சனி, 14 டிசம்பர், 2019

அமேசான் நடத்தும் ‘கதைப் போட்டி’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்!

அமேசான் குப்பைகள்

 அமேசான் ஒரு போட்டி – பென் டு பப்ளிஷ்- நடத்துகிறது. அச்செய்தியை என் இணையதளத்தில் பிரசுரித்து அதை ‘ஊக்குவிக்க’ வேண்டும் என்று ஒர் இளம் எழுத்தாளர் எழுதியிருந்தார். நான் அவருக்கு எழுதிய பதில் இது.

இந்த அமேசான் போட்டிகளை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். அதை அவர்கள் நடத்துவதும் சிலர் வாசிப்பதும் பிரச்சினை இல்லை.ஆனால் இலக்கியச்சூழலில் அதை முன்வைப்பதும் கொண்டாடுவதும் பிழை. இலக்கியத்திற்கும் அழிவு கொண்டுவரும்

ஏனென்றால் அவர்கள் மிக மிக அற்பமான, நாலாந்தர எழுத்தையே தெரிவுசெய்து பரிசளிக்கவும் பாராட்டவும் செய்கிறார்கள். பொதுவாக அதற்குரிய  நடுவர்களையே தெரிவுசெய்கிறார்கள். ஏனென்றால் அதுவே விற்கும் என நினைக்கிறார்கள். அது உண்மையும்கூட. நாலாந்தரம் என்றால் இன்றைய முகநூல் வாசகர்களுக்கான எழுத்து. குமுதம் வகை எழுத்தைவிடவும் பலபடிகள் கீழே இருப்பது. வாசிப்பை ஒரு கீழ்த்தரக்கேளிக்கை, பூசலிடுதல் என்று மட்டுமே நினைப்பவர்களுக்குரியது.

அது விற்பதில்கூட பிரச்சினை இல்லை, எதையாவது நம் மக்கள் படித்தால் சரி. ஆனால் அந்தப்பரிசுத்தொகை பெரிது என்பதனால் நாம் அவ்வெழுத்தை, அவ்விருதைக் கொண்டாடுவோம் என்றால், அதை எழுதுபவரை எழுத்தாளர் என அடையாளம் காண்போம் அதுவே உகந்தஎழுத்து என ஏற்பதுபோல் ஆகிவிடும். அந்த எழுத்தை உருவாக்க இளம்தலைமுறையை ஊக்குவிப்பது போல் பொருள்படும்.

எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில் அனுப்பாமலிருப்பது நன்று. ஏனென்றால் அந்தப்பரிசு பெறுவதே தரமில்லாத எழுத்தாளர் என்னும் அடையாளத்தை ஈட்டிவரும். அதன்பின் பிறநூல்களுக்கும் நல்ல வாசகர் அமையமாட்டார்கள். என்னைப்பொறுத்தவரை இந்த அமேஸான் போட்டியில் ஒருவர் பரிசுபெற்றார் என்றால் அவருடைய எழுத்தை அதற்குமேல் பொருட்படுத்த மாட்டேன். அதை மீறி படித்துப்பார்க்கவேண்டும் என்றால் அது மிகச்சிறந்தாதாக இருப்பதாக நல்ல விமர்சகர் எவரேனும் சொல்லவேண்டும்.

இன்றைய நிலையில் இந்த அமேசான் போட்டி எழுத்துக்கள் ஒருவகை சூழியல்மலினங்கள், அறிவார்ந்தவர் ஒதுங்கி நின்றிருக்கவேண்டியவை என மட்டுமே சொல்லவிழைகிறேன்.
ஜெ
==================================================================================
நன்றி: https://www.jeyamohan.in/125980#.XfSAqGT7TDc

வியாழன், 12 டிசம்பர், 2019

நாய்க் கடவுள்!!!

தலைப்பைப் பார்த்தவுடன், கடவுளை நான் இழிவுபடுத்திவிட்டதாக எண்ணி என்னைச் சபித்துவிடாதீர்கள்.

இந்தியாவில் நாயைக் கடவுளாகக் கருதிக் கோயில் கட்டி வழிபடும் மக்கள் இருக்கிறார்கள். படியுங்கள்.
வைரவரின் வாகனமாக நாய் இருந்து வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இராம நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நாய்களுக்கு என்று தனிக் கோவில் ஒன்று உண்டு.

மூலஸ்தான மூர்த்தி நாய்தான். மூலஸ்தான மூர்த்தியான நாய்க் கடவுளின் பெயர் ஸ்ரீ நாயிடோலி வீரப்பா.

ஸ்ரீ வீரமஸ்தி கேம்பம்மா என்று ஒரு கிராமிய பெண் தெய்வம் இருக்கின்றார். இக்கிராமியத் தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில்தான் நாய்க் கடவுளின் ஆலயம் உள்ளது.

கேப்பம்பா கிராமிய தெய்வத்தின் மெய்ப்பாதுகாவலனாக நாய்க் கடவுள் விளங்குகின்றார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

நாய்க் கடவுளிடம் பக்தர்கள் குறைகளை முறையிடுகின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆலயத்துக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கிராம மக்களுக்கு வருங்காலத்தை எடுத்துரைக்க வல்ல ஒரு தீர்க்க தரிசியாகவும் நாய்க் கடவுள் விளங்குகிறார்.

அதாவது, கிராமத்துக்கு ஏதாவது கேடு அல்லது தீங்கு ஏற்பட உள்ளது என்றால் நாய்க் கடவுள் அதை அறிவிப்பார் என்பது ஐதீகம்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு இக்கிராமத்தவர்களில் அநேகர் நாய்க் கடவுளின் பெயரைத்தான் சூட்டுவார்கள். ஆண் குழந்தை என்றால் வீரப்பா என்றும் பெண் குழந்தை என்றால் வீரன்னை என்றும் பெயரிடுவார்கள்.

இந்தியாவில் சாதிக் கொடுமை தலை விரித்தாடுகின்றது. ஆனால் நாய்க் கடவுள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவராக சித்திரிக்கப்படுகிறார்.

ஏனெனில் நாய்க் கடவுளின் பூசகர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாய்க்கு நினைவஞ்சலி.....!

==========================================================================
உடல்நலம் குன்றிய காரணத்தால், அதிக அளவில் புதிய பதிவுகள் எழுத இயலவில்லை. விரைவில் மீண்டெழுவேன் என்னும் நம்பிக்கை உள்ளது.

தொடர்ந்து வருகை புரியும் தங்களுக்கு என் நன்றி.

திங்கள், 9 டிசம்பர், 2019

அமேசானில் என்னுடைய 24 ஆவது நூல்!

அமேசான் கிண்டிலில் 24 ஆவதாக ஒரு நூலை வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

இந்த வணிக நிறுவனம், இலக்கியப் போட்டிகளை நடத்துகிறது என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். 

நான் இதில் நூல்கள் வெளியிடுவது பரிசு பெறும் நோக்கத்துடன் அல்ல; அல்லவே அல்ல. காரணம்.....

ஒவ்வொரு பிரிவிலும்[நீள் கதை, குறுங்கதை] முதல் கட்டமாகத் தலா ஐந்து நூல்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்பவர்கள்......

அமேசானில் 1500 ரூபாய்க்குக் குறையாமல் வணிகம் செய்தவர்கள் மட்டுமே. படைப்புகளுக்கு மதிப்புரை எழுதுபவர்களும் நட்சத்திர அஸ்தஸ்து வழங்குபவர்களும் அவர்களே. இவற்றையும் நூலின் விற்பனையையும் கணக்கில் கொண்டுதான் ஐந்து நூல்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட படைப்புகளிலிருந்து முதல் மூன்று பரிசுக்குரியனவற்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே நடுவர்களின் பணி.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் இணைந்து குழுவாக இயங்குவது போலவே, அமேசானிலும் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களின் தயவு இருந்தால் மட்டுமே முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுதல் சாத்தியம்.

என்னைப் பொருத்தவரை, எந்தவொரு குழுவினருடனும் எனக்குத் தொடர்பு இல்லை.  கடந்தவொரு மாதத்தில் மட்டும் அமேசானில் 5 நூல்கள் இணைத்துள்ளேன். அவற்றில் விற்பனையயும் வாசிக்கப்படும் பக்க எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு எனக்குரிய தொகையை வழங்குகிறார்கள். இதில் கிடைக்கிற மகிழ்ச்சியே போதுமானதாக உள்ளது.

புதிய நூல்:


கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதைகளின் தொகுப்பு (Tamil Edition)

வெள்ளி, 6 டிசம்பர், 2019

நித்தியானந்தா குற்றவாளியல்ல! அதிபுத்திசாலி!!

நடிகை ரஞ்சிதா புகழ் நித்தியானந்தாவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்ததே. அண்மைக்கால அவரின் செயல்பாடுகள் நம்மைப் பிரமிக்க வைப்பவை.

திருவண்ணாமலையில்,  காவி உடை உடுத்து, ருத்ராட்ச மாலைகள் சூடி, ஒரு சின்னஞ்சிறிய ஆசிரமத்தில் குடியேறி, 'பரமஹம்ஸ நித்தியானந்த சுவாமிகள்’ என்று தன்னை அறிமுகப்படுத்தி, மிகக் குறுகிய அவகாசத்தில் கடவுளின் அவதாரம் என்று மிக மிகப் பெரும்பான்மை மக்களை நம்பச் செய்த இந்த நித்தி அதிபுத்திசாலி என்பதில் எள்முனை அளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

நடிகையுடன் சல்லாபித்ததற்கான ஆதாரம் வெளியானபோதே, போலிச் சாமியார் வேடம் புனைந்து மக்களை ஏமாற்றியதற்காக இந்த ஆள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை செய்யத் தவறியது மத்திய மாநில அரசுகள் செய்த குற்றம்.

பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் இன்றளவும் அனுமதிக்கப்படாத நிலையில், அழகழகான பெண்கள் இந்த ஆளின் ஆசிரமத்தில் காலவரையறையின்றிப் பக்தைகள் என்னும் பெயரில் தங்கியிருப்பதை அரசுகள் அனுமதித்தது புரியாத புதிராகும். அதன் விளைவு....

இந்த ஆளுக்குச் சொந்தமான ஆசிரமங்களில் இளம்பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவது நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலத்திலுள்ள ஆசிரமத்தில் 2 சிறுமிகள் மாயமானது நாடெங்கும் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது.

குஜராத் மாநில அரசு விழித்துக்கொண்டதன் விளைவாக, இந்த ஆள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது. நித்தியோ அயல்நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகச் செய்தி.

தென் அமெரிக்கப் பகுதியில் ஈக்வடார் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு தீவைப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து விலைக்கு வாங்கிய நித்தி, அந்தத் தீவின் மன்னராக முடிசூடிக்கொண்டுள்ளாராம். இது இப்போதைய செய்தி.

இந்திய அரசு தன்னைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, தனக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு, கைலாசம்[தீவுக்கு இந்த ஆள் சூட்டிய பெயர்] என்னும் பெயர் கொண்ட தன் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் ஐ.நா. சபையிடம் மனு அளித்துள்ளாராம்[மாலை மலர், 06.12.2019].

இந்தியாவில் உள்ள சில ஆன்மிக அமைப்புகள் தன்னைக் கொல்வதற்கு 100 முறை முயன்றதாகவும். பரமசிவனும் பார்வதியுமே தன்னைக் காத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம் நித்தி. செய்தி வெளியிட்ட மாலை மலர் நாளிதழ்.....

‘ஒரு தீவையே விலை கொடுத்து வாங்கும் அளவுக்குக் கோடானுகோடி ரூபாயை இவரால் எப்படிச் சம்பாதிக்க முடிந்தது?’ என்ற கேள்வியையும் முன்வத்திருக்கிறது. கேள்விக்குப் பதில் தரவில்லை.

பதிலை நாம் சொல்கிறோம். “நித்தி கோடானுகோடி ரூபாய்களைத் திருடவில்லை; கொள்ளையடிக்கவும் இல்லை. அதை அவருக்கு வாரி வாரி வழங்கியவர்கள், நித்தியின் விதம் விதமான போலி வேடங்களிலும் அதிபுத்திசாலித்தனமான பேச்சிலும் மயங்கிய முட்டாள் மனிதர்கள்தான்!
===========================================================================

புதன், 4 டிசம்பர், 2019

அமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்!

இணையம் வழியாக, நூல்கள் வெளியிடுவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் முன்னிலை வகிக்கிற ‘அமேசான்’ நிறுவனம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இலக்கியப் போட்டிகளை[pentopublish2019] 2019 செப்டம்பர் மாதத்தில் அறிவித்தது.

இந்தப் போட்டி, ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கானது. படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு 14, டிசம்பர், 2019இல் முடிவடைகிறது.

படைப்புகள்.....

2000 - 10000 சொற்களில் அடங்குபவை[Short Form Entries]
10000க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டவை[Long Form Entries]

என்று இருவகையாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒவ்வொரு மொழிப் படைப்புகளுக்கும் மும்மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

L.FORM: முதல் பரிசு ரூ.5,00,000; 2ஆம் பரிசு ரூ1,00,000; 3ஆம் பரிசு ரூ50,000.
SF:                    ,,             ரூ50,000;             ,,             ரூ25,000;              ,,            ரூ10,000

இந்நாள்வரை[06.12.2019] படைப்புகள் இடம்பெற்றுள்ள விவரம்.....

ஆங்கிலம்.......3000[LF2000 + SF1000]

தமிழ்.................286[124 + 162]

இந்தி.................267[110 + 157]

ஆக, அமேசான் நடத்தும் இலக்கியப் போட்டியில்[கதைகள், கவிதைகள்] இந்தியைத் தமிழ் முந்தியிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்[கடந்த ஆண்டு தமிழை இந்தி முந்தியிருந்தது].
==========================================================================

செவ்வாய், 3 டிசம்பர், 2019

அமேசானில் நீளும் என் நூல் பட்டியல்!

‘நான் மூடன்! நீங்கள்?’ என்னும் தலைப்பிலான என் புதிய நூல், அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. வாய்ப்பு அமைந்தால் வாசியுங்கள்.

நன்றி.


நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)

நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இது ஜோதிடர் யுகம்!!!


பெண் பாவம் க்கான பட முடிவு
ரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா.

மனதில் தாங்க முடியாத வலி. முகத்தில் பயமுத்திரை.

எதிரே, கனல் கக்கும் கண்களுடன் முரட்டுக் கணவன் வரதன். இரு பக்கமும் மூட நம்பிக்கைகளின் சேமிப்புக் குதிர்களாய் மாமனாரும் மாமியாரும்.

“என்னடா, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறே. பிறந்த நட்சத்திரத்தை மறைச்ச உன் பெண்டாட்டி பிறந்த சாதியைக்கூட மறைச்சிருப்பா. அவள் சாதி என்னான்னு கேளுடா” என்றார் வரதனின் அப்பா திருமலைச்சாமி.

“சொல்லுடி, பொய் ஜாதகம் காட்டி இதுக்கு முந்தி எத்தனை புருஷன் கட்டினே?” -கேட்டவள், வரதனை ஈன்று புறம் தந்த தனலட்சுமி.

சாரதா வாய் திறக்கவில்லை.

“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்னு சொல்லுவாங்க. இனி நம்ம கதி என்ன ஆகுமோ?” என்று தனலட்சுமி தொடர்ந்து ஒப்பாரி வைத்தபோதும் சரி, “மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் மருமகளா வந்தா மாமனாரைத் தின்னுடுவான்னு சொல்லுவாங்க. நான் சாகத் தயார். நீங்க பிழைச்சிருந்தா போதும்” என்று திருமலைச்சாமி முற்றும் துறந்த சாமியார் வேடம் தரித்தபோதும் சரி சாரதா மௌனமே சாதித்தாள்.

“என்னடி, வாயில் கொழுக்கட்டையா? பேசேண்டி” என்று வரதன் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கியபோதுதான், “நான் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். போலி ஜாதகம் காட்டி உங்களையெல்லாம் நாங்க ஏமாத்தினது தப்பு. மன்னிச்சிடுங்க. இதனால் எந்தக் கெடுதலும் நடந்துடாது” என்றாள்.

“ஏன் நடக்காது? திருவேங்கடம் என் சகலை. பெரிய ஓட்டல் வெச்சி நடத்திட்டிருந்தான். ஒரே மகன். அவன் காதலிச்ச பொண்ணையே சாதிமதம் பார்க்காம, ஜாதகம் பார்க்காம கட்டி வெச்சான். எண்ணிப் பத்தே நாள். அவன் குடும்பத்தோட போன கார் லாரி மோதி நொறுங்கிச்சி. திருவேங்கடம் அப்பவே செத்துட்டான். அவன் பொண்டாட்டிக்குப் பலத்த அடி; கோமாவில் கிடக்குறா. மகனுக்கு ஒரு கை போயிடிச்சி. மருமகக்காரி மட்டும் சின்னக் காயத்தோட தப்பிச்சுட்டா. அவ மூல நட்சத்திரத்தில் பிறந்தவள்ங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சுது. நீயும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள். நீ இந்த வீட்டில் இருந்தா எங்களுக்கும் இந்தக் கதிதான்.” -அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் திருமலைச்சாமி.

“மூலமாவது கூலமாவதுன்னு மூல நட்சத்திர தோஷமுள்ள ஒரு மூதியை மருமகளா கொண்டுவந்தா என் பெரியம்மா மக. ஆறே மாசத்தில் தாலி அறுத்துட்டா. நெஞ்சு வலிக்குதுன்னு படுத்த அவ புருஷன் எந்திரிக்கவே இல்ல.” -இது தனலட்சுமி.

நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது சாரதாவுக்கு. ஓரக் கண்ணால் வரதனைக் கவனித்தாள். மீண்டும் கை ஓங்கி வருவானோ? அடித்து நொறுக்குவானோ? சிவப்பேறிப் பழுத்த அவனின் கண்கள் சாரதாவை இப்படிச் சிந்திக்க வைத்தன.

வாய் திறவாமல் இருந்தால் தண்டனை கடுமையாகலாம் என்று பயந்தாள் அவள்; சொன்னாள்: “ஒரு கார் விபத்து நடக்குதுன்னா அதுக்கு டிரைவரும் காரணமா இருக்கலாம். ஒருத்தர் திடீர்னு செத்துப் போறார்னா, அதுக்கு மாரடைப்பு மாதிரியான நோய் காரணமா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்காம, எல்லாக் கஷ்டங்களுக்கும் மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளே காரணம்னு நீங்க சொல்றது என்னங்க நியாயம்?”

“என்னடி, நாக்கு நீளுது?” சாரதாவின் தோள்பட்டையில் எட்டி உதைத்தான் வரதன். “பத்து வருஷமா கட்டப்பஞ்சாயத்துப் பண்றேன். டூப்ளிகேட் ஜாதகம் காட்டி என்னையே ஏமாத்திட்டான் உன் அப்பன். சிங்கப்பூரில் இருந்து வந்த உன் தாய் மாமன், 'மூலநட்சத்திரத்தில் பிறந்த சாரதாவைக் கட்டிகிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'ன்னு பாராட்டினபோதுதான் நாங்க எமாந்தது தெரிஞ்சுது. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்......”

பேசுவதை நிறுத்தி, எங்கெல்லாமோ தேடி, நீண்டதொரு அரிவாளை எடுத்துவந்தான் வரதன். “இந்த நிமிசமே இங்கிருந்து ஓடிடு. இல்லேன்னா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.

“நான் எங்கே போவேங்க?”

“எங்கேயோ போ. ஏன், உன் அப்பன் வீட்டுக்கே போயேன்.”

“ஆஸ்துமாவோடு போராடுற அம்மா. வாழாவெட்டியா ஒரு அக்கா. கல்யாணம் எப்போ ஆகும்னு கூரையை அண்ணாந்து பார்த்துட்டிருக்கிற தங்கச்சிக. வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்துற தம்பி. கஷ்டங்களைச் சுமக்க முடியாம என் அப்பா திணறிட்டிருக்கார். வாழாவெட்டியா நானும் போய் நின்னா அவர் மூச்சு நின்னுடுங்க.”

வரதனின் கால்களில் விழப்போனாள் சாரதா. அவன் விலகிக்கொண்டான்.

“உன் அப்பன் சாகாம இருக்க நான் என் புருஷனைப் பலி கொடுக்கணுமா?” -கொதிக்கக் கொதிக்க வார்த்தைகளைக் கொட்டினாள் தனலட்சுமி.

“வேண்டாங்க. அப்படியெல்லாம் ஏதும் நடந்துடாதுங்க. நான் கல்யாணம் ஆகிவந்து  வருஷம் ஒன்னு ஆயிடிச்சி. அசம்பாவிதம் ஏதும் நடக்கலையே.”

கவனக்குறைவாய் கழிவறையில் தனலட்சுமி சறுக்கி விழுந்து காலை முறித்துக்கொண்டது; தண்ணியடித்துவிட்டுத் திருமலைச்சாமி மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டையைப் பிளந்துகொண்டது. தொழில் போட்டியில் எதிரிகளுடன் மோதி வரதன் ஒரு கையை உடைத்துக்கொண்டது என்றிப்படிக் காலாவதி ஆகிப்போன கஷ்டநஷ்டங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சாரதா மீது பழி போட்டார்கள் அவர்கள்; அவள் வீட்டைவிட்டு வெளியேறத்தான் வேண்டும் என்று ஒருமித்த குரலில் உத்தரவு போட்டார்கள்.

“இன்னொரு கல்யாணம் வேணுன்னா பண்ணிக்குங்க. என்னை இங்கிருந்து விரட்ட வேண்டாம்” என்று மன்றாடினாள் சாரதா. பலனில்லை.

வரதனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் மனம் இளகவில்லை.

“மரியாதையாப் போயிடு. இல்லேன்னா, சீமெண்ணை ஊத்தி எரிச்சுடுவேன். போகப் போறியா இல்லியா?”
“போயிடுறேங்க.”

ஒரு நூறு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து, “ரயில் வர்ற நேரம். சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி  நகர்ந்தான் வரதன்.

வெளியே பைக்கின் உறுமலோசை கேட்டது.

கொஞ்சம் துணிமணிகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு சாரதா புறப்படத் தயாரானபோது உள்ளறையின் கதவு சாத்தப்படுவது தெரிந்தது.

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் சாரதா. ரயில் வருவதற்கு இருபது நிமிடங்கள் போல இருந்தன. எட்டி நடை போட்டால் பத்து நிமிடங்களில் ரயில் பாதையை  அடைந்துவிட முடியும்.

வீட்டிலிருந்து வெளியேறினாள் சாரதா; நடந்துகொண்டே எதையெல்லாமோ யோசித்தாள்.

எதிர்வரும் ரயிலை எதிர்பார்த்து இரு தண்டவாளங்களுக்கிடையே மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அவள்.

வெள்ளி, 29 நவம்பர், 2019

‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கதைகளும்!

மூடம் - அறியாமை.


அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும். [Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள். [Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote]

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள். தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேடோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கம் மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை,அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன.

[belief, trust, hope என்னும் மூன்றையும், ‘நம்பிக்கை’ என்றே தமிழ் படுத்துகிறது கூகிள் மொழிபெயர்ப்பு. நாம் நம்பிக்கை என்ற ஒரு சொல்லையே ‘முன் ஒட்டு’ சேர்த்து மாறுபட்ட பொருள்களில் பயன்படுத்துகிறோம். இது பற்றிய விரிவான ஆய்வு இங்கு தேவையில்லை].

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

மூட நம்பிக்கை என்ற வார்த்தையே தவறு. சரியான நம்பிக்கைதவறான நம்பிக்கை என்றே அறிவியல் சுட்டிக் காட்டுகிறது’ என்கிறது ‘உயிரோசை’, வார இணைய இதழ்.


எந்த அறிவியல் இப்படிச் சொல்கிறது என்பது தெரியவல்லை. ‘அவநம்பிக்கை’,

‘தன்னம்பிக்கை’ ஆகியவை வழக்கில் இருப்பதை, உயிரோசை கருத்தில் 
கொள்ளவில்லை போலும்.

'நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... 

என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். 

கவிஞரின் கருத்துப்படி, ‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், 

அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது. ‘நான்
வெல்வேனா?’ என்று சொல்லியிருந்தால், அதுவும் நம்பிக்கைதான். ‘பூனை 
குறுக்கே வந்ததால்...’என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு 
காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

##பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி  14.5 பில்லியன் 

ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை 
கிறிஸ்தவ பைபிளின்படி, இந்தப் பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 
6000 ஆண்டுகள் தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால், 
அது மூடநம்பிக்கை. 

உடலுறவின் மூலம், ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் 

இணைந்து கருத்தரிக்க முடியாவிட்டாலும், செயற்கை முறையில் அதைச் 
சாதிக்க முடியும் என்ற நிலை உருவான பிறகும்   விரதமிருந்து, விக்கிரகங்களை
வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் துணைக்கோள் என்று நிறுவிய பின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களுக்குள் அடங்கும் என்று நம்பினால் அது அறியாமையால் ஏற்பட்ட மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.

இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.##

-[மதுவர்மன், ‘நம்பிக்கைகள் பற்றி ஓர் ஆய்வு’, புதன், ஆகஸ்டு 6.2008]

முத்தாய்ப்பாக, மூடநம்பிக்கையின் தோற்றம் குறித்த ஒரு வரலாற்றுக் குட்டிக்கதை..........

[மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், பகுத்தறிவுப் பிரச்சார இதழில் படித்தது. இதழின் பெயர், கட்டுரைத் தலைப்பு முதலானவை நினைவில் இல்லை]

###வேத, புராண காலங்களுக்கு முன்னரே இந்த மண்ணுலகை ஆண்ட ஒரு மன்னன் தன் மந்திரி பிரதானிகளுடன் கோயிலுக்குச் சென்றான்.

இறைவனின் சந்நிதிக்குள் நுழைய முற்பட்டபோது, வாயில்படியில் கால் இடறித் தரையில் குப்புற விழுந்தான்.

அருகிலிருப்போர் நகைப்பார்களே என்று நினைத்த அவன், தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த நிலையிலேயே இறைவனை வழிபட்டு, அசம்பாவிதம் ஏதும் நடவாததுபோல எழுந்து நின்றான்.

இந்த ரகசியத்தைப் பிறர் அறியாமலிருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் தரையில் நீட்டிப்படுத்த நிலையிலேயே வழிபட்டான். [அப்போதெல்லாம், நின்ற கோலத்தில் வணங்குவதுதான் வழக்கத்தில் இருந்ததாம்].

மன்னனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப் பயந்த ஏனையோரும், அவனைப் போலவே ஒட்டுமொத்த அங்கமும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்கள்.. இதுவே பின்னர் அஷ்டாங்க நஸ்காரம்’ எனப்பட்டது.

[‘[8 அங்கங்கள் பூமியில் பதிய செய்யும் நமஸ்காரமே அஷ்டாங்க நமஸ்காரம். இதில் நெற்றி, காதுகள், நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் பூமியில் பட, மனதை ஒருநிலையில் வைத்து, பகவத் பாதங்களை நாம் ஸ்பர்சிப்பதாக உருவகம் செய்து வணங்குவது நலம்’] 

இவ்வழிபாட்டு முறை குறித்து, ஓலைச் சுவடிகளிலும் செப்பேடுகளிலும் பின்னர் எழுதி வைத்தார்கள்.

காலப் போக்கில், மன்னர் குலத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றலானார்கள். இன்றளவும் இம்முறை தொடர்கிறது###

அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதலால் வெகுவாகத் துவண்டுபோன மனிதர்கள், இறைவனின் சந்நிதியில் விழுந்து உருண்டு புரண்டு கவிழ்ந்து படுத்து  அவனிடம் முறையிட்டுத் தம் துயர் தணித்துக்கொண்ட நிகழ்வுகளே காலப்போக்கில் அஷ்டாங்க வழிபாட்டு முறையாக மாறியது என்று சொல்வாரும் உளர்.

ஜென் கதைகளில் ஒன்றான, குரு வளர்த்த பூனை கதையும் இவ்வகையைச் சார்ந்ததுதான். பலரும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு மட்டும்.....

அது ஓர் ஆசிரமம். அதற்கு ஒரு குரு இருந்தார். சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்குக் குரு பாடம் எடுப்பது வழக்கம், 

ஒரு நாள் பாடம் எடுக்கையில் அவர் வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொந்தரவு செய்தது, குரு காரணம் ஏதும் சொல்லாமல், சீடர்களிடம் அந்தப் பூனையைப் பிடித்து தூணில் கட்டச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, 

மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அது தொந்தரவு செய்தது. பூனை தூணில் கட்டப்பட்டது. அதற்கு மறுநாள், பாடம் ஆரம்பிக்கும் முன்னரே அதைத் தூணில் கட்டினார்கள் சீடர்கள். அது தொடர்ந்தது. 

ஒரு நாள் அந்தப் பூனை செத்துப்போனது. வேறொரு பூனையைத் தேடிப் பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் சீடர்கள்!. குரு அவர்களின் செயலுக்குக் காரணம் புரியாமல் விழித்தார்.    
===========================================================================================