எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 21 ஜூன், 2025

நீங்களும் உங்கள் கடவுளும் என் கேள்வி பதிலும்!!!

 நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? 

“ஆம்” என்பது உங்கள் பதிலாயின், மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் கடவுளை நம்புவதோடு அவ்வப்போதோ எப்போதுமோ அவரிடம் ‘கோரிக்கைகள்’ வைக்கும் பழக்கம் உள்ளவரா?

இதற்கும் “ஆம்” என்பது உங்கள் பதில் எனின், நீங்கள் வைக்கும் கோரிக்கைகளில், “கடவுளே, எனக்குச் சாகாவரம் கொடு” என்பதும் இடம்பெறுவதுண்டா?

நன்கு யோசித்துச் சொல்லுங்கள், இல்லைதானே?

காரணம்?

மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்க இயலாதது; கூடாதது என்பது கடவுள் வகுத்த நெறி. எனவே, சாகா வரம் அருளும்படிக் கோரிக்கை வைத்தால் அவர் அதை நிராகரிப்பார் என்பதுதானே?

உயிர்களை மரணிக்கச் செய்வது கடவுள் வகுத்த உயிர்களுக்கான வாழ்க்கை நெறி என்பது போல, அவை தத்தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவிக்க நேர்வதும் அவரால் வகுக்கப்பட்ட நெறிதான்.

எனவே, என்னைத் தாக்கும் துன்பங்களை அகற்றி இன்பங்களை வாரி வழங்கு” என்பது போல நீங்கள் நம்பும் கடவுளிடம் கோரிக்கைகள்[வேண்டுதல்கள்] வைப்பது தவறு என்கிறேன் நான்.

உங்களால் மறுக்க இயலுமா?

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ‘எட்டிக்கனி’[விஷம் உள்ளது] அலங்காரம்... விரைவில்!!!

பாம்பு, பெருச்சாளி, கழுகு, நாய், பசு, காளை, மயில் என்று மனிதர்களால் கடவுளாக வழிபடப்படுகிற உயிரினங்களுக்கிடையே உலக அளவில் பிரபலமானது அநுமான் எனப்படும் குரங்குகார்[கடவுள்!]தான்.

ராவணனுடனான போரில் ராமனின் அணுக்கத் தொண்டனாகச் செயல்பட்டு அவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த[ராமாயணம்] இந்தக் குரங்குகார் ‘ஆஞ்சநேயர்’ என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படுகிறதுகிறார்.

உலகெங்கும் இவருக்குக்[குறிப்பாக இந்தியாவில்] கோயில்கள் உள்ளன; மிக உயரமான சிலைகள் உள்ளன.

18 அடி[5.5 மீ] உயரச் சிலை நிறுவிச் சாதனை நிகழ்த்தியவர்கள், கோழிப்பண்ணை, லாரிக் கட்டுமானம், ஆழ்துளைக் கிணறு தோண்டுதல்[ரிக்] ஆகியவற்றின் மூலம் பிரபலமான நாமக்கல் குடிமக்களாகிய நாங்கள்தான்.

அயல்நாடுகளிலிருந்தெல்லாம் எங்கள் ஆஞ்சநேயரைத் தரிசிக்கப் பக்தர்கள் வருகிறார்கள் என்றால், இவர் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

விசேட நாட்களில் இவருக்கு நாங்கள் வடைமாலை{100008[லட்சத்து எட்டு] உளுந்து வடைகள்> அநுமன் சாமியின் விருப்பம்> முன்னொரு நாளில் தலைமை அர்ச்சகரின் கனவில் சொன்னது} சாத்தி வழிபடுவது உலகில் வேறெந்தக் கடவுளுக்கும் வேறு எந்தவொரு பக்தர் கூட்டமும் செய்திராத சிறப்பு ஏற்பாடாகும்.

சாத்தப்பட்ட வடைகளைப் பிரசாதமாகப் பெற்றுப் புண்ணியம் சேர்ப்பதற்காகப் பக்தர்கள் முட்டி மோதித் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் படும் பாடு சொல்லி மாளாது.

வடை மாலை என்றில்லை, ஆஞ்சநேயருக்குப் பிடித்தமான வெற்றிலை மாலை அணிவிப்பதோடு, சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு போன்றவையும் சாத்தப்படுகின்றன.

அண்மையில், மாம்பழங்களால் ஆஞ்சநேயப் பெருமாளை அலங்கரித்து அபிஷேகம் செய்திருப்பது வேறெந்த ஊரிலும் வேறெந்தப் பக்தர் கூட்டமும் செய்திராத அதிசயம் நிகழ்வாகும்.

இந்நாள்வரை வடை, வெற்றிலை, பழங்கள் போன்றவையே பயன்படுத்தப்பட்ட நிலையில், கசக்கும் எட்டிக்காய்களைக் கொண்டு ஆஞ்சநேயக் கடவுளை அலங்கரித்து அபிஷேகம் செய்திடத் திட்டம் தீட்டியிருக்கிறோம் நாமக்கல் ஆயுட்காலப் பக்தர்களான நாங்கள்.

எட்டிக்கனி விஷம் உள்ள கசப்பான பண்டம் என்றாலும், ஆஞ்சநேயப் பகவானுக்குச் சமர்ப்பிப்பதால்[மாலையாகவும், தட்சணையாகவும்] அபிஷேக ஆராதனைகள் முடிந்தவுடன் விஷம் நீங்கி, கசப்புச் சுவை மாறி இனிப்புக் கனியாக அது மாறும் என்பது அறியத்தக்கது.

இந்நிகழ்வு இடம்பெறும் நாள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும்.

அறிந்து இங்கு வருகை புரிந்து, ஆஞ்சநேயக் கடவுளின் எட்டிக்கனியைப் பிரசாதமாகப் பெற்றுச் சுவைத்துப் புண்ணியம் சேர்ப்பீராக!