீண்டும் ஒரு முறை அறிவியல் அறிஞர் குழுவை அனுப்பியது.

கைலாஷை நெருங்கும்போது உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] பற்றாக்குறை ஏற்பட்டதோடு ரேடார் கருவியும் பழுதானது. எரிபொருள் தீர்ந்தது. ஆய்வுக் குழுவும் நாடு திரும்பியது[உண்மையில், இவையும் அறியப்படாத வேறு காரணங்களுமே ஆய்வு முயற்சி  தோற்றதற்கான காரணங்கள் ஆகும்].

அப்போதைக்கு அந்த ஆய்வைத் தொடர்வதால் பயன் ஏதுமில்லை என்பதோ, புதிய அறிவியல் சாதனங்களுடன் அதைத் தொடர்வது ஏற்புடையது என்பதோ அதற்கான காரணங்களாகவும் இருக்கலாம்.

இது குறித்த, சம்பந்தப்பட்ட சீன ஆய்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகூட வெளியாகாத நிலையில்.....

'கைலாயத்தைச் சூழ்ந்திருக்கும் அமானுஷ்யச் சக்திதான், சீன ஆய்வாளர்களை மிரண்டோட வைத்தது' என்பதாகக் 'காணொலிப் பதிவுகளை வெளியிட்டு அலப்பறை செய்திருக்கிறார்கள் இந்துமதப் பரப்புரையாளர்கள்[கீழே காணொலி இணக்கப்பட்டுள்ளது].

இவர்களே பின்னர், புத்தமதத் துறவியொருவர்[2 காணொலிகள் இணைக்கப்பட்டுள்ளன] கைலாஷ் சென்று திரும்பியதாகவும், சிவபெருமானின் அருளை அவர் பெற்றிருந்ததே அவர் நிகழ்த்திய சாதனைக்குக் காரணமாக இருந்ததாகவும் விவரிக்கும் காணொலிகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

நீளம், அகலம், உயரம், சுற்றளவு என்று எந்தவொரு அளவீட்டுக்கும் கட்டுப்படாமல், அண்டவெளியெங்கும் அகன்று விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், கைலாயம் என்பது வெகு வெகு வெகு... அற்பமானதொரு புள்ளிக்குள் ஒடுங்கிக் கிடக்கிற சிறு புள்ளியாகும்.

இந்தப் புள்ளிக்குள்தான் தங்களின் முழுமுதல் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்; அதை அமானுஷ்யமானதொரு சக்தி சூழ்ந்திருக்கிறது; அதை எவராலும் அணுக இயலாது என்றெல்லாம் நம்புவதும், பிறரை நம்ப வைக்க முயற்சி செய்வதும் எள்ளி நகையாடுவதற்குரியவை.

கைலாயம் அணுகுதற்கு அரியது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு, ஒரு புத்தமதத் துறவி அங்கே சென்று திரும்பினார்[கடவுளையும் பார்த்தாராம். கடவுளின் 'தோற்றம்' குறித்து அவர் விவரித்ததைப் பக்தகோடிகள் காணொலியாக வெளியிட்டிருப்பார்கள். தேடுங்கள் கிடைக்கப்பெறும்! ஹி... ஹி... ஹி!!!] என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது இவர்கள் பின்பற்றுகிற மதத்தை மட்டுமல்ல, வழிபடுகிற கடவுளையும் இழிவுபடுத்துகிற செயலாகும்.

இவர்களுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது ஒன்று உண்டு. 

"முட்டாளாகவே வாழ்ந்து முடிப்பது உங்களின் விருப்பம் சார்ந்தது. பிறரையும் உங்களுடன் இணைத்துக்கொள்ள முயல்வது கடும் கண்டனத்திற்குரிய செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
==========================================================================


வெள்ளி, 17 டிசம்பர், 2021

போலி 'அறிவியல்வாதி' ஜக்கி வாசுதேவ்!!!

'கோலம் என்பது அலங்காரத்துக்காக போடப்படுவதில்லை. இது ஒருவித வடிவம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். நமது கலாச்சாரத்தை பொறுத்தவரை, கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர்.'

இதைச் சொல்லியிருப்பவர் 'ஈஷா அறக்கட்டளை அதிபரும், கடவுள்களுக்கெல்லாம் குரு[சத்குரு]வுமான ஜக்கி வாசுதேவ் ஆவார்https://m.dinamalar.com/detail.php?id=2914843  -டிச 16,2021 09:05]. 

'யந்திரம்' என்றால் என்னவென்று நாம் அறிவோம். அதன் வடிவமைப்புக்கேற்ப, முடுக்கிவிட்டால், தானாக இயங்கக்கூடியது. கோலத்தை யந்திரம் என்கிறாரே இந்த ஆன்மிகப் பேரொளி, கோலம் இயங்குமா? எத்தனை நேரம் இயங்கும்? இயங்குவதற்கான உந்து சக்தி[பெற்றோல், டீசல், மின்சாரம் போல] எது? 

இவற்றில் எந்தவொரு கேள்விக்கும் அறிவியல் அறிவுடன் இவரால் விடை சொல்ல இயலாது.

வாசலில் போடப்படும் கோலத்தை இயந்திரம் ஆக்கியதோடு இவர் நிற்கவில்லை.

மார்கழி மாதத்திலான சூரிய ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களான தட்சிணாயனம், உத்தராயனம் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் பத்தாம் வகுப்பில் படித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டுவிட்டு, 

'குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதால் அந்தரத்தில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக்கொள்ள முடியும். இதை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தால்[?], உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்' என்றும் கயிறு திரித்திருக்கிறார் ஒட்டுமொத்தக் கடவுள்களுக்குமான[சத்>பரம்பொருள்] இந்தக் குரு.

கோலம் என்பது, வெள்ளை நிறக் 'கல் பொடி'யாலும், அரிசி மாவாலும்[வேறு எதையும் பயன்படுத்துகிறார்களா?] போடப்படுவது.

இவற்றிற்கு விண்ணில் பரவிக் கிடக்கும் சக்தியைக் கிரகிக்கும் ஆற்றல் உள்ளது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை ஜக்கி; மனம்போன போக்கில் புளுகியிருக்கிறார்.

இந்த மனிதர் போலி ஆன்மிகவாதி மட்டுமல்ல, போலி அறிவியல்வாதி என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

தவறினால்.....

இம்மாதிரிப் போலிகளின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து மக்களின் சிந்திக்கும் அறிவு முற்றிலுமாகச் சிதைக்கப்படும் என்பது உறுதி.

==========================================================================


வியாழன், 16 டிசம்பர், 2021

கின்னஸ் கடவுள்கள்!!!

கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், கயமுகன், ஒற்றைக்கொம்பன், சித்திபுத்தி விநாயகன், அங்குசபாணி, ஆனைமுகத்தோன், மகா கணபதி, விக்கினேஸ்வரன், தும்பிக்கை ஆழ்வார், சக்தி கணபதி, லட்சுமி கணபதி, ஊர்த்துவ கணபதி, ஐங்கரன், இரட்டைப் பிள்ளையார் என்றிப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் விநாயகனுக்கு மட்டும் உள்ளன.

இவரின் இளவலான முருகக் கடவுளும், வேல் முருகன், அருள் முருகன், பழனி முருகன், கந்தன், குமரன், வேலன், சரவணன், ஆறுமுகன், விசாகன், குருநாதன் என்று பெரும் எண்ணிக்கையிலான பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இவர்களின் தந்தையான பரமசிவனும், பரமேஸ்வரன், ஈஸ்வரன், அர்த்தநாரி ஈஸ்வரன், மாதொருபாகன், கபாலீஸ்வரன், சுந்தரேசன், காசி விஸ்வநாதன், காளத்தியப்பன், குற்றால நாதன், பட்டீஸ்வரன், சொக்கநாதன் என்றிவ்வாறு ஆயிரத்துக்கும் மேலான பெயர்களைப் பெற்றுள்ளார்.

பரமனின் துணைவியான ஈஸ்வரியும், பரமேஸ்வரி, பார்வதி, உமையாள், அம்பாள், காமாட்சி, சங்கரி, சுந்தராம்பாள், மீனாட்சி என்று ஏராளமான பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

இன்னும், திருமால், பிரம்மன், இந்திரன், வருணன், வாயுபகவான், அக்கினி தேவன், ஐயப்பன், மெய்யப்பன் முதலான கணக்கு வழக்கற்ற கடவுள்களும் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுவது யாவரும் அறிந்ததே.

உருவ வழிபாடு நிகழ்த்தும் மிகப் பல மதங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'இந்து'மதத்தில் உள்ள கடவுள்களை எண்ணி முடிப்பது சாத்தியம் எனினும், இவர்கள் அத்தனை பேருக்குமான பெயர்களை எண்ணிப் பட்டியலிடுவது எளிதான செயலல்ல.

இவற்றை நூலாக அச்சிட முனைந்தால் அது மிக மிக மிகப் பக்கங்களாக நீளும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

உலகில் கடவுள்களை வழிபடும் மதங்கள் உள்ளன.

எந்தவொரு மதம் சார்ந்த மக்களும் இந்து மதம் சார்ந்த மக்களைப் போல் தங்களின் கடவுள்களுக்கு இந்த அளவுக்குப் பெயர்கள் சூட்டி வழிபடுவதாகத் தெரியவில்லை.

இது ஒரு சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தச் சாதனையைக் குறிப்பிட்டு இந்துமதத்தவர், உரிய முறையில் ஒரு கோரிக்கையை முன்வைத்தால், இது 'கின்னஸ்' உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

கோரிக்கை வைப்பார்களா?!?!

==========================================================================


புதன், 15 டிசம்பர், 2021

மருத்துவர் ராமதாஸின் 'வருத்த உரை'யும் வாசகரின் 'கருத்துரை'களும்!!

//பாமக நிறுவனர் ராமதாஸ், அண்மை மாதங்களாக மாவட்டம்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பாகப் பேசிவருகிறார். 'திண்ணைப் பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி' என்பதை மையப்படுத்திப் பேசிவரும் இவர், நேற்று (14.12.2021) விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசினார்.....// -இது, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் உரைக்கு 'விகடன்' எழுதிய முகவுரைhttps://www.vikatan.com/government-and-politics/politics/drramadoss-speech-at-the-pmk-meeting-held-at-villupuram?pfrom=trendingarticle-section.  இதைச் சொடுக்கி முழு உரையையும் நீங்கள் வாசிக்கலாம்.

மருத்துவரின் 'வருத்த உரை'க்கு வாசகர்கள் வழங்கியுள்ள கருத்துரைகளின்[விமர்சனங்கள்] தொகுப்பு பின்வருமாறு[இதைப் பதிவு செய்தபோது 14 வாசகரின் கருத்துகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன]:

கருத்துரைகள் நடுநிலையானவையா, தற்சார்புள்ளவையா? 

முடிவெடுப்பது உங்களின் 'சார்பு நிலை'யைப் பொருத்தது.

கருத்துரைகள்[விமர்சனங்கள்]:

*Swaminathan K

1h

Both of you go back to doctor work. Thoratupashathukku aasaipattu kai pashathai ishakkadinga.

sethu

83 வயதிலும் ஆசையை பாரேன் ... பணம் பதவி சுய நலம் ...

Hello maramvetti captain, the way you talk is not practical because if all other people decided not to vote even one, how you talk like this. Just to impress you can talk. How you start your party by cutting road side trees and block the road. It is sick to note that you insticate violence in common people. If all other caste people joint together and avoid you all what will happen. All the best.

வன்னியன் என்ற பெயரை நீக்கி இதே அறிக்கையில் தமிழன் என்று நீங்கள் சொல்லிருப்பீர்களேயானால், அதை ஒத்துக்கொள்ளலாம், மேலும் அதை ஒரு பொன்னான அறிவுரையாக கூட ஏற்றுக்கொள்ளலாம். அறிக்கை ஜாதியை நோக்கி பயணித்தது தான் நெருடல். இருந்தாலும், இது உங்கள் கட்சி, உங்கள் நிர்வாகிகளுக்கான கூட்டம்.

எவ்வளவு உசுப்பேத்தினாலும் இனி கடினம்தான்

கலெக்டர்,செயலாளர்,இயக்குநர், ஆக அதற்கு உரிய படிப்பு மற்றும் தேர்வில் வெற்றி பெறவேண்டும் அதற்கான முயற்சி வேண்டும் நான் படிக்கமாட்டென் ஆனால் எனக்கு எல்லப்பதவியும் வேண்டும் என் மகன் முதல் மந்திரி ஆகவேண்டும் என்றால் எப்படி?

ஒட்டு மொத்த தமிழக சமுதாயமே... ஒருமுறை பாமக-விற்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டை உங்களில் ஒருவர் ஆளட்டும். அதற்கு பொருத்தமான வரை நான் கொடுத்திருக்கிறேன், அவர்தான் அன்புமணி ராமதாஸ் ----> தொடக்கத்தில் இருந்து வன்னியர்களை பற்றி மட்டுமே பேசிவிட்டு 'ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும்' பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள் ... உங்களில் ஒருவர் ஆளட்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே, ஆள்வதற்கு தகுதியான அந்த ஒருவர் என்னுடைய மைந்தன் தான் என்று சொல்கிறீர்கள் ... நியாயமா ?

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலே ஒரே ஒரு கலெக்டர் கூட வன்னியர் கிடையாது. 91 செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை, 150 இயக்குநர்களில்... ஐ.பி.எஸ் இல்... தலா 5 பேர் மட்டுமே வன்னியர்கள். -------> தம்முடைய சமூகம் முன்னேற வேண்டும் என்று பேசுவது வேறு ... ஆனால் மாநிலத்தில் உயர் பதவியில் உள்ளவர்களின் சாதியை எல்லாம் தேடி கண்டுபிடித்து, நம்ம சாதிக்காரர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பேசுவது வேறு ... இது தவறான சொல்லப்போனால் மிக ஆபத்தான அணுகுமுறை .... இது வன்னியர்களை மாற்று சமூகத்தவரிடம் இருந்து இன்னமும் அந்நிய படுத்தும் ... இது போன்ற பேச்சுக்கள் வெறுப்பை விதைத்து நாளைக்கு கலவரம் வரை தூண்டும் .. மருத்துவர் போன்ற பக்குவப்பட்ட மூத்த அரசியல் தலைவரிடம் இருந்து இது போன்ற பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை .. பாமகவை காட்டிலும் கழகங்களிலும் மாற்று கட்சியிலுமே அதிகமான வன்னியர்கள் உள்ளார்கள் ... இதனுடன் பாமகவின் வாக்கு வாங்கி வீழ்ச்சி அடைவதையும் சேர்த்து பார்க்கும் போது இது பெரும்பாலான வன்னியர்கள் இது போன்ற சமூக பற்றை உசுப்பேத்திவிடும் பேச்சுகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்பதையே காட்டுகிறது ... மது ஒழிப்பு , மாற்றம், முன்னேற்றம் என்று சற்றே பாதை மாறி கவனம் ஈர்த்த கட்சி திரும்பவும் சாதி வளையத்துக்குள் விழுவது துரதிர்ஷ்டம் ...

காசுக்கு விலைபோகிறார்கள் என்று யாரை சொல்கிறார் மருத்துவர்??ஓ... கண்ணாடியை பார்த்து பேசி இருக்கார் மருத்துவர் 😁😁😁😁

-

வீரம், மானம், ரோஷம் எல்லாம் இருக்கிறதாலதான் உங்களுக்கு வாக்களிப்பது தவறு என வன்னியர் இன மக்கள் உங்களை தேர்தலுக்கு தேர்தல் நிராகரித்து உங்கள் கட்சி தேய்பிறையாகி வருகிறது. உங்கள் மகன் சுகாதார துறை அமைச்சராக இருந்தபொழுது எத்தனை மாணவர்களுக்கு இலவச மருத்துவ சீட் வாங்கி கொடுத்தார் என்று சொல்ல முடியுமா ஐயா? வாய்ப்பு கிடைக்கும்போது உங்க பாக்கெட்ட மட்டும் நிரப்ப வேண்டியது, பதவி போனபிறகு மானம், ரோஷம், இனம்னு பிதற்றவேண்டியது.. இதுவரை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உதவுங்கள், உண்மையாக இருங்கள் அப்புறம் வன்னியர் இன மக்களும் உங்களுக்கு உண்மையாக இருப்பாங்க..

திரு விகடன் அவர்களே , ஆண்ட கட்சி என்று சொல்கிறார்கள் , எங்கு எங்கு , எந்த கால கட்டத்தில் ஆண்டார்கள் என்று ஒரு கட்டுரை எழுதவும், தெரிந்து கொள்வதற்க்காக கேட்கின்றோம் .

ஓரு ஜாதியை மட்டும் தூக்கி பிடிக்கும் இவர் மற்ற சாதிக்காரர்கள் தமக்கு ஆதரவு தருவார்கள் என்று எப்படி நம்புகிறார்?

Yes- he amassed wealth and his family becomes rich