பெரியாரை நேரில் சந்தித்துத் தன் மகளின் திருமணத்துக்கு அழைத்தார் எழுத்தாளர் கல்கி. கட்டாயம் மண விழாவில் கலந்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார் பெரியார். ஆனால்.....
அன்று மாலை, கல்கியின் நெருங்கிய உறவுக்காரர்கள் அரட்டையில் ஈடுபட்டிருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் பெரியார் வருகை புரிந்தார். மகிழ்ச்சியுடன் வரவேற்ற கல்கி, “ஏன் முகூர்த்த நேரத்துக்கு வரவில்லை?” என்று உரிமையுடன் கேட்டார்.
“நான் கறுப்புச் சட்டைக்காரன். நீங்கள் ஆஸ்திகர். தாலி கட்டும்போது எதிரில் கறுப்பு ஆடை அணிந்து நான் உட்கார்ந்திருந்தால் உங்களுக்கெல்லாம் சங்கடமாக இருந்திருக்கும். அதனால்தான், விழா முடிந்த பிறகு இந்த நேரத்தில் வந்தேன்” என்றார் பெரியார்; மணமக்களையும் வாழ்த்தினார். அப்போது.....
ஒருவர் பெரியாரிடம் திருநீற்றுத் தட்டை நீட்ட, பெரியாரும் சங்கடப்படாமல் திருநீறு எடுத்து மணமக்களின் நெற்றியில் பூசி மீண்டும் வாழ்த்தினார். புகைப்படக் கருவிகள் அந்தக் காட்சியைச் சுட்டுத் தள்ளின.
மறுநாள், ‘கல்கி’ இதழின் அட்டைப் படம் கல்கியின் அனுமதிக்காக அவர் முன் வைக்கப்பட்டது. அட்டையில், பெரியார் மணமக்களை வாழ்த்தித் திருநீறு பூசும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
“அட்டையைத் தயார் செய்தது யார்?” என்று விசாரித்தார் கல்கி.
“இந்த அட்டைப் படத்துடன் கல்கி இதழ் வெளியானால், அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணும்; இதழ் விற்பனையும் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் துணை ஆசிரியர்தான் அட்டையைத் தயாரித்தார்” என்ற பதில் கிடைத்தது.
சினம் கொண்ட கல்கி, “சபை நாகரிகம் கருதி மணமக்களுக்குத் திருநீறு பூசிய ஓர் உதாரண புருஷரான பெரியாரைக் கேவலப்படுத்த இதைவிடக் கீழான வழி ஏதுமில்லை” என்று கடிந்துகொண்டார்; கல்கி இதழின் அட்டைப் படத்தையும் மாற்றியமைக்க உத்தரவிட்டார்.
=====================================================================================
நன்றி: ‘பாக்யா’ வார இதழ் அக்டோபர் 06 - 12; 2017[‘உங்கள் கே.பாக்யராஜ் பதில்கள்’].

