வியாழன், 12 டிசம்பர், 2019

நாய்க் கடவுள்!!!

தலைப்பைப் பார்த்தவுடன், கடவுளை நான் இழிவுபடுத்திவிட்டதாக எண்ணி என்னைச் சபித்துவிடாதீர்கள்.

இந்தியாவில் நாயைக் கடவுளாகக் கருதிக் கோயில் கட்டி வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். படியுங்கள்.
வைரவரின் வாகனமாக நாய் இருந்து வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இராம நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நாய்களுக்கு என்று தனிக் கோவில் ஒன்று உண்டு.

மூலஸ்தான மூர்த்தி நாய்தான். மூலஸ்தான மூர்த்தியான நாய்க் கடவுளின் பெயர் ஸ்ரீ நாயிடோலி வீரப்பா.

ஸ்ரீ வீரமஸ்தி கேம்பம்மா என்று ஒரு கிராமிய பெண் தெய்வம் இருக்கின்றார். இக்கிராமியத் தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில்தான் நாய்க் கடவுளின் ஆலயம் உள்ளது.

கேப்பம்பா கிராமிய தெய்வத்தின் மெய்ப்பாதுகாவலனாக நாய்க் கடவுள் விளங்குகின்றார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

நாய்க் கடவுளிடம் பக்தர்கள் குறைகளை முறையிடுகின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆலயத்துக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கிராம மக்களுக்கு வருங்காலத்தை எடுத்துரைக்க வல்ல ஒரு தீர்க்க தரிசியாகவும் நாய்க் கடவுள் விளங்குகிறார்.

அதாவது, கிராமத்துக்கு ஏதாவது கேடு அல்லது தீங்கு ஏற்பட உள்ளது என்றால் நாய்க் கடவுள் அதை அறிவிப்பார் என்பது ஐதீகம்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு இக்கிராமத்தவர்களில் அநேகர் நாய்க் கடவுளின் பெயரைத்தான் சூட்டுவார்கள். ஆண் குழந்தை என்றால் வீரப்பா என்றும் பெண் குழந்தை என்றால் வீரன்னை என்றும் பெயரிடுவார்கள்.

இந்தியாவில் சாதிக் கொடுமை தலை விரித்தாடுகின்றது. ஆனால் நாய்க் கடவுள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவராக சித்திரிக்கப்படுகிறார்.

ஏனெனில் நாய்க் கடவுளின் பூசகர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாய்க்கு நினைவஞ்சலி.....!

==========================================================================
உடல்நலம் குன்றிய காரணத்தால், அதிக அளவில் புதிய பதிவுகள் எழுத இயலவில்லை. விரைவில் மீண்டெழுவேன் என்னும் நம்பிக்கை உள்ளது.

தொடர்ந்து வருகை புரியும் தங்களுக்கு என் நன்றி.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

நித்தியானந்தா குற்றவாளியல்ல! அதிபுத்திசாலி!!

நடிகை ரஞ்சிதா புகழ் நித்தியானந்தாவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்ததே. அண்மைக்கால அவரின் செயல்பாடுகள் நம்மைப் பிரமிக்க வைப்பவை.

திருவண்ணாமலையில்,  காவி உடை உடுத்து, ருத்ராட்ச மாலைகள் சூடி, ஒரு சின்னஞ்சிறிய ஆசிரமத்தில் குடியேறி, 'பரமஹம்ஸ நித்தியானந்த சுவாமிகள்’ என்று தன்னை அறிமுகப்படுத்தி, மிகக் குறுகிய அவகாசத்தில் கடவுளின் அவதாரம் என்று மிக மிகப் பெரும்பான்மை மக்களை நம்பச் செய்த இந்த நித்தி அதிபுத்திசாலி என்பதில் எள்முனை அளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

நடிகையுடன் சல்லாபித்ததற்கான ஆதாரம் வெளியானபோதே, போலிச் சாமியார் வேடம் புனைந்து மக்களை ஏமாற்றியதற்காக இந்த ஆள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை செய்யத் தவறியது மத்திய மாநில அரசுகள் செய்த குற்றம்.

பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் இன்றளவும் அனுமதிக்கப்படாத நிலையில், அழகழகான பெண்கள் இந்த ஆளின் ஆசிரமத்தில் காலவரையறையின்றிப் பக்தைகள் என்னும் பெயரில் தங்கியிருப்பதை அரசுகள் அனுமதித்தது புரியாத புதிராகும். அதன் விளைவு....

இந்த ஆளுக்குச் சொந்தமான ஆசிரமங்களில் இளம்பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவது நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலத்திலுள்ள ஆசிரமத்தில் 2 சிறுமிகள் மாயமானது நாடெங்கும் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது.

குஜராத் மாநில அரசு விழித்துக்கொண்டதன் விளைவாக, இந்த ஆள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது. நித்தியோ அயல்நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகச் செய்தி.

தென் அமெரிக்கப் பகுதியில் ஈக்வடார் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு தீவைப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து விலைக்கு வாங்கிய நித்தி, அந்தத் தீவின் மன்னராக முடிசூடிக்கொண்டுள்ளாராம். இது இப்போதைய செய்தி.

இந்திய அரசு தன்னைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, தனக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு, கைலாசம்[தீவுக்கு இந்த ஆள் சூட்டிய பெயர்] என்னும் பெயர் கொண்ட தன் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் ஐ.நா. சபையிடம் மனு அளித்துள்ளாராம்[மாலை மலர், 06.12.2019].

இந்தியாவில் உள்ள சில ஆன்மிக அமைப்புகள் தன்னைக் கொல்வதற்கு 100 முறை முயன்றதாகவும். பரமசிவனும் பார்வதியுமே தன்னைக் காத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம் நித்தி. செய்தி வெளியிட்ட மாலை மலர் நாளிதழ்.....

‘ஒரு தீவையே விலை கொடுத்து வாங்கும் அளவுக்குக் கோடானுகோடி ரூபாயை இவரால் எப்படிச் சம்பாதிக்க முடிந்தது?’ என்ற கேள்வியையும் முன்வத்திருக்கிறது. கேள்விக்குப் பதில் தரவில்லை.

பதிலை நாம் சொல்கிறோம். “நித்தி கோடானுகோடி ரூபாய்களைத் திருடவில்லை; கொள்ளையடிக்கவும் இல்லை. அதை அவருக்கு வாரி வாரி வழங்கியவர்கள், நித்தியின் விதம் விதமான போலி வேடங்களிலும் அதிபுத்திசாலித்தனமான பேச்சிலும் மயங்கிய முட்டாள் மனிதர்கள்தான்!
===========================================================================

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இது ஜோதிடர் யுகம்!!!


பெண் பாவம் க்கான பட முடிவு
ரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா.

மனதில் தாங்க முடியாத வலி. முகத்தில் பயமுத்திரை.

எதிரே, கனல் கக்கும் கண்களுடன் முரட்டுக் கணவன் வரதன். இரு பக்கமும் மூட நம்பிக்கைகளின் சேமிப்புக் குதிர்களாய் மாமனாரும் மாமியாரும்.

“என்னடா, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறே. பிறந்த நட்சத்திரத்தை மறைச்ச உன் பெண்டாட்டி பிறந்த சாதியைக்கூட மறைச்சிருப்பா. அவள் சாதி என்னான்னு கேளுடா” என்றார் வரதனின் அப்பா திருமலைச்சாமி.

“சொல்லுடி, பொய் ஜாதகம் காட்டி இதுக்கு முந்தி எத்தனை புருஷன் கட்டினே?” -கேட்டவள், வரதனை ஈன்று புறம் தந்த தனலட்சுமி.

சாரதா வாய் திறக்கவில்லை.

“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்னு சொல்லுவாங்க. இனி நம்ம கதி என்ன ஆகுமோ?” என்று தனலட்சுமி தொடர்ந்து ஒப்பாரி வைத்தபோதும் சரி, “மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் மருமகளா வந்தா மாமனாரைத் தின்னுடுவான்னு சொல்லுவாங்க. நான் சாகத் தயார். நீங்க பிழைச்சிருந்தா போதும்” என்று திருமலைச்சாமி முற்றும் துறந்த சாமியார் வேடம் தரித்தபோதும் சரி சாரதா மௌனமே சாதித்தாள்.

“என்னடி, வாயில் கொழுக்கட்டையா? பேசேண்டி” என்று வரதன் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கியபோதுதான், “நான் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். போலி ஜாதகம் காட்டி உங்களையெல்லாம் நாங்க ஏமாத்தினது தப்பு. மன்னிச்சிடுங்க. இதனால் எந்தக் கெடுதலும் நடந்துடாது” என்றாள்.

“ஏன் நடக்காது? திருவேங்கடம் என் சகலை. பெரிய ஓட்டல் வெச்சி நடத்திட்டிருந்தான். ஒரே மகன். அவன் காதலிச்ச பொண்ணையே சாதிமதம் பார்க்காம, ஜாதகம் பார்க்காம கட்டி வெச்சான். எண்ணிப் பத்தே நாள். அவன் குடும்பத்தோட போன கார் லாரி மோதி நொறுங்கிச்சி. திருவேங்கடம் அப்பவே செத்துட்டான். அவன் பொண்டாட்டிக்குப் பலத்த அடி; கோமாவில் கிடக்குறா. மகனுக்கு ஒரு கை போயிடிச்சி. மருமகக்காரி மட்டும் சின்னக் காயத்தோட தப்பிச்சுட்டா. அவ மூல நட்சத்திரத்தில் பிறந்தவள்ங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சுது. நீயும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள். நீ இந்த வீட்டில் இருந்தா எங்களுக்கும் இந்தக் கதிதான்.” -அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் திருமலைச்சாமி.

“மூலமாவது கூலமாவதுன்னு மூல நட்சத்திர தோஷமுள்ள ஒரு மூதியை மருமகளா கொண்டுவந்தா என் பெரியம்மா மக. ஆறே மாசத்தில் தாலி அறுத்துட்டா. நெஞ்சு வலிக்குதுன்னு படுத்த அவ புருஷன் எந்திரிக்கவே இல்ல.” -இது தனலட்சுமி.

நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது சாரதாவுக்கு. ஓரக் கண்ணால் வரதனைக் கவனித்தாள். மீண்டும் கை ஓங்கி வருவானோ? அடித்து நொறுக்குவானோ? சிவப்பேறிப் பழுத்த அவனின் கண்கள் சாரதாவை இப்படிச் சிந்திக்க வைத்தன.

வாய் திறவாமல் இருந்தால் தண்டனை கடுமையாகலாம் என்று பயந்தாள் அவள்; சொன்னாள்: “ஒரு கார் விபத்து நடக்குதுன்னா அதுக்கு டிரைவரும் காரணமா இருக்கலாம். ஒருத்தர் திடீர்னு செத்துப் போறார்னா, அதுக்கு மாரடைப்பு மாதிரியான நோய் காரணமா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்காம, எல்லாக் கஷ்டங்களுக்கும் மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளே காரணம்னு நீங்க சொல்றது என்னங்க நியாயம்?”

“என்னடி, நாக்கு நீளுது?” சாரதாவின் தோள்பட்டையில் எட்டி உதைத்தான் வரதன். “பத்து வருஷமா கட்டப்பஞ்சாயத்துப் பண்றேன். டூப்ளிகேட் ஜாதகம் காட்டி என்னையே ஏமாத்திட்டான் உன் அப்பன். சிங்கப்பூரில் இருந்து வந்த உன் தாய் மாமன், 'மூலநட்சத்திரத்தில் பிறந்த சாரதாவைக் கட்டிகிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'ன்னு பாராட்டினபோதுதான் நாங்க எமாந்தது தெரிஞ்சுது. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்......”

பேசுவதை நிறுத்தி, எங்கெல்லாமோ தேடி, நீண்டதொரு அரிவாளை எடுத்துவந்தான் வரதன். “இந்த நிமிசமே இங்கிருந்து ஓடிடு. இல்லேன்னா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.

“நான் எங்கே போவேங்க?”

“எங்கேயோ போ. ஏன், உன் அப்பன் வீட்டுக்கே போயேன்.”

“ஆஸ்துமாவோடு போராடுற அம்மா. வாழாவெட்டியா ஒரு அக்கா. கல்யாணம் எப்போ ஆகும்னு கூரையை அண்ணாந்து பார்த்துட்டிருக்கிற தங்கச்சிக. வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்துற தம்பி. கஷ்டங்களைச் சுமக்க முடியாம என் அப்பா திணறிட்டிருக்கார். வாழாவெட்டியா நானும் போய் நின்னா அவர் மூச்சு நின்னுடுங்க.”

வரதனின் கால்களில் விழப்போனாள் சாரதா. அவன் விலகிக்கொண்டான்.

“உன் அப்பன் சாகாம இருக்க நான் என் புருஷனைப் பலி கொடுக்கணுமா?” -கொதிக்கக் கொதிக்க வார்த்தைகளைக் கொட்டினாள் தனலட்சுமி.

“வேண்டாங்க. அப்படியெல்லாம் ஏதும் நடந்துடாதுங்க. நான் கல்யாணம் ஆகிவந்து  வருஷம் ஒன்னு ஆயிடிச்சி. அசம்பாவிதம் ஏதும் நடக்கலையே.”

கவனக்குறைவாய் கழிவறையில் தனலட்சுமி சறுக்கி விழுந்து காலை முறித்துக்கொண்டது; தண்ணியடித்துவிட்டுத் திருமலைச்சாமி மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டையைப் பிளந்துகொண்டது. தொழில் போட்டியில் எதிரிகளுடன் மோதி வரதன் ஒரு கையை உடைத்துக்கொண்டது என்றிப்படிக் காலாவதி ஆகிப்போன கஷ்டநஷ்டங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சாரதா மீது பழி போட்டார்கள் அவர்கள்; அவள் வீட்டைவிட்டு வெளியேறத்தான் வேண்டும் என்று ஒருமித்த குரலில் உத்தரவு போட்டார்கள்.

“இன்னொரு கல்யாணம் வேணுன்னா பண்ணிக்குங்க. என்னை இங்கிருந்து விரட்ட வேண்டாம்” என்று மன்றாடினாள் சாரதா. பலனில்லை.

வரதனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் மனம் இளகவில்லை.

“மரியாதையாப் போயிடு. இல்லேன்னா, சீமெண்ணை ஊத்தி எரிச்சுடுவேன். போகப் போறியா இல்லியா?”
“போயிடுறேங்க.”

ஒரு நூறு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து, “ரயில் வர்ற நேரம். சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி  நகர்ந்தான் வரதன்.

வெளியே பைக்கின் உறுமலோசை கேட்டது.

கொஞ்சம் துணிமணிகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு சாரதா புறப்படத் தயாரானபோது உள்ளறையின் கதவு சாத்தப்படுவது தெரிந்தது.

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் சாரதா. ரயில் வருவதற்கு இருபது நிமிடங்கள் போல இருந்தன. எட்டி நடை போட்டால் பத்து நிமிடங்களில் ரயில் பாதையை  அடைந்துவிட முடியும்.

வீட்டிலிருந்து வெளியேறினாள் சாரதா; நடந்துகொண்டே எதையெல்லாமோ யோசித்தாள்.

எதிர்வரும் ரயிலை எதிர்பார்த்து இரு தண்டவாளங்களுக்கிடையே மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அவள்.

வெள்ளி, 29 நவம்பர், 2019

‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கதைகளும்!

மூடம் - அறியாமை.


அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும். [Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள். [Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote]

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள். தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேடோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கம் மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை,அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன.

[belief, trust, hope என்னும் மூன்றையும், ‘நம்பிக்கை’ என்றே தமிழ் படுத்துகிறது கூகிள் மொழிபெயர்ப்பு. நாம் நம்பிக்கை என்ற ஒரு சொல்லையே ‘முன் ஒட்டு’ சேர்த்து மாறுபட்ட பொருள்களில் பயன்படுத்துகிறோம். இது பற்றிய விரிவான ஆய்வு இங்கு தேவையில்லை].

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

மூட நம்பிக்கை என்ற வார்த்தையே தவறு. சரியான நம்பிக்கைதவறான நம்பிக்கை என்றே அறிவியல் சுட்டிக் காட்டுகிறது’ என்கிறது ‘உயிரோசை’, வார இணைய இதழ்.


எந்த அறிவியல் இப்படிச் சொல்கிறது என்பது தெரியவல்லை. ‘அவநம்பிக்கை’,

‘தன்னம்பிக்கை’ ஆகியவை வழக்கில் இருப்பதை, உயிரோசை கருத்தில் 
கொள்ளவில்லை போலும்.

'நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... 

என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். 

கவிஞரின் கருத்துப்படி, ‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், 

அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது. ‘நான்
வெல்வேனா?’ என்று சொல்லியிருந்தால், அதுவும் நம்பிக்கைதான். ‘பூனை 
குறுக்கே வந்ததால்...’என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு 
காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

##பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி  14.5 பில்லியன் 

ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை 
கிறிஸ்தவ பைபிளின்படி, இந்தப் பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 
6000 ஆண்டுகள் தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால், 
அது மூடநம்பிக்கை. 

உடலுறவின் மூலம், ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் 

இணைந்து கருத்தரிக்க முடியாவிட்டாலும், செயற்கை முறையில் அதைச் 
சாதிக்க முடியும் என்ற நிலை உருவான பிறகும்   விரதமிருந்து, விக்கிரகங்களை
வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் துணைக்கோள் என்று நிறுவிய பின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களுக்குள் அடங்கும் என்று நம்பினால் அது அறியாமையால் ஏற்பட்ட மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.

இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.##

-[மதுவர்மன், ‘நம்பிக்கைகள் பற்றி ஓர் ஆய்வு’, புதன், ஆகஸ்டு 6.2008]

முத்தாய்ப்பாக, மூடநம்பிக்கையின் தோற்றம் குறித்த ஒரு வரலாற்றுக் குட்டிக்கதை..........

[மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், பகுத்தறிவுப் பிரச்சார இதழில் படித்தது. இதழின் பெயர், கட்டுரைத் தலைப்பு முதலானவை நினைவில் இல்லை]

###வேத, புராண காலங்களுக்கு முன்னரே இந்த மண்ணுலகை ஆண்ட ஒரு மன்னன் தன் மந்திரி பிரதானிகளுடன் கோயிலுக்குச் சென்றான்.

இறைவனின் சந்நிதிக்குள் நுழைய முற்பட்டபோது, வாயில்படியில் கால் இடறித் தரையில் குப்புற விழுந்தான்.

அருகிலிருப்போர் நகைப்பார்களே என்று நினைத்த அவன், தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த நிலையிலேயே இறைவனை வழிபட்டு, அசம்பாவிதம் ஏதும் நடவாததுபோல எழுந்து நின்றான்.

இந்த ரகசியத்தைப் பிறர் அறியாமலிருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் தரையில் நீட்டிப்படுத்த நிலையிலேயே வழிபட்டான். [அப்போதெல்லாம், நின்ற கோலத்தில் வணங்குவதுதான் வழக்கத்தில் இருந்ததாம்].

மன்னனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப் பயந்த ஏனையோரும், அவனைப் போலவே ஒட்டுமொத்த அங்கமும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்கள்.. இதுவே பின்னர் அஷ்டாங்க நஸ்காரம்’ எனப்பட்டது.

[‘[8 அங்கங்கள் பூமியில் பதிய செய்யும் நமஸ்காரமே அஷ்டாங்க நமஸ்காரம். இதில் நெற்றி, காதுகள், நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் பூமியில் பட, மனதை ஒருநிலையில் வைத்து, பகவத் பாதங்களை நாம் ஸ்பர்சிப்பதாக உருவகம் செய்து வணங்குவது நலம்’] 

இவ்வழிபாட்டு முறை குறித்து, ஓலைச் சுவடிகளிலும் செப்பேடுகளிலும் பின்னர் எழுதி வைத்தார்கள்.

காலப் போக்கில், மன்னர் குலத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றலானார்கள். இன்றளவும் இம்முறை தொடர்கிறது###

அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதலால் வெகுவாகத் துவண்டுபோன மனிதர்கள், இறைவனின் சந்நிதியில் விழுந்து உருண்டு புரண்டு கவிழ்ந்து படுத்து  அவனிடம் முறையிட்டுத் தம் துயர் தணித்துக்கொண்ட நிகழ்வுகளே காலப்போக்கில் அஷ்டாங்க வழிபாட்டு முறையாக மாறியது என்று சொல்வாரும் உளர்.

ஜென் கதைகளில் ஒன்றான, குரு வளர்த்த பூனை கதையும் இவ்வகையைச் சார்ந்ததுதான். பலரும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு மட்டும்.....

அது ஓர் ஆசிரமம். அதற்கு ஒரு குரு இருந்தார். சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்குக் குரு பாடம் எடுப்பது வழக்கம், 

ஒரு நாள் பாடம் எடுக்கையில் அவர் வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொந்தரவு செய்தது, குரு காரணம் ஏதும் சொல்லாமல், சீடர்களிடம் அந்தப் பூனையைப் பிடித்து தூணில் கட்டச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, 

மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அது தொந்தரவு செய்தது. பூனை தூணில் கட்டப்பட்டது. அதற்கு மறுநாள், பாடம் ஆரம்பிக்கும் முன்னரே அதைத் தூணில் கட்டினார்கள் சீடர்கள். அது தொடர்ந்தது. 

ஒரு நாள் அந்தப் பூனை செத்துப்போனது. வேறொரு பூனையைத் தேடிப் பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் சீடர்கள்!. குரு அவர்களின் செயலுக்குக் காரணம் புரியாமல் விழித்தார்.    
===========================================================================================

செவ்வாய், 26 நவம்பர், 2019

தமிழ் தற்காலிகமாக வாழும்!

#காவல்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன்பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்துப் பதிவேடுகளையும் இனி தமிழ் மொழியில் பராமரித்தல் வேண்டும். 

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுதல் வேண்டும்.

அனைத்து வரைவுக் கடிதத் தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதுதல் முக்கியம்.

அனைத்துக் காவல் வாகனங்களிலும், ‘காவல்’ என்னும் சொல் இடம்பெறுதல் அவசியம்.

காவல்துறை தொடர்பான அலுவலக முத்திரைகள், பெயர்ப் பலகைகள் தமிழில் இருப்பதும் மிக அவசியம்.

இவ்வாணையை அனைத்துக் காவல்துறை அலுவலர்களும் தங்கள் கவனத்தில் கொள்வதோடு, தம்மிடம் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்துதல் உனடடித் தேவை ஆகும்#

மேற்கண்ட வகையிலானதொரு ஆணையைத் தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைவர்[டிஜிபி] திரிபாதி பிறப்பித்துள்ளார்.

தமிழை நாம் அழித்துக்கொண்டிருக்கும் நிலையில்[குறிப்பாக, தம் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள்], இது கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தியாகும்.

கவால்துறை போலவே, அனைத்துத் துறைத் தலைவர்களும் இது போன்றதொரு ஆணையைத் தத்தம் துறை சார்ந்தவர்களுக்கு வழங்குவதோடு, அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும்.

அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வதும், அறிவியல் அறிவு வாய்த்தோருக்கு உயரிய பரிசுகள் வழங்கி அவர்களை அறிவியல் நூல்கள் எழுதிட ஊக்குவித்தலும் இன்றியமையாத் தேவைகளாகும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டுமே அது வாழும்; வளரும்.
===========================================================================


சனி, 23 நவம்பர், 2019

ஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை!

‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985]  வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத படைப்பு.


தலைப்பு: “போட்டதுதானுங்களே முளைக்கும்”

ரு ஆலமரத்தடியில் சோமனூர் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “ முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார் ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான். “ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்டச் சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” -சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான்.

ருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார். அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்.

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!
****************************************************************************************************************

வியாழன், 21 நவம்பர், 2019

ஆகாயக் குறிப்பேடு!!!

நமக்கு ஆகாயம் தெரியும்; குறிப்பேடும் தெரியும். அதென்ன ‘ஆகாயக் குறிப்பேடு?! 


விஞ்ஞானிகள் புதிது புதிதாக எதையெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள். அந்த ‘உண்மைகளை’ [கண்டுபிடிப்புகளை]யெல்லாம் அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்?

இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வி இது.

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினம். இதற்கான விளக்கம் என் போன்ற சராசரி மனித அறிவு படைத்தவர்களுக்குப் புரியுமா என்ன?

முயற்சி செய்வோம்.

விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுகிற ‘உண்மைகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியின் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிர சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த உண்மைகளைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி.

இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்..........

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த...மருத்துவர் அறியாத சிகிச்சை முறையையும் கூறினாராம்.

அதற்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, “ஆகாயக் குறிப்பேடுகளிலிருந்து...பிரபஞ்ச வெளியில் தேங்கிக் கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து ” என்றாராம்!
‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

எட்கார் பேசியின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வை என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை என்றாலும், தகவல் புதிதாகவும் படிக்கச் சுவையாக இருந்ததால் இங்கே பதிவு செய்தேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலிருந்து திருடி...அல்ல, திரட்டியது.

செவ்வாய், 19 நவம்பர், 2019

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்!!!

“ஷீரடி சாயிபாபாவின் அவதாரம்தான் மோடி” என்று மதுரை ஆதீனம் அருணகிரி பேசியிருப்பதாக, ‘இந்து தமிழ்’[19.11.2019] வெளியிட்டுள்ள ‘கருத்திச் சித்திரத்தின் மூலம் அறிந்தேன்.
ஷீரடி சாய்பாபாவின் வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தால் அவர் ‘அவதாரம்’ அல்ல என்பதை மதுரை ஆதீனம் உணர்ந்துகொண்டிருப்பார்.

அது மட்டுமல்ல, மனிதர்களாகப் பிறந்தவர்களை அவதாரம் ஆக்குவது அறிவுடைமை ஆகுமா என்பது குறித்தும் அவர் சிந்தித்ததில்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது.

அவரின் நம்பிக்கையின்படி, சாயிபாபா அவதாரம்தான் எனின், ஒரு எளிய மனிதரான, பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்த அவதாரப் புருசனை ஒப்பிடுவது எத்தனை பெரிய தவறு என்பது ஆன்மிகத்தில் மிகப் பல ஆண்டுகளாக ஊறித் திளைத்த மதுரை ஆதீனமான அருணகிரி அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

மோடி அவர்களையும் ஷீரடி சாய்பாபா அவர்களையும் ஒப்பிட்டதன் மூலம், சைவ நெறி பரப்புவதையே தம் முழு நேரப் பணியாகக் கொண்ட அருணகிரி அவர்கள் ஒரு மடாதிபதிக்குரிய கவுரவத்தை இழந்துவிட்டிருக்கிறார்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட இவரின் இந்த, மோடி குறித்த துதிபாடலை எண்ணி நகைக்கவே செய்வார்கள்.

இனியேனும், ஒரு கருத்துரையை மக்களின் முன்னர் வைப்பதற்கு முன்பாக மதுரை மடாதிபதி அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
===========================================================================

திங்கள், 18 நவம்பர், 2019

மத நூல்கள் கடவுளின் அருட்கொடையா?

மூடநம்பிக்கை வளர்ப்பில், கடவுளை நம்புகிற அனைத்து மதங்களுக்கும் பங்குண்டு. இவ்வகையில், “இவை  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.”

டவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வு, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று; இன்றளவும் முற்றுப்பெறாதது.

மதவாதிகள், கடவுள் உண்டு என்பதற்கான அனுமானங்களை விரித்துரைக்கிறார்களே தவிர, முற்றிலும் ஏற்கத்தக்க ஆதாரங்களை முன்வைத்தாரில்லை.

இந்த லட்சணத்தில், இவர்களின் மூதாதையரில் சிலரோ பலரோ எழுதி வைத்த நூல்களைப் புனிதமானவை என்றும், அவை  கடவுளால் அருளப்பட்டவை என்றும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.

'வேதம்[Bible] மனிதர்களால் எழுதப்பட்டதல்ல; புனிதமான அது கடவுள் மொழிந்தது’ என்பது கிறித்தவர்களின் நீண்ட நெடுங்கால நம்பிக்கை. ‘.....the long standing belief by many Christians that the Bible is the pure, unadulterated word of God untouched by human hand.’[wikkipeadia] 

இஸ்லாமியர்களும் இதையேதான் சொல்லுகிறார்கள்

‘குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.’                                                          -Wikkipeadia.

‘வேதங்கள்கடவுளால்  வெளியிடப்பட்டவை’ என்றே இந்துமதவாதிகளும் சொல்கிறார்கள். கடவுள் நேரடியாகச் சொல்லக் கேட்டு எழுதியதாம். [They are supposed to have been directly revealed, and thus are called śruti ("what is heard").]

கேட்டு எழுதிய மகான் ‘வியாசர்’ என்கிறார்கள்.

கடவுளை நம்புகிற எல்லோருமே இந்த மதவாதிகளின் கட்டுக்கதைகளை நம்புவது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலோர் நம்புகிறார்கள் என்று முடிவெடுப்பதில் தவறேதுமில்லை எனலாம். 

“வேதம் கடவுளால் அருளப்பட்டது” என்று மதவாதிகள் கூறுவதை நம்மால் மறுக்க முடியுமா?

முடியும். 

இதற்கென ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதும் இல்லை. மிக எளிய ஓரிரு கருத்துக்களை முன்வைத்தலே போதுமானது. 

கடவுளைப் போற்றுபவர்கள், அவர் கருணை வடிவானவர் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

மதநூல்கள் கடவுளின் அருட்கொடை என்பது உண்மையாயின், அனைத்து உயிர்களின் மீதான நேசத்தை அவை வற்புறுத்துமே தவிர, உயிர்வதையை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டா.

ஆனால், புனிதமானவை என்று போற்றப்படும் ‘மதநூல்கள்’ என்ன சொல்கின்றன?

கிறித்தவர்களின் வேதமான ‘பைபிள்’ மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது. அதிச்சியடையாமல் பின்வரும் வாசகங்களைப் படியுங்கள்.

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக் கனியான உன் குழந்தைகளின் மாமிசத்தைத் தின்பாய்”[உபாகமம், 28:53].

“நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாமிசத்தையும் குமாரத்திகளின் மாமிசத்தையும் தின்னச் செய்வேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாமிசத்தைத் தின்பான்”[எரேமியா, 19.9].

இம்மாதிரியான இன்னும் பல வாசகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. [‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில் த.அமலா.  சூலூர் வெளியீட்டகம், கோவை. முதல் பதிப்பு: ஜூலை 2004]

ரிக் வேதத்தில் சித்திரிக்கப்பட முக்கியமான ஐந்து யாகங்களில் ‘நரமேதம்’ ஒன்று. ஆண்மகனைக் கொன்று தீயில் சுட்டெடுத்து உண்கின்ற வழக்கத்தைக் குறிக்கிறது அது. இப்படி இன்னும் எத்தனையோ குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

பெரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு[ஊழி வெள்ளம்] ‘நோவா’தான் முதல் யாக பீடத்தை[பலிபீடம்]க் கட்டியதாக பைபிள் கூறுகிறது.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல விலங்குகளிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான்” [ஆதியாகமம், 8.20].

இதைத் தனக்கே உரிய விளக்கங்களுடன் குர் ஆனும் அங்கீகரிக்கிறது.

“எல்லாச் சமுதாயங்களுக்கும் நாம் பலியை நிச்சயித்திருக்கிறோம்”[குர் ஆன், 22:34]

ஆக, உயிர்வதை பற்றிய இந்த ஆதாரங்கள் மட்டுமே, மத நூல்கள் கடவுளால் அருளப்பட்டவை அல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலவுலகம் பற்றி மத நூல்களில் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் அறிந்திருக்கவும் கூடும். அவை பின்வருமாறு:

பூமியிடமிருந்து ஆகாயத்தைப் பிரித்து மேலே உயர்த்தியவன் வருணன் என்கிறது ரிக் வேதம். [பூமியும் ஆகாயமும் முன்னொரு காலத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன; அவை உடலுறவு கொண்டதன் விளைவாய் உயிர்கள் தோன்றின என்றெல்லாம் மதவாதிகள் நம்பினார்கள்].

பைபிளில் உள்ள ஆதியாகமும் இதையே சொல்கிறது:

“பின்பு தேவன், நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்றும் நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார்; ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்.”

குர் ஆன் என்ன சொல்கிறது?

“ஆகாயமும் பூமியும்[அவற்றைப் படைத்த ஆதி நாளில்] ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பின்னர் அவை பிரிக்கப்பட்டன.”

மேற்கண்ட கதைகள், அன்றைய மதவாதிகளின் அறியாமைக்குச் சான்று பகர்கின்றன.

ஆக, மத நூல்களைக் கடவுள் அருளினார் எனப் பகர்வதையும், பறை சாற்றுவதையும் அறிஞருலகம் ஒருபோதும் ஏற்காது.
==========================================================================
2014இல் ‘மூடருலகம்’ என்னும் என் தளத்தில் வெளியானது இப்பதிவு. இதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

‘வருமுன் உரைத்தல்’ சாத்தியமா?

எழுத்தாளர் சுஜாதாவின்‘கற்பனைக்கு அப்பால்...’ [விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை. ஐந்தாம் பதிப்பு. ஏப்ரல்,2004]என்னும் நூலைப் படிக்காதவர்களுக்காக இப்பதிவு. நூலில் இது ஒரு சிறு கட்டுரைதான். சுருக்கவோ விரிக்கவோ செய்யவில்லை. அந்த அதிசய மனிதரின் படைப்பில் நான் ஒருவன் கைவைக்க முடியுமா என்ன?!

.எஸ்.பி. என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்ஸப்ஷன் - புலன் புற உணர்வு - என்று சொல்லலாம். ராஜீவ் காந்தி இறக்கப் போவதை ஒரு நாள் முன்பே தன் உள்ளுணர்வில் உணர்ந்ததாக ஒரு கோஷ்டியே சொல்லிக்கொண்டு அலைகிறது.

என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இந்த ‘ஈ.எஸ்.பி’ இருப்பதாக நம்புகிறார். “நான் மனசில் என்ன நினைச்சிட்டிருந்தாலும் சொல்லிடறா சார்! ஃபோன் அடிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே எங்கம்மா ஃபோன் பண்ணப் போறான்னு சொல்லுவா. தவறாம வரும். இது ஈ.எஸ்.பி.யா இல்லையா சார்?”


இந்த ஈ.எஸ்.பி., நாய், பூனை போன்ற சில ஜந்துக்களுக்கு இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் கிருஷ்ணசாமி,  “நம்ம சீஸர் இருக்கானே, அவன் வந்து இப்ப வீட்டில்தான் இருக்கான். நான் ஆபீஸில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த உடனே காது இரண்டையும் தூக்கிண்டு வாசல்ல வந்து நின்னுடுவான் சார்!” என்பார்.

“அப்படியா? தினம் அஞ்சு மணிக்கா?”

“இல்ல. நான் எப்பக் கிளம்புறேனோ அப்ப. சில நாள் ஓவர்டைம் பண்ணிட்டுக் கிளம்புவேன். அப்பக்கூட.”

“நீங்க ஆபீஸில் இருக்கும்போது இது காதைத் தூக்குறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அகஸ்மாத்தா என் மனைவி கண்டுபிடிச்சா. தினம் சீஸர் காதைத் தூக்கிய நேரத்தை நோட்புக்கில் குறிச்சி வைச்சா.”

இதையெல்லாம் விஞ்ஞான ரீதியா ஏற்க முடியுமா?

ஈ.எஸ்.பி.க்கு நீண்ட சரித்திரம் உள்ளது.

நம் புராணங்களில் உபதேவதைகளுக்குகூட இது இருந்திருக்கிறது. நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் ஈ.எஸ்.பி. முறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் மனத்தின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஈரப்புடவைகள் எரிவதும் கெட்ட வஸ்துகள் சொரிவதும் சாதாரணமாம்.

இங்கிலாந்து போன்ற தொழில் முன்னேற்ற நாடுகளில்கூட ஈ.எஸ்.பி.யை நம்புகிற பிரமுகர்கள் இருக்கிறார்கள். பரிணாம உயிரியல் தத்துவ ஞானி ஆல்பிரட் ரஸ்ஸல், வாலஸ், வில்லியம் குரூக்ஸ், ராலே பிரபு போன்ற இயற்பியல் நிபுணர்கள், ஆலிவர் லாட்ஜ் போன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் நம்பியிருக்கிறார்கள்.

ஸைக்சிக் ரிஸர்ச் என்ற துறையும், அதற்கான ‘விஞ்ஞான ரீதியான’ கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளும் உள்ளன. இன்றும் அவை பிரசித்தம். அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் ஸைக்சிக் ரிஸர்ச், பாராசைக்கலாஜிகல் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் இன்றும் சிறப்பாக உள்ளன.

ஈ.எஸ்.பி. என்பதை, பாரா நார்மல்,  ‘அசாதாரண விஞ்ஞானம்’ என்கிறார்கள். சாதாரண இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட அறிவியல் இது என்கிறார்கள். நிசமா?

எல்லாம் ரீல்!

இந்நாள்வரை - இதை நான் எழுதும் தேதிவரை அறிவியல் முறைகளின்படி நிரூபிக்கப் படவில்லை. அறிவியல் ஒரு பொதுச் சொத்து. அதன் பரிசோதனை முறை விரும்புவதெல்லாம் இது ஒன்றே..... “யார் சொல்வதையும் உடனே நம்பாதே. நீயே பரிசோதித்துப் பார்.”

கிருஷ்ணசாமியின் நாய் காதைத் தூக்குகிறது என்றால் உன் நாயும் காதைத் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் அதை நம்பலாம். ஒரே ஜாதி நாய், ஒரே ஊர், ஒரே சீதோஷ்ணம், ஒரே...எல்லாம் என்ற அந்தப் பரிசோதனையின் களனை, சூழ்நிலையை மறுபடியும் ஏற்படுத்துவதில் தயக்கமில்லை. ஆனால், அந்தப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும் நிகழ வேண்டும்.

‘மறுமுறைத் தன்மை’[Reproducibility] என்பது அறிவியலுக்கு மிக முக்கியம். உனக்கென்று ஒரு விதி; எனக்கென்று ஒரு விதி என்று ஏதேனும் தென்பட்டால், அந்த விதியைச் சோதித்துப் பார்த்த சூழ்நிலை தவறானதாகும்.

இப்படிப் பார்த்தால் விஞ்ஞானப்படி கிருஷ்ணசாமி தன் நாய் காதைத் தூக்குகிறது என்று நம்ப விரும்புகிறார்; அதற்கேற்ப புள்ளிவிவரம் தயாரித்து உங்களையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார்.

1970 களில் ‘யூரி கெல்லர்’[Uri Geiler] என்பவர் சைக்கோ கினஸிஸ் என்கிற முறைப்படி ஒரு ஸ்பூனை முறைத்துப் பார்த்தே அதை வளைப்பதையும், ஒரு கடிகாரத்தை வெறித்துப் பார்த்தே நிறுத்துவதையும் செய்து காட்டினார்; டான்போர்டு ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் நிபுணர்களுக்கு சவால் வைத்தார்.

அந்தப் பரிசோதனைகளின்போது, சில மாஜிக் நிபுணர்களை ஒளிந்திருந்து பார்க்க ஏற்பாடு செய்தார்கள். ஸ்பூன் வளைந்தது. கடிகாரம் நின்றது. ஆனால், மாஜிக் நிபுணர்கள், இது மனச் சக்தியுமில்லை; ஒரு புடலங்காயும் இல்லை. சாதாரண ‘மாஜிக்’ முறை என்று நிரூபித்து விட்டார்கள்.

இருந்தும், இன்றும் கெல்லரின் சக்தியை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாய்பாபாவை நம்பும் விஞ்ஞானிகள் இருப்பது போல.

ரோமானியர் காலத்திலிருந்து ஒரு சொலவடை உண்டு. மக்கள் ஏமாற விரும்புகிறார்கள்... ஏமாறட்டும்!
===========================================================================